Sunday, September 14, 2003

நான் ஏன் இந்து அல்ல - காஞ்சா அய்லய்யா

காஞ்சா அய்லய்யா உஸ்மானியாப் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர். ஆந்திராவில் குருமா இனத்தில் பிறந்தவர்.

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் என்னும் ஆங்கில அறிஞர் "Why I am not a Christian" என்று ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அவரது கருத்து அவர் ஒரு atheist என்னும் முறையில் வெளிப்படுகிறது. ஆனால் அய்லய்யா இந்தியாவில் இருக்கும் சாதி வேற்றுமைகள் மற்றும் தலித்துகளின் மேல் நடத்தப்படும் அடக்குமுறைக் கொடுமைகளைக் கண்டித்து, ஆனால் தங்களுக்கே உரிய (தலித்துக்களுக்கே உரிய) கடவுள் மற்றும் மதக் கோட்பாடுகளை ஆதரித்து "தான் இந்து அல்ல, ஆனால் தனி அடையாளம் கொண்ட தலித் பகுஜன்" என்னும் பொருள் பட இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்து என்பது இந்தியாவைப் பொறுத்தவரை சட்டத்தின் மூலமும், இந்துக்களின் காவலர்களாக தங்களைக் காட்டிக் கொள்ளும் இந்துத் தீவிரவாத இயக்கங்கள், பார்ப்பன மதவாத மடாதிபதிகள் மூலமும் என்னவென்றால் கிறித்துவ, இஸ்லாம், சீக்கியர் இல்லாத மற்ற அனைத்து மக்கள். இதில் தலித்துகள், மலைவாழ்ப் பழங்குடியினர் ஆகிய அனைவரையும் அடக்கியே சிவில் சட்டம் இந்துக்களை வரையறுக்கிறது. ஆனால் தலித்துகள் இந்துக்களின் பழக்க வழக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கிறார்கள். இது உணவு, உடையிலிருந்து, திருமண, சாவுச் சடங்குகளிலிருந்து, கடவுள் வணக்கம், மறுவாழ்வு பற்றிய கோட்பாடுகளிலிருந்து, சொத்துரிமை என்று எங்கும் பரவியிருக்கிறது. பெண்களின் உரிமையைப் பொறுத்தவரை தலித் பெண்கள் இந்துப் பெண்களின் நிலையிலிருந்து வெகுவாக உயர்ந்திருக்கிறார்கள். மணவிலக்கு பெறுவதிலும், மறுமணம் புரிந்து கொள்வதிலும், "கணவனே கண் கண்ட தெய்வம்" என்ற பத்தாம்பசலித்தனம் இல்லாது வெகு உயர்வான நிலையிலேயே தலித் பெண்கள் உள்ளனர்.

இதையெல்லாம் அய்லய்யா தன் புத்தகத்தில் விளக்கமாக எடுத்துரைக்கிறார்.

இப்பொழுது பொதுச் சிவில் சட்டம் வேண்டுமென்று பாரதீய ஜனதா முதல் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி வரை குரல் எழுப்பிக் கொண்டிருகிறார்கள். இதைத் தற்பொழுது தீவிரமாக எதிர்ப்பது முஸ்லிம்கள் மட்டுமே. ஆனால் இந்துகளுக்குள் "அடக்கப்பட்டிருக்கும்" தலித்துகளும் (புத்த, ஜைனர்களும்) தீவிரமாக எதிர்க்க வேண்டும். இந்த பொதுச்சட்டம் இந்துச் சட்டமாகி விடக் கூடாதே என்ற பயம் எல்லோருக்கும் இருக்க வேண்டும்.

அய்லய்யா அடக்குமுறைப் பார்ப்பனியத்தைத் தூக்கி நிறுத்துபவர்களாக பார்ப்பன, பனியா மற்றும் புதிய சத்திரியர்களை அடையாளம் காண்கிறார்.

புத்தகத்தில் பல இடங்களில் அவருக்கு பார்ப்பன, பனியாக்கள் மீதுள்ள கோபம் மிக வெளிப்படையாகத் தெரிகிறது. உண்டு கொழுத்தவர்கள், உடல் உழைப்பு இல்லாது சோம்பிக் கிடப்பவர்கள், சுரண்டுபவர்கள், ஏமாற்றுபவர்கள் என்றெல்லாம் அவர் சொல்வது நியாயமாகத்தான் படுகிறது. புதிய சத்திரியர்கள் ("சூத்திர மேல்சாதியினர்") மீது அவருக்குள்ள ஆதங்கமும் வெளிப்படுகிறது. தலித்துகளோடு சேராமல், பார்ப்பன, பனியாக்களுடன் சேர்ந்து தலித்துகள் மீது அடக்குமுறையை வெளிப்படுத்தும் ஒரு அங்கமாக அவர்கள் மாறி வருகின்றனர் என்கிறார்.

புராணக் கடவுளர்கள் மற்றும் தலித் கடவுளர்கள் பற்றி அவரது எண்ணங்கள் ஆதாரமில்லாது, அவசரத்தில் எழுதியது மாதிரிதான் தோன்றுகிறது. தலித் கடவுள்கள் எல்லோரும் பார்ப்பனக் கடவுள்களின் அடக்குமுறையை எதிர்த்துப் போரில் உயிர்விட்டவர்கள் என்று அவர் சொல்லும்போது கொஞ்சம் சிரிப்புத்தான் வருகிறது. கடவுள்கள் அனைவருமே மனிதனின் உருவாக்கங்கள்தாம் என்னும்போது என் கடவுளும் உன் கடவுளும் சண்டை போட்டான் என்கிற மாதிரி சொல்வதை விட இன்னும் பகுத்தறிவுடன் எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது.

சாதிச் சண்டைகளும், பிரிவினைகளும் வலுத்துவரும் இந்தக் காலத் தமிழகத்தில் அனைவரும் படித்து தங்களை மாற்றிக் கொள்ள உதவும் ஒரு புத்தகம்.

-*- -*-


நான் ஏன் இந்து அல்ல, இந்துத்துவா பற்றிய ஒரு சூத்திரனின் விமரிசனம், காஞ்சா அய்லய்யா, தமிழாக்கம் மு.தங்கவேலு, ராஜ முருகுபாண்டியன், விலை ரூ.75, பதிப்பகம்: அடையாளம்

புத்தகத்தின் முழு ஆங்கில வடிவம் இங்கே கிடைக்கிறது.

பி.கு: மோகன்தாஸ் காந்தி "Why I am a Hindu" என்ற புத்தகம் எழுதியுள்ளார் என்றும், "Why I am not a Hindu" என்னும் புத்தகத்தை ராமேந்திர நாத் என்பவர் எழுதியுள்ளார் என்பதையும் இணையத்தில் அறிந்து கொண்டேன்.

No comments:

Post a Comment