Thursday, September 17, 2009

இந்திய தேசியம் x திராவிடம்

இந்திய தேசியம் என்ற கருத்தாக்கம் எப்போது ஏற்பட ஆரம்பித்தது என்று அறுதியிட்டுக் கூறமுடியுமா என்று தெரியவில்லை. இந்திய தேசிய காங்கிரஸ் என்று ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம், தாதாபாய் நௌரோஜி ஆகியோர் காங்கிரஸ் கட்சியை 1885-ல் ஆரம்பித்தபோதா? நிச்சயமாக அப்போது இந்திய தேசியம் என்ற கருத்தின் ஆரம்பமாவது இருந்திருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்தப் பெயர் கட்சியின் முன்னொட்டாக இருந்திருக்க முடியாது. 1857 கலவரங்களின்போது நிச்சயமாக அந்தக் கருத்து நிலையாக இருந்திருக்க முடியாது. எனவே இந்த இரு ஆண்டுகளின் இடைப்பட்ட காலத்தில்தான் அந்த எண்ணம் வலுப்பெற்றிருக்கவேண்டும்.

தேசிய உணர்வு என்பது ஒருவர்மீது திணிக்க முடியாதது. ஏதோ ஓர் இனம் புரியாத, தெளிவில்லாத, ஆனால் பெருமையைப் பறைசாற்றுகிற ஓர் உணர்வுதான் தேசியம். ‘நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன்’ என்றால் எதற்காக அந்தப் பெருமை என்று பிறரிடம் சொல்லத் தெரியாவிட்டாலும், அந்தப் பெருமை உணரப்படவேண்டும். ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்பது இன்று முற்றிலும் உண்மை அல்ல என்றாலும், அப்படி ஒருவர் உணரவேண்டும்; அல்லது வருங்காலத்தில் ஒரு நாள் (எந்த அடிப்படையிலாவது) உலகிலேயே மிகச் சிறந்த நாடாக இந்தியா ஆகும் என்ற நம்பிக்கை இருக்கவேண்டும். அந்த ஏற்றத்துக்கு ஒரு துரும்பையும் கிள்ளி எறியாவிட்டாலும், இந்தியாவை தன் முதுகில் ஏற்றிச் சுமந்து மலை உச்சிக்கே கொண்டு சென்றதுபோன்ற, வெட்டி முறித்ததுபோன்ற ஓர் உணர்வு ஒருவரிடம் இருக்கவேண்டும்.

ஆனால் இதெல்லாம் 1885-ல் சாத்தியமாகியிருக்காது. அப்படியென்றால் அந்தக் காலகட்டத்தில் இந்திய தேசியம் என்றால் என்ன பொருளாக இருந்திருக்க முடியும்?

ஆரியவர்த்தம், புண்ணிய பூமி, வேதங்கள், உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை, புண்ணிய நதிகள், புண்ணியத் தலங்கள், சிந்து-சரஸ்வதி நாகரிகம், என்றும் உயிர்ப்புடன் இருக்கும் இந்து மதம், சமஸ்கிருதம் என்ற அற்புதமான மொழி, கலை, அறிவியல், இசை ஆகியவற்றில் பிரம்மாண்ட வளர்ச்சி, பிரமிக்க வைக்கும் கட்டடங்கள், வளமான நகரங்கள், அவற்றில் கொட்டிக் கிடந்த செல்வம், அதை வெட்டிச் செல்ல முயன்ற அந்நியப் படையெடுப்புகள், அந்தப் படையெடுப்புகளையும் மீறி, செல்வமும் கைவினைத் திறனும் செழித்த பாரதவர்ஷம்.

இவற்றை ஒருவர் முன்வைக்கலாம். ஆனால் இதையே அனைவரும் ஏற்க முடியுமா? இந்தியாவுக்கு வந்து இதையே தன் நாடாக வரித்த முஸ்லிம்களால் முடியவில்லை. அவர்களைப் பொருத்தமட்டில், இந்து மதம் அழிக்கப்படவேண்டியது. பல நூற்றாண்டுகளாக அவர்கள்தான் (டெல்லியில்) ஆட்சியில் இருந்தனர். அவர்களது கட்டடக் கலை, அவர்களது மசூதிகள், அவர்களது மொழி (பாரசீகமும் அரபியும் கலந்த உருது), அவர்களது இசை என்பது மேலே சொன்ன பலவற்றிலிருந்தும் வேறுபட்டது மட்டுமின்றி, மேலே சொன்ன பலவற்றுக்கும் எதிரானதும்கூட.

அதைப்போலவேதான் திராவிடம் என்னும் கருத்தாக்கமும். இந்து மதத்தின் மிகச் சிறந்த புனிதக் கருத்துகளின் அடிநாதமே வர்ண முறையும், அதன் விளைவாக தெற்கில் ஏற்பட்ட பிராமண x சூத்திர போராட்டங்களும், தீண்டாமைப் பிரச்னையும்.

ஆரியம் x திராவிடம்
சமஸ்கிருதம் (அல்லது அதன் பினாமியான இந்தி) x தமிழ்
பிராமணர்கள் x சூத்திரர்கள்
மனு நீதி x திருக்குறள் நீதி

என்ற எதிர் எதிர் நிலைகள் உருவாக்கப்பட்டு, திராவிடர்கள் (அல்லது ஆதி தமிழர்கள்) காக்கப்படவேண்டும், ஆரிய மாயையிலிருந்து விடுபட வேண்டும், பிராமண ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறவேண்டும், மனுவின் அநீதிக்கு பதில் குறளின் சமதர்ம நீதி முன்வைக்கப்படவேண்டும் என்று சில சூத்திரங்கள் உருவாயின.

