Thursday, June 26, 2008

நாயும் குருவியும்

Grimm's Fairy Tales என்ற புத்தகத்திலிருந்து தினமும் என் பெண்ணுக்குக் கதைகள் சொல்லி வருகிறேன். எல்லாக் கதைகளும் ‘சிறுவர்களுக்கு உகந்தது' என்று சொல்லமுடியாது. நிறைய வன்முறைகள் கொண்ட கதைகளும் உள்ளன.

இந்தக் கதைகளின் சுருக்கமான வடிவத்தை அவ்வப்போது எழுதலாம் என்று உத்தேசம். இன்று படித்துக்காட்டிய கதையின் சுருங்கிய தமிழ் வடிவம் இதோ:

***

ஓர் ஆட்டிடையனிடம் நாய் ஒன்று இருந்தது. ஆனால் அந்த இடையன் அந்த நாயைச் சரியாகப் பராமரிக்கவில்லை. பல நாள்கள் அதனைப் பசியால் துடிக்க விட்டுவிடுவான். தாங்கமுடியாத நாய் ஒரு நாள் அவனிடமிருந்து தப்பித்து ஓடியது.

வழியில் அந்த நாயைக் கண்ட குருவி ஒன்று ‘ஏன் சோகமாக இருக்கிறாய்?' என்று கேட்டது. சாப்பிட உணவில்லாததால்தான் என்று பதில் சொன்னது நாய். ‘அவ்வளவுதானே? வா, நான் உனக்கு உணவு தருகிறேன்' என்றது குருவி.

குருவி நாயை ஓர் இறைச்சிக் கடைக்கு அழைத்துச் சென்றது. உள்ளே நுழைந்து, யாரும் பார்க்காதபோது ஒரு துண்டு இறைச்சியைக் கொத்திக் கொத்திக் கீழே தள்ளியது. நாய் அதைக் கவ்வி சாப்பிட்டது. நாய்க்கு மேலும் பசி இருந்ததால் அங்கிருந்து இன்னொரு கடைக்குச் சென்று இதேபோல இறைச்சித் துண்டை எடுத்துக்கொடுத்தது. நாய் அடுத்து கொஞ்சம் பிரெட் வேண்டும் என்றது. குருவி அங்கிருந்து ஒரு பேக்கரிக்குச் சென்று வாயால் கொத்திக் கொத்தி இரண்டு பிரெட் துண்டங்களைக் கீழே தள்ளியது. நாயும் அதனைச் சாப்பிட்டது. மேலும் பிரெட் வேண்டும் என்று கெட்டதால் இன்னொரு கடைக்குச் சென்று அதேபோல பிரெட் எடுத்துக் கொடுத்தது.

நன்கு வயிறு நிரம்பிய நாய், குருவியுடன் நடந்து சென்றது. நாய்க்கு அசதியாக இருந்ததால் அங்கேயே தூங்க விரும்பியது. நெடுஞ்சாலையில் படுத்துக்கொண்டது. குருவியும் பக்கத்தில் ஒரு கிளையில் உட்கார்ந்துகொண்டது.

அப்போது மூன்று குதிரைகள் பூட்டிய ஒரு வண்டியில் மது நிரம்பிய பீப்பாய்கள் இரண்டை வைத்துக்கொண்டு ஒரு வண்டியோட்டி வந்துகொண்டிருந்தான். அந்த வண்டி, நாய் இருந்த பக்கம் சென்றது. குருவி உடனே வண்டிக்காரனை அந்தப் பக்கம் போகவேண்டாம் என்று எச்சரித்தது. ஆனால் வண்டிக்காரன் கேட்கவில்லை. குருவியை கேலி செய்தபடியே வண்டியை ஓட்டிக்கொண்டு சென்று நாயின்மீது ஏற்றிக் கொன்றுவிட்டான்.

குருவிக்குக் கடுமையான கோபம் வந்தது. ‘என் ஒரே நண்பனைக் கொன்றுவிட்டாய்! இப்போது நான் உன்னை அழிக்கப்போகிறேன்' என்றது. வண்டிக்காரன் அலட்சியமாக வண்டியை ஓட்டிக்கொண்டு கிளம்பினான்.

