Sunday, November 14, 2004

யாசர் அராபத், புஷ், பிளேர், ஷாரோன்

யாசர் அராபத் பற்றி பாஸ்டன் பாலாஜி தமிழோவியத்தில் எழுதிய கட்டுரை இங்கே. அந்தக் கட்டுரை பொதுவாக பிரச்னையில் மூலகாரணம் அராபத்தும், பாலஸ்தீனியர்களுமே என்று எழுதப்பட்டிருந்ததால் என் மறுப்பைப் பின்னூட்டமாகத் தெரிவித்தேன். அதையொட்டி பாலாஜி சில கேள்விகளைக் கேட்டிருந்தார்.

சர்வதேச பிரச்னைகளில் இப்பொழுதைக்கு மிகவும் குழப்பமானது பாலஸ்தீன், இஸ்ரேல் பிரச்னை. இந்த பிரச்னை குறித்து பல்வேறு கருத்துகள் பல்வேறு நாட்டவரிடையே இருப்பது இயல்பு. அமைதி வழியில் இந்திய சுதந்திரப் போராட்டத்தை நடத்திச் சென்ற மோகனதாஸ் காந்தி மேலே கூட எக்கச்சக்கமான கேள்விகள் வைப்பது வழக்கம். அவர் ஒரு சர்வாதிகாரி என்பது அதில் ஒன்று. (காந்தி தன் கொள்கைகளை தன் சீடர்கள் மீது திணித்தார். ஆனால் கொள்கை ரீதியாக அவர்களை ஜெயித்துத்தான் திணித்தார்.) யாசர் அராபத்தும் சர்வாதிகாரியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறார். ஈழப்போராட்டத்தில் பிரபாகரனும் சர்வாதிகாரியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறார்.

இது எல்லா விடுதலைப்போராட்டங்களிலும் நடப்பதுதான். விடுதலை பெற, மக்கள் ஒன்று திரண்டு ஒருவர் கீழ் போராட வேண்டும். போராடும் குழுக்கள் பலவாகத் துண்டுபட்டால் ஆக்கிரமிப்பாளர்கள் ஒருவரை மற்றொருவருக்கு எதிராகத் தூண்டி விட்டு குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பார்கள். ஆனால் எந்த வழியில் தன் அணியை வலுப்படுத்துவது என்பது முக்கியம். காந்தி வன்முறையற்ற வழியில், தன் charisma மூலம் தன் வழிக்கு அனைவரையும் (பெரும்பான்மையினரைக்) கொண்டுவந்தார். அப்படியும் கூட சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்கள் பிரிந்து சென்றனர். கம்யூனிஸ்டுகள், இந்துத்துவ வாதிகள் ஆகியோர் தனித்தனியாக காந்தியை எதிர்த்தனர். பின் முஸ்லிம் லீக் அவருக்கு எதிராகச் சென்றது. அப்படியும் காந்தியின் பின்னால் கூட்டம் அதிகமாக இருந்ததால் பிரிட்டிஷ் அரசு காந்தியையே இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முக்கியத் தலைவராகக் கருதியது.

பிரபாகரன் வேறொரு வழியைப் பயன்படுத்தி தன் மக்கள் அனைவரும் தன்னைத் தவிர வேறு யாரையும் பின்பற்ற முடியாது செய்தார்.

அராபத் காந்தி அல்ல. வன்முறையை அவர் அடியோடு விட்டொழிக்கவில்லை. ஆனால் ஹமாஸ் போல முழுதும் வன்முறையைப் பின்பற்றவுமில்லை. இஸ்ரேலுடன் நிறைய சண்டை போட்டிருக்கிறார். சாகும் வரை இராணுவ உடையிலேயே இருந்தார். சர்வாதிகாரியாகத்தான், தனக்கு எந்தவிதப்போட்டியுமில்லாமல்தான் Palestine Liberation Organization-யும், பின் Palestinian Authority எனப்படும் இஸ்ரேல் கீழான பாலஸ்தீனியப் பிராந்தியத்தின் அதிபராகவும் நடந்துகொண்டார். ஆனால் கொடுங்கோலன்? ஆட்சி முழுதும் கையில் இருந்தால்தானே கொடுங்கோலனாக முடியும்? தன் மக்கள் இன்னமும் விடுதலை அடையாத நிலையில் யாரை அவர் கொடுங்கோலாட்சி செய்து துன்புறுத்தினார்? கடைசிவரை இஸ்ரேலின் குண்டுகள் தன்னைச் சுற்றியும் வெடிக்க, உடைந்து நொறுங்கிய கட்டடத்தில் ரமாலாவில் வாழ்ந்து வந்தார். மாட மாளிகையிலா வாசம் செய்தார்?

