Thursday, September 18, 2003

அசோகமித்திரனின் ஒற்றனும், என் சமையலும்

அசோகமித்திரனின் ஒற்றன் படிக்க ஆரம்பித்துள்ளேன்.

1970களில்(?) அமெரிக்காவில் அயோவாசிடியில் ஒரு பல்கலைக்கழகத்தில் ஃபோர்ட் ஃபவுண்டேஷன் ஆதரவில் உலகின் பல எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஒன்று சேர்ந்து இருக்கையில் (அதில் அ.மியும் ஒருவர்) நடந்ததைப் பற்றி எழுதியது. புனைகதையா, நிஜ சம்பவங்களா என்று தெரியாது பின்னிப் பினைந்தது என்று தோன்றுகிரது. இப்பொழுதுதான் 6 அத்தியாயங்கள் படித்துள்ளேன். புத்தகத்துக்கு அறிமுகம் பா.ராவின் 154 கிலோபைட்.

இப்பொழுது எழுதவிருப்பது அவரது புத்தகம் எனக்குள் எழுப்பிய சிந்தனைகள். தான் சாப்பிடப் பட்ட கஷ்டத்தைப் பற்றி எழுதுகிறார் அ.மி. காலையில் கோல்டு சீரியல், பாலில் கலந்து சாப்பிடுவாராம். சீரியல் ஃபுட் என்று கடையில் கிடைக்கும் என்கிறார் (அந்த நாட்டுப் பொங்கல்... என்கிறார்). எனக்கென்னவோ இது சீரியலைப் பாலில் கொட்டி மைக்ரோவேவ் அவனில் கொதிக்க வைத்து, குழைத்து, ஆற வைத்து அவரிடம் கொடுத்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. சோறு வடிக்கக் கஷ்டப்பட்டு மேலே குழைந்து, அடியில் பிடித்து, இடையில் வேகாமல் இருக்கும் சமாச்சாரத்தைப் பற்றிப் பேசுகிறார்.

என் வாழ்க்கை இத்தாகாவில் இப்படியெல்லாம் இல்லை. நான் போனது 1991இல். நான்கு நண்பர்கள். ஆளுக்கொரு பிரெஷர் குக்கரைக் கையோடு கொண்டுபோயிருந்தோம். ஒவ்வொரு குக்கருக்கும் முன்னெச்சரிக்கையோடு 2-3 குக்கர் வெயிட் வேறு. ஆனால் அதற்கெல்லாம் வேலையே இல்லாது போய் விட்டது. ஜப்பானியர்களின் அதிமுக்கியக் கண்டுபிடிப்பான மின்சார அரிசி சமைப்பான் (electric rice cooker) அப்பொழுது அங்கு விற்றுக் கொண்டிருந்ததுதான் காரணமே. நேஷனல் பானாசானிக் எத்தனையோ மின், மின்-அணு சமாச்சாரங்கள் செய்து விற்றுக்கொண்டிருந்தாலும் எதுவும் இந்த ரைஸ் குக்கருக்கு ஈடு இல்லை என்று சொல்வேன்.

வேண்டுமென்ற அரிசியைப் போட்டு அதில் ஒரு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் என்ற அளவுக்குத் தண்ணீரைக் கொட்டி, சுவிட்ச் போட்டு விட்டு எங்கு வேண்டுமானாலும் போய்விட்டு வரலாம். இருபது நிமிடத்தில் சோறு தயாராகி சூடு ஆறாமல் இருக்கும். இரண்டு, மூன்று மணி நேரமானாலும் சுற்றி விட்டு வரலாம். கொஞ்சம் தண்ணீர் அதிகமாகவோ, குறைவாகவோ ஊற்றியிருந்தாலும் பரவாயில்லை, சோற்றின் பதம் அவ்வளவாக வித்தியாசமாக இருக்காது.

அன்றிலிருந்து இன்றுவரை, சென்னையிலும் எனக்கு அரிசிச்சோறு ஜப்பான் ரைஸ் குக்கரில் மட்டுமே. மேலே கஞ்சி இருக்காது. குழையாது, எந்தவொரு தொல்லையும் கொடுக்காது.

அதிலும் அமெரிக்காவில் இருக்கும் போது தாய்லாந்து ஜாஸ்மின் அரிசி என்று ஒன்று கிடைக்குமே, அடடா, பிரமாதம். நம்மூர்ப் பொன்னி எல்லாம் அதனிடம் பிச்சை வாங்கவேண்டும் அய்யா! இப்பொழுது வேறு வழியில்லாமல் பொன்னியிலே போகிறது வாழ்க்கை. (சனிக்கிழமை முதல் ஒரு வாரம் தாய்லாந்தில் விடுமுறைக்குப் போகிறேன், லோக்கல் அரிசிச் சோற்றை ஒரு பிடி பிடிக்க வேண்டும்)

அப்புறம் அந்த மோர் இருக்கிறதே. இத்தாகாவில் கிரௌளி பட்டர்மில்க் என்று கிடைக்கும். கொஞ்சம் திக்காக. நம்மூர் மோர் மாதிரி வராவிட்டாலும் டெட்ராபாக்கில் கிடைக்கும் இந்த மோரில் கொஞ்சம் தண்ணீர் விட்டு சோறுடன் பிசைந்து (ஒரு துளி உப்பு இல்லாமலா?) பொழுதைப் போக்கி விடலாம். கட்டித் தயிரும் (யோகர்ட் என்ற பெயரில்) கிடைக்கும், ஆனால் கிரௌளி மோர் எப்பொழுதுமே எனக்கு அதிகப் பிடித்தமானதாக இருந்தது.

