Thursday, June 11, 2009

சுயநிதி பொறியியல் கல்லூரிகளை கட்டுப்படுத்துவது அவசியமா?

சுயநிதி கல்லூரிகள் அரசு நிர்ணயித்த தொகையைவிட அதிகமாக, ‘ரசீது’ இல்லாமல், மேஜைக்குக் கீழாகப் பணம் வாங்குகின்றனர் என்பது அகில உலகமும் தெரிந்த செய்தி. பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் இந்த விஷயத்தைப் பல ஆண்டுகளாகப் பேசி வருகிறார். ஆட்சியில் இருப்பவர்கள் இதை அவ்வளவாகக் கண்டுகொள்வதில்லை. பெரும்பாலான கல்வி நிறுவனங்களை நடத்துவதே அரசியல்வாதிகள்தான். ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு என்று திமுக, அஇஅதிமுக, காங்கிரஸ் என்று முன்னாள்/இந்நாள் மாண்புமிகுக்கள்தான் பல பொறியியல் கல்லூரிகளையும் மருத்துவக் கல்லுரிகளையும் நடத்திவருகின்றனர். இல்லாவிட்டால் சாராய வியாபாரிகள். இன்னமும் கருணாநிதி குடும்பத்தினர் நேரடியாக கல்வி நிறுவனங்கள் அமைப்பதில் ஏன் ஈடுபடவில்லை என்று புரியவில்லை.

ஆனால் ஒருவகையில் பார்த்தால் இத்தனை பிரச்னைகளுக்கும் காரணம் அரசு இந்தக் கல்லூரிகளைக் கட்டுப்படுத்துவதுதானோ என்றும் தோன்றுகிறது.

நல்ல, தரமான பொறியியல் அல்லது மருத்துவக் கல்வியைத் தர ஒரு தனியார் நிறுவனத்துக்கு நிறையப் பணம் செலவாகிறது. பொறியியல் கல்லூரி ஒன்று வெறும் 35,000/40,000 ரூபாயில் ஒரு செமஸ்டர் கல்வியைக் கொடுத்துவுட முடியாது. அதுதான் தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகை. எனவே நியாயவான்கள் இந்தக் கல்வி தரும் விஷயத்தில் ஈடுபடுவதே இல்லை.

எனவே அயோக்கியர்கள் இதில் இறங்குகிறார்கள். பொறம்போக்கு நிலத்தை வளைத்துப் போடுவது; யாருக்கு எவ்வளவு தரவேண்டுமோ தந்து, மாநில அரசு அனுமதி, ஏ.ஐ.சி.டி.ஈ அனுமதி என்று அனைத்தையும் வாங்குவது; முதல் பேட்ச் தொடங்கி ஐந்து லட்சம், பத்து லட்சம் என்று மாணவர்களிடமிருந்து வசூல் செய்து கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் காசிலேயே கட்டடம் கட்டுவது என்றுதான் இத்தனை சுயநிதி கல்லுரிகளுமே வளர்ந்துள்ளன. ஓரிரு விதிவிலக்குகள் மட்டுமே உண்டு.

கட்டடங்கள் பிரமாதமாக இருந்தாலும், ஆசிரியர்கள் தரமாக இருப்பதில்லை. ஏனெனில் இந்தக் கல்லூரியை நடத்தும் புண்ணியவான்களுக்கு உருப்படியான கல்வி தரவேண்டும் என்றெல்லாம் ஆசை இல்லை. [ஒரு பொறியியல் கல்லூரி கல்வித் தந்தையை நான் ஒரு நிகழ்ச்சியில் சந்திக்கப் போய், என் பின்னணியைக் கேள்விப்பட்ட அவர், என்னை அவரது கல்லூரிக்கு வருகைதரு பேராசிரியராக ஆகமுடியுமா என்று கேட்டார். எனக்கும் மெக்கானிகல் எஞ்சினியரிங்குக்கும் இன்று ஸ்நானப் பிராப்திகூட இல்லை, நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்று சொன்னாலும் அவர் என்னை விடுவதாக இல்லை. எங்களுக்குத் தேவை பெயரளவுக்கு சில ‘பிஎச்.டி’ ஆசாமிகள்; படிப்பு சொல்லித்தருவதைப் பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள் என்றார். அவரிடமிருந்து அடித்துப் பிடித்துக்கொண்டு ஓடிவரவேண்டியதாயிற்று.]