இதுவும் குறிப்பிட்டு எந்த ஆண்டில் தோன்றியது என்று எனக்குத் தெரியாது. நிச்சயமாக 19-ம் நூற்றாண்டின் கடைசி ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கவேண்டும். நீதிக் கட்சி, பெரியாரின் திராவிட இயக்கம், பின்னர் உருவான அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை இந்த சூத்திரங்களை முன்வைத்தன.

இதில் பெரியாரின் பங்கு கணிசமானது. திராவிடம் என்பதற்கான வலுவான தத்துவார்த்தப் பின்னணியை உருவாக்கியவர் அவர்தான். அது பெரும்பாலும் எதிர்மறைக் கருத்துகளால் ஆனது. திராவிடம் சிறந்தது என்பதை நிரூபிப்பதற்கு பதில் ஆரியம் மோசமானது என்று காட்டிவிட்டால் போதும். திராவிடம் மோசமானது என்று யாராவது ஓர் உதாரணத்தைக் காட்டினால், ஆரியம் அதைவிடவும் மோசமானது என்று இன்னோர் உதாரணத்தைக் கொண்டு நிரூபித்தால் போதும். ஆரியம், சமஸ்கிருதம் என்றால் வேதம், புராணம் என்று இந்திய தேசியவாதிகள் சொன்னால், அவற்றையே எடுத்துக்கொண்டு, புராண நாயகர்கள் எப்படி மோசமானவர்கள் என்று விளக்கிவிடலாம்.

புராணங்கள் அனைத்திலும் ஆபாசத்தைத் தேடி, பதிப்பித்தபின், பெரியாரின் அடுத்த குறி பிராமணர்கள் மீதாக இருந்தது. மூட நம்பிக்கைகளை விதைத்தல், அப்பாவி மக்களை ஏமாற்றுதல், சோம்பேறிகளாக, உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கடவுளின் இடைத்தரகர்கள் என்று தங்களைக் காட்டிக்கொண்டு, அப்பாவி சூத்திரர்கள் கஷ்டப்பட்டு உழைத்த உழைப்பை உறிஞ்சி, உண்டு கொழுத்தவர்கள் என்பதோடு மட்டுமின்றி, இந்த பிராமணர்கள், வாய்ப்பு கிடைத்தவுடனேயே ஆங்கிலேயர் கொண்டுவந்த கல்வியைக் கற்று வளமான மாத வருமானம் கொடுக்கும் அரசு வேலைகளை தம் சதவிகிதத்துக்கு முற்றிலும் சம்பந்தம் இல்லாமல் பெருமளவு பிடுங்கிக்கொண்டனர். அத்துடன் மெரிட் என்ற கருத்தை முன்வைத்து தமது செல்வாக்கு சரியாமல் பார்த்துக்கொண்டனர். இதை எதிர்க்கவேண்டியது பெரியாரின் முக்கிய வேலையானது.

புராணங்களை எதிர்ப்பது போலவே இங்கும், பிராமணர்கள் போற்றுவதெல்லாம் இழிசெயல்களாகக் காட்டப்பட்டன. பிராமணர்கள் தங்களைத் தனித்துக் காட்டிக்கொள்ள பூணூல், பூஜை புனஸ்காரம், நடை, உடை, பாவனை, பேச்சு, வழக்கு ஆகியவற்றை உயர்ந்தவையாகக் காட்டினால் அவையே இழிந்தவையாக கேரிகேச்சர் செய்யப்பட்டன. இதில் பெரியாரும் அவரது தொண்டர்களும் பெருவெற்றி பெற்றனர் என்றே சொல்லலாம்.

பிராமணர்-சூத்திரர் போராட்டம் இட ஒதுக்கீடு என்னும் புள்ளியில் வந்து நின்றது. இட ஒதுக்கீடு என்பது இடைக்காலத் தீர்வு மட்டுமே. அதன்மூலம் ஓரளவுக்குத்தான் பிரச்னைகள் தீருமே தவிர, முழுமையான சாதிக் கலப்பு ஏற்பட்டால்தான் இந்தப் பிரச்னை தீரப்போகிறது. அதற்கு இன்னும் இரு அல்லது மூன்று நூற்றாண்டுகள் ஆகலாம். இதில் தீண்டாமைப் பிரச்னை என்பதற்கு எந்தவிதமான தீர்வும் காணப்படவில்லை. இன்றுவரை தொடர்கிறது.

சமஸ்கிருதம் (இந்தி) என்ற மொழிக்கு எதிரான போர் எளிதில் முடியவில்லை. இன்றுவரை தொடர்கிறது.

இந்திய சுதந்தரத்துக்கு முன்னாவது, இந்திய தேசியவாதிகள் ஓரளவுக்கு சமரசம் செய்துகொள்ளும் மனப்பான்மையைக் கொண்டிருந்தனர். ஆனால்
சுதந்தரத்துக்குப் பின், முரட்டுத்தனத்தை மட்டுமே முன்வைத்தனர். ராஜேந்திர பிரசாத், லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் இந்தி வெறி இன்றுவரை கபில் சிபலின் இந்தி வெறியில் வந்து நிற்கிறது. இன்றைய 2009-லும் மக்களவை செக்ரடேரியட், ஒரு மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியாது என்று மறுக்கும் நிலை உள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதி வரிசையில் இன்னும் பல தலைவர்கள் ஓங்கிக் குரல் கொடுத்தால் மட்டுமே இந்த அநீதி ஓயும். மக்களாகிய நாமும் இதற்கு நம் பங்கைச் செலுத்தவேண்டும்.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பெரும்பாலான அநீதிகளை ஒழித்துவிட்டது. அனைவருக்குமான சம உரிமைகள், சிறுபான்மையினருக்கு அதிகபட்ச உரிமை போன்ற லிபரல் கருத்துகள்தான் இந்தியாவில் புழங்குகிறது. ஆனால் நீதி பரிபாலனம் என்பதில், நீதிபதிகள் எப்படி நீதியை நிறுத்து வழங்குகிறார்கள் என்பதில் திராவிடம் அதிக ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இதுவும் நாளடைவில் மாறவேண்டிய ஒன்றுதான்.

