Wednesday, September 02, 2009

அஞ்சலி: அ.கி. வேங்கட சுப்ரமணியன்

கிழக்கு பதிப்பக எழுத்தாளர், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் ஆபீசர், தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர், குடியாட்சிமீது அக்கறை கொண்டவர், ஒரு நல்ல மனிதர், வேங்கட சுப்ரமணியன், தனது 69-வது வயதில், நேற்று (1 செப்டம்பர் 2009) மாரடைப்பால் இறந்தார்.

எல்லா சாவுகளுமே அதிர்ச்சி தரக்கூடியவை. அவருடன் நெருங்கிப் பழகியவர்களுக்கும் அவரது உறவினர்களுக்கும் இது தாங்கமுடியாத இழப்பு. அனைத்துக்கும் மேலாக, இந்தியாவில் குடியாட்சி முறை சீர்மையுடன் நடக்கவேண்டும், லஞ்சம் அழியவேண்டும், மக்கள் வளத்துடன் வாழவேண்டும் என்று விரும்பும் ஆர்வலர்களுக்கு இந்த இழப்பு ஈடுசெய்யவே முடியாதது.

இந்திய ஆட்சிப் பணியில் இருந்த வெகு சிலரே, ஓய்வுபெற்றபின், வேங்கட சுப்ரமணியன் அளவுக்கு பொதுவாழ்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிலும் வேங்கட சுப்ரமணியன் grassroots அளவில் அமைப்புகளை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தார். ஆங்கிலத்துக்கு பதிலாக தமிழில் எழுதுவது, தமிழ் மூலம் பெருவாரியான கிராம மக்களைச் சென்றடைவது, கிராம மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஆகியவற்றில் தன் முழுக் கவனத்தையும் செலுத்தினார். ‘குடிமக்கள் முரசு’ என்ற மாதப் பத்திரிகையை அவர் நடத்திவந்தார்.

திருக்குறளில் நல்ல பரிச்சயம் கொண்டிருந்த இவர், அற்புதமான தமிழில் எழுதக்கூடியவர், பேசக்கூடியவர். தினமணியில் தொடர்ந்து பல ஆண்டுகளுக்குக் கட்டுரைகள் எழுதிவந்தார். அவ்வாறு தேர்ந்தெடுத்த சில கட்டுரைகளைத்தான் கிழக்கு பதிப்பகம் இரு தொகுதிகளாக [கட்சி ஆட்சி மீட்சி | மக்களாகிய நாம்] கொண்டுவந்தது. அவர் தானாகவே வெளியிட்ட இரு புத்தகங்களை அடுத்து மறு வெளியீடு செய்யவேண்டும் என்று பேசி, முதலில் ‘தட்டிக்கேட்க தகவல்கள்’ என்ற புத்தகத்தையும் அடுத்து, ‘மன்னரா, மனுதாரரா’ என்ற புத்தகத்தையும் கொண்டுவருவது என்று சொல்லியிருந்தேன்.

குடிமக்கள் முரசு பத்திரிகையுடன் இலவச இணைப்பாக வந்த சில நெடுங்கட்டுரைகளைப் புத்தகமாகத் திரட்டிக் கொண்டுவரும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். முனைவர் வா.செ.குழந்தைசாமி இட ஒதுக்கீடு பற்றி எழுதியதை ஆங்கிலத்தில் மொழிமாற்றி சிறு வெளியிடாகக் கொண்டுவருவது பற்றி வேங்கட சுப்ரமணியன் என்னிடம் பேசிக்கொண்டிருந்தார். அந்த ஆங்கில மேனுஸ்க்ரிப்டை இரு வாரங்களுக்கு முன்னர்தான் அனுப்பியிருந்தார். அந்த வேலையை ஆரம்பிக்கவேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பாக கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் கலந்துகொண்டு வேங்கட் சுப்ரமணியன் அற்புதமாகப் பேசினார். (அதன் ஒலிப்பதிவைத் தேடி எடுத்து, வலையில் ஏற்றுகிறேன்.)

வேங்கட சுப்ரமணியனிடம் பேசி பல பாட்காஸ்ட்கள் செய்யவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் காலம் கடந்துவிட்டது.

அவர் குடிமக்கள் மையம் (Citizens' Centre) என்று பல கிராமங்களில் தொடங்கி, கிராம மக்களுக்குத் தேவையான அடிப்படை தலைமைப் பண்புகளைப் பயிற்சியின்மூலம் அளிக்க ஏற்பாடுகளைச் செய்துவந்தார். அந்தப் பணி, அவரது நினைவாக விடாது தொடரும் என்று நம்புகிறேன்.