இப்படி மோசமான ஆசிரியர்கள் இருந்தும், இந்தக் கல்லூரிகளுக்கு ஏன் மாணவர்கள் விழுந்தடித்துக்கொண்டு போகிறார்கள்? ஏன் லட்ச லட்சமாக தூக்கிக்கொடுக்கிறார்கள்?

ஏனென்றால் அந்த அளவுக்கு கிராக்கி உள்ளது. எஞ்சினியரிங் படித்தால்தான் (புரோகிராமிங்!) வேலை கிடைக்கும் என்று இவர்கள் நினைக்கிறார்கள். அதற்கு ஏற்றார்போலவே இன்ஃபோசிஸ் முதற்கொண்டு பல கம்பெனிகளும் எஞ்சினியரிங் படித்தவர்களாகப் பார்த்து பொட்டி தட்டும் வேலை கொடுக்கிறார்கள். எனவே இந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் எவ்வளவு லட்சத்தை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராக உள்ளனர்.

எனவே இன்று பணம் உள்ளவர்களுக்கு (அல்லது பணத்தைத் தேற்றத் தெரிந்தவர்களுக்கு) மட்டும்தான் பொறியியல் படிப்பு என்றாகிவிட்டது. (மருத்துவப் படிப்புக்கு தேவையான இடங்கள் வெகு குறைவு. எனவே அங்கே 40, 50 லட்சமும் அதற்குமேலும் என்று பேசிக்கொள்கிறார்கள். ஒருவர் கையில் அத்தனை பணம் இருந்தால், அதை ஃபிக்சட் டெபாசிட்டில் போட்டுவைத்தே பல ஆண்டு காலம் சௌக்கியமாக உயிர்வாழமுடியுமே? எதற்கு டாக்டருக்குப் படிக்கவேண்டும்?)

அப்படி இருக்கும்போது அரசின் பல்வேறு கட்டுப்பாடுகளால் இந்த நிலையை மாற்றிவிட முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. இப்போதைய நிலையில் ஒரு நிறுவனத்திடம் எக்கச்சக்கமாக பணம் கொடுத்த ஒருவர் ஓராண்டுக்குள் அந்த நிறுவனத்திடமிருந்து விலகி வேறு நிறுவனத்தில் சேர முயன்றால் அவர் கட்டிய கேபிடேஷன் ஃபீஸ் காலிதான். திரும்பக் கிடைக்காது.

இதற்கு பதிலாக, பேசாமல் பொறியியல் துறையில் கட்டணத்தைக் கட்டுப்படுத்துவது என்பதையே நீக்கிவிட்டால் என்ன? எந்த முறையாக இருந்தாலும் ஏழைகளுக்கு வழி இல்லை. அவர்கள் அரசுக் கல்லூரியில் சேர்ந்தால் அல்லது தனியார் கல்லூரியில் அரசு கோட்டாவில் உள்ளே நுழைந்தால்தான் உண்டு. குறைந்தபட்சம் பணம் படைத்தவர்கள் மற்றும் மிடில் கிளாஸ்காரர்களாவது ஒழுங்காகப் பிழைத்துப் போகட்டுமே?

ஒரு கல்லூரி எத்தனை வேண்டுமானாலும் கட்டணம் வைத்துக்கொள்ளலாம் என்று அனுமதித்தால் அதனால் யாருக்கு நஷ்டம்? ஒருவருக்கும் இல்லை. சொல்லப்போனால் பலருக்கும் லாபம்தான். எப்படி என்று பார்ப்போம்.

1. கட்டணம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அனைத்தும் வெள்ளைப் பணமாக இருக்கவேண்டும். ரசீது கொடுக்கவேண்டும்.

இப்படிச் செய்வதால் பணம் கட்டுபவர்களுக்கு ஒருவித ‘பாதுகாப்பு’ கிடைக்கிறது. சரியான கல்வி கிடைக்கவில்லை என்றால் நுகர்வோர் நீதிமன்றங்களுக்குச் செல்லமுடியும். இரண்டு நாள்கள் முன்பு இந்திய நுகர்வோர் கூட்டமைப்பின் தேசிகனுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு மாணவர் தான் இத்தனை பணம் கொடுத்ததையும் தனக்கு அவர்கள் கொடுத்திருந்த வாக்குறுதிப்படி கல்வி கொடுக்கவில்லை என்பதையும் நிரூபித்தால், நுகர்வோர் நீதிமன்றங்கள் பணத்தைத் திருப்பிக் கொடுக்க வகை செய்யமுடியும்.

