Sunday, June 28, 2009

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா?

மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல், ஒரு வெடியைக் கொளுத்திப் போட்டுள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வே வேண்டாமே என்கிறார்.

இது யஷ் பால் கமிட்டி பரிந்துரையின் பேரில் வந்துள்ளது என்று நினைக்கிறேன். யோசித்துப் பார்த்ததில் இது நியாயமாகவே எனக்குப் படுகிறது. இதை ஆப்ஷனல் என்று வைத்துவிட்டால், சரியாகத்தான் இருக்கும். பள்ளி இறுதித் தேர்வு என்று ஒரு தேர்வு இருந்தாலே போதும் என்று தோன்றுகிறது.

11, 12 வகுப்புகளில் எந்த அடிப்படையில் ஒரு மாணவருக்கு ஒரு குறிப்பிட்ட பாடத் துறை தரப்படும் என்ற கேள்வி எழும். சமீபத்தில் தான் விரும்பிய ஒரு பாடத் துறை கிடைக்காத ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்ட செய்தியை வலைப்பதிவுகளிலும் பத்திரிகைகளிலும் பார்த்தோம். அந்தப் பிரச்னையை எதிர்கொள்வது வேறு விஷயம்.

அடுத்து முக்கியமானது பாலிடெக்னிக் மற்றும் ஐடிஐ படிப்புகளுக்கு எந்த அடிப்படையில் மாணவர்களை சேர்ப்பது என்ற கேள்வி. இந்தப் படிப்புகளுக்கு ஒருவர் போக விரும்பினால், முன்னதாகவே முடிவு செய்து, ஆப்ஷனல் 10-ம் வகுப்பு தேர்வை எழுதி, பின்னர் இந்தப் படிப்புகளுக்குப் போகவேண்டும். இதனால் பல மாணவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியாத குழப்பம் ஏற்படலாம்.

அடுத்தது, பள்ளி விட்டு பள்ளி மாறும்போது. பத்தாம் வகுப்புத் தேர்வையும் ஒரு பள்ளிக்கூடமே நடத்தி மதிப்பெண்கள் கொடுக்கும்போது, மாணவர் வேறு ஒரு பள்ளிக்கு மாற விரும்பினால் அந்த மாணவரது தரம் என்ன என்பதை எப்படி அறிந்துகொள்வது? இது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று தோன்றுகிறது. இப்போது ஒன்பதாம் வகுப்பிலோ, பதினொன்றாம் வகுப்பிலோ மாறும்போது என்ன நடக்கிறதோ, அதையோ பத்தாம் வகுப்பு முடித்து மாற்றும்போது செய்துகொள்ளவேண்டியதுதான்.

மற்றொரு சிக்கல்: இப்படி ஏதாவது நடைபெறுவதாக இருந்தால், மத்திய அரசும் மாநில அரசுகளும் சேர்ந்து சில சட்டங்களை இயற்றவேண்டும். கல்வி என்பது concurrent list-ல் உள்ளது. சில மாநில அரசுகள் இந்தத் திட்டத்தை ஏற்கவில்லை என்றால் நிறைய குழப்பங்கள் வரக்கூடும்.

கல்வித் துறையைச் சேர்ந்தவர்களிடம் இந்தத் திட்டத்துக்கு முழு ஆதரவு இருக்காது என்றே நினைக்கிறேன்.

எந்த மாற்றம் கொண்டுவந்தாலும் குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். என் கருத்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒழித்துவிடலாம்; வேண்டுபவர்களுக்கு ஆப்ஷனலாக வைத்துக்கொள்ளலாம் என்பதே.

13 comments:

  1. பாலிடெக்னிக் முதலானவற்றுக்கு நுழைவுத்தேர்வு போல ஒன்று வைக்கலாம்

    ReplyDelete
  2. பா. ரெங்கதுரைSun Jun 28, 01:13:00 PM GMT+5:30

    பொதுத் தேர்வு என்பதைவிட இறுதியான தேர்வு என்று எந்த வகுப்பிலுமேயே இருக்கக்கூடாது. மேலை நாடுகளில் இருப்பதைப்போல மாணவர்கள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்பட வேண்டும் (Continuous assessment). அப்படி அல்லாதபட்சத்தில், மனனம் செய்யும் திறமை உள்ளவர்கள் மட்டுமே அதிக மதிப்பெண்கள் பெறுவர்.

