Tuesday, September 09, 2003

கணபதி பப்பா மோரியா

மும்பையில் இன்றுதான் களிமண் பிள்ளையார் சிலைகளுக்குக் கடல் கரைப்பு. இன்று போய் விமானநிலையம் போக வேண்டிய வேலை எனக்கு. மூன்று மணிநேரம் முன்னதாகவே கிளம்பு என்று நண்பர்கள் எச்சரிக்கிறார்கள்.

நேற்று 30 நிமிடம் ஆக வேண்டிய டாக்ஸிப் பயணம் 90 நிமிடம் ஆனது. தெருவெங்கும், ஒவ்வொரு பட்டி தொட்டியிலும் - குறிப்பாக இங்குதான் - பந்தல் அமைத்து பூவினால் அழகு படுத்தி, புதுச்சட்டை போட்ட ஏழை மக்கள் ஆட்டமும் பாட்டமுமாகத் திருவிழா கொண்டாடுகிறார்கள். தெருவில் போக்குவரத்தைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அங்கங்கே ஹோலியில் வண்ணப்பொடியைத் தூவிக்கொண்டிருப்பது போல் ஒருவர் மீது ஒருவர் பொடியைத் தூவிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

கொஞ்சம் நாட்கள் முன்னர்தான் 'கேட்வே ஆஃப் இந்தியா'விற்கு முன்னால் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. மும்பையில் தற்போது காவலர்கள், மிகவேக இயங்கு படை (Rapid Action Force) என்றெல்லாம் 30,000 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.

சில சமயங்களில் நெருக்கமான, கூட்டம் மிகுந்த, வசதிகள் மிகக் குறைந்த பெருநகரங்களில் இதுபோன்ற விழாக்கள் நடக்கத்தான் வேண்டுமா என்று தோன்றுகிறது. தெருவோர ஏழைகளைப் பார்க்கையில், அவர்கள் இந்த விழாக்களுக்குச் செலவிடும் நேரத்தைப் பார்க்கையில், ஓரிடத்துக்குப் போய் கொஞ்சமாக நேரத்தைச் செலவு செய்து, கடவுளைக் கும்பிட்டு ஒழுங்காக வாழ்க்கையில் முன்னேறும் வழையைப் பார்க்க மாட்டேன் என்கிறார்களே என்ற ஆதங்கமும் வருகிறது. தெருவில் உள்ள விளம்பரப் பலகைகள் எல்லாம் விநாயகரை முன்வைத்து செல்பேசிகளை விற்க முயற்சிக்கின்றன. பால் தாக்கரேயும், மகன் உத்தவ் தாக்கரேயும் சுவரொட்டிகளிலிருந்து மக்களைப் பார்த்து விநாயகர் விழாவைக் கொண்டாடச் சொல்லிச் சிரிக்கின்றனர்.

பால கங்காதர திலகர் தொடங்கி வைத்த வழக்கம், இந்தியாவில் வேறெங்கும் இல்லாத மாதிரி மகாராஷ்டிரம் முழுக்க ஒரு தனித்தன்மையோடு இப்படி நடந்து வருகிறது.

எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுவோம்.

No comments:

Post a Comment