கல்விக் கடன் வாங்குவது எளிதாகிறது. கறுப்பில் லஞ்சப் பணம் கொடுக்கும்போது, வங்கிகள் அதனைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கல்விக்கான கடனைத் தரமுடியாது. ஆனால் வெள்ளையாக, ரசிதுடன் செல்லும்போது சரியான கடன்கள் பெற வாய்ப்புள்ளது.

2. ஒவ்வொரு கல்லூரியும் எத்தனை பணம் கேட்கிறார்கள் என்பது தெளிவாக ஓரிடத்தில் தொகுப்பாகக் கிடைக்கும். இதனைக் கொண்டு ஒரு நுகர்வோர் தனக்கு ஏற்ற கல்லூரி எது என்று முடிவுசெய்யமுடியும். அசிங்கமான பேரங்கள் நடக்கவேண்டிய அவசியம் இல்லை.

3. ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றால் பல நல்ல, திறமையுடைய, லாப நோக்குடைய கல்வியாளர்கள் நியாயமான பொறியியல் கல்லூரி நிறுவனங்களை ஏற்படுத்துவார்கள்.

4. எந்தக் கல்லூரியிலிருந்தும் எந்தக் கல்லூரிக்கும் எந்த ஆண்டிலும் மாற்றல் செய்துகொள்ளலாம் என்ற வசதியை ஏற்படுத்திக்கொடுக்கலாம். அதன்மூலம் மோசமான கல்லூரியில் மாட்டிக்கொண்டவர்கள் எளிதாக நல்ல கல்லூரிகளுக்கு இரண்டாம், மூன்றாம் ஆண்டுகளில் நகர முடியும். ஒட்டுமொத்தமாக முதலாம் ஆண்டில் லஞ்சப் பணம் கொடுத்தவர்கள் இன்று அதே கல்லூரியிலேயே மாட்டிக்கொண்டு திண்டாடுவது நடைபெறாது. அந்தந்த செமஸ்டருக்கான கட்டணத்தை மட்டும்தான் நீங்கள் கட்டவேண்டியிருக்கும்.

5. அனைத்துக் கல்லூரிகளின் ‘விலைப் பட்டியலும்’ தெளிவாகத் தெரியும்போது, ரேட்டிங் நிறுவனங்கள் எந்தக் கல்லூரியில் விலை அது தரும் சேவையுடன் ஒப்பிடும்போது ஏற்றுக்கொள்ளத் தக்கது அல்லது ஏற்கமுடியாதது என்று தெளிவாகச் சொல்லமுடியும். இன்று அப்படி முடியாது.

மொத்தத்தில், பொறியியல் கல்லூரிகள் கட்டுப்படுத்தப்படவேண்டும்; ஆனால் கட்டணத்தைப் பொருத்தமட்டில் கூடாது என்பதே என் கருத்து. கட்டுப்பாடு, அவர்களது கல்வியின் தரத்தில் இருக்கவேண்டும். அவர்கள் தரும் வசதிகளில் இருக்கவேண்டும். கட்டுப்பாட்டு அமைப்புகள் இந்த வேலையை சரியாகச் செய்யாவிட்டாலும் மாணவர்கள் வேறு கல்லூரிகளுக்குச் செல்வது எளிதாகிவிடும் என்பதால் கல்லூரிகள் வேறு வழியின்றி உள்கட்டமைப்புகளை உருப்படியாக்குவார்கள்.

இதனால் ஏழை மாணவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பதையும் ஏற்றுக்கொள்கிறேன். அவர்களுக்கு உதவும் வகையில் அரசு வட்டியில்லாக் கடன், மானியம் ஆகியவற்றைத் தரலாம். பிரச்னை தீர்ந்துவிடும். அல்லது அரசு தன் செலவில் மேலும் பல கல்லூரிகளைக் கட்டலாம்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

19 comments:

  1. நீங்கள் சொல்லும் யோசனை liberalization வகையைச் சார்ந்தது என்பதால் எங்கள் உயிருள்ளவரை இதை எதிர்ப்போம்.

    -சீன அடிவருடிகள்.

    ReplyDelete
  2. பத்ரி : சில விஷயங்களை நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.

    1. நீங்கள் சொல்வது போன்ற துணிச்சலான முடிவு எடுக்கக் கூடிய ஐடியலான சூழ்நிலை இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அமையாது. மேலும், இதை நடைமுறைப்படுத்தும் 'பொலிடிகல் வில்' எந்த அரசுக்கும் இருக்காது.

