Sunday, February 05, 2006

கல்வி வவுச்சர் முறை

சென்ற வாரம் தில்லியில் இருந்தபோது Centre for Civil Society என்னும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்ச்சிக்கு நானும் சத்யாவும் சென்றிருந்தோம்.

Centre for Civil Society - CCS என்பது லிபரல் (எழுவரல்) சிந்தனையுள்ள ஓர் ஆராய்ச்சி மையம். தனி மனிதனின் தளையற்ற வாழ்க்கையை வரவேற்கும் இந்த அமைப்பு தாராளமயமாக்கப்பட்ட சந்தைகளின் தேவையை வலியுறுத்துவதோடு மக்கள்மீதும் சந்தைமீதும் குறைந்த கட்டுப்பாடுகளை விதிக்கும் அரசையும் வரவேற்கிறது.

தில்லியில் அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் ஒவ்வொரு குழந்தைக்காகவும் அரசு மாதாமாதம் எவ்வளவு செலவு செய்கிறது என்று தெரியுமா? ரூ. 100? ரூ. 200? ரூ. 500? ரூ. 1,000?

உண்மையில் அரசு மாதத்துக்கு ஒரு குழந்தைக்கு ரூ. 1,200க்குமேல் செலவு செய்கிறது. அரசின் கல்விக்கூடங்களுக்கான வருடாந்திர பட்ஜெட்டை எடுத்துக்கொண்டு மொத்தமாக அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்கள் தொகையால் வகுத்தால் கிடைப்பது வருடத்துக்கு சுமார் ரூ. 15,000! ஆனால் அரசுப் பள்ளிக்கூடங்களில் கிடைக்கும் கல்வி?

பல பள்ளிகளில் ஆசிரியர்களே வருவதில்லை. வரும் ஆசிரியர்கள் கல்வியில் ஆர்வம் செலுத்துவதில்லை. குழந்தைகளுக்கான அடிப்படை வசதிகள் ஏதும் இல்லை. குழந்தைகள் குடிக்கத் தண்ணீர் இல்லை. இந்தப் பள்ளிகளில் படிப்பவர்கள் பெரும்பாலும் பொருளாதார அடிமட்டத்திலிருந்து வருபவர்கள். சரியான கவனிப்பு இன்றி இந்தக் குழந்தைகள் பாதி நேரம் பள்ளிக்குச் செல்லாமல் விளையாடுகிறார்கள். கெட்ட பழக்கங்களை எளிதில் பெற்றுக்கொள்கிறார்கள். மிகக்குறைவான தேர்ச்சி சதவிகிதமே இந்தப் பள்ளிகளில் நேர்கிறது. மாணவர்கள் வாழ்க்கை மொத்தத்தில் பாழ். அடுத்தடுத்த தலைமுறையினரும் தொடர்ந்து இதே புதைகுழிக்குள் மாட்டிக்கொள்ள நேர்கிறது.

(தனியார் பள்ளிகள் எல்லாமே உயர்வா என்று நீங்கள் கேட்கலாம். பல தனியார் பள்ளிகளும் சரியான வசதிகளின்றியே உள்ளன. ஆனால் காசைக் கொடுத்துக் கல்வியைப் பெறும் பெற்றோர்கள் கல்விக்கூடத்தை மாற்றும் உரிமை பெறுகிறார்கள். அரசுப் பள்ளிக்கூடத்தில் இலவசக் கல்வியை பெறும் குழந்தைகளில் பெற்றோர்கள் தம் விதியை நொந்துகொள்கிறார்கள்.)

ஆனால் அரசுப் பள்ளிகளுக்கு என்று வருடா வருடம் செலவழிக்கப்படும் பணம் எங்கே போகிறது? தெரியவில்லை.

ரூ.15,000க்கு உலகத்தரத்தில் நம் பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் பாடம் சொல்லித்தரலாமே? இதை எப்படிச் செய்வது?

