Sunday, September 07, 2003

மின்தமிழ் குறுந்தகடு மின்னிதழ் பற்றிய விமரிசனம்

"தொலைக்காட்சியின் அசுரத்தாக்குதல்களில் இருந்து சற்றே இளைப்பாறிக் கொள்ள இந்த மின்னிதழ் உங்களுக்கு உதவுமானால் நாங்கள் மகிழ்ச்சி கொள்வோம்." என்று ஆரம்பிக்கும் இந்தக் குறுந்தகடு மின்னிதழ் "மின்தமிழ்" இதழ் 3 இலிருந்து:

திரைப்படத் தணிக்கை பற்றி

பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரும், தணிக்கை குழு உறுப்பினருமான லலிதா சுபாஷ் ஆபாசப் படஙிகளின் காட்சிகளை வெட்டி வெட்டி, வெளியே அனுப்பிய பின்னாலும் அந்தப் படம் ஆபாசமாக இருக்கிறது என்று மக்கள் கூறுவதிலிருந்து தணிக்கைக் குழௌவை அடையும் முன்னால் அந்தப் படம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவும் என்கிறார். ஒரு சில அமைப்புகள், 100-200 பேரோடு போராடுவதால் ஆபாசக் காட்சிகள் நீக்கப்படாது என்றும் அதற்கு அரசு சட்டமே இயற்ற வேண்டும் என்றும் சொல்கிறார். வியப்பாக இருக்கிறது. அப்படியானால் தணிக்கைக் குழு இப்பொழுது என்னதான் செய்து கொண்டிருக்கிறது? ஏதோ காட்டிய படத்தில் ஒரு 10-20% வெட்டிவிட்டு மீதியை என்னவேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று அனுப்பி விடுகிறார்களா? முழுப் படத்தையும் அனுமதிக்க மாட்டேன் என்று ஏன் சொல்லக் கூடாது?

திரைப்படங்களுக்குத் தேவை தணிக்கைகளா? அல்லது "ரேட்டிங்" (rating) ஆ? ஒவ்வொரு படத்திலும் இதை வெட்டு, அதை நீக்கு என்று சொல்வதைக் காட்டிலும் படத்துக்கு அமெரிக்காவில் இருப்பது போல U, PG13, R, X, XX, XXX என்று சொல்லி விடலாமே? திரையரங்குகளுக்கு எந்தப் படத்தை வெளியிடுவது? அந்தப் படங்களை தியேட்டரில் பார்க்க யாரை அனுமதிக்கலாம் என்ற சட்ட திட்டங்கள் இருந்துவிட்டுப் போகட்டுமே? ஷங்கரின் "பாய்ஸ்" படம் பெரும் ஆர்ப்பாட்டத்தை விளைவிக்க இருக்கும் இந்த நேரத்தில் நம்முடைய திரைப்படத் தணிக்கை எவ்வாறு இயங்குகிறது, மற்றும் 'பாய்ஸ்" மாதிரி கொஞ்சம் வெளிப்படையாக ஒரு படம் (ஆபாசமா, இல்லையா என்றெல்லாம் நான் சொல்லப்போவது இல்லை) எடுக்கவே கூடாதா என்ற கெள்விகள் கேட்கப்பட வேண்டும்.

