முன்னெல்லாம் நம் நாட்டின் முக்கியமான அரசியல் தலைவர்கள் அனைவருமே தமது கருத்தை மேடைகளில் பேசுவது மட்டுமல்லாமல், பத்திரிகைகளிலும் ஆணித்தரமாக எழுதிவந்தார்கள். இந்த வழக்கம் இன்று அழிந்துபோயுள்ளது. இன்று கருணாநிதியைத் தவிர பிற தமிழக அரசியல் தலைவர்கள் யாரும் எழுதுவதேயில்லை. ஜெயலலிதா தனது அரசியல் கருத்துகளை நமது எம்.ஜி.ஆரில் கூட எழுதுவதில்லை. வைகோ ஏதவது கட்சிப் பத்திரிகையில் எழுதுகிறாரா என்று தெரியவில்லை. வீரமணி தொடர்ச்சியாக திராவிடர் கழகப் பிரசுரங்களில் எழுது வருகிறார். திருமாவளவன் இந்தியா டுடே தமிழில் தொடர்ச்சியாக எழுதி வந்தார். ஆனால் பிறர் கொடுத்த நெருக்கடிகளால் இந்தியா டுடே திருமாவளவன் பத்தியை நிறுத்திவிட்டது என்கிறார் தலித் சிந்தனையாளர் ரவிக்குமார்.
மன்மோகன் சிங், ப.சிதம்பரம், சோனியா காந்தி, லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பாஸ்வான், மாயாவதி, லால் கிருஷ்ண அத்வானி, வாஜ்பாய் - இவர்கள் யாராவது தொடர்ச்சியாக எங்காவது பத்தி எழுதுகிறார்களா? சென்ற வருடம் ப.சிதம்பரம் கல்கியில் தொடர் கட்டுரைகள் எழுதினார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும் எழுத்தை நிறுத்தி விட்டார்.
காந்தி, நேரு, ராஜாஜி போன்ற பலரும் தமது எண்ணங்களை எழுத்தில் வடித்தவண்ணம் இருந்தனர். காந்தி, நேரு எழுதியவை இப்பொழுது அனைவருக்கும் கிடைக்கிறது. ஆனால் ராஜாஜி எழுதிய சக்ரவர்த்தித் திருமகன் போன்றவை தவிர வேறு எதுவும் கடைகளில் கிடைக்கவில்லை - போனவாரம் வரையில்.
ராஜாஜி ஸ்வராஜ்யா மற்றும் பிற இதழ்களில் எழுதியிருக்கும் ஆங்கிலக் கட்டுரைகள் தொகுப்புகளாக 1960களில் வெளிவந்தது. 1956-61 வரையிலானவை 1962-ல் இரண்டு தொகுதிகளாகவும், 1962-66 வரையிலானவை மற்றும் இரண்டு தொகுதிகளாகவும் வெளியாயின. அதற்குப்பின்னும் ராஜாஜி தன் இறுதி நாள் வரை எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவை இன்று வரை தொகுக்கப்படவில்லை. வெளியான நான்கு தொகுதிகளுமே மறுபதிப்பு காணாமல் இருந்துவந்தது.
இப்பொழுது சென்னையைச் சேர்ந்த உந்துனர் அறக்கட்டளை இந்த நான்கு தொகுதிகளையும் "சத்யம் ஏவ ஜயதே" என்ற பெயரில் மறு பதிப்பாகக் கொண்டுவந்துள்ளது (மலிவு விலையில்). முந்தைய பதிப்பிலிருந்து ஒரு மாறுதல் : ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கட்டுரைகள் காலவரிசைப்படி இல்லாமல் எடுத்தாளப்படும் விஷயங்களின் அடிப்படையில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் புத்தகம் வெளியிடும் விழா சென்ற வாரம் வெள்ளிக்கிழமை அன்று மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில் நடைபெற்றது. (கல்யாணத்தின் பேச்சை முடித்துக்கொண்டு நேராக அங்குதான் சென்றேன்.)