CCS, சிக்ஷா என்னும் அமைப்புடன் சேர்ந்து தில்லியின் குடிசைப்பகுதி ஒன்றில் ஒரு மேடை நாடகத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் பஸ்தியில் வசிக்கும் மக்கள் தினக்கூலிகளாக வேலை செய்பவர்கள். பெற்றோர்களின் படிப்பு என்பதே மிகவும் குறைவு, அல்லது ஏதுமில்லை. இவர்களது பிள்ளைகள் அருகில் இருக்கும் சில அரசுப்பள்ளிகளில் படிக்கின்றன.

இந்தப் பிள்ளைகளும் பெற்றோர்களும் நாடகத்தைக் காண அமர்ந்திருந்தனர். நாடகத்தில் பல்வேறுவிதமான பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள், அதற்காகும் செலவுகள், இந்தப் பள்ளிகளில் என்ன கற்றுத்தரப்படுகின்றன ஆகியவை பேசப்பட்டன. கடைசியில் தில்லி அரசு அரசுப்பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் வருடத்துக்கு ரூ. 15,000 செலவு செய்கிறது என்ற தகவலைப் பெற்றோர்களால் நம்ப முடியவில்லை. அப்படியானால் ஏன் தங்கள் பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை, குடிநீர் இல்லை, ஆசிரியர்கள் இல்லை என்று பல கேள்விகளை எழுப்பினர். நாடக நடிகர்கள் மேடையிலிருந்து இறங்கிவந்து மக்களிடையே கலந்து அவர்களது கருத்துகளைக் கேட்டனர். பிள்ளைகளும் பெற்றோர்களும் வெளிப்படையாக தங்களுக்கு அரசுப் பள்ளிகள்மீது இருக்கும் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினர். பணம் இருந்தால் நல்ல தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்ப்பதையே விரும்புவதாகச் சொன்னார்கள்.

இந்த நிகழ்ச்சி முழுமையாக விடியோ செய்யப்பட்டது. இதைப்போல பல பஸ்திகளில் 'ஜன் சுன்வாயி' நிகழ்த்தி அதன்மூலம் அரசை 'கல்வி வவுச்சர்களை' தரவைப்பது CCS-ன் நோக்கம். அரசு ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ. 15,000 செலவு செய்கிறது என்பது உண்மையானால் அந்த மதிப்புக்கான வவுச்சர்களை பெற்றோர்களுக்குக் கொடுக்கலாம். பெற்றோர்கள் அந்த வவுச்சர்களை எடுத்துக்கொண்டு தங்களுக்கு வேண்டிய பள்ளிகளைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

(இந்த வவுச்சர் முறை ஒன்றும் புதிதல்ல. அமெரிக்காவில் சமீபத்தில் ஃபுளோரிடா மாகாணத்தில் வவுச்சர் முறை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று அந்த மாகாண உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1999-ல் கொண்டுவரப்பட்ட இந்த வவுச்சர் முறையில் ஃபுளோரிடா அரசுப் பள்ளிகளில் படிக்கும் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் விரும்பினால் அரசின் வவுச்சர்களைப் பெற்றுக்கொண்டு தனியார் பள்ளிகளில் சேரலாம். எனக்கு இந்தத் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. மேலும் இந்தியாவில் உள்ள அரசுப் பள்ளிகளின் நிலை படு மோசமானது.)

வவுச்சர்கள் கொடுத்தால் பொதுமக்கள் அனைவரும் அரசுப் பள்ளிக்கூடங்களை விடுத்து தனியார் பள்ளிக்கூடங்களுக்கு ஓடிவிடுவார்கள், அதனால் மிச்சமுள்ள மாணவர்களுக்குப் பாடம் நடத்த முடியாமல் அரசுப் பள்ளிகள் மொத்தமாக இழுத்து மூடிவிடவேண்டியிருக்கும் என்று வவுச்சர்களை எதிர்ப்பவர்கள் கூறலாம். ஆனால் பொதுமக்கள் ஏன் இந்தப் பள்ளிக்கூடங்களை விட்டு ஓடவேண்டிய நிலை இருக்கிறது என்று அவர்கள் சொல்லவேண்டும்.

தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் அரசு (மாநில அரசு, பஞ்சாயத்துகள், நகராட்சிகள்) எந்தப் புதுப் பள்ளிக்கூடத்தையும் திறக்கவில்லை. எம்.ஜி.ஆர் காலத்தோடு அரசு பள்ளிக்கூடம் கட்டுவதை நிறுத்திவிட்டது என்று நினைக்கிறேன். அதேபோல அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளும் எண்ணிக்கையில் அதிகரிக்கவில்லை. ஆனால் வருடா வருடம் பள்ளிக்கூடம் சென்று படிப்போர் தொகை அதிகரிக்கிறது. இந்த மாணவர்களுக்கான கல்விகளை வழங்குவது தனியார் பள்ளிக்கூடங்களே.

நான் நாகப்பட்டினத்தில் படித்த சமயத்தில் (1975-1987) அங்கு மொத்தம் இருந்தவை ஐந்து உயர்நிலைப் பள்ளிக்கூடங்கள். அவற்றில் ஒன்றே ஒன்றுதான் முழுமையான அரசு கல்விக்கூடம். நகராட்சி பெண்கள் உயர்நிலைப் பள்ளி. இரண்டு கிறித்துவ மிஷனரிகளில் பள்ளிகள் (ஒன்று கத்தோலிக்கம், ஒன்று புராடெஸ்டண்ட்). ஒன்று நாகை - நாகூர் இரண்டு இடங்களிலும் இருக்கும் ஹிந்து-முஸ்லிம் அறக்கட்டளை. மற்றொன்று தனியார் அறக்கட்டளை ஒன்று. ஆனால் இந்தத் தனியார் பள்ளிகள் அனைத்துக்குமே அரசு ஆசிரியர் சம்பளத்தை ஏற்றுக்கொண்டது. இன்று இருபது வருடங்களுக்குப் பிறகு நாகையில் இன்னமும் 5-6 பள்ளிக்கூடங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் அனைத்துமே தனியார் பள்ளிகள் - மெட்ரிக் சிலபஸ். எந்தப் பள்ளியிலுமே மாணவர்கள் எண்ணிக்கை குறையவில்லை.

தனியார் யாரும் கல்விக்கூடங்களைக் கட்டாவிட்டால் என்ன ஆகியிருக்கும்? நான் படித்தபொழுது அரசு மான்யம் பெறும் ஒரு பள்ளியில் மிகக்குறைந்த கல்விக்கட்டணத்தில் படித்தேன். ஆனால் இன்று பெரும்பான்மையான மத்தியதர வகுப்பினர் சொந்தச் செலவில் தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.

மொத்தத்தில் இன்று பாதிக்கப்படுவது ஏழைகள் மட்டும்தான். அவர்களுக்கு அவசியம் தேவை கல்வி வவுச்சர்.

கல்வி வவுச்சர் முறை வந்தால் அரசுப் பள்ளிகள் நாளடைவில் இழுத்து மூடப்படும். ஆனால் அதில் வருந்தத்தக்க அம்சம் ஏதும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. தனியார் கல்வி நிறுவனங்கள் பலவும் தோன்றி வவுச்சர் பணத்தில் நல்ல கல்வியைக் கொடுக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன. அரசால் இனியும் கல்வி விஷயத்தில் மக்களுக்கு நல்ல சேவையைக் கொடுக்கமுடியும் என்று தோன்றவில்லை.

அதிகபட்சமாக பாடத்திட்டத்தை நிர்ணயம் செய்வது, தனியார் பள்ளிகளை மேற்பார்வை பார்ப்பது ஆகியவை மட்டுமே அரசின் வேலையாக இருக்கவேண்டும்.