அவர்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. பணத்தை உருவி தான் கடைசிநாளில் மணம் செய்துகொண்டவருக்குக் கொடுத்துவிட்டார் என்று. இதில் உண்மை இருக்கலாம். பொதுவாழ்வில் இருக்கும் பலருக்கும் தனி வாழ்வில் சில சபலங்கள் உண்டு. ஆனால் அதே சமயம் அமெரிக்க, இஸ்ரேலி மீடியாக்கள் யாரைக் குறை சொல்ல வேண்டுமோ அவர் மீது பொய்ச்செய்திகளைப் பரப்புவதில் வல்லவர்கள் என்பதை இஸ்ரேலிய யூதப் பேராசிரியர் ஒருவரே சொல்கிறார்:

"But in Israel the public denigration of Arab culture was historically acceptable, since, like all colonial movements, Zionism had to dehumanise the indigenous inhabitants of its country of settlement in order to legitimise their displacement. Thus, as many studies have shown, depictions of the Arabs as conniving, dishonest, lazy, treacherous and murderous were commonplace in Israeli school textbooks, as in much of Israeli literature in general."

"அராபத் திருடன், எனவே அவனை நம்பாதே". சரி. அடுத்து பாலஸ்தீனியர்கள் யாரை நம்புவது? புஷ், பிளேர், ஷாரோன் யாரைச் சொல்கிறார்களோ அவரைத்தான் நம்ப வேண்டும். சரி. நம்பினால் நாடு கிடைக்குமா? பார்க்கலாம்.

நான் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் சட்டவிரோதமாகப் பிடித்து வைத்துள்ளது என்று எழுதியிருந்தேன். அதற்கு பாலாஜி "இது குறித்து விபரமாக எழுதினால் (அல்லது இணையத் தொகுப்பு கிடைத்தால்) கொடுக்க வேண்டும், பத்ரி. இஸ்ரேலை ஏன் அண்டை நாடுகள் படையெடுத்தது; தற்காப்புக்காக பாலஸ்தீனம் இஸ்ரேல் வசம் இருக்கிறதா; தற்போது ஷரோன் ஆரம்பித்திருக்கும் 'withdrawal' (a word he avoids) ஆகியவற்றின் பின்னணியில் விளக்கினால் எனக்கு(ம்) ரொம்பப் பயனுள்ளதாக இருக்கும்."

விவரமாக எழுத இந்த இடம் பத்தாது. எனக்குத் தெரிந்ததை வைத்து சில விஷயங்கள் சொல்கிறேன்.

1. பாலஸ்தீனியர்களை அக்கம்பக்கத்தில் உள்ள அரபு நாடுகளோடு இணைத்துப் பார்க்கக்கூடாது. 1940களில் பாலஸ்தீனியர்களுக்கு என்று சரியான தலைமை கிடையாது. 1947இல் பிரிட்டன், ஐ.நா சபையில் இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று இரண்டு பாகங்களாகப் பிரித்து விடுவதாகச் சொன்னது. இந்தத் திட்டத்துக்கு அமெரிக்காவும் ஆதரவு கொடுத்தது. இந்தியா, பாகிஸ்தான் பிரிவினைபோதாவது இந்தப்பக்கம் நேரு, அந்தப்பக்கம் ஜின்னா என்று யார் கையிலாவது நிர்வாகத்தைக் கொடுக்க முடிந்தது. இரண்டு பக்கமும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இருந்து உதவி செய்தனர். இஸ்ரேலுக்கு டேவிட் பென்-குரியன் தலைவராக இருந்தார். பாலஸ்தீனத்துக்கென்று ஒரு தலைவரும் இல்லை. பிரிட்டிஷ்காரர்கள் 1948இல் இடத்தைக் காலி செய்ததும் இஸ்ரேல் தன் சுதந்திரத்தை அறிவித்தது. அப்பொழுது ஜோர்டான், சிரியா, ஈராக், எகிப்து, லெபனான் ஆகிய நாடுகளும், பாலஸ்தீனியர்களும் ஒட்டுமொத்தமாக இஸ்ரேல் மீது படையெடுத்தனர். இதைப் போன்ற முட்டாள்தனமான செயல் ஏதும் இருந்திருக்க முடியாது. ஆனால் இதற்கான முழு தண்டனையைப் பெற்றதோ பாலஸ்தீனியர்கள்.

இந்த சண்டையின்போது பிரிட்டன் ஜோர்டானை பாலஸ்தீனியர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களையும் கையகப்படுத்தத் தூண்டியது. ஜோர்டானும் அதை சரியாகச் செய்தது. சண்டை முடிந்தபோது ஈராக் தன் கையில் இருந்த பாலஸ்தீனிய இடங்களையும் ஜோர்டான் கையில் கொடுத்து விட்டது. சிரியா, எகிப்து, ஜோர்டான், லெபனான் ஆகியவை சண்டையை முடித்துக்கொண்டு இஸ்ரேலுடன் சமாதானம் செய்து கொண்டன. இஸ்ரேல் தான் கைப்பற்றிய பாலஸ்தீனியப் பகுதிகளை தன் கையில் பத்திரமாக வைத்துக் கொண்டது. ஆக நடுவில் மாட்டிக்கொண்டது பாலஸ்தீனியர்கள்தான். அவர்களது நிலம் பாதி இஸ்ரேலிடமும், மீதி ஜோர்டானிடமும் மாட்டிக்கொண்டது.