ஆரிய, சமஸ்கிருத புராணங்களை எதிர்க்கும்போதுதான் பகுத்தறிவு என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஆரியம் என்றால் மூட நம்பிக்கை. எனவே அதற்கு மாற்றான திராவிடம் என்றால் பகுத்தறிவு. ஆனால், இன்றுவரை மூட நம்பிக்கை ஒழிப்பு என்பது மாறிவிடவில்லை. பெரியார் அனைத்து மூட நம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தாலும் பெரும்பான்மைத் தமிழர்கள் வசதியாக ராகு காலம், எம கண்டம் போன்ற ஆரிய மூட நம்பிக்கைகளை மட்டும் கேலி செய்துவிட்டு, இப்போது வாஸ்து, ஃபெங் ஷூயி, நேமாலஜி, ஜெம்மாலஜி என்று வெளுத்துக்கட்டுகிறார்கள்.

திராவிடக் கருத்தாக்கம், இந்திய தேசியக் கருத்தாக்கத்தை முற்றிலுமாகச் சிதைத்து ஒழித்துவிடவில்லை. மாறாக, இந்திய தேசியத்தை பெருமளவு செழுமைப்படுத்தியுள்ளது. அதன் முரட்டுத்தனங்களை முடிந்த அளவு குறைத்து, ஐரோப்பிய லிபரல் கருத்தாக்கத்தை நோக்கிச் செல்ல வைத்துள்ளது. அதுதான் திராவிடத்தின் வெற்றி என்று கொண்டாடவேண்டும். இனியும் தொடர்ந்து இந்திய தேசியத்தைச் செழுமைப்படுத்தி, சிறுபான்மை மக்களின் நலன்கள் நசுக்கப்படாதவாறு காப்பதிலும், தீண்டாமையை ஒழிப்பதிலும், அனைத்து இந்திய மொழிகளுக்கு சம உரிமை கிடைப்பதிலும்தான் திராவிடத்தின் முழு வெற்றியும் இருக்கப்போகிறது. பெரியாரின் முழு வெற்றியும் கூட.

22 comments:

  1. எம்.ஏ,சுசீலாம்மா அவர்களின் விமர்சனத்தில் கேண்டீட், தி. ஜா. ரா வின் செம்பருத்தி, இந்திய தேசியம்*திராவிடம் என்று மிக அருமையாக எழுதுகின்றீர்கள் பத்ரி
    //திராவிடம் சிறந்தது என்பதை நிரூபிப்பதற்கு பதில் ஆரியம் மோசமானது என்று காட்டிவிட்டால் போதும்.//

    //ராகு காலம், எம கண்டம் போன்ற ஆரிய மூட நம்பிக்கைகளை மட்டும் கேலி செய்துவிட்டு, இப்போது வாஸ்து, ஃபெங் ஷூயி, நேமாலஜி, ஜெம்மாலஜி என்று வெளுத்துக்கட்டுகிறார்கள்//

    வார்த்தைகளின் வீச்சு பலமாய் இருக்கிறது

    இந்திய திராவிடத்தை இதை விட நன்றாக விளாசி விட முடியாது

    வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  2. ***
    மனு நீதி x திருக்குறள் நீதி
    ***

    பத்ரி,

    நீங்களே ஏதாவது புதுசா ஆரம்பிக்கிறீங்களா ? இதுவரைக்கும் நான் இந்த சொல்லாடலை தமிழ் ஓவியா பதிவுல கூட பாக்கலையே !

    ReplyDelete
  3. //‘சாரே ஜஹான் சே அச்சா’ என்பது இன்று முற்றிலும் உண்மை அல்ல என்றாலும், அப்படி ஒருவர் உணரவேண்டும்//

    இந்த இழவுக்கு என்ன அர்த்தம் என்றே தெரியாத நானும் "அப்படி உணர வேண்டும்" என்றால் "எப்படி" உணர வேண்டும்? அடிப்படைப் பிரச்சினையே இது தான்.

    அதே மாதிரி தான் "வந்தே மாதரம்", "ஜன கண மன கண" போன்ற சரக்குகளும். இதில் சொல்லப்படும் கருத்துக்கள் என்னதான் உன்னதமானவையாக இருந்தாலும் இவை ஒரு பெங்காளிக்குக் கொடுக்கும் உணர்வை தமிழருக்கு கொடுக்க முடியாது. அந்தந்த மொழிகளில் மொழிபெயர்த்து பாடப்பட்டால் வேண்டுமானால் ஏதாவது அர்த்தமிருக்கும். ஆனால் நம் சமூகம் எந்த அர்த்தமும் தெரியாமலேயே வேத மந்திரங்களை சொல்லி அல்லது சொல்லக்கேட்டு, எதிர்க்கேள்வி கேட்டால் "சாமிக் குத்தம்" என்று நினைத்து ஆட்டு மந்தை மனோபாவத்துடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்கிறது. அதே மாதிரிதான் இந்த "தேசியப்" பாடல்களுக்கும் அர்த்தம் புரியாமல், உச்சரிப்பு தெரியாமல் உளறி மெய்சிலிர்த்துக் கொள்ளவேண்டும் அல்லது நடிக்காவவது செய்யவேண்டும். எக்குத்தப்பாக ஏதாவது எதிர்க் கேள்வி கேட்டா "தேசக் குத்தம்" ஆகிவிடும்.