11 comments:

  1. அநியாயமாக இருக்கிறது. நீங்கள் சொல்கிற அந்த 15,000 ரூபாய்கள், அனேகமாக நிர்வாகச் செலவுகளுக்கும், ஆசிரியர்களின் சம்பளத்துக்கும் செலவு செய்யப்படும் என்று நினைக்கிறேன். தெரியவில்லை.

    இந்தக் கல்வி வவுச்சர் முறை எப்படி நடைமுறைக்கு ஒத்து வரும் என்று தெரியவில்லை. அரசாங்கம், தான் தருகிற சலுகைகளை, டோக்கன், வவுச்சர் போன்ற instrument களாகத் தருவதில் உள்ள சிக்கலே, அது உடனடியாக லஞ்சம் ஊழலுக்கு வழிவகை செய்யும். லைசன்ஸ்ராஜின் ரெப்ளினிஷ்மெண்ட் லைசன்ஸ் போல. நாளடைவில் இந்த வவுச்சர்கள் கறுப்புச் சந்தையிலும் கிடைக்கலாம். யாருக்கு, எத்தனை வவுச்சர் கொடுக்கலாம் என்பதில் அரசியல் தலையீடு இருக்கலாம்.
    இந்த சலுகை, மக்களிடம் ஒழுங்காகச் சென்று சேரத் தேவையான சிஸ்டம் இருந்தால் ஒழிய, இதனால் பிரயொசனம் கிடையாது.

    எனக்குத் தோன்றுவது என்ன என்றால், எப்படி, அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு என்று, public private partnership முறை இருக்கிறதோ, அதையே, கல்விக்கூடங்களுக்கும் நடைமுறைப்படுத்தலாம். இப்போது அரசு செலவு செய்வதாகச் சொல்கிற பணத்தில் பாதியை தந்தாலே, தனியார் கல்விக்கூடங்கள், புதிய பள்ளிகளை ஏற்படுத்தும். corporate social responsiblity என்று வணிகப் பேப்பர்களின் சப்ளிமெண்ட்டில் முழங்கும் வர்த்தகப் பெரும்புள்ளிகளை எல்லாம் ஆட்டத்தில் சேர்த்துக் கொண்டு, ஒரு பைலட் திட்டம் போட்டு சோதனை ஓட்டம் செய்யலாம். சுதந்திரத்துக்குப் பிறகு, பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, புதிய பொருளாதாரக் கொள்கை, சுகாதாரம், குடும்பக்கட்டுப்பாடு,என்று முக்கியமான துறைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், கல்வித் துறை மட்டும் அப்படியே தான் இருக்கிறது. யாராச்சும் ஏதாச்சும் புரட்சி செய்தால் தான் நாடு உருப்படும்.

    ReplyDelete
  2. இகாரஸ் சொல்வது போல், இம்முறையில் ஊழல், முறைகேடுகள் நடப்பதற்கு மிக அதிகமாக வாய்ப்புகள் உள்ளன. இந்தியாவின் பொது விநியோக முறைகள் இருக்கும் நிலைமையில் இதைச் செயல்படுத்துவது மிக மிகக் கடினமாக இருக்கும்.

    என்னைப் பொறுத்த வரையில், வவுச்சர் முறை உயர்கல்விக்கு மட்டுமே உகந்ததாகக் கருதுகிறேன். அதாவது பள்ளி முடித்து கல்லூரி அமைப்பில் தகுதி அடிப்படையிலோ, இட ஒதுக்கீடு அடிப்படையிலோ இடம் கிடைத்த பின்னர், ஒரு மாணவர் எந்த காலேஜில் சேருவது என்பதை (வவுச்சர் முறையினால்) பொருளாதாரப் பிரச்னை இன்றி தேர்வு செய்யலாம்.

    பள்ளிப்படிப்பு, இந்தியாவில், அரசாங்க அமைப்பாகவே இருக்க வேண்டும். அது சீர்படுத்தப் படவேண்டியது என்பது சொல்லத் தேவையில்லை.