    ReplyDelete
  3. ஆப்ஷனல் 10ஆம் வகுப்பு தேர்வு -> 10ஆம் வகுப்பு தேர்வுமுடிவுகள் வந்ததுக்குப்புறம் தான் பாலிடெக்னிக், ஜடிஜ பத்தியே விசாரிப்பாங்க, ஒரு வருடத்துக்கு முன்னதாகவே முடிவு செய்யறது கஷ்டமாச்சே.

    ReplyDelete
  4. பத்ரி

    பத்தாம் வகுப்பு பொது தேர்வு என்பதால் தான் வசதி குறைவாக இருந்தாலும் பலரும் பல்லை கடித்துக்கொண்டு அது வரைக்கும் படிக்கிறார்கள்

    அங்கு பொது தேர்வு இல்லை என்றால் ஆறாம் வகுப்பிலோ எட்டாம் வகுப்பிலோ படிப்பை நிறுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

    கபில் சிபல் நகர மேல்தட்டு மாணவர்களை மட்டுமே மனதில் வைத்து இது போல் சட்டம் கொண்டு வருகிறார்

    இந்தியாவின் பெரும்பாண்மையான மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு அவசியம்

    --

    வேண்டுமென்றால்

    அதில் மதிப்பெண்களை அளிக்காமல்

    தேர்வு
    இரண்டாம் வகுப்பு
    முதல் வகுப்பு

    என்று மூன்று நிலைகளை மட்டும் வைத்து விடலாம்

    ReplyDelete
  5. புருனோ: கபில் சிபாலுக்கு முந்தி அமைக்கப்பட்ட யஷ் பால் கமிஷன் இதை ஒரு பரிந்துரையாகச் சொல்லியிருக்கிறது. எனவே கபில் சிபால் மேட்டுக்குடி மாணவர்களுக்காக இதைப் பரிந்துரை செய்துள்ளார் என்று சொல்வது நியாயமற்றது என்று நினைக்கிறேன். பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு என்று இரண்டு பொதுத்தேர்வுகள் பள்ளி அளவில் தேவை இல்லை என்றே நான் கருதுகிறேன்.

    நம்மைப் பொருத்தமட்டில் 100% மாணவர்களும் 12-ம் வகுப்பு வரை படிக்கவேண்டும். அல்லது 10+ 2 வருட ஐடிஐ. அதற்குக் கீழ் மாணவர்கள் விலகுகிறார்கள் என்றால் வேறு பிரச்னைகள் உள்ளன. அவற்றைக் கண்டறிந்து தீர்க்கவேண்டியது நம் கடமை.

    ReplyDelete
  6. கல்வி சீர்திருத்தத்தில் நிறைய செய்யவேண்டியுள்ளது.

    1. எப்படியாவது அனைத்து மாணவர்களுக்கும் 12-ம் வகுப்பு வரை, அல்லது 10 + ஐடிஐ வரையாவது படிக்க வழி செய்யவேண்டும். அதுவும் இலவசக் கல்வியாக.

    2. இந்த வகுப்புகளைத் தாண்டமுடியாத (ஃபெயில் ஆகும்) மாணவர்களுக்கு ஏதாவது சான்றிதழ் கொடுக்கப்படவேண்டும்.

    3. மதிப்பெண்களுக்கு பதிலாக A, B, C, D போன்ற கிரேடிங், கிரேட் பாயிண்ட் ஆவெரேஜ் போன்றவற்றைத் தரலாம். பெர்செண்டைல் தரலாம்.

