Saturday, June 06, 2009

சுந்தரர் வாழ்க்கையிலிருந்து சில காட்சிகள்

தஞ்சாவூர் பிருகதீஸ்வரர் கோயிலின் கருவறையைச் சுற்றி உள்ள பிராகாரத்தில் பல சோழர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றைப் படம் பிடிப்பது மிகவும் கடினம். உள்ளே சென்று பார்க்க அனைவருக்கும் அனுமதி கிடைப்பதில்லை.

அங்கு உள்ள ஓவியங்கள் சிதிலமடையத் தொடங்கி வெகு நாள்கள் ஆகின்றன. இந்நிலையில் இந்திய தொல்லியல் துறையின் ஸ்ரீராமன் இந்த ஓவியங்களை டிஜிட்டல் முறையில் சேமிக்கும் வேலையில் இறங்கி வெற்றி கண்டுள்ளார்.

சென்ற மாதம், சோழர் ஓவியங்களைப் பற்றி அவர் பேசினார். இன்று மாலை, அந்த ஓவியங்களிலிருந்து ஒரே ஒரு ஓவியத்தை - ‘சுந்தரர் வாழ்க்கையிலிருந்து சில காட்சிகள்’ என்ற பெயருடைய பேனலை - எடுத்துக்கொண்டு அதை நெருங்கிச் சென்று பார்த்து பேசுவார்.

இந்த ஓவியம் அரசனுக்கே மிகவும் பிடித்ததாக இருந்திருக்கவேண்டும். கடவுளுக்கு நெருங்கிய நண்பனாக சுந்தரர் இருந்ததுபோன்றே தானும் இருக்கவேண்டும் என்ற அரசனின் ஆசை இந்த ஓவியத்தில் தென்படுகிறது. மேலும் இந்த ஓவியத்தில் அந்தக் கால வாழ்க்கை எப்படி இருந்தது என்பதும் காணக்கிடைக்கிறது. இந்த ஓவியத்தை நாம் நெருக்கமாக அருகில் சென்று பார்க்கப்போகிறோம்.

ஸ்ரீராமன், பழங்கால வரலாறு மற்றும் தொல்லியலில் முதுநிலைப் பட்டமும் தொல்லியலில் முதுநிலைப் பட்டயமும் பெற்றவர். தற்போது இந்திய தொல்லியல் துறையில் துணை கண்காணிப்புத் தொல்லியலாளராக உள்ளார். இத்துறையில் இவருக்குச் சிறந்த அனுபவம் உள்ளது. கர்நாடகத்தில் பானஹள்ளி என்ற வரலாற்றுக்கு முந்தைய இடம், செஞ்சி என்ற இடைக்கால இடம், மஹாபலிபுரம் என்ற வரலாற்றின் ஆரம்பக் கட்ட இடம் போன்றவற்றில் நிறைய அகழ்வாராய்ச்சிகளைச் செய்துள்ளார். கர்நாடகத்திலும் தமிழகத்திலும் பல இடங்களை அகழ்வாராய்ச்சி செய்து அதன்மூலம் பல தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த தளங்களைக் கண்டுபிடித்துள்ளார். ஹாரப்பா நாகரிகம் பரவியிருந்த லோத்தாலில் உள்ள அருங்காட்சியகம், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை உள்ளே இருக்கும் கோட்டை அருங்காட்சியகம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார்.

இவர் பிருகதீஸ்வரர் கோயிலில் உள்ள விளக்க மையத்தைத் திட்டமிட்டு, வடிவமைத்து, உருவாக்கியுள்ளார். அதேபோல், பிருகதீஸ்வரர் கோயில் சோழ ஓவியங்களையும் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் சுவர் சிற்பங்களையும் ஆவணப்படுத்துவதைத் திட்டமிட்டு, ஒருங்கிணைத்துள்ளார்.

திரு ஸ்ரீராமன், ஆராய்ச்சி இதழ்களில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். தென்னிந்திய நினைவுச் சின்னங்கள் பலவற்றைப் பற்றியும் சிறு பிரசுரங்கள், கையேடுகளை உருவாக்கியுள்ளார். தற்போது, சோழர் ஓவியங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

***

நிகழ்வு நடக்கும் இடம், நேரம்:

வினோபா அரங்கு, தக்கர் பாபா வித்யாலயா
58, வெங்கட்நாராயணா சாலை, தி. நகர், சென்னை 17
6-6-2009, சனிக்கிழமை, மாலை 5.00 மணி

2 comments:

  1. இந்திய மண்ணில் ஓவிய நிகழ்வுகள் - எழுதிய அரவக்கோன் கோயில் சிற்ப ஓவியங்களை பற்றியும் விளக்கமாக எழுதியுள்ளார்.
    அதேபோல் தமிழக கோயில் ஓவியங்களைப் பற்றி ஏதேனும் பிரெத்யேக புத்தகம் உள்ளதா? ஆங்கிலத்தில் உள்ளது, ஆனால் தமிழில் தொகுப்பட்ட பழங்கால ஓவிய நிலைப்பாடுகள் இதைப் போன்ற கருத்தரங்குகளால் மட்டுமே நிரப்ப முடியும்.
    இதெயெல்லாம் தொகுத்து வெளியிட்டால் வரலாற்று செய்திகளைத் தவிர கோயில் ஓவியங்களின் இன்றைய நிலைப்பாடையும் தெரிந்துகொள்ள வாய்ப்பாக அமையும்.
    இதைப்போன்ற நிகழ்வுகளுக்கும், குறிப்பாக அவற்றை ஆவணப் படுத்தும் முயற்சிகளுக்கும் நன்றி.

    ReplyDelete
  2. காலை 8:14க்கு முன்னர் மாலை 5 மணிக்கு மேல் இணையம் பக்கம் வருபவர்களின் நலன் கருதி இது போன்ற நிகழ்ச்சிகளையும் நீங்கள் அலைபேசியில் குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கலாமே

    :) :)

    தெரிந்திருந்தால் வந்திருப்பேன் :)

    ReplyDelete