    ReplyDelete
  3. CCS is a pro free market thinktank.to call it liberal means
    is misnomer.govt. has the duty to provide free and quality education,
    particularly primary and secondary education.voucher system is not a good solution.CCS wants govt to give up its responsibilities and wants unfettered freedom for market forces.education is not a good it is an entitlement and a right.if you agree to this it is easy to see why voucher system is
    a fraud on the people.

    ReplyDelete
  4. Prakash,
    A proper identification method can reduce corruption on this front. It could be an id card (similar to SSN. - No need to 'oppose' anything which refers American system :-)
    Or any proper identification technique.

    ReplyDelete
  5. பத்ரி,
    நீங்கள் எழுதியுள்ளதைப் பார்த்தால் இந்த அமைப்பு (Center for Civil Society) அமெரிக்க Libertarian கட்சியின் இந்தியப் பதிப்பாகத் தெரிகிறது. நீங்கள் குறிப்பிடும் கல்விப் பிரச்சினைக்கு வவுச்சர் முறை தீர்வாகாது. என்னுடைய காரணங்களை இப்போதைக்கு எழுத அவகாசமில்லை. பள்ளிக்கல்வியை அளிப்பது அரசாங்கத்தின் கடமை. இப்போது மத்திய அரசு, மாநில அரசுகள், தனியார் வணிகர்கள் என்று கண்டமேனிக்கு குழப்பப்பட்டிருக்கும் கல்வி முறையே ஏழைகளுக்கு ஒரு பெரிய பிரச்சினை.

    முதலில், கல்வி பொதுப்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு மாநிலப் பட்டியலில் சேர்க்கவேண்டும். இரண்டாவது மாநில அரசுகள் கல்வி கற்பித்தலை decentralize செய்து கல்வி மாவட்ட அளவில் நடைமுறைப் படுத்தும் தன்னாட்சி முறையைக் கொண்டுவரவேண்டும். இதன் மூலமே ஜனநாயகப்படுத்தப்பட்ட, அனைத்து பிரிவினரின் குழந்தைகளுக்கும் பிரச்சினைகள் அதிகமில்லாமல் கல்விபெறும் வசதி கிடைக்கும். நம் நாட்டில் ஜனநாயகம் என்றவுடனே அது அரசுமயப்படுத்தி அதிகாரக் குவிப்பு செய்வது என்று பொருள்படுத்திக்கொண்டு, மாநில அரசோ, மத்திய அரசோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற நினைக்கிறார்கள். இது தவறான புரிதல். அரசாங்கம்-அதிகார வர்க்கம் கட்டுப்பாட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தாராளவாதிகளால் ஒரேயடியாக தனியார்மயப்படுத்துவதே ஒரே வழி என்ற மூர்க்கத்தனமான தீர்வு முன்வைக்கப்படுகிறது (காவல் துறையையும், நீதிபரிபாலனத்தையும் கூட தனியார்மயப்படுத்திவிடலாம். சொல்லப்போனால் மற்றெந்த துறையையும் விட இத்துறைகளில் நமக்கு நீண்டகால அனுபமும், பாரம்பரியமும் உண்டு. ஆனால் அவற்றை, பேட்டை தாதா, கட்டப் பஞ்சாயத்து என்று முகம் சுளிப்போம்). CCS ம், நீங்களும் இதைத் தான் முன்மொழிகிறார்கள். மாநில அரசின் ஆதரவில், தன்னாட்சி பெற்ற கல்வி மாவட்டம், தனியார் (கல்வி வியாபாரிகள் அல்ல, புரவலர்கள்),பெற்றோர்-ஆசிரியர் சங்கம் என்ற கூட்டமைப்பு முறையே அரசாங்கத்துக்கும், பெற்றோருக்கும் அதிக செலவில்லாமல் அனைத்துப்பிரிவினருக்கும் பள்ளிக்கல்வி கிட்ட வகைசெய்யும்.

    ReplyDelete
  6. My thoughts ..

    About 15k : The cost of educating a child to the Govt is definitely 15K and above

    As usual we have the System but made dysfunctional by only one thing 'unaccountability' by Officials which includes teachers .
    Teachers can make a lot of difference to the students and thats what is lacking .

    Private school teachers have to face a very bad treatment by their management , that they are literally on the run for everything . For example even a ten minutes late entry to school will cut off half day from their pay .And most importantly the 'competitiveness' of the school market , makes the management to be more keen on results .

    Voucher system : As an idea it is good..but will not work in our society . Implementation of this will only 'double' the cost of educating a child. No need to say much about Corruption, nepotism etc etc .
    Even if we assume everything works and a child is given admission , most of the parents who pay full fees to his child may object to this idea and possibly a separate section will be created in the school to keep these vouchered students ..which you know may create a divide again .
    and so on ..the possibilities of the system going wrong is endless.

    As said by others in the feedback , those influential in the society (starting from Actors ..Corporates..etc ) can start focusing on providing educational needs rather than giving 'thaiyal 'machines to 'yezhai'.

    Mutts ..and all religious bodies should channelise most of their resources towards educational stream ..I think Christianity has shown what religious service can be by establishing educational; institutions all across Tamilnadu ..which made Madurai or Tirnelveli or Thiruchi or Chennai Equal in terms of College Education.
    For Hinduism ..I can remember only Ramakrishna Matam doing educational work.Today where insecure feelings in individuals are making people lean more towards religion , I think religious bodies can make a difference here .

    Apart from the above , an apprentice system where high school students /college students ..educating primary school students can be done by forming something similar to NSS..The major difference between a successful student and an also ran is the knowledge with the student on what he/she can expect after completing studies. There are enough rolemodels ..but no visible roadmap for them ..All they need is guidance . SC/ST students dont know that there are free things available for them.

    Half of the Engineers in Tamilnadu .. will not be engineers if his /her teacher has not asked to apply for engineering entrance and even filling the application for them .
    We are in need of guidance .

    .....Thanks Let me stop here ....

    ReplyDelete
  7. //தமிழகத்தில் கடந்த சில வருடங்களில் அரசு (மாநில அரசு, பஞ்சாயத்துகள், நகராட்சிகள்) எந்தப் புதுப் பள்ளிக்கூடத்தையும் திறக்கவில்லை. எம்.ஜி.ஆர் காலத்தோடு அரசு பள்ளிக்கூடம் கட்டுவதை நிறுத்திவிட்டது என்று நினைக்கிறேன். அதேபோல அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளும் எண்ணிக்கையில் அதிகரிக்கவில்லை. ஆனால் வருடா வருடம் பள்ளிக்கூடம் சென்று படிப்போர் தொகை அதிகரிக்கிறது. இந்த மாணவர்களுக்கான கல்விகளை வழங்குவது தனியார் பள்ளிக்கூடங்களே.//

    இது முற்றிலும் தவறான கருத்து. இதைப் பற்றி ஆதாரங்களுடன் நான் தனிப்பதிவு ஒன்று பொடுகிறேன்.

    அதற்கு முன்பு நீங்கள் சர்வ சிக்ச அபியான் திட்டத்தைப் பற்றிய விவரங்களை படித்தால் உபயோகமாக இருக்கும்.

    அன்புடன்

    ராஜ்குமார்

    ReplyDelete
  8. http://www.tn.gov.in/policynotes/school_education.htm

    Please visit the above site.

    TN Govt. has listed out the following achievements in its policy note.

    Important achievements during 2001-2005

    During 2001-2002, the scheme "Education for All" was introduced in all districts of the State to provide basic education to all children in the age group of 6-14. An outlay of Rs.1649 crores has been envisaged for this scheme during the X Plan period.

    Under the scheme of Education for All, activities like opening of new schools, construction of school buildings, construction of Block and Cluster Resource centres, training of teachers, providing drinking water, toilet facilities and maintenance of schools etc. have been undertaken at a cost of Rs.357.15 crores up to 31.3.2004. The activities at a cost of Rs.449.04 crores are under implementation during 2004-2005.

