Monday, June 15, 2009

சிரி சிரி சிரி

ஞாயிறு, 14 ஜூன் 2009 அன்று அம்பத்தூர் நகைச்சுவை அமைப்பினர் (ஹியூமர் கிளப்) அவர்களது மாதாந்தரக் கூட்டத்துக்கு என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். அவர்களது போதாத வேளை...

நான் அப்படி ஒன்றும் முசுடு கிடையாது. ஆனால், வெட்டி ஜோக் அடிப்பது, சிரிப்பு மேட்டர் போடுவது என்பது என் வாடிக்கை அல்ல. விட்டால், ‘சிரிப்புகள் பலவிதம், அவையாவன... 1, 2, 3...’ என்று பட்டியல் போட்டுப் பதிவெழுதத் தோன்றும். நான்கு முறை கேட்டு உறுதி செய்துகொண்டேன். கூட்டம் ஏற்பாடு செய்பவர்கள், பல நேரங்களில் பேச ஆள் கிடைக்காமல் திண்டாடுவார்கள். இன்விடேஷன் அடிக்க ஒரு நாள்தான் பாக்கி என்னும்போது ஒருவர் மற்றவரிடம் அவசர அவசரமாகப் பேசி, கிடைத்த நான்கு பேரில் முதல் ஆசாமியை ஃபோனில் தொடர்புகொண்டு, அவர் சரி என்று சொன்னதும் டக்கென்று ஃபோனை வைத்துவிட்டு இன்விடேஷன் அடித்துவிடுவார்கள்.

அம்பத்தூர் என்பது அடுத்த ஊர். அண்ணா நகர் போய், திருமங்கலம் போய், முகப்பேர் போய், போய் போய் திடீரென ஒரு புது ஊர். அங்குள்ள மக்கள் சென்னைவாசிகள் போலவே இல்லை. யாரோ ஓர் ஆசாமி பேசுவதைக் கேட்க 60 பேர் வரை வந்திருந்தார்கள். ஞாயிற்றுக்கிழமை தொலைக்காட்சியில் சீரியல்கள், சினிமா ஏதும் போடுவதில்லையா, அல்லது அவையெல்லாம் அம்பத்தூரில் தெரிவதில்லையா?

எனக்கு இந்த செயற்கைச் சிரிப்புகளில் நம்பிக்கை இல்லை. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்ற பழமொழியிலும் நம்பிக்கை இல்லை. மனிதன் ஒருவன்தான் சிரிக்கத் தெரிந்த ஒரே விலங்கு என்றெல்லாம் சொல்லப்படும் சொத்தைவாதமும் எனக்கு ஏற்புடையதல்ல. ஆனால் நேற்று முதல் பரிசு வாங்கிய ஒரு ஜோக் நிஜமாகவே சிரிக்கவைத்தது.

சவுதி அரேபியாவில் ஒரு ஜெர்மன்காரன், ஒரு பாகிஸ்தானி, ஒரு இந்தியன் மூவரும் குடித்துவிட்டு மாட்டிக்கொண்டார்களாம். உடனே அரபு ஷேக் அந்த மூவரையும் பிடித்து கசையால் அடிக்க உத்தரவிட்டாராம். ஆளுக்கு இருபது கசையடி. இந்த மூவரும் அய்யா, சாமி என்று அழுது கெஞ்ச, போனால் போகிறது என்று கசையடியை குறைக்காமல், ஆளுக்கு ஒரு வேண்டுகோள் செவி சாய்க்கப்படும் என்று ஷேக் அனுமதி கொடுக்கிறார்.

ஜெர்மன்காரன், தனக்கு முதுகில் கட்டிக்கொள்ள ஒரு தலகாணி (தலையணை) வேண்டும் என்று கேட்கிறான். அதை அவன் முதுகில் கட்டிக்கொள்ள, பத்து அடியில் தலகாணி பிய்ந்துவிடுகிறது. மீதி அடியில் அவன் சுருண்டு விழுகிறான். அடுத்து பாகிஸ்தானி. அவன் இரண்டு தலகாணி வாங்கிக் கட்டிக்கொள்கிறான். அது பதினைந்து கசையடியைத் தாங்கிக்கொள்ள, மிதி ஐந்தில் அவனும் சுருண்டுவிழுகிறான். கடைசியாக இந்தியன். அவன் முறை வரும்போது ஷேக், இந்தியா ஓர் உன்னதமான நாடு என்பதால் இரண்டு வேண்டுகோள்களைக் கேட்கலாம் என்கிறார்.

இந்தியன் சொல்கிறான்: “ஐயா, கசையடியைக் குறைக்கவேண்டாம், 20 என்பதை 100 ஆக்குங்கள்.”

ஷேக்குக்கு ஒரே ஆச்சரியம். சரி அப்பா, இரண்டாவது வேண்டுகோள் என்ன?

“அந்த பாகிஸ்தானியைத் தூக்கி என் முதுகில் கட்டுங்கள்!”