இத்தாகாவில் ஒரு சீக்கியர் மளிகைக்கடை+உணவு விடுதி நடத்திக் கொண்டிருந்தார். அவர் அதை இந்தியக் கடை என்று பெயர் வைத்திருந்தாலும் காலிஸ்தானை ஆதரிப்பதாகத் தன் வேனில் எல்லாம் எழுதி வைத்திருப்பவர். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவரது கடையிலிருந்து 'பேடேக்கர்' ஊறுகாய்களை வாங்கி வீட்டில் அடைத்து விடுவோம். ஊறுகாய் தொட்டுக் கொள்ளக் கிடைக்காத மோர்சாதமும் ஒரு மோர்சாதமா?

இது சமைக்கவே தெரியாத ஜடங்களுக்கு. நான் அப்படியல்லவே. கையோடு ஈயச்சொம்பு முதற்கொண்டு கொண்டு போயிருந்தேன். எதற்கா? ஏனய்யா, இது கூடத் தெரியாது? சாற்றமுது ஈயச்சொம்பில் கொதிக்கும் போதுதானே உயிரும், மணமும் பெறுகிறது?

இரண்டு பெரிய தக்காளிகளை நெடுக்காக நறுக்கி வைக்கவும். சரி, புளிக்கு என்ன செய்வது. முதலில் கையோடு இந்தியாவிலிருந்து கொண்டு வந்த கொட்டை நீக்கிய புளி இருந்தது. வெகு சீக்கிரமாகவே அங்கேயே புளிப்பசை டப்பாவில் கிடைக்கிறது என்று தெரிந்து கொண்டோ ம். ஒரு ஸ்பூனை எடுத்து தண்ணீரில் கரைத்தால் புளித்தண்ணீர் ரெடி. ரசப்பொடியைப் போட்டுக் கொதிக்க வைக்க, பிரஷர் குக்கரில் வேக வைத்த துவரம்பருப்பு (தூர்தால் என்ற பெயருடன்) போட்டு நான்கு கொதி வந்ததும் தாளித்து இறக்க வேண்டியதுதான் பாக்கி. கொத்துமல்லி? அதெல்லாம் கிடைக்காது. சிலான்ட்ரோ என்று பெரிசு பெரிசாய் கொத்தமல்லி மாதிரி (வாசனை கம்மி) கிடைக்கும், பிய்த்துப் போட்டுக் கொள்ள வேண்டியதுதான். பெருங்காயத் தூள் (எல்.ஜி) அதே காலிஸ்தானிக் கடையில் கிடைக்கும். இப்படியாகப் பருப்பு ரசம்.

புளியை நீக்கி, எலுமிச்சை சாறு உபயோகித்தால் எலுமிச்சை ரசம். அப்புறம் அந்த அன்னாசிப் பழம் இருக்குமே, அதைச் சின்ன சின்னதாய் நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்தால் அன்னாசி ரசம். அந்தப் ரசப் பொடியைத் தூக்கிக் கடாசி விட்டு மிளகையும், வத்தல் மிளகாயையும், சீரகத்தையும், கொத்தமல்லி விதைகளையும் வறுத்து மிக்ஸியில் அரைத்து ஒரு மிளகு ரசம் பண்ணலாம். மிளகைக் குறைத்து, கொஞ்சம் தேங்காய் அரைத்து விட்டு மைசூர் ரசமும் கூட. தேங்காய்த் துறுவலைக் கூட பிளாஸ்டிக் பேக்கட்டில் அடைத்து விற்பார்கள்.

இப்படியாக மணக்கும் சாற்றமுதும், சோறும், கையில் கிடைக்கும் காய்கறிகளை வதக்கிக் கறியோ, கூட்டோ, கூடவே உருளைக்கிழங்கு சிப்ஸ், நேரம் கிடைத்தால் இந்தியாவிலிருந்து எடுத்துக் கொண்டு வந்த/அமெரிக்காவிலேயே கிடைக்கும் வத்தல், அப்பளங்களை எண்ணெயில் பொறித்து ஒரு கலக்கல்.

அவ்வப்போது சாதத்தைத் தயிருடன் கலந்து கேரட், வெள்ளரிக்காய் துருவிப் போட்டு, முழிக்க முழிக்க குட்டி திராட்சைகளைப் போட்டு அமர்க்களமாகத் தயிர்சாதம்.

சாப்பாட்டுக்குக் கஷ்டம் என்று இருந்ததே இல்லை.

1 comment:

  1. பத்ரி,
    உங்கள் பெயரைப் போட்டு கூகிளில் தேடினால் பல வித்தியாசமான பதிவுகளுக்குக் கூட்டிச் செல்கிறது...

    இந்தப் பதிவுகளிலெல்லாம் ஒரு கமெண்டும் இல்லை..

    எல்லோருக்கும் மனிதர்கள் பிரபலமான பின்னர்தான் அவர்களிடம் படிக்க சரக்கு இருக்கும் என்று எண்ணத் தோன்றுமோ?!

    இந்த சந்தேகம் ரொம்ப நாட்களாக எனக்கு இருக்கிறது..:))

    ReplyDelete