சரி, சுற்றியுள்ள அரபு நாடுகள் பாலஸ்தீனியர்களுக்கு என்ன உதவி செய்தன? ஒன்றும் இல்லை. சிரியா பாலஸ்தீனியர்களை அகதிகளாகவே வைத்துக் கொண்டது. எகிப்திலும் அகதி முகாம்கள் மட்டும்தான்.

1967இல் மீண்டும் ஜோர்டான், சிரியா, எகிப்து ஆகியவை இஸ்ரேலிடம் வம்புக்குச் சென்றன. முதலில் இஸ்ரேல் எகிப்து, சிரியா மீது படையெடுத்து அவர்களது இடங்களைக் கைப்பற்றியது. காஸா எகிப்திடமிருந்து கைப்பற்றப்பட்டது. சிரியாவிடமிருந்து சினாய். ஜோர்டான் இஸ்ரேல் மீது படையெடுத்து, வெஸ்ட் பேங்க் பகுதியையும், ஜெருசலேம் நகரின் பகுதிகளையும் இழந்தது. ஆக இப்படித்தான் ஜோர்டான், எகிப்து கையில் இருந்த சில பாலஸ்தீனியப் பகுதிகள் இஸ்ரேல் கைக்கு வந்தது.

1970இல் ஜோர்டானில் பாலஸ்தீனியப் போராளிகள் சில குழப்பங்கள் விளைவிக்க (சில விமானங்களைக் கைப்பற்றினர்), ஜோர்டான் அரசர், பாகிஸ்தானின் ஜியா-உல்-ஹக் (அப்பொழுது வெறும் இராணுவத் தளபதிதான்) தலைமையில் பாலஸ்தீனியர்களை உதைத்துத் துரத்தி அராபத்தை நாடுகடத்தினர் (கறுப்பு செப்டெம்பர்).

ஆக பாலஸ்தீனியர்களின் பெரும் சாபக்கேடு சுற்றியுள்ள ஒன்றுக்கும் உதவாத அரபு நாடுகளான ஜோர்டான், எகிப்து, சிரியா, ஈராக். ஜோர்டானிலிருந்து ஓடிவந்த பாலஸ்தீனியர்கள் லெபனான் சென்றனர். அங்கிருந்து இஸ்ரேலுக்கு பிரச்னை கொடுக்கத் தொடங்கியதும் இஸ்ரேல் லெபனானை ஒட்டுமொத்தமாக சீரழித்தது!

இன்றெல்லாம், பாலஸ்தீன பிரச்னை என்றால் அது வெஸ்ட் பேங்க், காஸா என்றுதான் நமக்குத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் ஜோர்டான் கையிலும் பாலஸ்தீன இடங்கள் உள்ளன. பாலஸ்தீன அகதிகள் லெபனான், சிரியா, எகிப்து ஆகிய நாடுகளில் உள்ளனர்.

அராபத் என்று ஒருவர் வரும் வரையில் பாலஸ்தீனியர்களுக்கு சரியான தலைமை இல்லை. பாலஸ்தீனியர்கள் நலனுக்காக சுற்றியுள்ள அரபு நாடுகள் உருப்படியாக ஒன்றுமே செய்ததில்லை. அரபி நாடுகள் யூத எதிர்ப்பாளர்களாகவும், அதே சமயம் தேவைப்படும்போது இஸ்ரேலுடன் உறவு வைத்துக்கொண்டும், அரசியல் காரணங்களுக்காக பாலஸ்தீன் பிரச்னைக்கு விடிவுகாண வேண்டும் என்று அவ்வப்போது மேடையிலிருந்து பேசியும் தங்கள் மனசாட்சியை சுத்தமாக வைத்துக்கொண்டிருக்கின்றன. 1948, 1967இல் இந்த சுற்றி உள்ள அரபி நாடுகள் இஸ்ரேலுடன் சண்டைக்குப் போயிருக்காவிட்டால் பாலஸ்தீனியர்கள் இன்று அமைதியான முறையில் தம் நாட்டில் இருந்திருக்கலாம்.

யாசர் அராபத் பல தவறுகளைச் செய்துள்ளார். அதில் முக்கியமானது வளைகுடாப் போரின்போது சதாம் ஹுசேனுக்கு முழு ஆதரவைக் கொடுத்தது. வாயைப் பொத்திக்கொண்டு பேசாமல் இருந்திருக்கலாம்.

