Tuesday, September 16, 2003

மர்டாக்: ஸ்டார் நியூஸ்

ஸ்டார் நியூஸ்

8. இந்தியாவில் செயற்கைக்கோள் தொலைக்காட்சிகள் ஆரம்பித்த போது எந்தவொரு கட்டுப்பாடும் இல்லாதிருந்தது. நிகழ்ச்சிகள் சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் ஆகிய இடங்களிலிருந்து செயற்கைக்கோள் மூலமாக ஒளிபரப்பப் பட்டன. அப்பொழுது ஸ்டார் நிறுவனம் பிரனாய் ராய் என்பவரின் என்.டி.டீ.வீ என்னும் நிறுவனத்தோடு தொடர்பு கொண்டு தங்களது ஸ்டார் நியூஸ் என்னும் சானலுக்கு நிகழ்ச்சிகளை செய்து தருமாறு ஒட்டுமொத்தக் குத்தகைக்கு விட்டு விட்டனர். இந்த நேரத்தில் இந்தியாவில் பல மாறுதல்கள் நிகழ்ந்தன. இந்தியாவிலிருந்தபடியே செயற்கைக்கோளில் நிகழ்ச்சிகளை மேலேற்றும் உரிமை அப்பொழுது அரசின் தூரதர்ஷனிடம் மட்டுமே இருந்து வந்தது. [இது ஆங்கிலேயர் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஒரு சட்டமாகும். இதனை விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் மாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனால்தான் தூரதர்ஷன் தவிர்த்த மற்ற சானல்களுக்கும் இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப முடிந்தது - 1993, ஹீரோ கப் கிரிக்கெட் போட்டி, இந்தியா] பின்னர் இந்தியாவிலிருந்து எல்லா கேளிக்கை சம்பந்தப்பட்ட தொலைக்காட்சிகளும் நேரிடையாக செயற்கைக்கோளுக்கு மேலேற்றலாம் என்ற திருத்தம் வந்தது. ஆனால் இந்த அனுமதி செய்தித் தொலைக்காட்சிகளுக்கு மட்டும் முழுதாக வழங்கப்படவில்லை. செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஒரு இந்திய நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் இந்த அனுமதி வழங்கப்படும் என்று அரசு சொல்ல ஆரம்பித்தது. இந்தக் கொள்கையையும் அரசு முழுமையாக வெளியிடவில்லை. இந்த சமயத்தில் ஸ்டாருக்கும் என்.டி.டீ.வீக்குமான ஒப்பந்தம் மார்ச் 2003இல் முடிவடைந்தது. அதற்குப் பின் ஸ்டார் தானே தனது செய்திச் சானல் ஸ்டார் நியூஸை நடத்துவேன் என்று சொல்லியதோடு மட்டுமல்லாமல் ஏப்ரல் முதல் செய்யவும் ஆரம்பித்தது. மத்திய அரசுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடனே இந்தியாவிலிருந்து செயற்கைக்கோள் மேலேற்றல் அனுமதி வேண்டுமென்றால் ஒரு செய்தித் தொலைக்காட்சி நிறுவனத்தில் இந்தியர்கள் 74% பங்கு வைத்திருக்க வேண்டும் என்று அறிவித்தது.