    2. தற்போது பொறியியல் கல்லூரிகளை இயக்குவது, அரசியல் பின்புலம் கொண்ட சிலரே. ஒருவரே ஏழெட்டு கல்லூரிகளை இயக்குவதும், தங்களுக்குள்ளேயே, ஒரு மாஃபியா போல முறைசாரா சிண்டிகேட் போல அமைத்து, விவகாரங்களைக் கட்டுக்குள் வைத்திருப்பதும் தான் நடைமுறை. இவர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் கடினம்.

    3. இது போன்றவர்கள், கட்டணத்துக்கு கட்டுப்பாடு இல்லை என்றாலும், வரி ஏய்ப்புக்காக, கறுப்பு வெள்ளையில் பணம் டிமாண்ட் செய்யமாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. டிமாண்ட் அதிகமாக இருக்கும் போது விலையை ஏற்றுவதும், இறங்கும் பொழுது குறைப்பதுமாக, ரியல் எஸ்டேட் சந்தை போல மாற்றிவிடுவார்கள்.

    4. விலைகளை, சந்தை கட்டுப்படுத்தட்டும் என்று விடுவது நல்ல உத்திதான். ஆனால், ஒரு FMCG பொருளைவாங்கும் போது கூட, விலை, தரம், ட்யுரபிலிடி, சேவை, பின் விளைவுகள் போன்ற புறக்காரணிகளையும், விளம்பரத்தின் உந்துதல், உபயோகம் செய்யும் போது கிட்டும் அனுபவம், பியர் ப்ரஷர் என்ற அகக்காரணிகளையும் அலசி ஆராய்ந்து வாங்கும் ஒரு நடுத்தர வயது அப்பா, பொறியியல் பட்டத்தை காசு குடுத்து பிள்ளைக்கு வாங்கிக் கொடுக்கும் பொழுது , இத்தனை கவனமாக ஆராய்ந்து வாங்கும் அளவுக்கு மெச்சூர்டாக இருக்கிறாரா? அப்படி இருந்திருந்தால், பொறியியல் பட்டத்துக்கு இத்தனை டிமாண்ட் ஏற்பட்டிருக்காது.

    ReplyDelete
  3. ***
    கட்டணம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அனைத்தும் வெள்ளைப் பணமாக இருக்கவேண்டும். ரசீது கொடுக்கவேண்டும்.
    ***

    எதை வைத்து இது மட்டும் நடக்கும் என்று நினைக்கிறீர்கள் ?

    அனைத்து கல்லூரிகளிலும் ஒரு குறைந்தபட்ச Infrastructure இருந்தால் மட்டும் தான் ஒரு காலேஜில் இருந்து மற்றொரு இடத்திற்கு போகும் transfer சரியாக வரும்.

    என்னை கேட்டால் இன்னும் பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்து, ஒரு பொறியியல் கல்லூரி நடத்துவதை லாபமில்லாத தொழிலாக மாற்றவேண்டும். அப்பொழுதாவது புற்றீசல் போன்று தெருவிற்கு ஒன்றாக முளைக்கும் கல்லூரிகள் மூடப்படும்.

    ReplyDelete
  4. திரு பத்ரி,

    நிச்சயமாக ஒரு நல்ல யோசனை. ஆனால் அப்பொழுதும் ஒரு சில பண முதலைகள், செமஸ்டர் கல்வி கட்டணத்தை ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை விட குறையாமல் பார்த்துக் கொள்வார்கள். பல நல்ல, திறமையுடைய, லாப நோக்குடைய கல்வியாளர்கள் வந்தாலும், இந்த அரசியல் போர்வையில் இருக்கும் பிணந்தின்னி கழுகுகள், அவர்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி கட்டணத்தை அதிகமாக்க வலியுறுத்துவார்கள்.

    என்னடைய யோசனை, தனியார் நிறுவனங்கள் (Infosys, TCS, L&T போன்றவை) இந்த துறைக்கு வரலாம். இந்த கம்பெனிகள் ஒரு consortium போல அமைத்து, வெளிநாட்டு கல்வி நிறுவனங்களோடு தொழில் முறைத் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, Exchange student program, Internships என்று பல நல்ல விஷயங்களை கொண்டு வரலாம். இவர்களுக்கு அரசியல் குறுக்கீடுகள் வராமல் அரசு வழி செய்தால், மிக சிறப்பாக செயல்படுவார்கள் என்பது என் எண்ணம். இவர்களுக்கு தேவையான skill set உடைய பாடங்களை கூட இவர்களால் வடிவமைக்க முடியும்.