2. Palestine Liberation Army என்பது அராபத் தலைமையில் இயங்கிய Palestine Liberation Organizationஇன் படை. சண்டை போட்டு, பல இஸ்ரேலிகளைக் கொன்றுள்ளனர். ஆனால் ஹமாஸ் என்பது அராபத் தீவிரமாக யூதர்களைக் கொல்வதில்லை என்பதனால் தனியாகச் செயல்படும் தீவிரவாத அமைப்பு. அமைதியில் அவர்களுக்கு விருப்பம் எதுவும் இருப்பதாகத் தெரிவதில்லை. இஸ்ரேலை ஒழிப்பதுதான் அவர்களது நிலை. ஹமாஸை அராபத்தின் கைக்கூலிகள் என்று சொல்வது நியாயமாகாது என்பது என் கருத்து. பலமுறை அராபத் - யிட்சாக் ரேபின் இருவருக்குமிடையே நடந்த அமைதி ஒப்பந்தத்தை அழிக்கும் முகமாக பல செயல்களை ஹமாஸ் செய்துள்ளது.

3. இஸ்ரேல் தற்காப்புக்காக பாலஸ்தீனை தன் கையில் வைத்திருக்கிறது என்று சொல்வது பெரிய ஜோக். அமெரிக்கா கூட தன் தற்காப்புக்காகத்தான் ஈராக்கை தன் கையில் வைத்துள்ளது போலும். இந்தியா தன் தற்காப்புக்காக அடுத்து இலங்கை, நேபாள், பங்களாதேஷ், பாகிஸ்தான் ... ம்ஹூம், அந்த அளவுக்கு இந்தியாவிடம் இராணுவ பலம் இல்லை. தற்காப்புக்குச் சிறந்த வழி பாலஸ்தீனிய இடங்களிலிருந்து விலகுவது, தன் எல்லைக்குள் கண்காணிப்புகளைத் தீவிரமாக வைத்திருப்பது. ஆனால் இஸ்ரேல் வலதுசாரி யூத அமைப்புகள் அபகரிக்கப்பட்ட பாலஸ்தீனிய இடங்களில் யூதக் குடியிருப்புகளைக் கட்ட முயற்சிக்கின்றன. காஸா பட்டையிலும் இதுதான் நடக்கிறது. வெஸ்ட் பேங்க் பகுதியிலும் பாலஸ்தீனியர்களைத் துரத்தி விட்டு யூதக் குடியிருப்புகளைக் கட்டவே பல யூத அமைப்புகள் விரும்புகின்றன. இப்பொழுது காஸா பகுதியிலிருந்து இஸ்ரேல் பின்வாங்குவதை பல யூத அமைப்புகள் எதிர்க்கின்றன. யிட்சாக் ரேபின், அராபத்திடம் அமைதி ஒப்பந்தம் செய்த காரணத்துக்காகவே யிகால் அமீர் என்னும் யூத வெறியனால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாளை ஷாரோன் முழுதுமாக பாலஸ்தீனியப் பகுதிகளிலிருந்து பின்வாங்கினால் அவருக்கும் கண்டம்தான். யாரிடமிருந்து வரும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை.

4. புஷ், பிளேர் அராபத் செத்தபின் பாயசம் வைத்துச் சாப்பிட்டது. இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? இருவரும் இஸ்ரேல் நண்பர்கள். ஆனால் அதே சமயம் பாலஸ்தீன் ரோட்மேப் என்று 9/11க்குப் பின் அதிகமாகவே பேசுகிறார்கள். ஆனால் இந்த 'ரோட்மேப்'பில் இஸ்ரேல் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் பாலஸ்தீனியப் பகுதிகளிலிருந்து பின்வாங்கும் என்று தெரிகிறது. அராபத் இதனை எதிர்த்தார். 1947 ஐ.நா போட்ட கோடுதான் வேண்டும் என்றார். ஆனால் இஸ்ரேல் அந்த நிலையிலிருந்து மாறிவிட்டது. 1948இல் சண்டை நடந்த காரணத்தால் 1947 ஐ.நா திட்டம் கிடப்பில் போடப்படவேண்டியது என்பது இஸ்ரேல் கருத்து. மேலும், 1948இல் பாலஸ்தீனிய இடங்கள் பலவும் ஜோர்டான் கையில். எனவே எப்படியானாலும் பாலஸ்தீனியர்களுக்கு 1947 ஐ.நா திட்டத்தை விடக் குறைந்த இடங்களே கிடைக்கப்போகின்றன. அதிலும் அடிப்படைவாத யூத அமைப்புகள் என்ன குழப்பம் செய்யுமோ.

