நான் ஸ்டார் நியூஸ் பற்றி இந்த வலைப்பதிவில் எழுத ஆரம்பித்தேன். அதன் முதல் இரண்டு பாகங்கள் இங்கே. பாகம் 1 | பாகம் 2
மேலும் எழுத முயன்ற போது கோப்பை சேமிக்காததால் எல்லாம் அழிந்து போனது. ரூப்பர்ட் மர்டாக்கின் சாபம் என்று அதை மேலும் தொடராது விட்டு விட்டேன். இப்பொழுது இந்த விவாதம் கிட்டத்தட்ட முடிந்து விட்டதால், ஒரு சிறு குறிப்பு மட்டும் கீழே.
முன்னுரை
1. ரூப்பர்ட் மர்டாக் ஸ்டார் டீவீ என்னும் ஹாங்காங் நிறுவனத்தை முழு விலைக்கு வாங்கினார். அந்த நிறுவனம் அப்பொழுது ஹாங்காங்கின் மிகப் பெரிய தொழிலதிபரான லீ கா-ஷிங் என்பவரின் மகனான ரிச்சர்ட் லீ என்பவரது நிறுவனமாக இருந்தது. [லீ கா-ஷிங்கின் நிறுவனம்தான் ஹச்சிசன் எனப்படும் உலகில் பல இடங்களில் செல்பேசித் தொலை தொடர்பு சேவையை அளிக்கும் நிறுவனம். இந்தியாவில் எஸ்ஸார் (மற்றும் பல) நிறுவனத்தின் கூட்டோடு பல இடங்களில் செல்பேசிச் சேவையை அளித்து வருகிறது. ரிச்சர்ட் லீ ஸ்டார் டீவீயை மர்டாக்கிற்கு விற்ற பின் PCCW என்னும் நிறுவனத்தைத் துவக்கி, இந்தியாவிலும் Data Access என்னும் தொலை தொடர்பு மற்றும் இணைய வசதி தரும் நிறுவனத்தில் பெரும் பங்கு வைத்திருந்து இப்பொழுது அதை விற்றுவிடத் தீர்மானித்திருப்பதாகச் செய்தி].
2. ரூப்பர்ட் மர்டாக் என்பவர் ஆஸ்திரேலிய நாட்டின் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களின் அதிபர், ஆஸ்திரேலியா தனக்குப் பத்தாது என்று அங்கிருந்து பிரித்தன் போய் அங்குள்ள பல செய்தித்தாள் மற்றும் ஸ்கை என்னும் செயற்கைக் கோள் தொலைக்காட்சி நிறுவனத்தைத் தன் கைக்குள் வைத்திருப்பவர்; அமெரிக்காவில் ஃபாக்ஸ் தொலைக்காட்சி மற்றும் பல புத்தக அச்சிடும் நிறுவனங்கள், ஹாலிவுட்டில் சினிமா எடுக்கும் தொழிற்சாலை (ட்வெண்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ்) வைத்திருப்பதோடு இப்பொழுது டைரக்டீவீ என்னும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனத்தையும் விலைக்கு வாங்கியிருப்பவர். மகா பெரிய ஊடகப் பேரரசர். இவரை விட உலகெங்கிலும் ஊடகத்தைத் தன் கைக்குள் வைத்திருப்பது யாரும் அல்ல. நிஜமாகவே இவரது ஊடக சாம்ராஜ்ஜியத்தில் சூரியன் மறைவதே இல்லை. கிழக்குக் கோடியில் ஆஸ்திரேலியா, ஜப்பானில் ஆரம்பித்து, ஆசியா முழுவதும் நிறைந்து, ஐரோப்பாவில் கால் பதித்து, வட, தென் அமெரிக்காவை ஆட்டி வைக்கும் அளவிற்கு இவரது நீட்சி. ஆப்பிரிக்காவில்தான் இவருக்கு அதிகமாக ஒன்றுமே இல்லை எனலாம்.
3. சென்ற இடம் எல்லாம் வென்றே தீர வேண்டும் என்ற வெறியுடன் நடந்து கொள்ளும் இவருக்கு பல நாடுகளில் ஆட்சி செய்யும் அரசுகள் தொல்லையைக் கொடுத்தன. மற்ற எல்லாத் தொழிலிலும் தலையையே நுழைக்காத அமெரிக்கா கூட ஊடகங்களைப் பொறுத்தவரை மிக அதிகக் கட்டுப்பாடு வைத்துள்ளது. சீனா என்றால் சொல்லவே வேண்டாம். இவைகளுக்கு முன் இந்தியா வெறும் ஜுஜுபி. அதிக நேரம் செலவு செய்யாமல் இவர் எவ்வாறு உலக அரசுகளை வென்றார், அடிபணிய வைத்தார் அல்லது சலாம் போடுவது போல் போட்டு தன் வெற்றியை முன்னேற்றினார் என்று பார்க்கலாம்.
Tuesday, September 16, 2003
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment