Saturday, November 08, 2008

சந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது

இன்று மாலை சுமார் 5.00 மணி அளவில், சந்திரயான் விண்கலம் சந்திரனைச் சுற்றுமாறு நமது விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர்.

இந்த சந்திரயான் பயணத்திலேயே மிக முக்கியமான நிகழ்வு இதுதான். இப்போது இந்த மிஷன், வெற்றியடைந்துள்ளது என்று தைரியமாகச் சொல்லலாம். இனியும் சில நிகழ்வுகள் பாக்கியுள்ளன என்றாலும், அவற்றை இந்திய விஞ்ஞானிகள் சாதிப்பதில் பெரும் பிரச்னை ஏதும் இருக்கமுடியாது. இப்போது சந்திரயான், சந்திரனைச் சுற்றி, 504 - 7,502 கி.மீ நீள்வட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டிருக்கிறது.

இங்கிருந்து அடுத்த சில நாள்களுக்குள் இது படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 100 கி.மீ வட்டப் பாதைக்கு மாற்றப்படும்.

இன்றுதான் சந்திரயான் இதுவரை இல்லாத ஆளவுக்கு சந்திரனுக்கு மிக அருகில் வந்தது. இதுவரையில் பூமி ஒன்றின் ஈர்ப்பு மட்டும்தான் சந்திரயானைச் சுற்றவைத்துக்கொண்டிருந்தது. ஆனால் இன்று சந்திரனும் அருகில் வந்ததால், சந்திரனின் ஈர்ப்பு விசையும் சேர்ந்துகொண்டது. இதன் விளைவாக, இந்திய விஞ்ஞானிகள் இன்று செய்த சிலவற்றைச் செய்திருக்கவில்லை என்றால், சந்திரயானின் வேகம் அதிகரித்து, அது எங்கோ பூமியின் பரப்பை விட்டுச் சென்று காணாமல் போயிருக்கும்.

மேலே உள்ள படத்தைப் பாருங்கள். இங்கே பாதை 1 தான் 1,000 - 3,80,000 கி.மீ சுற்றுப்பாதை. இதில்தான் சந்திரயான் 4 நவம்பர் 2008 அன்று சுற்றத்தொடங்கியது. சந்திரன் பாதை 2-ல் எப்போதும் பூமியைச் சுற்றிவருவது. அப்படியே விட்டிருந்தால், கவண் கல்லைப் போல, சந்திரனைத் தாண்டும்போது, சந்திரயானின் வேகம் அதிகரிக்கும். விநாடிக்கு 2 கி.மீ என்ற வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் சந்திரயான், சந்திரனின் ஈர்ப்பும் சேர்த்து வேகத்தை அதிகரித்து, பாதை 3-ல் பயணித்திருக்கும். பிறகு மீளவே முடியாத வெளியில் எங்கோ, எங்கோ காணாமல் போயிருக்கும்.

இதைத் தடுக்க, சந்திரயானின் உள்ளே இருக்கும் லிக்விட் அபோஜீ மோட்டாரை இயக்கி, வேகத்தைக் கணிசமாகக் குறைத்தனர். விநாடிக்கு 1.5 கி.மீ என்று வேகம் குறைந்ததும், சந்திரயான், சமர்த்தாக பாதை 4-க்கு வந்துவிட்டது. இனி இது சந்திரன் பூமியைச் சுற்றிவர, சந்திரனைச் சுற்றியபடியே செல்ல ஆரம்பிக்கும். ஒரு ஜாங்கிரியின் வடிவத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இனிமேல் சந்திரயானின் பாதை என்பது ஒரு ஜாங்கிரி.

நடுவில் இருப்பது பூமி. அதைச் சுற்றி இருக்கும் வட்டப்பாதை சந்திரனின் பாதை. சுற்றி இருக்கும் சற்றே அசிங்கமாக வரையப்பட்ட ஜாங்கிரிதான் சந்திரயான் சுற்றும் பாதை - பூமியுடன் ஒப்பிட்டால். (சூரியனுடன் ஒப்பிட்டால் சந்திரனின் பாதையே ஜாங்கிரி. அப்படியென்றால் சூரியனுடன் ஒப்பிட்டால் சந்திரயானின் பாதை ஜாங்கிரிக்குள் ஜாங்கிரி! சுழலும் பால்வீதி அண்டத்துடன் ஒப்பிட்டால்? ஒரே ஃப்ராக்டல் ஜாங்கிரிதான்.)

இப்போடு முதற்கொண்டே சந்திரயான், சந்திரனைப் படம் பிடித்து அனுப்ப ஆரம்பிக்கும். ஆனால் 100 கி.மீ பாதைக்குள் வந்துவிட்டால், இன்னும் அழகாக, துல்லியமாகப் படம் பிடிக்க ஆரம்பிக்கும்.

அது இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்தியக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் நேரு பிறந்தநாள் பரிசாக இருக்கும்.

8 comments:

  1. ஆம்ஸ்ட்ராங்கும் பிறரும் சென்ற விண்கலம் (அல்லது சென்றதாக அமெரிக்கா கூறும் விண்கலம் !!) இப்படி தான் சென்றதா

    ReplyDelete
  2. jangirikkul jaangiri , nalla udaranam,explained in a easy way ..chinna kuzanthaikku kooda puriyum, nandri thalaivaa, indiyanaaga peranthathirkaaga perumaipattukollalam

    ReplyDelete
  3. மிக மிக தெளிவாக சொல்லிவருகிறீர்கள். நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  4. Good post, enjoyed reading it. Explained the word, Chandra-yaan in,
    http://nganesan.blogspot.com/2008/10/candra-yaanam.html

    N. Ganesan

    ReplyDelete
  5. மிக அழகாக புரிகிறது, மிகுந்த நன்றிகள்

    ReplyDelete
  6. மிக எளிமையாக புரிகிறது.. நன்றி ஸார்..

    ReplyDelete
  7. Beautiful way of explaining....Are you a Professor or Teacher of any institution.

    with regards
    Venkat

    ReplyDelete
  8. Maduraikkaran: He is running a publishing company. So many people have already responded for his posts, asking him to take up the job of Professor so that many students will benefit.

    ReplyDelete