Sunday, September 07, 2003

நீதித்துறையில் சீர்திருத்தத்தின் அவசரத் தேவை

"நீதித்துறையில் சீர்திருத்தத்தின் அவசரத் தேவை" பற்றி ராம் ஜேத்மலானி நேற்று சென்னை இமேஜ் அரங்கில் பேசினார். இது பால்கிவாலா நினைவிப் பேச்சுகளில் மூன்றாவது.

அதே நாளில், அதே நேரத்தில் இந்திய விமானப் படை போர் சாகசங்களை வானில் நிகழ்த்தியே தீருவேன் என்று முடிவு எடுத்ததோடு மட்டும் இல்லாமல் தமிழ் நாளிதழ்கள் வேறு விடாப்பிடியாக சென்னைவாசிகளை கடற்கரைக்குச் சென்றே ஆக வேண்டும் என்று தினம் சொன்ன காரணாத்தால், மக்கள் கூட்டம் கூட்டமாக மெரீனா கடற்கரை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். தெருவெல்லாம் போக்குவரத்துக் குழப்பமும் நெரிசலும். ராம் ஜேத்மலானி சொன்ன நேரத்துக்கு முன்னமே வந்து விட்டார். 10.30 மணிக்கு ஆரம்பிக்க வேண்டிய பேச்சு பார்வையாளர்களைக் கருத்தில் கொண்டு ஒரு அரை மணிநேரம் தாமதப் படுத்தப்பட்டது.

முன்னாள் அட்டர்னி ஜெனரல் திரு. பராசரன் ராம் ஜேத்மலானியை அறிமுகப்படுத்தினார். அறிமுகப் படுத்தியபோதே மிக்க தைரியசாலி என்று ராம் ஜேத்மாலானியைப் பற்றிச் சொன்னார். பின்னர் பேசத்தொடங்கிய ராம் ஜேத்மலானி முதலில் நானி பால்கிவாலாவுக்கு புகழாரம் சூட்டியபின், நீதித்துறையில் செய்யப்பட வேண்டிய அவசிய மாற்றங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றிப் பேசத் தொடங்கினார்.

[போனமுறை பேசிய என்.விட்டலின் பேச்சை அச்சிட்ட தாளில் கொடுத்ததால், இந்தமுறையும் ஜேத்மலானியின் பேச்சையும் அப்படியே செய்வார்கள் என்று கைக்குறிப்பில் அதிகமாகக் குறித்துக் கொள்ளவில்லை. ஆனால் காலை வாரி விட்டனர் ஏற்பாடு செய்திருந்தவர்கள்.]

முக்கியக் குறிப்புகள் பின்வருமாறு:

  • உச்ச, உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் தரம் குறைந்து கொண்டே வருகிறது
  • நீதிபதிகளை நீக்கும் (impeachment) முறை மிகக் கடினமாகவும், குழப்பமாகவும் இருப்பதால் இது நடைமுறையில் சாத்தியம் இல்லாது இருக்கிறது.
  • இப்பொழுதைய முக்கியத் தேவை National Judicial Commision (தேசிய நீதி வாரியம்?). இந்த வாரியத்தில் ஆளும் கட்சி நியமிக்கும் உறுப்பினரோடு, முக்கிய எதிர்க்கட்சி நியமிப்பவரும், நீதிக்கல்வித்துறை அறிஞர்களும், பார் கவுன்சில் அமைப்பின் நியமன உறுப்பினரும் இருக்க வேண்டும்.
  • நீதிபதிகளைத் தேர்வு செய்கையில் 'தகுதி' (merit) யோடு, அவர்கள் சமுதாயத்தின் பலதரப்பட்ட மக்களின் பிரதிநிதிகளாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது பெண்கள், தலித்துகள், மதச் சிறுமான்மையினர் ஆகியவர்களுக்குத் தகுந்த இடங்கள் தர வேண்டும்.
  • உச்ச நீதிமன்றத்தின் ஒருசில தீர்ப்புகளைக் குறை கூறிய ஜேத்மலானி முக்கியமாக ஏர் இந்தியா வழக்கில் பெண்கள் 50 வயதுக்கு மேல் விமானப் பணியாளராக இருப்பதை எதிர்த்த ஏர் இந்தியாவிற்கு எதிரான மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மாற்றிய உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கடுமையாக எதிர்த்தார்.
  • பொதுச் சிவில் சட்டத்தைப் பற்றிப் பேசுகையில், நேற்றைய தி ஹிந்து நாளிதழில் வீ.ஆர்.கிருஷ்ண அய்யர் எழுதிய கட்டுரையைத் தான் முழுவதுமாக ஆதரிப்பதாகச் சொன்னார்.
  • நாட்டுக்குத் தேவை பொதுச் சிவில் சட்டம் அல்ல, பொதுவான நீதியும், நியாயமுமே
  • நீதிமன்ற அவமதிப்பு (contempt of court) பற்றிய தன் கருத்துகளைச் சொல்கையில் தன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் குறிப்பிட்டு, உண்மையைச் சொல்வது சில சமயங்களில் நீதிமன்ற அவமதிப்பாகி விடுகிறது என்றார். அப்படியாயின் "வாயமையே வெல்லும்" என்று சொன்ன காந்தியும் நீதிமன்றத்தை அவமதிக்கிறார் என்றாகி விடும் என்றார்.

என் நண்பன் நிறையக் குறிப்புகள் எழுதி வைத்துள்ளான். அதனைப் பின்னர் இங்கு வெளியிடுகிறேன்.

No comments:

Post a Comment