ஆனாலும் பாலஸ்தீனத்தில் ஏதோவொரு விதத்தில் அமைதி ஒப்பந்தம் ஒன்று கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் அமெரிக்காவுக்கு (அதனால் அதன் அடிவருடி பிரிட்டனுக்கும்) எப்பொழுதுமே சில தீவிரவாத அமைப்புகளால் ஆபத்து என்பது புஷ், பிளேர் இருவருக்கும் தெரியும். ஆனால் அராபத் முழுவதுமாக விரும்பும் ஒரு தீர்வை இஸ்ரேல் இனி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. அமெரிக்காவின் பல முக்கிய யூத அமைப்புகளும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இஸ்ரேல் என்பது ஒரு தலைவர் சார்ந்ததில்லை. ஆனால் பாலஸ்தீனியர்கள் அப்படியில்லை. அராபத்தை ஒதுக்கிவிட்டால் அடுத்த தலைமுறைத் தலைவர் ஒருவரை சாம, தான, பேத, தண்டம் என்று ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி சுமாரான ஒரு திட்டத்தில் கையெழுத்து வாங்கி நோபல் பரிசும் வாங்கிவிடலாம். அதனால்தான் அராபத் போன உடனேயே "இனி பாலஸ்தீனத்துக்கு விடிவு வந்துவிடும்" என்று புஷ், பிளேர் இருவரும் சந்தோஷப்பட்டிருக்கிறார்கள்.

பார்க்கலாம்.

11 comments:

  1. நன்றி பத்ரி அவர்களே,ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான குரலை எழுப்புபவரும் சரி அதற்காக ஆயுதம் தாங்கியோ வேறு வழியிலோ போராடுபவர்களோ சரி இன்னொரு சாரி மக்களால் எப்போதும் விமர்சிக்கப்பட்டே வந்துள்ளனர்.
    அகிம்சை வழியைப் பின்பற்றிய காந்தி கூட விமர்சனத்துக்குத் தப்பவில்லை.

    காந்திக்கே வன்முறையில் தான் பதில் எனும் போது தங்கள் பாதுகாப்புக்காக விடுதலைப்போராளிகளின் தலைவர்கள் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிகிறார்கள் என்பது நியாயமாகத் தான் படுகிறது.கூடவே அடக்குமுறை அரசாங்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படும்போதும்.வன்முறை என விமர்சிக்கப்பட்டாலும் அதுவே தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றது.

    இப்படியான வன்முறையாளன்,கொலைகாரன்,ஆயுதப்போராட்டத்தில் நாட்டம் கொண்ட மனநோயாளி எனும் பட்டங்கள் அரபாத்துக்கு மட்டுமல்ல,ஹோசிமின்,சேகுவேரா,போன்றோருக்கும் கிடைத்திருக்கிறது

    உங்கள் விளக்கத்திற்கு நன்றி

    ReplyDelete
  2. நன்றி பத்ரி அவர்களே,ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான குரலை எழுப்புபவரும் சரி அதற்காக ஆயுதம் தாங்கியோ வேறு வழியிலோ போராடுபவர்களோ சரி இன்னொரு சாரி மக்களால் எப்போதும் விமர்சிக்கப்பட்டே வந்துள்ளனர்.
    அகிம்சை வழியைப் பின்பற்றிய காந்தி கூட விமர்சனத்துக்குத் தப்பவில்லை.

    காந்திக்கே வன்முறையில் தான் பதில் எனும் போது தங்கள் பாதுகாப்புக்காக விடுதலைப்போராளிகளின் தலைவர்கள் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிகிறார்கள் என்பது நியாயமாகத் தான் படுகிறது.கூடவே அடக்குமுறை அரசாங்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படும்போதும்.வன்முறை என விமர்சிக்கப்பட்டாலும் அதுவே தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றது.

    இப்படியான வன்முறையாளன்,கொலைகாரன்,ஆயுதப்போராட்டத்தில் நாட்டம் கொண்ட மனநோயாளி எனும் பட்டங்கள் அரபாத்துக்கு மட்டுமல்ல,ஹோசிமின்,சேகுவேரா,போன்றோருக்கும் கிடைத்திருக்கிறது

    உங்கள் விளக்கத்திற்கு நன்றி

    ReplyDelete
  3. நன்றி பத்ரி அவர்களே,ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக்கான குரலை எழுப்புபவரும் சரி அதற்காக ஆயுதம் தாங்கியோ வேறு வழியிலோ போராடுபவர்களோ சரி இன்னொரு சாரி மக்களால் எப்போதும் விமர்சிக்கப்பட்டே வந்துள்ளனர்.
    அகிம்சை வழியைப் பின்பற்றிய காந்தி கூட விமர்சனத்துக்குத் தப்பவில்லை.

    காந்திக்கே வன்முறையில் தான் பதில் எனும் போது தங்கள் பாதுகாப்புக்காக விடுதலைப்போராளிகளின் தலைவர்கள் இறுக்கமான கட்டுப்பாடுகளை விதிகிறார்கள் என்பது நியாயமாகத் தான் படுகிறது.கூடவே அடக்குமுறை அரசாங்கத்தின் பயங்கரவாதச் செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படும்போதும்.வன்முறை என விமர்சிக்கப்பட்டாலும் அதுவே தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றது.