    ReplyDelete
  4. வழக்கமா, நீங்க எது எழுதினாலும் ( கால்குலஸ் தவிர) புரியுமே, இது மட்டும் ஏன் புரிய மாட்டேங்குதுன்னு, யோசிச்சுட்டே இருக்கேன் (:

    ReplyDelete
  5. திருகுறளை திராவிடர்களின் பொது நீதியாக அமைப்பதில் சிக்கல் இருக்கு!

    திருவள்ளுவர் நிலபிரபுத்துவ காலத்தில் வாழ்ந்தவர்!
    அவரது குறளில் பெண் என்பவள் கணவனுக்கு அடிங்கி இருக்க வேண்டும் என்ற தோனியிம், பத்தினி தன்மை தெய்வீகமானது வாழைமட்டை எரியும், கிணற்றில் வாளி நிற்கும் போன்ற புருடாவும் இருக்கிறது!

    திருகுறளை திராவிடர்களின் பொது மறையாக ஏற்க சொன்னால் அது திராவிடம் அல்ல “புருடாவிடம்”

    ReplyDelete
  6. பிரகாஷ்,

    எனக்கும் புரியவில்லை. ஆனால் அதற்குக் காரணம் பத்ரியுமல்ல, நாமுமல்ல என்று தோன்றுகிறது.

    இந்திய தேசியம் குறித்த சொல்லாடல்களும் புரிதல்களும் ஒரு குழப்பமான ஆனால் சுவாரசியமான வரலாற்றுத் தருணத்தில் - ஒரு point of inflection? - இருப்பதே காரணம் என்று நினைக்கிறேன்.

    ஶ்ரீகாந்த்

    ReplyDelete
  7. Is it a draft of a politically correct, inclusive statement for a politician ?

    ReplyDelete
  8. அன்புக்குரியீர்,

    தேசியம் பற்றிய உங்கள் புரிதல், சிறுபிள்ளைத்தனமானது. சாதாரன மக்கள் தொகுப்பின் ஒரு புள்ளியாகமட்டும் உங்களை யாரும் பார்ப்பதில்லை. பத்திரிக்கை உலகில் பெரிய இடத்தில் வலம் வரும் நீங்கள் இப்படி எழுதியிருப்பது வருந்தத்தக்கது.


    தேசியம் என்ற கற்பிதம், தேச விடுதலைக்குப்பிறகு, மொழிவாரி மாகணங்கள் பிரிக்கப்பட வேண்டும் எனும் குரல் எழுப்பப் பட்டபோதும், பல்வேறு இனங்களை சார்ந்த மக்கள், தங்கள் இனப்பற்றால், தங்கள் தனித்துவத்தால், ஒருவரையொருவர் உயர்வாகப் பேசிக் கொண்ட போதும், சமஸ்தானங்கள் இந்திய நாட்டுடன் இணைய மறுத்தபோதும் உருவாக்கப் பட்டவையே.


    இனத்தால், மொழியால், மதத்தால், கலையால், கலாச்சாரத்தால் , நடைமுறை பழக்கவழக்கங்களால் பிரிந்து கிடந்த மக்களை ஒன்று திரட்டும் காரணியாகவே இந்த "தேசியம்" என்பது இங்கே சொல்லிக் கொடுக்கப்ப்ட்டது.


    ஆரிய மாயை, திராவிட மாயை, தேசியம், வர்ணாசிரம மாண்பு என்ற பதங்களையெல்லாம் விட்டுவிட்டு வேறு ஏதாவது எழுதுங்கள்


    வாழ்த்துக்களுடன்

    அன்புடன்
    ஆரூரன்



    தயவுசெய்து விட்டுவிடுங்கள்.
    இந்தப் புரிதல் இல்லாமல், ஏதோ இனம்புரியாத, தெளிவில்லாத, பெருமையை பறைசாற்றுகிற விசயமாக சொல்லிக் கொடுக்கப்பட்டதனால் தான் இத்தனை பிரச்சனையும்.

    தேசிய கீதத்தில்

    " பஞ்சாப சிந்து குஜராத்து மராட்டா.
    திராவிட உத்கலு வங்கா"

    மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின், "திராவிட" என்ற பொதுவான பெயரிலே தென்னகம் முழுவதையும் அழைத்ததால் தான் கேரள மாநிலத்தில் பெரும் சர்ச்சை வந்தது நினைவிருக்கலாம்.

    //ஆரியம், சமஸ்கிருதம் என்றால் வேதம், புராணம் என்று இந்திய தேசியவாதிகள் சொன்னால், அவற்றையே எடுத்துக்கொண்டு, புராண நாயகர்கள் எப்படி மோசமானவர்கள் என்று விளக்கிவிடலாம்.//


    //இந்தியாவுக்கு வந்து இதையே தன் நாடாக வரித்த முஸ்லிம்களால் முடியவில்லை. அவர்களைப் பொருத்தமட்டில், இந்து மதம் அழிக்கப்படவேண்டியது. //

    இந்த வரிகள் மூலம் நீங்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள். இந்திய தேசியம் என்பது இந்துத்துவ மதம் சார்ந்தது என்று சொல்ல வருகிறீர்களா? மதம் சாரதவர்களும், மத எதிர்ப்பாளர்களும், கிருஸ்துவர்களும், பார்சிக்களும், தேசிய எதிர்ப்பாளர்கள் என்பது உங்கள் கருத்தா?

    நான் பலமுறை நண்பர்களிடமும், கூட்டங்களிலும் பேசியிருக்கிறேன். 'ஜெய் ஹிந்து' என்ற சொல்லாடலே, இந்தியாவை வாழ்த்துகிறதா? ஹிந்துக்களை வாழ்த்துகிறதா? என்று.