    கிழக்கு, கல்வி துறையில் நடக்கும் அநியாயங்களைப் பற்றி ஒரு sequel தொடரே வெளியிட முடியும், அவ்வளவு அராஜகங்கள்.

    On a different note, விஜய் தொலைக்காட்சியின் "குற்றம் நடந்தது என்ன" நிகழ்ச்சியில் உங்களைக் காண ஒரு வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சி அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  5. வணக்கம்!

    -அடங்கும் வகை செய்தல் வேண்டும்!

    "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை திருத்த முடியாது" இது அனைவருக்குமே பொருந்தும் என்றே கருதிகிறேன்.

    மாணவர்களின் பார்வையில், என்று ஒரு மாணவன் தன்னிச்சையாக, தன் ஆர்வத்தின் அடிப்படையில் படிப்பை தேர்வு செய்கிறானோ அன்றில் இருந்தே இது போன்ற பிரச்சினைகளின் தலை தாழ்ந்து விட தொடங்கிவிடும். இரண்டாவதாக, தன்னுடைய வளர்ச்சிக்கு படிப்பு என்று தான் என்ன வேண்டுமே தவிர படிப்பு தன்னை வளர்க்கும் என்றல்ல. தன் அறிவை விரிவுபடுத்துவதே தலையாய கடமையாக கருத வேண்டும். இதற்க்கு நல்ல உதாரணமாக பல நல்ல தலைவர்களை, அதிகாரிகளை சொல்லலாம். இப்படி அமையும் பட்சத்தில் மாணவர்களின் தேவைக்கு கல்விக்கூடங்கள் என்ற நிலை உருவாகும் இந்த நிலை சமுகத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும்.

    இதன் சாத்திய கூறு அதிகம் என்றே சொல்லலாம் காரணம் மாற்றங்கள் நம்மிடத்தில் தான் தேவை மற்றவரிடத்தில் இல்லை. அனால் புரிதலும் ஒற்றுமையும் தேவை!

    நாராயணன் மெ

    ReplyDelete
  6. பிரகாஷ்: உங்கள் ஒவ்வொரு பாயிண்டுக்கும் பதில் பாயிண்ட்.

    1. இதுபோன்ற துணிச்சலான முடிவுகள் இன்று எடுக்கப்படாவிட்டாலும் இதைப் பற்றிப் பேசுவது அவசியம் என்று நினைக்கிறேன். அப்போதுதான் பொதுக்கருத்தை ஏற்படுத்தமுடியும்.

    2. பல கார்பொரேட் நிறுவனங்களும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வந்தனர். இன்றும்கூட பலர் அதைச் செய்துவருகின்றனர். ஆனால் வரி முறையில் நிறைய சீர்திருத்தங்கள் செய்யப்பட்டதும், பெரும்பான்மை கார்பொரேட் டாக்ஸ் கட்டுவதில் ஏமாற்றல்கள் குறைந்துள்ளன. அதைப்போன்றே பொறியியல் கல்லூரி சீர்திருத்தங்களுடன் கடுமையான ஆடிட்டிங் முறைகளைப் புகுத்தினால், அரசியல்வாதிகள், கல்வி மாஃபியா செய்யும் ஊழலையும் பெருமளவு குறைக்கமுடியும் என்று நினைக்கிறேன். இது ஒரே ராத்திரியில் நடைபெறாது; ஆனால் சில ஆண்டுகளில் இதைச் சாதித்துவிடமுடியும்.

    3. ஒரு கல்லூரி என்ன கட்டணம் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியபிறகும், கறுப்பு-வெள்ளை என்று கேட்டால் பெற்றோர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். உதாரணத்துக்கு வீட்டுக் கடன் விஷயத்தை எடுத்துக்கொள்வோம்.

    சாதாரண மிடில் கிளாஸ் ஆசாமி வீடு வாங்க முழுக்க முழுக்க கடனையே நம்புகிறார். அப்போது முழு விலையையும் ‘வெள்ளையில்’ வைத்தால்தான் அவரால் அதற்கேற்ற கடனை வங்கியில் பெறமுடியும். பாதி கறுப்பு என்று விற்பவர் கேட்டால், இவர் அதற்கு ஒப்புக்கொள்ள முடியாது. ஒப்புக்கொண்டால் கறுப்பு பணத்தை இவர்தான் வேறு வழியில் திரட்டவேண்டும்.