எப்.எம்.ரேடியோக்கள்

பாமரன் என்பவர் எப்.எம் ரேடியோக்கள் பற்றி மிகவும் காட்டமாகப் பேசினார். கிட்டத்தட்ட பா.ராகவனின் "கேட்டுக்கிட்டே இருங்க" கட்டுரையின் [154 கிலோபைட், சபரி பதிப்பகம், ஆகஸ்டு 2003] கருத்துக்களை அப்படியே பிரதிபலித்தது. சிறுவர் நேரத்தில் 12 வயதுக்கும் கீழுள்ள பையன் தொலைபேசி அடித்து "திட்றாங்க, திட்றாங்க ... தம்மடிச்சா திட்றாங்க" பாட்டைப் போடச்சொல்லிக் கேட்க அதையும் செய்கின்றனர் பண்பலைக் காரர்கள், இதென்ன பண்பலை வானொலியா, பண்பில்லா வானொலியா என்று கேட்கிறார். காதல் நேரத்தைப் பற்றிக் காட்டமான கருத்து - "யாரோ எழுதி, யாரோ இசையமைத்து, யாரோ பாடி, இங்க யாரோ யாருக்கோ டெடிகேட் செய்றான்... ஏதோ நாட்டின் பிரதமர் கூடங்குளத்துல அணுமின் நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கற மாதிரி." "காதல் கடிதங்களை நோட்டு புக்குகளில் வைத்து காதலிக்கு அனுப்ப வேண்டிய காலமெல்லாம் போச்சு, வானொலி நிலையத்துக்கே அனுப்பிவிட்டால் அவங்களே பாத்துப்பாங்க. தொலைபேசி ஒரு முக்கியமான நிகழ்வை அடுத்தவர்களுக்குச் சொல்ல வேண்டும் என்று இருக்கையில் இப்படி ஊரில் உள்ளவர்கள் எல்லாம் வானொலி நிலையத்தைத் தொலைபேசியில் அழைக்க, 'அம்மாவுக்கு உடம்பு சரியில்ல' என்ற விஷயத்தைச் சொல்ல முற்படுபவருக்கு 'இந்தத் தடத்தில் உள்ள எல்லா இணைப்புகளும் இப்பொழுது உபயோகத்தில் உள்ளன' என்ற செய்தி வருகிறது. இந்த மாதிரி தொலைக்காட்சி, வானொலிகளுக்கு தொலைபேசுவதை எதிர்த்து பொது நல வழக்கு ஒன்று போடலாமா என்று சிந்தித்து வருகிறேன் என்கிறார்.

அவரையும் நம்மையும் மிகவும் கடுப்பில் ஆழ்த்துவது இந்த வானொலி ஜாக்கிகள் ஒவ்வொரு நேயரையும் பல வருடங்கள் அறிந்திருந்த பாசப் பிணைப்போடு பேசிக்கொள்வதுதான். தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார், ஜெனரல் டயரை சுட்டுக் கொன்றவன் யார் என்றெல்லாம் தெரியாதவர்கள் வானொலியில் நிகழ்ச்சி வழங்குபவர்கள் அத்தனை பேரையும் முழுவதாகத் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் காட்டமாகக் குறைபட்டுக் கொண்டார் பாமரன்.

சினிமா ரசனையைப் பாடமாக வைக்க வேண்டும்

இயக்குனர் பாலு மகேந்திரா பள்ளிகளில் 'சினிமா ரசனை' (film appreciation) என்ற பாடம் கொண்டுவரப் பட வேண்டும் என்ற தன் கருத்தினைப் பற்றிச் சொல்கிறார். சினிமாவின் தாக்கம் தகவல் தொடர்பு ஊடகங்களின் [தொலைகாட்சி, வானொலி] தாக்கத்தை விட அசுரத்தனமானது. இன்றைக்கு மக்கள் இசை என்றால் திரை இசை, கவிதை என்றால் திரைப்படப் பாடல், ஓவியம் என்றால் திரைப்பட விளம்பரப் பலகை என்றதொரு நிலையில் இருக்கையில் நல்ல படம் என்றால் என்னவென்றே தெரியாமல் இருக்க, அத்தி பூத்தாற்போல் ஏதோ ஒரு நல்ல படம் வருகையில் அதைப் புரிந்து கொள்ள முடியாது அது வர்த்தக ரீதியில் தோல்வியடைகிறது. இதனைத் தடுத்து நிறுத்தவே இந்த திரைப்பட ரசனை பற்றிய பாடம் பள்ளிகளில் தேவை என்கிறார்.