    ReplyDelete
  9. //திருகுறளை திராவிடர்களின் பொது மறையாக ஏற்க சொன்னால் அது திராவிடம் அல்ல “புருடாவிடம்”//

    திருவள்ளுவர் சமணர், அதனால் தான்

    "அறவாழி அந்தணர் தாழ் சேர்ந்தார்க்கல்லார்" என்றும்

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்
    வானுரையும் தெய்வத்துள் வைக்கப்படும்

    என்று சொன்னார் என்று ஒருவர் எழுதியதை நேற்றுத்தான் படித்தேன்,


    திருக்குறளின் அனைத்தும் திருவள்ளுவரால் எழுதப்பட வில்லை,காலப் போக்கில் வாழும் வள்ளுவர் போன்ற சிலர் அதில் இடைச்செருகலாக பலதை செருகிவிட்டுவிட்டார்கள் என்று சொல்பவர்களும் உண்டு.

    இதற்கெல்லாம் திராவிட சிங்கங்கள் என்ன சொல்லப்போகின்றன என்று தெரியவில்லை.


    அன்புடன்
    ஆரூரன்

    ReplyDelete
  10. பத்ரி,
    பலவிசயங்களைத் தொட்டுச் சென்றுள்ளீர்கள்.

    இந்திய தேசியம்:

    அ: புவியியல்/நிலம் சார்ந்த பார்வை

    வடகிழக்கு மாநிலங்கள் ஏதோ ஒரு அந்நிய நாடுபோலத்தான் இருக்கிறது.

    ஆ:உருவம்/தோற்றம்/வாழ்வியல்
    வடகிழக்கு மாநிலமக்கள்
    வடக்கு மக்கள்
    தெற்கு(ஆந்திரா,கர்நாடகம்,தமிழ்நாடு) மக்கள்
    தெற்கானாலும் தனித்து தெரியும் கேரள மக்கள்

    இ: மொழி

    ஈ: மதம்

    உ: பொருளாதரம்

    ***
    இப்படி வேறுபட்டு இருப்பவர்களை ஒரே கூட்டில்
    அடையாளத்தில் (மொழி,வாழ்வியல் முறை) அடைக்க முயல்வது தவறு. மாநில அளவில் அதிகச் சுதரங்கள் கொடுத்து (இனம்,மொழி,கொடி,தனித்துவம்)
    அதே சமயத்தில் ஒரே தேசமாகச் செயல்படத்தேவையான புது விசயங்களை மத்திய அரசிடம் விடலாம். ஏதற்காக ஒரே மொழி பொது மொழி என்று தட்டையாக இருக்கவேண்டும்? பன்முகமாக் இருக்கலாம்.


    இந்திய தேசியம் என்பது என்ன என்று தெரியவில்லை. கார்கில் போர் அல்லது கூமுட்டைகளின் கிரிக்கெட்( ஆம் அது அப்படித்தான்) நேரங்களில் மட்டுமே தேசியம் வேலை செய்கிறது.

    ஒரு மாநிலத்தில் இருந்து அடுத்த மாநிலத்திற்கு வாழச் செல்லும்போது வாகன பதிவு மாற்றத்திற்காக நேரடியாக (தரகர்,இலஞ்சம் இல்லாமல்) முயற்சித்தால் நீங்கள் இந்திய தேசியததி இன்ஸ்டன்ட்டாக வெறுக்க ஆரம்பிபீர்கள்.

    **

    மாநிலங்களுக்கான நதிநீர் விசயத்தில் இந்திய தேசியம் என்பதும் மண்ணாங்கட்டியாகவே இருக்கிறது. கூட்டாக எப்படிச் செயல்பட வேண்டும் என்ற வழிமுறைகள் இல்லை.

    **

    இதில் நிறையப் பேசலாம்..


    ‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍=====================

    திராவிடம் ஆரியம்

    திராவிடம் என்பது தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் இல்லை.
    இது, ஆரியம்/பார்பனிசத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்ட ஒரு கருத்தாக்கம்.

    ஆரியத்தை கருத்தளவில் எதிர்க்க ஒரு எதிர் கருத்தாக்கம் தேவைப்பட்டது.
    ஆரியம் புட்பால் விளையாடும்போது திராவிடம் டென்னிஸ் விளையாடினால் பயன் இல்லை. ஆரியத்தின்/பார்பனிச விளையாட்டையே ஆரிய/பார்பனிச விதிகளில் விளையாடினால்தான் வெற்றி/தோல்வி கிடைக்கும்.

    நிச்சயம் திராவிடம் (ஆரியம்/பார்பனிசத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்ட ஒரு கருத்தாக்கம்) வெற்றி பெற்றுள்ளது தமிழகத்தில். ஆனால் இது அடுத்த கட்டத்தை அடையவும், மேலும் சீராகவும் யாரும் மெனக்கெடுவது இல்லை எனபது சோகம்.

    ****

    நீங்கள் மாதம் ஒரு தமிழக மாவட்ட தலைநகரில் தங்கப்போவதாக ஆங்கிலப் புத்தாண்டில் சொன்னதாக நினைவு. அனுபவம் எப்படியுள்ளது?