    இன்று இக்ஃபாய் (ICFAI), சென்னை பிசினஸ் ஸ்கூல், கிரேட் லேக்ஸ் போன்ற பல கல்வி நிறுவனங்கள் பல லட்சங்களை நேர்மையான கல்விக் கட்டணமாக மட்டுமே கேட்டு தைரியமாகப் பெறுகிறார்கள். அதற்கு ரசீதும் கொடுக்கிறார்கள். இந்த நிலை பொறியியல் கல்வியில் வராது என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

    4. கல்வி என்று வரும்போது பெற்றோர்கள் மூடத்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதை மாற்றவேண்டும்.

    ReplyDelete
  7. If I were you, I would have taken the visiting proff. opportunity... get into the system, identify the real root cause and try to set up something new, with the contacts. Possible!

    Even ICFAI guys goofed up in Bangalore, running an Engg. college without AICTE approval, as a branch of Sikkim college, and 300 students are in soup! (who wouldnt join if the whole course cost is only Rs 3.75 lakhs! )

    A relative of mine from Dindigul, had his daughter admitted to TM Pai institutions for an MBBS seat, for a total cost of Rs 20 lakhs, payable @ 5 lakhs every year. All white! (whatever the quota, 250 students, take this!)

    Also, I read this article on Cricinfo genesis! and would you give the inside story in Tamil, for aspiring entrepreneurs like me, including the returns, etc?

    ReplyDelete
  8. There are many hitches. The Supreme Court's judgments ban capitation fee or running education as a purely commericial venture for profit. To go against that is not easy. There is nothing wrong in telling people that government will not intervene and will allow market forces to play. This is the unstated reality but no govt is willing to tell that openly.There is less demand for engineering graduates today still the proability of getting a job is high compared to a M.A or M.Sc graduate.So many prefer engineering and willing to spend lakhs.
    The higher education system is India needs revamping. But there are too many vested interests that will work against this.
    The very poor know that it is beyond their
    reach and have no great dreams about it. Poor
    they have no interest in asking for a overhaul when they are clueless about the system.Some poor make it and most dont.Yet they dont even think that they should demand access to higher education with some preferences for them.
    So only the middle class that is worried about it. Here too there are so many issues like reservation, fees, loans, job potential that seem to be more important to them than restructuring the whole system. About UGC, AICTE etc the less said the better it is.
    Left and PMK make some noises but lack a
    comprehensive approach to higher education.
    Both have no problems when rich OBCs enjoy benefits of reservation.So their thinking is
    flawed as they see this as a part of the vote bank politics than with any genuine concern for the higher education or for students

    ReplyDelete
  9. The following points by Sridhar Vembu (Badri's senior) should be helpful!
    College Education and the Placebo Effect
    //I contend that we can substitute the expensive medication called engineering college education with a far cheaper substitute, and get similar or better results. This is not an academic (!) issue - vast amounts of money are spent by parents in India on equipping their children with an engineering degree. And it is not just the money either - 4 years of life is spent acquiring that degree, and my contention is that most of that time is simply wasted. And it gets worse - a lot of these colleges, particularly the ones that are valued by parents, are appropriately termed “prisons” by students, so heavy is the “discipline” and “moral policing” they impose. If equivalent results can be achieved with far lower cost, and far better use of time, and in an atomsphere that values freedom, it can also serve to lower the barrier so kids from modest economic backgrounds can benefit.//

    College Education and the Placebo Effect - Part2
    //Mr. Drucker also told us to expect enormous changes that will come in higher education, thanks to the rise of satellites and the Internet. “Thirty years from now big universities will be relics. Universities won’t survive. It is as large a change as when we first got the printed book.” He believed “High school graduates should work for at least five years before going on to college.” It will be news to most college presidents and a lot of alumni that “higher education is in deep crisis. Colleges won’t survive as residential institutions. Today’s buildings are hopelessly unsuited and totally unneeded.” All this from a life-long academic.//

    Why is Education so costly?
    //1. Student self-service model, with pre-recorded lectures, while students interact with professors via the internet to clarify the material
    2. Internet based collaboration among students, with discussion groups and such, moderated by faculty
    3. Dramatically reduce the administrative overhead - there are way too many administrators to actual classroom instructors in most universities today
    4. Encourage more part time students - I just don’t see why an MBA has to be a full time program costing $100K or more //

    The PhD glut
    //I have a personal interest in the subject, because I had the misfortune of wasting 4 precious years of my youth getting a PhD. Alas, I figured out only towards the end that I was wasting my time [and other people’s money]. It didn’t help in any subsequent job - note that I have been involved in fairly advanced technology. I would go as far as to say that for 99% of even advanced engineering jobs in the industry, a PhD is a waste of time. The point is not that I learnt absolutey nothing in 4 years, the point is it wasn’t worth 4 years, and it wasn’t worth the price the “system” paid to get me through that PhD.//

    Regards
    Venkatramanan

    ReplyDelete
  10. மணிகண்டன்: நீங்கள் இவ்வாறு சொல்கிறீர்கள்:
    “ஒரு பொறியியல் கல்லூரி நடத்துவதை லாபமில்லாத தொழிலாக மாற்றவேண்டும்.”