    இப்படியான வன்முறையாளன்,கொலைகாரன்,ஆயுதப்போராட்டத்தில் நாட்டம் கொண்ட மனநோயாளி எனும் பட்டங்கள் அரபாத்துக்கு மட்டுமல்ல,ஹோசிமின்,சேகுவேரா,போன்றோருக்கும் கிடைத்திருக்கிறது

    உங்கள் விளக்கத்திற்கு நன்றி

    ReplyDelete
  4. பத்ரி, பாலஸ்தீன பிரச்சனையை நன்றாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றீர்கள். இப்பிரச்சனை பற்றி அதிகம் எழுத்த, பேசப் பட்டிருப்பினும், அறியாமையே ஓங்கி நிட்கின்றது. சிலருக்கு இது கேட்டு, கேட்டு புளித்த கதை.

    சில திருத்தங்கள்:

    1) 1967-ல் நடந்த ஏழு நாள் போரில் சிரியா இழந்தது சினாயை அல்ல. கோலான் உயர்பரப்பை (Golan Heights). சினாயை இழந்தது எகிப்து. அதனை, பின்னர் 1978-ல் -- அன்றைய அமெரிக்க அதிபர் கார்டர் தலைமையில் நடந்த கேம்ப் டேவிட் உடம்படிக்கையின் வழி -- மீண்டும் பெற்றது. அதற்காக எகிப்தின் அதிபர் அன்வர் சாடாட் சுட்டு வீழ்த்தப்பட்டார்.
    சுட்டி: http://www.jimmycarterlibrary.org/documents/campdavid/index.phtml

    2) அராபாத் நீங்கள் கூறுவது போல் 1947-ல் ஐ.நா. போட்ட எல்லையைப் பற்றிப் பேசவில்லை. அவரும், இப்பிரச்சனையில் ஈடுபட்டுள்ள மற்றவர்களும் பேசுவது, 1967-ன் எல்லயினையே ஆகும். இவ்வெல்லையைப் பொதுவாக பச்சைக் கோடு (Green Line) என்பர். ஐ.நா.வின் UNSC Res 242-ன் அடிப்படையில் இக்கோடு 'நிர்னயிக்கப்பட்டது'. சுட்டி: http://www.jewishvirtuallibrary.org/jsource/UN/unres242.html

    தற்பொழுது இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கும் அதற்கும் இடையில் ஒரு தடுப்புச் சுவரைக் கட்டி வருவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். பாதுகாப்பிற்காக என்று கூறப்படுகின்றது. அப்படி இச்சுவர் அந்த பச்சைக் கோட்டிலோ, அதனை ஒட்டியோ கட்டப்பட்டிருந்தால் அவ்விளக்கத்தை ஏற்கலாம். உண்மையோ முற்றிலும் வேறு; கொடுமையாதும் கூட. சுட்டி: http://www.btselem.org/english/separation_barrier/Index.asp

    இறுதியாக இரண்டு விடயங்கள். இவை இரண்டுதான் (எனக்குத் தெரிந்தவரை) அமைதிக்குத் தடைக்கற்களாக விளங்குகின்றன.

    ஒன்று, நீங்கள் குறிப்பிட்டது போல பாலஸ்தீனத்தில் அமந்துள்ள யூத குடியிருப்புகள். 1993-ல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் ஒரு தற்காலிக அமைதி ஏற்பட்ட போது, சுமார் ஒரு இலட்சம் யூதர்கள் பாலஸ்தீனத்தில் சட்டவிரோதமாக குடியேறியிருந்தனர். இன்று அவர்களின் தொகை 250,000-க்கும் மேல் அதிகரித்துள்ளது. வலதுசாரிகளான இவர்களின் அரசியல் பலமும் கடந்த பத்து ஆண்டுகளில் அதீத வளர்ச்சி கண்டுள்ளது. நெத்தன்யாஹு போன்ற இனவாதத் தலைவர்கள் இக்கும்பலை மையமாக வைத்து அரசியல் நடத்துகின்றனர்.

    இரண்டு, பாலஸ்தீனர்களின் இல்லம் திரும்பும் (Right of Return issue) கோரிக்கை. 1947-48 போரின் போது இலட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் அகதிகளாக்கப்பட்டனர். இதனை இஸ்ரேல் இராணுவம் ஒரு கொள்கையாகவே மேற்கொண்டது. அனைத்துலக சட்டத்தின் கீழ் இவர்கள் மீண்டும் தங்கள் இல்லங்களுக்கு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும். சிக்கல் என்னவெனில், அவர்கள் அன்று வாழ்ந்த இடம் இன்று இஸ்ரேல். ஆகவே, அப்படி அவர்கள் அனைவருமே இல்லம் திரும்ப அனுமதிக்கப்பட்டால், இஸ்ரேல் தன் தனித்துவத்தை (அதாவாது யூத பெரும்பான்மையை) இழந்து விடும். இச்சிக்கலுக்கு தீர்வி காண முடியா நிலையிலேயே அமைதிக்காக 2001 ஜனவரியில் அதிபர் கிலிண்டன் மேற்கொண்ட கடைசி நேர முயற்சிகள் (last ditch efforts) தொல்வியைக் கண்டன.