    ReplyDelete
  11. //வழக்கமா, நீங்க எது எழுதினாலும் ( கால்குலஸ் தவிர) புரியுமே, இது மட்டும் ஏன் புரிய மாட்டேங்குதுன்னு, யோசிச்சுட்டே இருக்கேன் (:
    //

    இது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் u hgave strong opinions

    இது உங்களுக்கு புரியக்கூட வில்லை என்றால் you are too biased :) :)... அது தான் காரணம் .நான் சொல்வதே நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா அல்லது புரியவில்லையா :) :)

    ReplyDelete
  12. பத்ரி, கமலஹாசன் போன்ற தமிழ் புத்தக, தமிழ் சினிமா வியாபாரிகளுக்கு அவர்கள் பார்ப்பனராய்ப் பிறந்தது இன்று திராவிட மனநிலை காலூன்றிய தமிழகத்தில் ஓர் தடங்கலே. அல்லது வளர்ச்சிக்குத் தடங்கலாகுமோ என்று அவர்களே கற்பித்துக்கொண்டுள்ள பாரனாய்ட் கோட்பாடாகவும் இருக்கலாம். எனவே கண்ணை மூடிக்கொண்டு தமிழ், தமிழகம், திராவிடம், ஆரியம் மோசம், சமஸ்கிருதம் திணிப்பு என்றெல்லாம் பேசவேண்டியுள்ளது. Being more christian than the Pope என்பதைப் போல .... பார்ப்பனர்களும் திராவிட இயக்க பரபரப்புக்கு முன்னால் ஆட்டம் போடாமலில்லை, ஆரியமும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கத் தக்க ஒப்பற்ற கருத்தாக்கம் இல்லை ... ஆனால், ஒட்டு மொத்தமாக ஒதுக்கப்படக்கூடாதவை. செப்பனிட்டால் மொத்த சமூகத்திற்கும் அளப்பரிய பயன் தரத் தக்கவை. வடமொழி ஒரு சயன்டிஃபிக் மொழி என்பதில் அய்யமில்லை. இன்று கணினிகளில் பயன்படும் Object-oriented programming என்ற முறையில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே நன்கு செய்யப்பட்ட மொழி.Words in Sanskrit are instances of pre-defined classes, a concept that drives object oriented programming [OOP] today.Prof.Thathachar, a sanskrit scholar from melkote believes it is not a 'language' as we know the term but the only front-end to a huge, interlinked, analogue knowledge base. The current time in human history is ripe, he feels for India's young techno wizards to turn to researching Mimamsa and developing the ultimate programming language around it; nay, an operating system itself. இதன் அறிவியல் பயன்பாடின் தாக்கம் இன்னும் 100 வருடத்துக்குப் பின் இருக்கலாம் .... இதையெல்லாம் ஆராயாமல் குறுகிய வட்டத்தில் குறுக்குசால் ஓட்டக்கூடாது. ஆனால் பல பார்ப்பனர்களுக்கே இதெல்லாம் தெரியாது. உண்மையான வேதாந்த தர்க்கங்களையும் தத்துவங்களை விட்டு அவர்கள் ஒரு ரிச்சுவல் மதவாதிகளாக ஆகி வெகுநாட்கள் ஆகின்றது.. அதெல்லாம் அழிக்கப்படலாம்.... ஆனால், அந்த இயக்கத்தில், நல்ல பொக்கிஷங்களை நாம் இழந்துவிடக்கூடாது

    ReplyDelete
  13. Did you read this ?
    http://epaper.dnaindia.com/dnabangalore/newsview.aspx?eddate=2/1/2009&pageno=15&edition=20&prntid=1668&bxid=27955164&pgno=15

    ReplyDelete
  14. //வடமொழி ஒரு சயன்டிஃபிக் மொழி என்பதில் அய்யமில்லை. இன்று கணினிகளில் பயன்படும் Object-oriented programming என்ற முறையில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னே நன்கு செய்யப்பட்ட மொழி.Words in Sanskrit are instances of pre-defined classes, a concept that drives object oriented programming [OOP] today//

    எனக்கு ஓரளவுக்கு ஒழுங்காகத் தெரிந்த வெகு சில விஷயங்களில் object-oriented programming ஒன்று. கணினியில், பொதுவாக object-orientedness என்பது ஒரு இயக்கம் சார்ந்த கூறு; ஒரு மொழி சார்ந்த கூறல்ல. அதாவது ஒரு மென்பொருளின் நிலவெளியை (எஸ்.ரா மன்னிக்க) பொருட்களாலும், பொருட்கள் போன்ற கோட்பாடுகளினாலும் நிரப்பி, அந்த மென்பொருளின் இயக்கத்தை (runtime process) அப்பொருட்களுக்குள் நிகழும் 'உரையாடலாக' வடிவமப்பதையே object-oriented programming என்று சொல்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மென்பொருளை உருவாக்குவதை சுலபமாக்கும் கணினி மொழிகளை object-oriented languages என்று சொல்வது வழக்கம். இதனால் அம்மொழியையே object-oriented என்று சொல்வதோ அதன் நீட்சியாக ஒரு மனித மொழியை அவ்வாறே வர்ணிப்பதோ அடிப்படை அபத்தங்கள்.

    மேலே உள்ள மேற்கோளின்படி பார்த்தால் எல்லா மொழிகளுமே object-oriented தான். In English, 'run', 'walk', 'is' are all instances of the class called verb. 'bat', and 'ball' are instances of nouns. 'he', 'she' are all instances of pronouns; etc.

    கணினி மொழிகளெல்லாம் மனித அறிவு வளத்தை, செயல்பாடுகளை கணினியில் உட்கொணர்ந்து நிறுவுவதெப்பட்டி என்பதைக் கருதி வடிவமைக்கப்பட்டவை. அவற்றில் மனித மொழிகளின் கூறுகள் இல்லாமல் இருந்தால் தான் வியப்பு.

    ReplyDelete
  15. நன்றி அன்பர். Srikanth Meenakshi அவர்களே. As per your argument, if the Parts of Speech like verb, noun are the mother classes, there can only be total 8 mother classes. That's all.