இப்படியாக ஆளாளுக்கு வந்து ஒரு/பல ஜோக்குகளைச் சொல்ல, அரங்கம் கலகலக்க, பட்டாணி சுண்டல் வந்தது; பின்னர் காப்பி வந்தது. கடைசியாக நான் பேசும் முறையும் வந்தது. கொஞ்சம் கஷ்டப்பட்டு அவர்களைச் சிரிக்கவைத்தேன் என்று நினைக்கிறேன். அல்லது விருந்தாளி மனம் நோகக்கூடாது என்பதனால் அவர்கள் சிரித்துவைத்தார்களா என்றும் தெரியவில்லை.

இந்த மாதிரி மைலாப்பூர் பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியிலும் மாதாமாதம் இரண்டா ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு ஹியூமர் கிளப் உறுப்பினர்கள் ஒன்றுசேர்கிறார்களாம். விரும்புபவர்கள் அங்கு போய் சிரிக்கமுடியுமா என்று பாருங்கள்.

13 comments:

  1. பா. ரெங்கதுரைMon Jun 15, 08:06:00 PM GMT+5:30

    விரைவிலேயே நகைச்சுவைத் துணுக்குகளின் தொகுப்பு ஒன்றைக் கிழக்கிலிருந்து எதிர்பார்க்கலாமா? அல்லது, மாற்றாக தீவிர இலக்கியப் புத்தகம் ஏதேனும் வெளியிடப்போகிறீர்களா?

    ReplyDelete
  2. நானும் போயிருக்கிறேன் உங்களைப் போலவே. Guest of Humour என குறித்திருந்தனர்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. >நான் அப்படி ஒன்றும் முசுடு கிடையாது.<

    முதல் பாரா படிச்சவுடனே நினைச்சேன், போயும் போயும் இவரையான்னு, பாவங்க ஹூமர் க்ளப் பாவப்பட்ட மக்கள்ஸ்! :))

    டைனோ

    ReplyDelete
  4. சிரிக்க கூடிய ஜோக்குதான்.

    பத்ரி, எங்கள் ஊரிலும் பிரதி மாதம் முதல் ஞாயிறு காலை ஹியூமர் கிளப் நடக்கும்.

    அடுத்த மாதம் சிறப்பு விருந்தினராக உங்கள் பெயரை வழி மொழியப்போகிறேன்.

    ReplyDelete
  5. நீங்கள் ஏன் எப்பொழுதும் சீரியஸ் ஆன பதிவகளே போடுகிறீர்கள்? :D

    ReplyDelete
  6. ***
    சிரிப்புகள் பலவிதம், அவையாவன... 1, 2, 3...’ என்று பட்டியல் போட்டுப் பதிவெழுதத் தோன்றும்
    ***

    பத்ரி, இது எல்லாம் ரொம்பவே ஓவரு. உங்களை கூப்பிட்டாங்களே, அவங்களை உதைக்கணும்.

    ReplyDelete
  7. “அந்த பாகிஸ்தானியைத் தூக்கி என் முதுகில் கட்டுங்கள்!”//

    உண்மையிலேயே சிரித்தேன்,பத்ரி.

    ReplyDelete
  8. இதே ஜோக்கினை மைலாப்பூர் பி.எஸ்.மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த என் சொந்தக்காரின் பையன் 4 வாரங்கள் முன் சொன்னது நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  9. “அந்த பாகிஸ்தானியைத் தூக்கி என் முதுகில் கட்டுங்கள்!”//

    இது என்ன? இதற்கு பெயர்தான் ஜோக்கா? கொடுமை. நமது வஞ்சத்தை இப்படி ஜோக்குகளின் வழியாகத்தான் தீர்க்கவேண்டுமா என்ன? இதற்கு சிரிப்பவர்களும் சிரித்தவர்களும் ஒரு வகையில் சாடிஸ்டுகளே. நகைச்சுவை என்பது நல்ல சுவையாக இருக்கவேண்டும்.

    ReplyDelete
  10. நகைச்சுவை கிளப்புக்கு உங்களை அழைத்தது கலி முற்றியதைச் சுட்டிக்காட்டுகிறது. ஆனாலும் இந்தப் பதிவைச் சற்றே நகைச்சுவையாக எழுத முயற்சித்திருக்கிறீர்கள். இருப்பினும் நீங்கள் பேசியபோது என்ன சொல்லி சிரிக்க வைத்தீர்கள் என்பதில் ஒரு சிலவற்றையாவது சொல்லி இங்கே மீள் பரிசோதனை செய்திருக்கலாம்.

    ReplyDelete
  11. அருமையாகப் பேசிய திரு. பத்ரியின் நகைச்சுவையில் ஒரு பகுதி இதோ!

    http://www.box.net/shared/nzk1agifyp

    அன்புடன் சிரிப்பானந்தா!

    ReplyDelete
  12. //
    அந்த பாகிஸ்தானியைத் தூக்கி என் முதுகில் கட்டுங்கள்
    //

    எனக்கு முடிவெட்டுபவர் ஒரு பாகிஸ்தான்காரர்.

    மிகுந்த உபசரிப்பு, மரியாதை, தோழமை. பழகுவதற்கு இனிமையானவர்கள் தான்!.

    (ஆனால் என்ன! எனக்குத்தான் கழுத்தில் கத்தி வைக்கும்போதெல்லம் உதறல் எடுக்கிறது!)

    ReplyDelete