குருவி பறந்துசென்று வண்டியின் பின்புறம் ஏறிக்கொண்டது. வண்டிக்காரனுக்குத் தெரியாமல் மது நிரம்பிய பீப்பாயை அலகால் கொத்தி பொத்தல் போட்டது. மது கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே கொட்டி, அந்தப் பீப்பாய் காலியானது. இதனைக் கவனித்த வண்டிக்காரன், ‘அய்யோ, என்ன துரதிர்ஷ்டம், என் பீப்பாய் மது வீணாகப் போய்விட்டதே!' என்றான். ‘இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கேன், முடியும்போது பார், உனக்கு என்ன ஆகும்' என்றது குருவி. வண்டிக்காரன் வண்டியை நிறுத்திவிட்டு குருவியைத் துரத்த ஓடினான்.

அதற்குள் குருவி வண்டியின் முன்பக்கம் வந்து ஒரு குதிரையின்மீது ஏறி அதனைக் கொத்தத் தொடங்கியது. இதனால் மிரண்ட குதிரை அங்கும் இங்குமாக வண்டியை அலைக்கழித்தது. வண்டிக்காரன் குருவியை நோக்கி தன் கையிலிருந்து கத்தியை எறிந்தான். குருவி சரியான நேரத்தில் பறந்துவிட, கத்தி குதிரையைக் குத்தி அதன் உயிரை எடுத்தது. ‘அய்யோ, என்ன துரதிர்ஷ்டம்!' என்று புலம்பினான் வண்டிக்காரன். ‘இன்னும் நிறைய வரும்!' என்றது குருவி.

மிச்சமுள்ள இரண்டு குதிரைகளைக் கொண்டு வண்டியைச் செலுத்த ஆரம்பித்தான் வண்டிக்காரன். குருவி மீண்டும் பின்பக்கம் சென்று இரண்டாவது பீப்பாயையும் ஓட்டை போட்டு அந்த மதுவையும் நாசம் செய்தது. வண்டிக்காரன் துரத்திக்கொண்டுவரும்போது முன் பக்கம் வந்து இரண்டாவது குதிரைமீது உட்கார்ந்து அதனைக் கொத்தத் தொடங்கியது. வண்டிக்காரன் கத்தியை எறிய, அப்பொதும் குருவி தப்பித்தது; குதிரை செத்தது. மூன்றாவது குதிரையும் இப்படியே செத்துப்போனது.

கொண்டுவந்த மது, மூன்று குதிரைகள் என அனைத்தையும் இழந்த வண்டிக்காரன் கோபத்தோடு வீட்டை நோக்கி நடந்துசெல்ல ஆரம்பித்தான். குருவி வீட்டிலும் அவனுக்கு நாசத்தை உண்டுபண்ணுவதாகச் சொல்லிவிட்டுப் பறந்துசென்றது.

வீட்டை அடைந்த வண்டிக்காரன் தன் மனைவியிடம் நடந்ததைச் சொன்னான். அவள், ‘ஓ, அந்தக் குருவியா? அது தன் கூட்டாளிப் பறவைகளுடன் வந்து வீட்டில் உள்ள சோளத்தையெல்லாம் கொத்தித் தின்கிறது', என்றாள். வண்டிக்காரன் துரத்த, குருவி கண்ணாடி ஜன்னலுக்கு வெளிப்புறம் போய் நின்றுகொண்டது.

கடும் கோபத்தில் இருந்த வண்டிக்காரன் கையில் வைத்திருந்த கத்தியை குருவியை நோக்கி வீசி எறிந்தான். அது கண்ணாடியைச் சுக்கு நூறாக உடைத்தது. குருவி அந்த ஓட்டை வழியாக உள்ளே வந்து, ‘இப்போது நான் உன்னைக் கொல்லப்போகிறேன்' என்று சொல்லிவிட்டு அவனைக் கொத்தத்தொடங்கியது.