தேர்தலில் நடக்கும் தில்லுமுல்லுகளைப் பற்றி நிறைய வருத்தம் கொண்டிருந்த அவர், அவற்றை எப்படிக் களையலாம் என்பது தொடர்பாகப் பல கருத்துகளைக் கொண்டிருந்தார். அந்தக் கருத்துகளை பயமின்றி எழுதியும் வந்தார். தமிழர்கள் தேவையின்றி அச்சப்படுகிறார்கள் என்றும் அவர் நினைத்தார். பயமில்லாத மனிதர்களே ஒரு குடியாட்சியில் நல்ல குடிமகன்களாக இருக்கமுடியும் என்பது அவரது கருத்து. நான் எந்தக் காரணத்துக்காகவும் அச்சப்பட மாட்டேன்; பயமின்றி என் கருத்துக்களை வெளியிடுவேன் என்று இந்த நாளில் மனத்துக்குள்ளாக உறுதி கூறிக்கொள்கிறேன்.

ஒரு நல்ல நண்பரை இழந்த வருத்தத்தை எப்படி ஆக்கப்பூர்வமாக மாற்றுவது என்று யோசிக்கிறேன். அவரது கருத்துக்களை எப்படி முன்னெடுத்துச் செல்லமுடியும் என்பதையும் யோசித்துப் பார்க்கிறேன்.

12 comments:

  1. --
    ஒரு நல்ல நண்பரை இழந்த வருத்தத்தை எப்படி ஆக்கப்பூர்வமாக மாற்றுவது என்று யோசிக்கிறேன். அவரது கருத்துக்களை எப்படி முன்னெடுத்துச் செல்லமுடியும் என்பதையும் யோசித்துப் பார்க்கிறேன்.
    --

    These are instances/thoughts that makes reading your blog an inspiring thing for me.

    Best regards,
    Magesh

    PS: If you choose not to post this as comment, you can feel free to

    ReplyDelete
  2. கிழக்கு பதிப்பக மொட்டை மாடிக்கூட்டம் ஒன்றில் இவரை சந்தித்து உரையாடியிருக்கிறேன்.

    தினமணியில் இவர் எழுதிய கட்டுரைகள் முக்கியமானவை. தகவல் உரிமை அறியும் சட்டம் குறித்த விழிப்புணர்வை பரவலாக்கியவர்.

    அன்னாருக்கு எனது அஞ்சலிகள்!

    ReplyDelete
  3. என் மனதை மிகவும் பாதித்த ஒரு மனிதரின் மரணம். கிழக்கு மொட்டை மாடிக் கூட்டத்தில் எல்லாக் கேள்விகளையும் அவர் நேர்மையின் வழியாக எதிர்கொள்ளச் சொன்னதை நினைத்துப் பார்க்கிறேன். உண்மையான செயல் வீரர். பயம்தான் ஊழலின் தொடக்கம் என்பதை அவர் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  4. //நான் எந்தக் காரணத்துக்காகவும் அச்சப்பட மாட்டேன்; பயமின்றி என் கருத்துக்களை வெளியிடுவேன் என்று இந்த நாளில் மனத்துக்குள்ளாக உறுதி கூறிக்கொள்கிறேன்.
    //

    அவசரப்பட்டு விடாதீர்கள். அதெல்லாம் பென்சன் வாங்குபவர்களுக்கும், சில நேரங்களில் மாத சம்பளக்காரர்களுக்கும் வேண்டுமானால் ஒத்துவரலாம். பிஸ்னசில் கோடிக் கணக்கில் முதலீடு செய்பவர்களுக்கும், political correctness பார்க்க வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கும் இதெல்லாம் பொருந்துமா என்று யோசித்துப் பின்னர் சபதம் செய்யுங்கள்.

    ReplyDelete
  5. உங்கள் வருத்தத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.
    // அவரது கருத்துக்களை எப்படி முன்னெடுத்துச் செல்லமுடியும் என்பதையும் யோசித்துப் பார்க்கிறேன் //
    இதுவே இந்தக் கணத்தின் அவசியம். ஒவ்வொரு கொள்கை பிடிப்புள்ள செயல் வீரரும் மறையும் போது அவரால் ஈர்க்கப்பட்ட அனைவரும் - குறைந்தது பத்துப் பேர் - தீவிரமாக இப்படி யோசித்து அதன்படி செயல்பட்டால் நல்ல மாற்றங்கள் தொலைவில் இல்லை. செல்வன்

    ReplyDelete
  6. மிகவும் வருத்தமான செய்தி. ஆழ்ந்த இரங்கல்கள்!

    ReplyDelete
  7. A great loss. I have met him once after his speech for Liberty Institute webstie launch in Taramani. A splendid orator and a great human being. He was a patron of the Catalyst Trust and was involved in the re-publication of Rajaji articles in Swarajay. We chatted about that 4 volume series for which the world is eternally grateful to him and the Catalyst Trust. a rare and fast disappearing breed of ex-bureacrat. May his soul rest in peace. it is heartening to know that he died peacfully and not after disease and decay...