    By: இளஞ்செழியன்

    ReplyDelete
  5. இளஞ்செழியன்: தவறுகளைத் திருத்தியதற்கு நன்றி. மேலும் நீங்கள் கொடுத்த சுட்டிகளைப் படித்து தெளிவடைய விரும்புகிறேன்.

    இஸ்ரேல் தன் நாட்டிற்குள் இனியும் வெளியேறிய பாலஸ்தீன அகதிகளைத் திரும்பப் பெறும் என்று நான் நினைக்கவில்லை. அது இஸ்ரேலுக்கும் நல்லதல்ல, பாலஸ்தீனியர்களுக்கும் நல்லதல்ல. வெஸ்ட் பேங்க் பகுதிகளில்தான் அவர்களைக் குடியேற்ற வேண்டியிருக்கும். ஜோர்டான் கைவசம் உள்ள சில பாலஸ்தீனப் பகுதிகளைத் திரும்பப் பெறுவதும் ஒரு வகையில் உதவும், ஆனால் அது வேறு ஒரு போராட்டம் ஆகிவிடும்.

    ReplyDelete
  6. நான் (இங்கே) தொடர்புள்ள எல்லாவற்றையும் முழுமையாய் படிக்கவில்லை. ஆனால் பிரச்சனை பற்றி ஒரு குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் பாஸ்டன் பாலாஜி எழுதியுள்ளது மிகவும் கண்டிக்கதக்கது. யாரும் *கண்டித்ததாய்* தெரியவில்லை. உதாரணமாய் பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்ரமித்துள்ளதா என்று வினவுவது. ஆதாரம் வேறி கேட்கிறார். அப்படி கேட்குமுன் கொஞ்சம் இணையத்தில் தேடி(அட ஒப்புகொள்ளவிட்டாலும் மற்று கருத்துகளை அறிந்து கொண்டு) இப்படி எல்லாம் கேட்ககூடாதா? (மற்றபடியும் அவர் செவிவழி கிடைத்த சில செய்திகளை மட்டும் வைத்து அவிழ்து விட்ட அபத்த களஞ்சியம் குறித்து பேச நேரமில்லை. இஅவர் எழுதியதை போல அச்சாக அப்படியே நான்கு கட்டுரைகளை இணையத்தில் பார்தேன். )

    நீங்கள் எதிர்வினை வைத்துள்ளது கொஞ்சம் நம்பிக்கை அளித்தாலும் முழு நியாயம் செய்ததாக சொல்லமுடியாது. இஸ்ரேல் தொடர்ந்து, துவக்கத்திலிருந்து செய்துவருவது மிக எளிதான விஷயம். வன்முறையின் மூலம் ஆகரமிப்பை செய்வது, பின்பு காலத்தின் இடைவெளியால் பல வழிமுறைகளில் (உலகின் மறதியும் அறியாமையும் அதில் முக்கியம்)அதை லெஜிடிமைஸ் செய்துகொள்வது. எந்த அளவிற்கு லெஜிடிமைஸ் செய்யமுடியும் என்பதை பாலாஜி மாதிரி ஒருவர் ரொம்ப நியாயமாய் ஒரு கட்டுரை என்று இதை எழுதியிருப்பதை பார்தாலே புரியும். இதைத்தான் இஸ்ரேல் தொடர்ந்து செய்துவருகிறது. அராஃபத்தே பழைய நிலமைக்கு போகமுடியாது என்றும் இஸ்ரேலை லெஜிடிமைஸ் செய்ததும் இப்படிதான். (பிரச்சனை குறித்து பேசும் யாருமே, 1950இன் நிலமைக்கு போகவேண்டும் என்று சொல்லவில்லை, சில அடிப்படை விஷயங்களை அக்னால்ட்ஜ் செய்யவேண்டும் எனப்துதான்.) அது தவிர போர்குற்றங்களாக இஸ்ரேல் செய்துள்ளது கணக்கில அடங்காதது. மிக துல்லியுமான அரசு வன்முறையை இஸ்ரேல் போல யாரும் பிரயொக்கித்திருக்க முடியாது. உதாரணமாய் ஹெலிகாப்படரிலிருந்து துல்லியமான நிர்ணயதுடன் குறிப்பிட்ட நபரின் வலது காலை மட்டும் எடுப்பது. காலை இழந்த நபர் பயங்கரத்தின்/பயதின் குறியீடாய் உலவ விடுவது. இன்றய ஏரியல் ஷாரனோ ஒரு கிராம மக்கள் முழுவதையும் காலிசெய்த போர்குற்றச்சாட்டு உடையவர், இது தவிர முக்கிய விஷயங்கள் இஸ்ரேல் தனது எல்லைக்குள் காட்டும் மிக தீவிரமான் பாகுபாடுகள். உதாரணமாய் மொத்த தண்ணீர் சப்ளை தொடங்கி எல்லாவற்ரையும் யூத பகுதிகளுக்கே அளித்து கொள்வதே. சொல்லிகொண்டே போகலாம். பக்கம் பக்கமாய் எழுதால், எழுதபட்டிருக்கிறது. இணையத்தில், உதாரணமாய் Znetலேயே வண்டி வண்டியாய் உள்ளது. இதெல்லாம் துங்கி கொண்டிருப்பவரை எழுப்ப சொல்லலாம். இங்கே விரல் சொடுக்கில் இத்தனை விஷயங்களும் உள்ளது-ஆதாரத்துடன். ஆனால் அமேரிக்கா ஏதோ பாலதீனத்திற்கு அள்ளி கொடுப்பதாக கட்டுரை எழுதுபவரை முன்வைத்து இதில் எதை பேசமுடியும். (ஈராக், ஆஃப்கானிஸ்தானுக்கு கூட அள்ளி கொடுக்கவில்லையா?)