ஆனால் வண்டிக்காரன் அந்தக் குருவியைக் கையில் பிடித்துவிட்டான். மனைவியை அழைத்து, ‘கத்தி ஒன்றை எடுத்துவா, இதை இங்கேயே கொன்று அடுப்பில் வாட்டித் தின்றுவிடலாம்' என்றான். மனைவி ஓடிச்சென்று கத்தியைக் கொண்டுவந்தாள். வண்டிக்காரன் குருவியைப் பிடித்தபடி மனைவியிடம் கத்தியால் அதனை வெட்டச்சொன்னான். அதுவரை அமைதியாக இருந்த குருவி, அவள் கத்தியை ஓங்கும்போது படபடவென இறக்கைகளை அடித்தபடி வண்டிக்காரன் கைகளிலிருந்து விடுபட்டுத் தப்பியது. ஆனால் மனைவி வீசிய கத்தி, வண்டிக்காரனை வெட்டியது. அவன் அங்கேயே ரத்தம் கொட்டத் துடிதுடித்து இறந்தான்.

***

(கதை அவ்வளவுதான்!)

6 comments:

  1. குழந்தைகள் புத்தகத்திலும் 'பின்நவீனத்துவம்' கொண்டு வந்து விட்டார்களா?

    ஒரே இரத்த வாடை.

    ReplyDelete
  2. //குழந்தைகள் புத்தகத்திலும் 'பின்நவீனத்துவம்' கொண்டு வந்து விட்டார்களா? //

    பஞ்சதந்திரக் கதைகள், jack and the bean stack, சிண்ட்ரெல்லா, ஏழுநிறப் பூ, விக்கிரமாதித்தன் கதைகள், ஆஷா போன்ஸ்லேயின் ஆல்பத்தில் வரும் நீண்ட தலைமுடி கொண்ட பெண்ணும் அவள் காதலனும் போன்ற பல fantasy கதைகள் இம்மாதியான கூறுகளை நிறையவே கொண்டுதானிருக்கின்றன.

    நான் சிறுவயதில் படித்த சேவலும், இராஜாவும் கதை கிட்டத்தட்ட இப்படித்தான் இருக்கும். கடைசியில் இராஜாவின் கைக் கோடாலியே அவனைக் கொன்று விடும்.

    வன்முறை என்றெல்லாம் நாம் அதிகமாக கவலைப்படத் தேவையில்லை. நாம் படிக்கும் காலத்தில் இப்படி பல கதைகளை கேட்டேதான் வளர்ந்திருக்கிறோம். :-)

    ReplyDelete
  3. Hi Badri,
    My opinion is this story may not be suitable for children.Death of the dog,Tit for tot mentality of the bird,Violence all the way throught the story.If you continue to read this kind of stories to children,they may get a bad idea about this world in their subconcious mind which will harm their way to adulthood.
    Instead we can try to translate stories from our epics like mahabharatha,Ramayanam,zen stories,sufi stories,biographies of our leaders and tell our children.
    Best Wishes,
    Kannan Viswagandhi
    http://www.growing-self.blogspot.com

    ReplyDelete
  4. //Instead we can try to translate stories from our epics like mahabharatha,Ramayanam,//

    As if these don't have violence. What about Killing of sisubalan.

    And if you read such stories to children, it is going to increase adultery also

    ReplyDelete
  5. பத்ரி,
    உங்க பொண்ணுக்கு இந்த கதை பிடிச்சிருந்துதா?

    ReplyDelete
  6. சுவாமி: உண்மையைச் சொல்லப்போனால் இதுவரை நான் படித்துக்காட்டியுள்ள கதைகளில் சிலதான் சுவாரசியமாக இருப்பதாக அவள் சொன்னாள். மீதியெல்லாம் டப்பாக் கதைகளே. நாய்க்கதை பற்றிய அவளது கமெண்ட்: “ரொம்ப ஒன்னும் பிடிக்கலை.”

    ReplyDelete