    1112 Elementary Schools, 2106 Middle Schools, 295 High Schools and 335 Higher Secondary Schools have been opened during 2001-2005. By this 100% schooling access at primary level and upper primary level has been achieved.

    For the first time, financial assistance was obtained from NABARD for the Education Department for the improvement of infrastructure facilities like class rooms, laboratories, drinking water and toilet facilities in 605 Government High and Higher Secondary schools in three phases at a cost of Rs.182.74 crores and the works are nearing completion. Further assistance for schemes costing of Rs.232.10 crores has been received for the implementation of the above facilities in 549 Government High and Higher Secondary schools.

    anbudan

    rajkumar

    ReplyDelete
  9. ராஜ்குமார்: தகவலுக்கு நன்றி. தமிழக அரசு இவ்வளவு கல்விக்கூடங்களை கடந்த சில வருடங்களில் கட்டியிருப்பது ஆச்சரியமான செய்திதான். இதுபற்றி மேலும் சில தகவல்களை சேகரிக்கிறேன்.

    ReplyDelete
  10. இங்கு charter schools இருக்கின்றது. இந்த பள்ளிகளை தனியார்கள்
    நிர்வாகம் செய்வார்கள். அரசாங்கம் பணமும், இடமும் கொடுக்கும்.
    இப்பொழுது இருக்கும் பள்ளிகளை அந்தந்த கிராமத்திடமே
    நிர்வாகத்தை கொடுத்துவிடலாம். அவர்களே பாடதிட்டத்தை
    தேர்ந்தெடுக்கும் உரிமையும் கொடுக்க வேண்டும். ஒரு கமிட்டி போட்டு,
    அதில் கலெக்டர், கல்வித்துறை அதிகாரிகளையும் கண்காணிப்பாளர்களையும்
    போடலாம்.

    ஒட்டுமொத்தமாக வவுச்சர் கொடுத்தாலும். வேறு எதை செய்தாலும், ஆசிரியர்கள் ஒன்று
    சேர்ந்து ஆட்சியை கவிழ்த்து விடுவார்கள். கொஞ்சம் கொஞ்சமாக
    செய்யலாம்.

    govt aided பள்ளிகள் கூட தனியார் நிர்வாகம்தான். இதிலும் ஊழல்
    நடக்கிறது.

    அரசாங்க நிர்வாகத்தின் லட்சணம் இன்று நாராயண் பதிவில்
    தெரிகிறது.

    ReplyDelete
  11. என்னால் இந்த வவுச்சர் திட்டத்தை சரியாக புரிந்து கொள்ள இயலவில்லை.

    நான் எங்கள் கிராமத்தில் உள்ள அரசு நடுனிலைப் பள்ளி மற்றும் அருகாமையில் உள்ள மேல்னிலைப்பள்ளியில் படித்து முடித்து தற்போது பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன்.

    அரசுப் பள்ளிகளின் நிலை உண்மையில் மிகவும் வருந்தத்தக்க நிலையில்தான் இருக்கிறது. இதை நான் 12வது முடித்து விட்டு(2003), பிறகென்ன செய்வது என்று விழித்து விட்டு, பிறகு மீண்டும் படித்ததையே ஒருவருடம் டியூசன் உதவியோடு SELF IMPROVEMENT(இப்பொது இல்லை)போட்டு, ஒரு நல்ல அரசுப் பொறியியற்கல்லூரியில் சேர்ந்தபோது தான்... நாம் எவ்வளவு ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணரமுடிந்தது.

    இப்பவும் என்னைப் போன்றவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க ஏதாவது வழிவகை உருவாகாதா என்ற ஏக்கமும் அதைப் பற்றிய தேடலும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அப்படி தேடியதில் கிடைத்த ஒரு ஆறுதல் செய்தியை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

    சுட்டி: http://www.dinamalar.in/pothunewsdetail.asp?News_id=11323&cls=&ncat=TN

    ReplyDelete