இது போன்ற பல சோதனைகளை சந்தித்திருந்த மர்டாக்கின் நிறுவனம் பல தகிடுதத்தங்களைப் புரிந்து பல ஷெல் நிறுவனங்களை உருவாக்கி அதில் ஸ்டார் நியூஸ் என்னும் தொலைக்காட்சியை நிர்வகிக்கும் நிறுவனத்தில் ஒரு சில பிரபலமான இந்தியர்களுக்கு 74% பங்குகளை அளித்தது, ஆனால் அவர்கள் அனைவரில் எந்த ஒருவருக்கும் ஸ்டார் நிறுவனத்திடமிருந்த 26% பங்குக்குக் குறைவாகத்தான் இருந்தது. இது மட்டுமில்லாமல், ஒப்பந்தம் மூலம் முழுக் கட்டுப்பாட்டையும் தன் கைக்குள்ளேயே வைத்திருந்தது ஸ்டார். எடிட்டர் மற்றும் வேறு பணியாளர்களை மாற்றுவது முதல், விளம்பரங்களை விற்பது முதலான அனைத்து நடவடிக்கைகளும் ஸ்டாரின் கைக்குள்ளே. நாட்டில் உள்ள மற்ற ஊடகப் பெருமுதலாளிகள் ஒன்று சேர்ந்து இதைக் கடுமையாக எதிர்த்தனர். பிரதமர், துணைப்பிரதமர் என்று அனைவரையும் சந்தித்து சண்டை போட்டனர். இதற்கிடையே மத்திய அரசும் விடாது கேள்விமேல் கேள்வி கேட்டு ஸ்டாருக்குக் கடிதம் எழுத,தாவர்களும் பதில் எழுத மாதங்கள் நகர்ந்தன. குமார் மங்கலம் பிர்லா தன் பங்கை சுஹேல் சேத் என்பவருக்கு விற்க, சுஹேல் சேத் என்பவரிடம் ஸ்டாரை விட அதிகப் பங்கு வந்து சேர்ந்தது. அதனையும் மத்திய அரசும் ஏற்கவில்லை; இந்திய ஊடக நிறுவனக்களும் ஏற்கவில்லை.

பின்னர் மத்திய அரசு இன்னும் கடுமையான கட்டுப்பாடாக, செய்தித் தொலைக்காட்சியில்ல் 51% பங்காவது ஒரு இந்தியக் குடும்பத்திடமோ, அல்லது இந்திய நிறுவனத்திடமோ இருக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடும் இந்தியர்கள் கையில் இருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டது. அதோடு ஒரு மாத காலத்தில் ஸ்டார் (மற்றும் பலரும்) இதனை நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்றும் சொன்னது. உடனே இந்தியா வந்திறங்கிய ரூப்பர்ட் மர்டாக்கின் மகன் ஜேம்ஸ் மர்டாக் (ஸ்டார் நிறுவனத்தின் சேர்மன்) ஆனந்த பாஜார் பத்ரிகா எனப்படும் கல்கத்தாவைச் சேர்ந்த அச்சு ஊடக நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து முடித்தார். இது நேற்றைய செய்தி. ஆக இதன்படி ஆனந்த பாஜார் பத்ரிகா ஸ்டார் நியூஸில் 74% பங்கும், ஸ்டார் நிறுவனம் 26% பங்கும் வைத்திருக்கும்.

இனி என்ன ஆகும்? வரும் வருடங்களில் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிலை மாறும். அதன்படி ஸ்டார் தனது பங்கை அதிகரித்துக் கொண்டே போகும். ஆனந்த பாஜார் பத்ரிகாவின் அச்சுப் பதிப்பிலும் 24% வரை ஸ்டார்/மர்டாக் பங்கு எடுக்கும். பின்னர் அந்த நிறுவனம் முழுவதையும் அல்லது 51% வாங்கும். அதன் பின்னர் இந்தியாவும் மர்டாக்கின் கைக்குள்.

இதையெல்லாம் பார்க்க ரூப்பர்ட் மர்டாக் உயிருடன் இருப்பாரா என்பதுதான் அடுத்த கேள்வியே. மனிதருக்கு 73 வயதாகிறது. அவரின் இரண்டாவது திருமணத்தில் பிறந்த இரண்டு மகன்கள் ஜேம்ஸ் மற்றும் லாக்லான், ஒரு மகள் எலிசபெத் (முதல் திருமணத்தில் ஒரு மகள் இருக்கிறார், அவர் தந்தையின் தொழிலில் ஈடுபடுவது இல்லை) ஆகியோர் தந்தையின் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மகளும் இப்பொழுது இந்தத் தொழிலிலிருந்து பிரிந்து விட்டார். இரு மகன்களில் யாருக்குப் பட்டம் சூட்டுவது என்று தந்தை இன்னும் தீர்மானிக்கவில்லை. இதற்கிடையில் தற்போதைய மனைவி வெண்டி (சீனர்) இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி உள்ளார் (70 வயதுக்கு மேலும், புற்று நோய் வந்து நோயிலிருந்து மீண்ட மர்டாக் பெரிய ஆசாமிதான்).

நாளை பாதி சீனர் ஒருவர் இந்தியாவின் முக்கிய ஊடகங்களின் தலைமையாக இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

No comments:

Post a Comment