Sunday, December 04, 2005

தண்ணீரில் மிதக்கும் சென்னை

சென்னை என்பது எவ்வளவு பெரிய நகரம் என்று இப்பொழுதுதான் புரிகிறது.

எங்கள் எல்லோருக்கும் ஒரே மழை. ஆனால் கோபாலபுரம், மைலாப்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணியில் பெரும் பிரச்னையில்லை.

வெள்ளிக்கிழமை கடும் மழைக்குப் பிறகு - 24 மணிநேரத்தில் 24 செ.மீ.க்கு மேல் - அவசர அவசரமாக பதிப்பகத்தின் அலுவலகம் சென்று தண்ணீரால் ஏதாவது பாதிப்பு உண்டா என்று பார்த்தேன். பிரச்னை அதிகம் இல்லை. இரண்டு தெருக்கள் தள்ளி ஒரு புத்தகக் கடை ஆரம்பித்திருக்கிறோம். (இன்னமும் திறக்கவில்லை.) அங்கு கடைக்குள் தண்ணீர் உள்ளே வந்திருந்தது.

இதெல்லாம் ஒன்றுமே இல்லை.

இன்று செய்தித்தாளைப் பார்க்கும்போது சைதாப்பேட்டையில் அடையாறு பாலத்தின் கீழ் சாலையைத் தொடுமளவுக்கு தண்ணீர் உயர்ந்திருப்பதைக் காண நேர்ந்தது. இப்படிக்கூட நடக்குமா என்று ஆச்சரியம். புற நகரில் எங்கு பார்த்தாலும் கடும் பிரச்னை. ஏரிகள் உடைப்பெடுத்து விட்டன என்று செய்திகள். தண்ணீர் வீடுகளுக்குள் புகுந்து விட்டது என்று தகவல்.

பொதுமக்கள் பலருக்கும் - முக்கியமாகத் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு - பயம், பீதி. சென்னையில் வசித்துக்கொண்டு இப்படி வெள்ளத்தால் அவதிப்படப்போகிறோம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.

மாதச்சம்பளக்காரர்களுக்கு இருக்கும் பிரச்னையைவிட தினக்கூலித் தொழிலாளர்கள், சிறுதொழில் புரிவோர் ஆகியோரின் திண்டாட்டம் மிக அதிகம்.

-*-

இந்த மாதம் புத்தகப் பதிப்பகங்களுக்குக் கடுமையான வேலை இருக்கும். நூலகங்களுக்குக் கொடுக்கவேண்டிய புத்தகங்களை டிசம்பருக்குள் அச்சிட்டு, அனுப்பி வைக்க வேண்டும். ஜனவரியில் நடக்க இருக்கும் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் புத்தகங்களைத் தயாரிக்க வேண்டும். பல பதிப்பாளர்கள் நவம்பர், டிசம்பரில் மட்டும்தான் புத்தகங்களையே அச்சிடுவார்கள். பாரி முனையில் பேப்பர் வாங்கி, திருவல்லிக்கேணியில் அச்சடித்து, கட்டு கட்டி, தான் இருக்கும் இடத்துக்குக் கொண்டுவந்து வைத்திருக்க வேண்டும். மழை பெய்தால் அச்சு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யாது. பேப்பரைப் பிடித்து உள்ளே இழுக்கும்போது ஈரப்பதம் அதிகமாக இருந்தால் தாள்கள் சேர்ந்து சேர்ந்து வந்து அச்சிடும்போது சிக்கும். (இதைச் சாதாரண லேசர் பிரிண்டரிலேயே பார்க்கலாம்.)

பைண்டிங் செய்யுமிடத்தில் புத்தகங்கள் காயாது. அவசரமாக எடுத்தால் பிய்ந்துவிடும்.

மேலும் பிரிண்டிங் தொழிலில் ஈடுபடுபவர்கள் அடிமட்டக் குடிசைத்தொழில் காரர்கள். இவர்களது வேலை செய்யுமிடங்கள் மிக மோசமாக இருக்கும். எங்கு பார்த்தாலும் பேப்பர்கள் கொட்டிக்கிடக்கும். பிளேட் செய்யத் தேவையான ரசாயனப் பொருள்களி்ன் கழிவுகள் சில இடங்களில். அச்சு மை கருந்திட்டாகச் சில இடங்களில். அச்சிடப்பட்ட தாள்களும், அச்சாகாத தாள்களும் வித்தியாசம் ஏதுமின்றிக் கிடக்கும். அதில் அழுக்குக் கை கால்கள் பட்டு நிறையத் தாள்கள் வீணாகும். பெரும்பாலும் தரைத்தளத்திலேயேதான் இவர்கள் வேலை செய்யும் இடங்கள் இருக்கும் - கனமான பேப்பர் கட்டுகளை எடுத்துவரவேண்டியிருப்பதால். கனமழை என்றால் தண்ணீர் உள்ளே புகுவது தடுக்க முடியாததாகிவிடும்.

சென்ற வருடம் டிசம்பரில்தான் சுனாமி அடித்து திருவல்லிக்கேணி அச்சுத்தொழிலில் ஈடுபடும் சில தொழிலாளர்களின் குடும்பங்கள் இழப்புகளைச் சந்தித்தன. இந்தமுறை உயிரிழப்பு இல்லை, ஆனால் பொருளிழப்பு அதிகம்.

இதையெல்லாம் தாண்டி, அடுத்த வருடத்துக்கான புதுப்புத்தகங்கள் உங்கள் கைகளுக்கு ஜனவரி முதல் வரும். வாங்கிப் படிக்கத் தவறாதீர்கள்.

3 comments:

  1. Badri,
    This would be out of context.
    Are there sites where I can buy tamil books that would be delivered at US?

    regards,
    Nataraj

    ReplyDelete
  2. http://www.kamadenu.com/
    http://www.anyindian.com/

    ReplyDelete
  3. பத்ரி,

    தாங்கள் புத்தகக் கடை திறக்கவிருக்கிற செய்தி மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தங்கள் கடையும் வாணிகமும் சிறக்கவும் மேன்மேலும் வளரவும் - என் சார்பாகவும் AnyIndian.com சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    அன்புடன், பி.கே. சிவகுமார்

    ReplyDelete