ஆந்திராவின் முன்னாள் ஆளுனர், ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் C.ரங்கராஜன் (ஆங்கிலத்தில்) சிறப்புரையாற்றினார். அந்த உரையில் ராஜாஜியின் பொருளாதாரக் கொள்கையைப் பற்றிப் பேசினார். ரங்கராஜன் புத்தகங்களை வெளியிட ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன் என்பவர் புத்தகங்களைப் பெற்றுக்கொண்டார். கேசவன் Rajiv Gandhi National Trust of Youth Development என்னும் அமைப்பின் Vice President என்று அறிமுகம் செய்தார்கள். இப்படி ஓர் அமைப்பு இருக்கிறதா, என்ன செய்கிறது என்று எனக்குத் தெரியாது. இது காங்கிரஸ் கட்சி சார்ந்த அமைப்பா இல்லையா என்று தெரியவில்லை. கூகிளில் தேடினால் ஒன்றும் கிடைக்கவில்லை. கேசவன் ஆங்கிலத்தில்தான் பேசினார். ஆனால் நடுநடுவே தமிழிலும் கொஞ்சம் பேசினார். நன்கு சரளமாகப் பேசுகிறார். அமெரிக்காவில் படித்துவிட்டு இந்தியாவுக்கு வந்து அரசியலிலும், சமூக சேவையிலும் ஈடுபடுவதாகச் சொன்னார். ராஜ்மோகன் காந்தி (ராஜாஜி, காந்தியின் பேரன்) எழுதிய ராஜாஜி வாழ்க்கை வரலாற்றைப் படித்ததும், அதனால் தூண்டப்பட்டு இந்தியா வந்ததாகச் சொன்னார். தமிழக காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கே உரித்தான வெள்ளைக் கதர்ச்சட்டை, வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். (படத்தைக் கீழே கடைசியில் இருக்கும் தி ஹிந்து செய்தியில் பார்த்துக்கொள்ளவும்.)
காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்டதற்குப் பிறகு ராஜாஜி வேதாரண்யம் உப்பு யாத்திரை மேற்கொண்டார். அப்பொழுது அந்த யாத்திரையில் கலந்துகொண்ட நூறு பேரில் ஒருவரான G.K.சுந்தரம் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். இவர் கோவை லக்ஷ்மி குழும நிறுவனங்களின் தலைவர் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.
இந்தப் புத்தகங்கள் வெளிவருவதற்குத் தேவையான பண உதவியைச் செய்த சிவநேசன் (முன்னாள் இ.ஆ.ப) பேசும்போது தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் படிக்குமாறு ராஜாஜியின் குறிப்பிட்ட சில கட்டுரைகளையாவது தமிழில் பெயர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விழாவின் கடைசியில் ராஜாஜி பற்றிய ஆவணப்படம் ஒன்று காண்பிக்கப்பட்டது. கிருஷ்ணசாமி அசோசியேட்ஸ் எடுத்த படம். முழுக்க முழுக்க ராஜாஜியைப் புகழ்ந்து மட்டுமே எடுக்கப்பட்ட ஆவணப்படம் இது. படம் முழுவதிலும் பெரியார் பற்றி ஒன்றுமே சொல்லப்படவில்லை. கடைசியில் ஒரேயொரு காட்சியில் பெரியார், ராஜாஜி இருவரும் கைகுலுக்குவது போல வந்தது. குலக்கல்வித் திட்டம், ஹிந்தித் திணிப்பு, பின் ராஜாஜியே திமுகவுடன் சேர்ந்து ஹிந்தித் திணிப்பை எதிர்த்தது, எதையெடுத்தாலும் சுர்ரென்று கோபம் கொண்டு பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருவது, தேர்தலில் நிற்க மறுத்தது, ராஜாஜிக்கும் பிற தமிழக காங்கிரஸ்காரர்களுக்குமான உறவு, பகை போன்ற எந்த விஷயங்களுமே இந்த ஆவணப்படத்தில் இல்லை.