    ReplyDelete
  8. //அவசரப்பட்டு விடாதீர்கள். அதெல்லாம் பென்சன் வாங்குபவர்களுக்கும், சில நேரங்களில் மாத சம்பளக்காரர்களுக்கும் வேண்டுமானால் ஒத்துவரலாம். பிஸ்னசில் கோடிக் கணக்கில் முதலீடு செய்பவர்களுக்கும், political correctness பார்க்க வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கும் இதெல்லாம் பொருந்துமா என்று யோசித்துப் பின்னர் சபதம் செய்யுங்கள்.//

    இதே போன்ற ஒரு கருத்தை அவரிடம் நான் சொன்ன போதும், மற்ற சிலர் சொன்ன போது, ஒரே அடியாக மறுத்தார் அகிவே. பயமே எல்லாவற்றின் மூலகாரணம் என்றார். சில பொது நிகழ்வுகளை அவர் ஒட்டுமொத்தமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று இப்போதும் நான் நினைக்கிறேன் என்றாலும், அவர் சொன்னது - பயமே மூல காரணம் என்பதும் அதை மீறி யாராலும் நேர்மையாக வாழவும் நேர்மையில்லாதவற்றை எதிர்த்தும் இருக்கமுடியும் என்பதும் - ஏற்கப்படவேண்டிய ஒன்றே. எல்லோராலும் நேர்மையாக இருக்கமுடியும். சபலமும், பயமும் நம்மை நேர்மையாக இருக்கவிடாமலும், நேர்மையற்றதை எதிர்த்துப் போராட வைக்காமலும் இருக்கின்றன. அகிவே அவ்விதத்தில் ஒரு ஒப்பற்ற மனிதர்.

    ReplyDelete
  9. //அவசரப்பட்டு விடாதீர்கள். அதெல்லாம் பென்சன் வாங்குபவர்களுக்கும், சில நேரங்களில் மாத சம்பளக்காரர்களுக்கும் வேண்டுமானால் ஒத்துவரலாம். பிஸ்னசில் கோடிக் கணக்கில் முதலீடு செய்பவர்களுக்கும், political correctness பார்க்க வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கும் இதெல்லாம் பொருந்துமா என்று யோசித்துப் பின்னர் சபதம் செய்யுங்கள்.//

    இதற்கும் சம்பளக்காரர்கள்/வணிகர்கள் வகையறாக்களுக்கும் சம்பந்தம் இருக்கிற மாதிரி தெரியல ரெங்கதுரை அவர்களே!

    உங்களுக்கு வசதியாக இருக்கிற மாதிரி இன்னும் சில criteriaக்களையும் சேர்க்கிறதுக்கு நான் வேணும்னா நான் உதவி செய்கிறேனே!

    சபதம் ஏற்க தகுதியுடையவர்கள்

    1.மாதச்சம்பளம் வாங்குபவர்கள்
    2.political correctness பார்க்காதவர்கள்
    3.ஐஐடி’யில் படிக்காதவர்கள்
    4.பார்ப்பனராக இல்லாதவர்கள்
    5.cricinfoவில் ஈடுபடாதவர்கள் (இது உங்களுக்கு இன்னும் வசதியா இருக்கும் :-) )

    மேலே உள்ள தகுதியுடன் தமிழ்நாட்டில் மட்டும் லட்சக்கணக்கில் ஆட்கள் இருப்பர்.

    அதனால் என்ன புரட்சியா வெடித்தது? :-)

    ReplyDelete
  10. மனம் வருத்தப் படுகிறது. தன்னலம் பாரமல் இதுப் போல் சமூகத்திற்கு வேலைப் பார்ப்பவர்கள் நீண்ட நாட்கள் வாழ வேண்டும், ஆனால் காலம் சிலரை அழைத்துக் கொள்கிறது.

    அவருடைய பணிகளில் நீங்கள் ஏதாவது ஒன்றை எடுத்து செல்வது பாராட்டுக்குரியது.

    ஆழ்ந்த அனுதாபங்கள்...

    மயிலாடுதுறை சிவா...

    ReplyDelete
  11. ரொம்ப வருத்தமாக இருந்தது 14ஆம் தேதி என் நண்பர் அ.கி.வரதராஜன்(சிங்கை) இதை எடுத்துச்சொல்கையில்..ஒருமுறைக்கு
    இவர் என் மாமாபிள்ளை என்ற உறவுமுறை ஆவார்..ஒருவேளை யான் நீலாங்கரையில்(பெசன்ட்நகர்-இவர் வீடு) பக்கம்)-இருந்திருந்தால்
    போய்ப்பார்த்திருக்க முடியுமோ?என்னவோ?ரொம்ப நல்ல, துணிச்சல் மிக்க எமது அத்தாழநல்லூர்க்காரர்.வாழ்க அவரது புகழுடம்பு!@
    யோகியார்

    ReplyDelete