    In English 'cow' is a just a sound assigned to mean a particular animal. But if you drill down the word 'gau' --Sanskrit for 'cow'-- you will arrive at a broad class 'gam' which means 'to move. From these derive 'gamanam', 'gatih' etc which are variations of 'movement'. Only the mother class root-word is assigned one, all the sub-words and new words follows a logical sub-class and instance flow (கருப்பொருளின் இயல்பை வைத்து). தமிழில் இடுகுறிப் பெயர் காரணப்பெயர் உள்ளது. ஆனால் அது ஒரு mother-class, sub-class உடன் முடிந்துவிடுகிறது. In Sanskrit, all words have this OOP approach, except that defined classes in Sanskrit are so exhaustive that they cover the material and abstract --indeed cosmic-- experiences known to man. So in Sanskrit the connection is more than etymological.


    In OOP terms-- you may not touch the mother or core classes but may create any variety of instances of them. It is significant that no new 'classes' have had to be created.

    Are all languages IN TOTALITY like this? There will be group of words in this fashion, but not the entire language.

    ....கணினி மொழிகளெல்லாம் மனித அறிவு வளத்தை, செயல்பாடுகளை கணினியில் உட்கொணர்ந்து நிறுவுவதெப்பட்டி என்பதைக் கருதி வடிவமைக்கப்பட்டவை. அவற்றில் மனித மொழிகளின் கூறுகள் இல்லாமல் இருந்தால் தான் வியப்பு.

    Its true, but since machine cannot understand English or French directly, you have separate OOPS or assembly languages with unique rules. Advantage in Sanskrit is that the customization is minimal compared to other languages.
    Future research would pave way for further use of Sanskrit.

    ....கணினியில், பொதுவாக object-orientedness என்பது ஒரு இயக்கம் சார்ந்த கூறு; ஒரு மொழி சார்ந்த கூறல்ல.... true, thats what I try to say, Sanskrit is much more than a language. In Sanskrit the connection is more than etymological.

    நமது தமிழ் ஒரு இனிய சிறந்த மொழி என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. வடமொழியைத் தாழ்த்தித்தான் தமிழ் பெருமை அடையும் என்பது கிடையாது. தமிழ் தன்னகத்தே சிறப்புடைத்து. வேற்று மொழியில் சிறப்பு இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் பரந்த மனப்பான்மையும் நமக்கு வேண்டும்.

    OOP பற்றிய நல்லஅறிவு உடைய இந்த அன்பர், சிறிது வடமொழியின் இலக்கண அமைப்பை ஆராய்ந்தால் நிச்சயம் "அட" அப்படியா என்று நிச்சயம் ஆச்சரியப்படுவார். அதுவரை இந்த விவாதம் முழுமை அடையாது.

    நுண்ணோக்கி கண்டுபிடித்த காலத்துக்கு முன் எவரேனும் பாக்டீரியா, வைரஸ் என்று பேசியிருந்தால், அவரை பித்தர் என்று உலகம் கூறும். ஆனால் நுண்ணோக்கிக்கு முன் பாக்டீரியா என்ற உயிரினம் இல்லவே இல்லை என்று வாதிட முடியுமா.. ? அந்த உயிரினம் கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தது. பின்ன்ர்தான் மனிதன் அதற்கான கருவியை வடிவமைத்தான். இது போன்ற விசயங்கள் இன்றைய அறிவியலின் படி புரியாமல் இருக்கலாம், அது மென்மேலும் வளரும்போது, ஒரு வேளை மேலும் சான்றுகளும் பயன்பாடுகளும் கிடைக்கலாம்.

    ReplyDelete
  16. வழக்கம் போல் வரவேண்டிய usual suspects வந்து அடிக்கப்படவேண்டிய கும்மிகள் அடிக்கப்பட்டுவிட்டன.

    1. இப்படி ஒரு பதிவு தேவையா ?

    2. இந்திய தேசியம் என்பது மாநில சுய ஆட்சிக்கு எதிரானதான கருத்தாக்கத்தை பலப்படுத்தியது நேருவின் மகள், பேரன், மற்றும் அவரது குடும்ப விசுவாசிகளே காரணம். (உதாரணம்: இந்திராகாந்தி சோசியலிசம் அதற்கு ஜால்ரா அடித்த கம்யூனிஸ்டுகள்)

    3. மாறாக இந்துத்வாவாதிகள் என்னதான் தங்களை தேசியவாதிகளாக காட்டிக்கொண்டாலும், மாநில சுய ஆட்சி, தனி மனித சுதந்திரம், பொருளாதாரக்கொள்கை போன்ற விஷயங்களில் மிகவும் லிபரல் சிந்தனை கொண்டவர்களாகவே இருந்தனர், இருக்கின்றனர்.

    4. இந்தியாவின் சாபக்கேடு, கன்சர்வேடிவ் இடது மற்றும் இடது சார்ந்த நடுநிலைமை Vs லிபரல் வலது சார்ந்த சிந்தனை.

    இதன் படி ஈகுவேஷன் அமைத்தால்:

    Left communist congress Coservative X Right liberal Hindutva

    ReplyDelete
  17. தஞ்சாவூர் ஐயா,

    பதிலுக்கு நன்றி.

    ஒரு கணினி மொழியோடு ஒரு மனித மொழியை நீங்கள் சொல்வது போல் ஒப்பிடுவது முற்றிலும் சரியல்ல. ஒன்று ஆப்பிள் என்றால் மற்றது ஸ்க்ரூட்ரைவர். சம்பந்தமேயில்லை, விட்டு விடுங்கள்.