ராஜாஜியின் வாழ்க்கை பற்றிய கறாரான வரலாறு ஒன்று வேண்டும். ராஜ்மோகன் காந்தியின் புத்தகம் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொன்னாலும் அதைப்பற்றி எந்த விமரிசனத்தையும் வைப்பதில்லை.
ராஜாஜியை இன்று அன்போடு நினைவுகூர்பவர்கள் தமிழகத்தில் உள்ள வயதான பார்ப்பனர்கள் மட்டுமே என்று தோன்றுகிறது. அதேபோல பிறர் அனைவருமே ராஜாஜியை ஏனென்று சொல்லாமல் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்றும் தோன்றுகிறது. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் ராஜாஜி என்ற பெயரே தங்கள் கட்சி வரலாற்றில் இல்லை என்பது போல நடந்துகொள்கிறார்கள். சுதந்தரா என்றொரு கட்சி இருந்தது என்பதற்கான எந்த அடையாளங்களும் இன்று இல்லை. Liberal Party of India என்றோர் அமைப்பு சில காலமாக மீண்டும் தழைக்க முற்படுகிறது.
ராஜாஜியின் இந்த நான்கு தொகுதிகளையும் இன்னமும் நான் படிக்க ஆரம்பிக்கவில்லை. மேலோட்டமாகப் பார்த்ததில் அப்படி ஒரேயடியாக மறுதலித்துவிட முடியாதவராகவே உள்ளார் ராஜாஜி என்றே தோன்றுகிறது. ராஜாஜியின் பொருளாதாரக் கொள்கைகள், அயலுறவுக் கொள்கைகள், பாகிஸ்தான், சீனா தொடர்பான கருத்துகள், மொழி தொடர்பான கருத்துகள், சோஷியலிஸம், பிற இஸங்கள் தொடர்பான கருத்துகள், நேரு-காங்கிரஸ் செல்லும் வழியின் தவறுகள் ஆகியவற்றுடன் அவரது மதம் சம்பந்தமான கொள்கைகளும் இந்தத் தொகுப்பில் உள்ளன.
புத்தகங்களை வாங்கிப் படித்து இந்திய வரலாற்றில் ராஜாஜியின் இடம் பற்றி நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
Satyam Eva Jayate, Vol 1-4, Collected works of Rajaji from 1956-66, The Catalyst Trust, 2005. All four volumes together for Rs. 500, each volume Rs. 125
இது பற்றிய தி ஹிந்து செய்தி
சென்னை : வரலாறும் வாழ்க்கையும்
3 hours ago



"அப்ப நான் ஹரிஜன் சேவா சங்கத்தில் ஒர்க் பண்ணிகிட்டிருந்தேன். ஹரிஜனங்களுக்கெல்லாம் திருவாய்மொழி - ஆழ்வார் பாசுரம் சொல்லிக் கொடுத்தேன். மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் என்று சந்தத்தோடு பாடி பஜனை செய்ய கத்துக் கொடுத்தேன். அவர்கள் எல்லோரும் வைஷ்ணவர்கள். நாமம் போடுகிறவர்கள். அவர்களுக்கு இப்படி பாசுரம் சொல்லிக்கொடுத்து மார்கழி முழுவதும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலை சுற்றிவரச் செய்தேன். இதனாலே அங்கே இருக்கக்கூடிய அய்யங்கார்களுக்கெல்லாம் என்மேலே ரொம்பக் கோபம்.
அப்புறம் வழக்கு நடந்தது. இவங்களுக்கு ஓட்டுரிமை இருக்கா இல்லையா என்பது வழக்கு. வெங்கட்ராம சாஸ்திரியை எங்கள் தரப்பு வழக்கறிஞராக அமர்த்திக் கொண்டேன். அவருக்கு உதவுவதற்காக வைணவ கிரந்தங்களை எல்லாம் படிச்சேன். அப்புறம் அந்த ஹரிஜனங்களுக்கு தோள் பட்டையில் சங்கு சக்கர சூடு போட்டுவிட்டேன். அது வைணவர்களுக்கான அடையாளம். பிராமணரல்லாத வைணவர்களுக்கு புரோகிதம் பண்ணுகிறவர்களுக்கு பெயர் சாத்தாணி. இவர்களுக்கும் சாத்தாணி உண்டு என்று ஒருத்தரை ஏற்பாடு செய்தேன். அப்படியே சாட்சி சொல்லவும் செய்தேன்.