    ஆனால், நான் பொறியியல் கல்லூரி நடத்துவதை லாபமுள்ள தொழிலாக மாற்றவேண்டும் என்கிறேன். இன்றைக்கு காகிதத்தில் உள்ளபடி பார்த்தால், கல்வியைத் தருவது அறக்கட்டளைகள். அங்கே லாபம் இல்லை. ஆனால் அதனால்தான் பொறுக்கிகள் மட்டும் சாம்ராஜ்யம் நடத்துகின்றனர். அவர்கள் கறுப்புப் பணத்தில் திளைத்து கோடி கோடியாக அள்ளுகின்றனர்.

    லாபம் எடுக்கலாம், ஆனால் அது சட்டபூர்வமாக இருக்கவேண்டும், வரி கட்டப்படவேண்டும் என்று சொன்னால் நல்லது நடக்கும் என்று நான் நம்புகிறேன்.

    லாபநோக்கில்லாத கல்வி என்று சொல்லிச் சொல்லியே, கல்வித் துறையைக் குட்டிச் சுவராக்கிவிட்டோமோ என்று தோன்றுகிறது. நமது அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை அளிப்பவர்கள் அனைவருமே லாப நோக்குடையவர்கள். ஆனால் கல்வியை அளிப்பவர்கள் மட்டும் லாபநோக்கில்லாமல் இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது என்ன நியாயம்?

    ReplyDelete
  11. இந்த Semester Fee பிரச்னை(not adhering to the government stated fee) Govt Quotaல சேரும் மாணவர்களையும் கட்டுபடுத்தும் என்று தான் நான் கேள்விபட்டிருக்கிறேன். இது ஒரு பன்முக ப்ரெச்சனை, எதிர் கொள்ள பல வழிகளில் யோசிக்க வேண்டும் என்ற போதிலும், இந்த exorbidant, completely ad-hoc way of deciding on the fee structure பலராலும் எதிர் கொள்ள படுகின்ற இன்றைய பிரச்னை. So various ways of addresing and ratioanlizing it needs to be thought of urgently.

    நீங்கள் point5ல குறிப்பிட்டிருக்கும் விஷயத்துக்கு தொடர்புடைய ஒரு சிந்தனையை பகிர்ந்து கொள்ள விரும்பிகிறேன்.

    Rating agencies போல சில independent bodies can give a guidance value for rational fee structure based on various parameters(Cost based on the quality of faculty, infrastructure and a whole lot, which can include an expected ROI for the investing parties). Am quite surpised that while guidance value for real-estates and commodities occupies page space in main stream media every week, why is there no interest shown in this education or for that matter even on the issue of health care(both of which I consider with their pricing poses one of the biggest expenses for a large population). Ofcourse this is not an apple-apple comparison, for the parameters to arrive at meaningful numbers are far more involved here. These guidance values can be used by the parents to argue with the management of their irrational pricing policy. And an exercise like this will also bring in for-profit motive people to enter into this space as directed in your aticle.

    ReplyDelete
  12. //ஒரு கல்லூரி எத்தனை வேண்டுமானாலும் கட்டணம் வைத்துக்கொள்ளலாம் என்று அனுமதித்தால் அதனால் யாருக்கு நஷ்டம்??//

    அரசு ஒதுக்கீட்டில் வருபவர்களுக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் தானே வாங்கப்படுகிறது

    இல்லையா

    --

    இந்த “நன்கொடை” நிர்வாக ஒதுக்கீட்டிற்கு தானே

    --

    ஆக கட்டணத்தை உயர்த்தினால் அனைவரும் அதிகம் பணம் தரவேண்டுமல்லவா

    ReplyDelete
  13. //3. ஓரளவுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றால் பல நல்ல, திறமையுடைய, லாப நோக்குடைய கல்வியாளர்கள் நியாயமான பொறியியல் கல்லூரி நிறுவனங்களை ஏற்படுத்துவார்கள்.//

    இது கண்டிப்பாக நடக்கும்

    //4. எந்தக் கல்லூரியிலிருந்தும் எந்தக் கல்லூரிக்கும் எந்த ஆண்டிலும் மாற்றல் செய்துகொள்ளலாம் என்ற வசதியை ஏற்படுத்திக்கொடுக்கலாம். //

    செய்ய வேண்டும்.