ஒரு நாள் நிகழ்வு

பாரதிவாசன் இயக்கிய ஒரு குறும்படம். குடிகாரத் தந்தை, மகளுக்குப் படிப்பு தேவையில்லை என்னும் தாய் இவர்களுக்கு மகளாகப் பிறந்த பெண்ணின் வாழ்வின் ஒரு நாளைப் படமாக்குகிறது இந்த ஆவணப்படம். 5 நிமிடங்களே ஆகும் இந்தப் படத்தில் அந்தச் சிறுமி வேலை பார்க்கத் தெருவில் நடக்கும் போது அங்கே கவலையின்றி விளையாடும் குழந்தைகள் ஏற்படுத்தும் பாதிப்பு, தெருவில் சைக்கிள் ஓட்டிக் கொண்டு செல்லும் மனிதனின் ஏச்சுகள், பேருந்தில் நெருக்கியடித்துச் சென்று துணி தைக்கும் தொழிற்சாலையில் நாளைக் கழித்து வீடு வந்து தம்பி படிக்கும்போது அதைத் தானும் தெரிந்து கொள்ள ஆசையாகப் பக்கத்தில் போய் உட்காரும்போது 'பொம்பளப் புள்ளக்கி படிப்பெதுக்கு? நாளக்கி எவன் வூட்டுலயோ சாப்பாடு தூக்கிக்கிட்டு இருக்கப்போற, பசங்கன்னாலும் ஒரு நாலு காசு சம்பாரிச்சு குடும்பத்தக் காப்பாத்தும்' என்று வள்ளென்று விழும் தாய், தன்னிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு வந்துவிட்டாயா என்று நச்சரிக்கும் தாய் (இல்லாவிட்டால் நாளைக்கு கடன் காரன் வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் தூக்கிக் கொண்டு போய்விடுவான்), இதைப்பற்றியெல்லாம் கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் குடித்து விட்டு இரவு போதையில் வந்து சேரும் தந்தை என்று முடிகிறது அவளுடைய நாள். மீண்டும் அதே போல் அடுத்த நாள் துவங்குவதற்காக.

இம்மாதிரியாக ஒவ்வொரு இதழிலும் ஒரு குறும்படத்தைக் காண்பிக்க இருப்பதாகச் சொல்கின்றனர் இதழாசிரியர்கள்.

இதைத்தவிர ஒரு கோயில் பற்றி (ஈஸ்வரர் கருப்புசாமி திருக்கோயில்), கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணனின் தொழில் வளர்ச்சி பற்றி, செந்தில்நாதனுடன் உலகமயமாதல் பற்றி, மலர் மருத்துவமனை உளவியல் மருத்துவர் என்.ரங்கராஜன் பள்ளி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது பற்றி, கிருத்திகா என்னும் சிறுமி தானே இயற்றிய கானாப் பாடல்களைத் தானே இசையோடு பாடுவது ['நான் ஆளான சின்னப் பொண்ணு, ஆனா வாடாத ரோசாக் கண்ணு' என்று சினிமாத்தரத்திற்கு தாழ்ந்தும், மற்றபடி பொருள் செறிவு ஏதும் இல்லாமலும், ஆனால் நல்ல குரல் வளத்தோடு], கனகராஜன் வாசிக்கும் கவிதைகள் [ஓரளவுக்குப் பரவாயில்லை] என்று முடிகிறது குறுந்தகடு.

ஆசிரியர்கள்: P. தனபால், N. கனகராஜன். மாத இதழ் ரூ. 38, வருட சந்தா ரூ. 440.

தொலைக்காட்சியின் அசுரத்தாக்குதல்களில் இருந்து சற்றே இளைப்பாறிக் கொள்ள இந்த மின்னிதழ் நிச்சயமாக நமக்கு உதவும்.

பி.கு: இந்தக் குறுந்தகட்டை விசிடி கருவிகள் மூலமோ அல்லது கணினியில் எம்பெக் செயலிகள் மூலமோ (Windows Media Player, Real Player) பார்க்கலாம்.

No comments:

Post a Comment