    இது குறித்து விரிவாய் எழுதும் நோக்கம் எனக்கு உண்டு. அதற்குள் இந்த பிரச்சனை தீரபோவதில்லை. உடனடியாய் எழுதியும் இங்கே யாருக்கும் எதுவும் புரியபோவதில்லை. அதனால் அவசரப்படாமல் பிறகு பார்கலாம்.

    ReplyDelete
  7. பழைய கதையை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு,அண்மைய கால நிகழ்வுகள் எனப் பார்த்தால்: ஃபராக் இஸ்ரேலிய பிரதமராய் இருந்த போது,கிளிண்டன் கொண்டு வந்த சமாதான-விட்டு கொடுத்தல் திட்டம் ரீசனபிள்(த?) ஆக இருந்தது.தொடர்ந்து 8/9 நாட்கள் அராபத்-ஃபராக் இருவரையும் பேச வைத்தார் என்று ஞாபகம்..
    முட்டாற்தனமாக அதனை தோல்வியுற செய்ததின் பெரும்பங்கு அரபாத்தை சாரும்..சொல்லப் போனால் மறைமுகமாக எரியேல் ஷரோன் திரும்ப பதவிக்கு வருவதற்கு அராபத்தின் சரியாக சிந்திக்க இயலாமை பெரிதும் உதவியது.

    ஒரு தனி பாலஸ்தீனிய நாடு உருவாக வேண்டும் என்று முதலில் சுற்றி வளைக்காமல் சொன்ன அமேரிக்க அதிபர் புஷ் 43 தான்..

    இன்றைய நாளிதழில்,எல்லே.டைம்ஸ் கட்டுரையாளர் ஏரிக் உவினர், அராபத் மண்டையைப் போடுவதற்கு சில நாட்களுக்கு முன் அவரை சந்தித்த அருண் காந்தி மற்றும்,பாலஸ்தீனியர்கள் எப்படி தங்களது கொடூர வழிகளை மாற்றி அருணின் தாத்தா பின்பற்றிய வழிகளை பின்பற்ற வேண்டும் என்பது பற்றி எழுதியிருந்தார்,,எல்லே டைம்ஸ் ல் பதிவு செய்து படிக்கலாம்

    By: vassan

    ReplyDelete
  8. பத்ரி
    விளக்கமாக எடுத்து சொன்னதற்கு நன்றி.
    உமா

    By: Uma

    ReplyDelete
  9. நவீன இஸ் ரேல் உருவாகிய கதையை லியோன் யூரிஸ்-இன் Exodus எனும் நாவல் மிக அருமையா சொல்கிறது.



    By: vasee

    ReplyDelete
  10. ஒரு விஷயத்தை யாருமே கூறவில்லை. பாலஸ்தீனத்தை 1948-ல் இரண்டாகப் பிரிக்கும் தீர்மானம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா ஆதரித்தது. சரி. பிரிட்டன் நடு நிலைமை வகித்தது. சோவியத் யூனியன் மற்றும் அதைச் சார்ந்த நாடுகளும் ஆதரித்தன. இந்தியா எதிர்த்தது. இது யாருக்காவது நினைவிருக்கிறதா?
    இறந்த மொழியெனக் கருதப்பட்ட ஹீப்ரூ பீனிக்ஸ் பறவைப்போல் உயிர்ப் பெற்று எழுந்தது. பாலைவனத்தை சோலைவனம் ஆகியது இஸ்ரேலியர். தேவையில்லாமல் இந்தியா இஸ்ரேலிய எதிர்ப்பு நிலையெடுதது துரதிர்ஷ்டவசமே.
    1967 முதலிலிருந்தே இந்த விவகாரத்தைப் பத்திரிகைகளில் நேரடியாகப் படித்து வருபவன் நான்.

    By: Dondu

    ReplyDelete
  11. a interesting book to read ...

    O JERUSALEM
    by Larry Collins, Dominique Lapierre

    ReplyDelete