இந்தமுறை மின்சாரக் காவடிகள் குறைவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்த மாதிரியான காவடியைச் சுமப்பது அக்கறைப்பேட்டை போன்ற ட்சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட மீனவர் குடியிருப்புகள்.
காவடி எடுப்பவர் கூடவே உதவி செய்யவென்று சிலர் வருவர். பல நேரங்களில் காவடி எடுப்போர் மயங்கி சாமியாடும் நிலை ஏற்படும். சிலர் திமிறிக் கூழே விழுந்துவிடலாம்.


தேருக்கு மொத்தம் ஆறு சக்கரங்கள். முன்னே இரு சக்கரங்களும், பின்னே இரு சக்கரங்களுமாக நான்கு பக்கமும் நான்கு. நடுவில், முன், பின் சக்கர வரிசைகளுக்கு இடையில் உள்ளடங்கி இரண்டு.
ஜே.எஸ்.ராகவன் நகைச்சுவை எழுத்தாளர். தற்பொழுது மாம்பலம் டைம்ஸ், அண்ணா நகர் டைம்ஸ் எனப்படும் உள்ளூர் வார இதழ்களில் 'தமாஷா வரிகள்' என்ற பத்தியை எழுது வருகிறார். இவரது கடந்த பத்திகளைத் தொகுத்து கிழக்கு பதிப்பகம்
இந்தச் செய்தி ஆச்சரியமாக இருந்தது. தேவன் எப்பேர்ப்பட்ட எழுத்தாளர்? கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்த விகடனை விட்டுப் பிரிந்ததும் தேவன் ஆனந்த விகடனின் ஆசிரியரானார். விகடனில் எழுதித் தள்ளியிருக்கிறார். தன் பெயரில், பிற பல பெயர்களில் என்று.
'கிரேசி' மோகன், தான் இன்று வாழ்க்கையில் உருப்படியாக இருப்பதற்குக் காரணமே தேவன்தான். சிறுவயதில் தேவன் புத்தகமும் கையுமாகவே இருந்தவர். தேவன் எழுத்தின் inspirationதான் தனது நகைச்சுவை கலந்த எழுத்து என்றார். தான் 'தேவன் மகனாக' இருக்க ஆசைப்படுவதாகச் சொன்னார். மோகன் பேச்சில் அவரது பிராண்ட் பஞ்ச் லைன்கள் நிறைய இருந்தன. (எனக்கு இரண்டு தேவன்களைப் பிடிக்கும் - ஒன்று கல்கியின் வந்தியத்-தேவன், மற்றொன்று விகடனுக்காக வியர்வைகளைச் சிந்தியத்-தேவன் - ஆர்.மாகாதேவன்)
நாளடைவில் செடில் ஏறுவோர் எண்ணிக்கை இன்னமும் அதிகமாகவே, காலையிலேயே செடிலை ஆரம்பித்து விடுகின்றனர். அதற்குப் பின்னர்தான் இப்பொழுதெல்லாம் தேர் சுற்றத் தொடங்குகிறது. மாலையில் தேர் நிலைக்கு வந்தபிறகும் கூட செடில் தொடர்ந்து நடக்கிறது. திங்கள் விடிகாலை வரை செல்கிறது. சென்ற வருடம் 5,000க்கும் அதிகமானோர் செடில் வேண்டுதல் செய்திருந்தனர். இம்முறை 3,000 பேருக்கு மட்டும்தான் முன்கூட்டியே பதிவு செய்யும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குமேல், நேரம் இருப்பதைப் பொறுத்து அங்கேயே சீட்டுகள் வாங்கி மேலே ஏற்றுவர்.