    4. கல்வி அளவில் சாஃப்ட் ஸ்கில்ஸ் கற்றுத் தர பெரும் முயற்சிகள் எடுக்கவேண்டும். முக்கியமாக, தன்னம்பிக்கையுடன் பேச, படிக்க, படித்துப் புரிந்துகொள்ள, அடிப்படை விஷயங்களை தாய்மொழியிலாவது தெளிவாக எழுத (அல்லது கம்ப்யூட்டரில் டைப் அடிக்க)... இப்படிப்பட்ட விஷயங்களைச் சொல்லித்தருதல் அவசியம்.

    5. வேலைவாய்ப்புகளுக்கு உதவும் வகையில் கல்வி இருத்தல் அவசியம்.

    6. மேல்படிப்பு என்பது உருப்படியான ஆராய்ச்சிகள் செய்பவர்களுக்கு மட்டும்தான் என்று கட்டுப்பாடுகள் வருமாறு இருக்கவேண்டும். இப்போது நான் பார்க்கும் எம்.எஸ்சி போன்ற படிப்புகள் எல்லாமே வெற்று பஜனை. யாரும் ஒழுங்காகப் படிப்பதும் இல்லை; யாரும் சொல்லித்தருவதும் இல்லை.

    7. ஒரு சில பல்கலைக்கழகங்களுக்கு வெளியே பிஎச்.டி எல்லாமே வேஸ்ட். இதை மாற்றவேண்டும். எல்லாத் துறைகளிலுமே நல்ல முனைவர் பட்ட ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கவேண்டும்.

    ReplyDelete
  7. பல விவாதங்களை எழுப்புகிறது போலிருக்கிறது உங்கள் பதிவு. அது ஆரோக்கியமானதுதானே.

    ReplyDelete
  8. //கபில் சிபாலுக்கு முந்தி அமைக்கப்பட்ட யஷ் பால் கமிஷன் இதை ஒரு பரிந்துரையாகச் சொல்லியிருக்கிறது. எனவே கபில் சிபால் மேட்டுக்குடி மாணவர்களுக்காக இதைப் பரிந்துரை செய்துள்ளார் என்று சொல்வது நியாயமற்றது என்று நினைக்கிறேன்//

    மண்டல் தான் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடப்பங்கீட்டை பரிந்துரை செய்தார்

    அதை வி.பி.சிங் பிற்படுத்தப்பட்டவர்களுக்காக நடைமுறைபடுத்தினார் என்று சொல்வது எவ்வளவு நியாயமோ, அதே போல் கபில் சிபல் மேட்டுக்குடி மக்களுக்காக இந்த பரிந்துரையை “தூசிதட்டி” எடுத்துள்ளார் என்று கூறுவது நியாயம் என்றே நினைக்கிறேன்

    ஆசிரியர் நியமணத்தில் இடப்பங்கீடு தேவையில்லை என்ற அவரது கருத்தையும் இணைத்து பார்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்

    //3. மதிப்பெண்களுக்கு பதிலாக A, B, C, D போன்ற கிரேடிங், கிரேட் பாயிண்ட் ஆவெரேஜ் போன்றவற்றைத் தரலாம். பெர்செண்டைல் தரலாம்.//

    மதிப்பெண் குறைவாக எடுக்கும் மாணவர்களை பொருத்த வரை பெர்சைண்டைல் என்பது மதிப்பெண்ணை விட மோசமானது என்று நினைக்கிறேன்

    //யாரும் ஒழுங்காகப் படிப்பதும் இல்லை; யாரும் சொல்லித்தருவதும் இல்லை.//

    மாற்றிப்போடுங்கள்

    யாரும் ஒழுங்காகப் படிப்பதும் இல்லை - cause.
    யாரும் சொல்லித்தருவதும் இல்லை - effect.