    ஆனால் அதைக்கடந்து நீங்கள் சொல்லும் ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். OOP-இல் பிரபலமாக வரும் inheritance முறையை முன்வைத்து சமஸ்கிருதத்தில் அதையொட்டியுள்ள ஒழுங்கமைவைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். அதைப் போன்ற முறைமை எல்லா மொழிகளிலும் உண்டு. ஆங்கிலத்தில் ஏராளமான வார்த்தைகள் வேர்வார்த்தைகளின் சேர்க்கைகளே - expulsion, exhale, exit, express, exclusive, enervate, exceed, explosion ஆகிய அனைத்து வார்த்தைகளும் ex (for out, away, from) என்ற வேரிலிருந்தும் வேறொரு வேரிலிருந்தும் உருவானவை தான். மெம்மேலும் இங்கே:

    http://www.virtualsalt.com/roots.htm

    ஆகையால், சமஸ்கிருதத்தில்தான் இம்முறைமை உள்ளது என்று சிலாகிப்பதில் அர்த்தமில்லை.

    //நமது தமிழ் ஒரு இனிய சிறந்த மொழி என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. வடமொழியைத் தாழ்த்தித்தான் தமிழ் பெருமை அடையும் என்பது கிடையாது. தமிழ் தன்னகத்தே சிறப்புடைத்து. வேற்று மொழியில் சிறப்பு இருந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் பரந்த மனப்பான்மையும் நமக்கு வேண்டும்.//

    Take it easy...

    //இது போன்ற விசயங்கள் இன்றைய அறிவியலின் படி புரியாமல் இருக்கலாம், அது மென்மேலும் வளரும்போது, ஒரு வேளை மேலும் சான்றுகளும் பயன்பாடுகளும் கிடைக்கலாம்//

    உண்மைதான். வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வரும் போது, சமஸ்கிருதம்தான் அவர்களோடு உரையாட சிறந்த மொழி என அறியப்படலாம். ஏன், அவர்களே விண்கலத்திலிருந்து இறங்கும் போது ‘இதி வார்த்தஹ’ என்று சொல்லிக் கொண்டு இறங்கலாம்.

    எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

    ReplyDelete
  18. )*ஆங்கிலத்தில் ஏராளமான வார்த்தைகள் வேர்வார்த்தைகளின் சேர்க்கைகளே*(

    Srikanth ji,

    kshamisi. In Sanskrit, all the வார்த்தைகள் are வேர்வார்த்தைகளின் சேர்க்கைகளே. Each of the Sanskrit words can be further drilled down to point out the basic actions. You will need a complex database schema and logic to find the root words in English.

    ReplyDelete
  19. > இவற்றை ஒருவர் முன்வைக்கலாம். ஆனால் இதையே அனைவரும்
    > ஏற்க முடியுமா? இந்தியாவுக்கு வந்து இதையே தன் நாடாக வரித்த
    > முஸ்லிம்களால் முடியவில்லை. அவர்களைப் பொருத்தமட்டில், இந்து
    > மதம் அழிக்கப்படவேண்டியது.
    ---------
    Badri, I am little surprised at the last statement, coming from you. I initially thought it was a typo.

    Anyway, நீங்கள் முன்வைத்திருக்கும் விஷயங்களில் சிலவற்றை, அவரவர் நிலைப்பாட்டைப் பொறுத்து, ஏற்க மறுப்பதில் எந்த தவறும் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து. அப்படி மறுப்பது முஸ்லீம்கள் மட்டுமல்ல. அவர்களைப் போலவே, இந்தியாவில் பிறந்து இந்தியப் தேசப்பற்றுடன் வாழும் பிறரும் மறுக்கலாம். மறுக்கிறார்கள்.

    நீங்கள் வேறு எதற்கோ எதிர் வினையாக இந்த பதிவு எழுதியுள்ளீர்கள் என்று யூகிக்கிறேன். அந்த கான்டெக்ஸ்ட் இல்லாததால், இதுவே என் கண்ணில் பட்டவை. :-)

    -விகடகவி

    ReplyDelete
  20. விகடகவி: சுதந்தரத்துக்கு முந்தைய இஸ்லாமிய சமூகம், அதன் தலைவர்கள் ஆகியோர் பற்றிய கருத்து அது. திராவிடம் தொடர்பான கருத்துகளும் சுதந்தரத்துக்கு முந்தி தொடங்கி, அதன்பின் சில பத்தாண்டுகள் தொடர்ந்த காலகட்டம் சார்ந்ததே.

    தேசியம் தொடர்பான கருத்தாக்கங்கள் மாறிக்கொண்டே இருக்கக்கூடியவை. சுதந்த காலகட்டத்தில் முஸ்லிம்கள் ஒரு இந்து இந்தியாவில் தம் நிலை என்னாகுமோ என்று தடுமாறினார்கள் என்பது உண்மை. அதனால்தான் இந்தியாவை விட்டு பாகிஸ்தானுக்குச் செல்ல முடிந்தவர்கள் அனைவரும் அங்கே சென்றனர். செல்ல விரும்பி செல்ல முடியாதவர்கள் பெரும்பாலானோர். ஒரு சிலரே இந்தியா என்ற செகுலர் தேசத்தின்மீது நம்பிக்கை வைத்திருந்தவர்கள். இன்னும் பலர் இந்தக் கருத்தாக்கங்கள் எதையும் புரிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்த முஸ்லிம்கள்.

    சுதந்தரத்துக்குப் பின் நிலை வெகுவாக மாறியது.

    ReplyDelete
  21. உலகமெங்கும் தேசியம் என்பது அதிகாரங்களின் மையமாக பலமாக நிற்கிறது. அடுத்த புரட்சி may be தேசியங்களுக்கு எதிராக தோன்றக்கூடும்.

    ReplyDelete
  22. I support Dravidian Politics, North Indians never support on South Indians. In school days We read about Ashoka, Gupta, Maurya but not known about our Raja Raja Cholan, Rajendra cholan...who were build a ship and cross the country , have any one read it in History...

    ReplyDelete