    இந்த மாற்றலை தடை செய்ய வேண்டிய அவசியம் என்னவென்று எனக்கு புரியவே இல்லை

    ReplyDelete
  14. நான் புதுவையில் படித்த கல்லூரியில் நான்கு ஆண்டுகளுக்கு ரூ. 25000 தான் ஆனது. தவிரவும் பொறியியல் கல்லூரிக்கான செலவு நிர்வாகத்திற்குக் குறைவு.Mechanical , Civil போன்ற கன இயந்திரங்களியல் துறைகளையும் பெரும்பாலான கல்லூரிகளில் நீக்கி விட்டனர்.

    கணக்கில் வராமல் கருப்பு பணம் வாங்கும் கல்லூரிகளை - அதன் தரத்திற்கேற்ப தலைகீழ் விகிதத்தில் வரி வாங்கும் போது மட்டுமே நிலைமை மாறும்.

    ReplyDelete
  15. The system in A.P.under Naidu was roughly something like this:
    25 % for students of Management Quota
    75 % for Common Entrance Certificate qualifiers, on descending merit basis.

    Students who join through the 25%
    mangement quota window subsidise the
    others, who join on the basis of
    merit only. Those who join through merit quota,used to pay Rs 50,000 or so for a year, which is not aqdequate to run the college with proper infrastructure and also leaving a small profit to the promoter of the enterprise.
    Of course, the amount paid by the management quota students was not very transperant. If all colleges follow this system uniformly, transperancy and all-white etc can come in due course.
    The ostrich-like stance of government spokesmen and courts that capitation fee is not acceptable is perhaps the cause of the present ills.
    In other words, the Government,. Courts, etc should concede that restricting fees from ALL students at one level will not do. There must be a subsidy element for such low fees. Either the Government should provide this or let the managements raise from other sources, transparently.

    ReplyDelete
  16. Sir,
    While discussing this issue with a friend of mine, who is a acadamecian suggested that a system of admission prevailing in karnataka would solve our problem here in tamilnadu......

    proportionately you increase the capitation across the board by bench marking the low and high fee structures i e Max fee for low marks and low fee for high marks....... This alone might bring an end to this problem in proffessional colleges.

    ReplyDelete
  17. லாபநோக்கில்லாத எந்த வியாபாரமும் அழியும். கல்வியை வியாபாரம் ஆக்கியதால், மற்ற வியாபாரங்கள் எப்படி கருப்பு/வெள்ளை பணம் என்று நடக்கிறதோ அதே போல் நடக்கிறது.

    அனைத்து வியாபாரங்களிலிருந்தும் அரசுத்துறை விலகி வியாபாரம் செய்பவர்களுக்கு வழி விட்டால் போதும். கருப்புப்பணம் அழியும்.

    ReplyDelete
  18. அரசுக்கு உண்மையிலேயே இந்த விசயத்தில் அக்கறை இருக்குமானால் மிக எளிமையான தீர்வு இருக்கிறது. அது அரசே சுய நிதிக் கல்லூரிகளைக் கட்டுவது. Madras Institute of Technolgoy(MIT, Chrompet)-இல் ‘self support' உள்ளது. இதையே ஏன் விரிவுபடுத்தி நிறைய கல்லூரிகளை கட்ட முடியாது?

    ReplyDelete
  19. அருமையான வாதங்கள் பத்ரி. உங்கள் கருத்துக்கள் முழுவதும் ஆமோதிக்கிறேன்.
    ஆனால் இவையெல்லாம் மாறவேண்டுமெனில் அரசுகளும் அரசியல் கட்சிகளும் மாற்றப்பட வேண்டும். ஏனெனில் முழுவதும் அரசியில்வாதிகளின் பின்னணியில்தான் இப்போது இயங்கும் கல்வி நிறுவனங்கள் இயங்குகின்றன என்பதை மறுக்க இயலாது. படிக்காதவர்கள், ரவுடிகளின் முழுநேர குலத்தொழிலாக மாறிவிட்டது அரசியல்.

    காலம் மாறவேண்டும் அல்லது மாற்றப்பட வேண்டும்

    ReplyDelete