    ReplyDelete
  9. இது வரவேற்கத் தக்க அறிவிப்பு. ஆனால் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருக்கின்றன. இதை நடைமுறைப்படுத்த நாடு முழுவதிலும் ஒரு Board இருக்க வேண்டும். அது நியாயமற்றது. அது பல்வேறு வகைத் திணிப்புகளுக்கு இடமளித்துவிடும். இரண்டாவதாக எல்லாப் பள்ளிகளிகளிலும் இறுதி வகுப்பு 12தான் என்ற நிலையை ஏற்படுத்தப்பட வேண்டும். பாலிடெக்னிக் படிப்புகள் பள்ளிகளிலேயே ஒரு Vocational Stream ஆக உருவாக்கப்பட வேண்டும். ஆரம்பக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்.பள்ளிக் கல்வி செலவு மலிவாக்கப்பட வேண்டும்.( கடந்த வாரம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற எங்கள் வீட்டு வேலைக்காரியின் மகனை 11ம் வகுப்பில் இடம் வாங்கி சேர்த்துவிட்டு வந்தேன். கல்விக் கட்டணம் மட்டுமே ஆண்டொன்றிற்கு 3000 ரூபாய். அவனது மற்ற செலவுகள் (உடுப்பு, புத்தகம்) சேர்த்து 5000 ஆயிற்று. இது அடித்தள மக்களுக்கு பெரும் சுமை. நான் பள்ளியில் படித்த போது (60களில்) பள்ளிக் கட்டணம் மாதம் 14 ரூபாய். மாதாமாதம் செலுத்தினால் போதும்)
    குமாஸ்தா வேலைக்கு பட்டப்படிப்பு அவசியமில்லை என்ற நிலை உருவாக வேண்டும் (de linking degrees from jobs)இதையெல்லாம் எங்காவது ஆரம்பிக்க வேண்டும். அதற்கு இது பிள்ளையார் சுழியானால் சரி

    ReplyDelete
  10. //குமாஸ்தா வேலைக்கு பட்டப்படிப்பு அவசியமில்லை என்ற நிலை உருவாக வேண்டும் //

    இப்பொழுது கூட குமாஸ்தா வேலைக்கு 10ஆம் வகுப்பு தான் தேவை என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  11. //3. மதிப்பெண்களுக்கு பதிலாக A, B, C, D போன்ற கிரேடிங், கிரேட் பாயிண்ட் ஆவெரேஜ் போன்றவற்றைத் தரலாம். //

    If the idea is to simply translate absolute numbers to such GPAs (i.e., >90=A, 80-89=B etc) it is not going to be effective. Normalization can be done - but normalization on a state level in my opinion, is grossly prone to manipulation - if individual results are normalized based on statewide performance, Salem/Namakkal dts and the like will totally skew GPAs. Absolute numbers work best in that case.

    ReplyDelete
  12. /* இப்போது ஒன்பதாம் வகுப்பிலோ, பதினொன்றாம் வகுப்பிலோ மாறும்போது என்ன நடக்கிறதோ, அதையோ பத்தாம் வகுப்பு முடித்து மாற்றும்போது செய்துகொள்ளவேண்டியதுதான். /*

    பிறகு நிறைய நுழைவுத்தேர்வுகள் முளைத்துவிடும். முதலில் 10-ஆம் வகுப்பு பொத்தேர்வை தூக்குவதற்கு அவசியமென்ன? பெற்றோர் மற்றும் குழந்தைகளின் மன அழுத்தம் அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. அது சரியா? அதற்கு தேவையான கவுன்சிலிங் கொடுக்கப்படுகிறதா? இப்போது 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பலவற்றுக்கும் தகுதியாக இருக்கிறது. Driving license பெற, திரைப்படக் கல்லூரியில் சேர, வங்கிகளில் கடன் பெற.... இதற்கெல்லாம் என்ன செய்வது? மேலும் மாணவர்களிடம் competitiveness இல்லாமல் போய்விடுவோம் என்ற அச்சத்தையும் எழுப்புகிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யக் கூடிய காரியம் அல்ல இது.

    என்னைப் பொருத்தவரை பொதுத்தேர்வை தூக்காமல் பிரச்சனை என்ன என ஆராய்ந்து வேறு தீர்வுகளைக் காணலாம். grade system போல...

    ReplyDelete
  13. yenai porutha varaiyil podhu thaervu yenbadu oru maanavanin arivatralai sodhithu adhai piraruku therivipadhu dhan , adai yaen seiya vaevdum apadi seiya virumbinal panirendam vagupil seiyalame! podhu thaervu yenbadhu patham vagupil irundhu neekapadavaendum

    ReplyDelete