Monday, December 05, 2005

வோல்க்கர் அறிக்கை - நட்வர் சிங்கின் நிலைமை

ஈராக் உணவுக்காக எண்ணெய் திட்டத்தில் ஊழல்கள் நடந்தது குறித்து ஐ.நா சபை நியமித்திருந்த வோல்க்கர் குழு தனது அறிக்கையை வழங்கியது. அதில் இந்தியாவிலிருந்து அப்பொழுதைய வெளியுறவுத்துறை அமைச்சர் நட்வர் சிங்கின் பெயரும் அவர் சார்ந்திருந்த காங்கிரஸ் கட்சியின் பெயரும் அடிபட்டன. சதாம் ஹுசேன் அரசாங்கத்திடமிருந்து நட்வர் சிங், காங்கிரஸ் கட்சி இருவருக்கும் எண்ணெய் எடுக்க ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக வோல்க்கர் அறிக்கை கூறியது இந்தியாவில் அரசியல் புயலை ஏற்படுத்தியது.

முதலில் காங்கிரஸ் கட்சியும் நட்வர் சிங்கும் குற்றச்சாட்டுகளைக் கடுமையாக மறுத்தனர். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நட்வர் சிங்கின் மகன் ஜகத் சிங்கும் அவரது நண்பர் அண்டலீப் சேகாலும் ஈராக், ஜோர்டான் நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளனர் என்றும் சேகாலின் நிறுவனம் வழியாக (லஞ்சப்) பணம் ஈராக்குக்குச் சென்றுள்ளது என்றும் செய்தி வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் Enforcement Directorate சேகால் அந்நியச் செலாவணி விஷயத்தில் ஏதேனும் திருட்டுத்தனங்கள் செய்துள்ளாரா என்று விசாரித்தது.

எதிர்க்கட்சிகள் நட்வர் சிங்கைப் பதவி விலகச் சொன்னார்கள். நட்வர் சிங் மறுத்தார். தான் தவறேதும் செய்யவில்லை என்றார். பிரதமர் மன்மோகன் சிங் நட்வர் சிங்கின் வெளியுறவுத்துறையைப் பிடுங்கிக்கொண்டு அவரை இலாகா இல்லாத அமைச்சராகத் தொடருமாறு சொன்னார். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி R.S.பாதக் தலைமையில் விசாரணை கமிஷன் ஒன்றை ஏற்படுத்தினார்.

எதிர்க்கட்சிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் செய்தனர்.

இந்த நேரத்தின் இந்தியாவின் க்ரோவேஷியா நாட்டுத் தூதர் அனில் மாதரானி இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் நட்வர் சிங்கின் தலைமையில் சென்ற காங்கிரஸ் கட்சிக் குழு தங்கியிருந்த ஹோட்டலுக்கு நட்வர் சிங்கின் மகன் ஜகத் சிங்கும் அண்டலீப் சேகாலும் பின்னர் வந்து சேர்ந்து கொண்டதாகவும், நட்வர் சிங் ஈராக் அதிகாரிகள் பலருக்கும் தன் மகனை அறிமுகம் செய்ததாகவும் கூறினார். அதே பேட்டியில் நட்வர் சிங் உணவுக்கான எண்ணெய் திட்டத்தின் கூப்பன்களை நட்வர் சிங் பெற்றுக்கொண்டார் என்றும் குற்றம் சாட்டினார்.

பின்னர், தான் அப்படி ஒரு பேட்டி அளிக்கவேயில்லை என்று மாதரானி மறுத்தார். இந்தியா டுடே பத்திரிகையின் துணை ஆசிரியர் தம்மிடம் இந்தப் பேட்டியின் ஒலிப்பதிவு இருப்பதாக, இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியில் கூறினார். உடனடியாக அனில் மாதரானி தன் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார். (அவரை முன்னரே வேலையிலிருந்து தூக்குவதாக முடிவு செய்துவிட்டதாக அதிகாரிகள் கூறினாலும் அதை நாம் நம்பத் தயாராக இல்லை.)

நட்வர் சிங், மாதரானி மீது அவதூறு வழக்கு தொடுப்பதாக பயம் காட்டினார்.

பாஜக, எதிர்க்கட்சிகள் நட்வர் சிங் கைது செய்யப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கூச்சல் போட்டனர். (ஏன் அவரைக் கைது செய்யவேண்டும் என்று கேட்கிறார்கள் என்று புரியவில்லை.) அத்துடன் "சோனியா காந்தி திருடர்" என்று நாடாளுமன்றத்தில் சத்தம் போட்டனர்; சபையை நடக்கவிடாமல் நிலைகுலையச் செய்தனர்.

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் வழிகாட்டல் குழுவிலிருந்து நட்வர் சிங் நீக்கப்பட்டார். அமைச்சர் கபில் சிபால், நட்வர் சிங் தானாகவே இதைப் புரிந்துகொண்டு அமைச்சரவையிலிருந்து விலகவேண்டும் என்கிறார். அம்பிகா சோனி, பிரதமர் ரஷ்யாவிலிருந்து வந்ததும் நட்வர் சிங்கை பதவி இறக்கலாம் என்பதாக சுட்டினார்.

இந்தியா திரும்பிய முன்னாள் தூதர் மாதரானியை Enforcement Directorate விசாரணை செய்கிறது.

நட்வர் சிங்கின் மகன் ஜகத் சிங் சி.பி.ஐ விசாரணைக்குத் தாம் தயாராக இருப்பதாகவும், யாரோ ஒருவரைக் காப்பாற்ற தாம் (தானும் தந்தையும்) தயாராக இல்லை என்றும் இன்று சொல்லியிருக்கிறார்.

இதுதான் இப்போதைய நிலைமை.

-*-

இதுவரை நடந்ததைப் பார்க்கும்போது இந்த விவகாரத்தில் நட்வர் சிங் நிச்சயம் தப்பு செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அது நிரூபிக்கப்படுகிறதோ இல்லையோ, நட்வர் சிங் அரசியல் ரீதியாகத் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்றே சொல்லவேண்டும். அவரது அரசியல் வாழ்க்கை இத்துடன் முடிந்து விட்டது. இந்த வாரமே அவர் அமைச்சர் பதவியை இழப்பார். அடுத்த தேர்தலுக்கு அவர் இருகக் மாட்டார். அவரது மகனும் ஒதுக்கப்படலாம் - இப்பொழுது ராஜஸ்தான் எம்.எல்.ஏவாக இருக்கிறார்.

ஆனால் மிகவும் முக்கியமாக கேள்வி - இதில் சோனியா காந்தியின் பங்கு என்ன என்பதுதான். சோனியா காந்திக்குத் தெரிந்து எண்ணெய் ஒப்பந்தம் நடைபெற்றதா? அதில் சம்பாதித்த பணம் காங்கிரஸ் கட்சிக்குப் போனதா? சோனியா காந்தியின் குடும்பத்துக்குப் போனதா? இல்லை, நட்வர் சிங்குக்கும் அவரது உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமா?

சோனியா காந்தி தவறு செய்துள்ளார் என்றால், அதற்கு நட்வர் சிங் scapegoat-ஆகப் பயன்படுகிறாரா? (அப்படித்தான் ஜகத் சிங் சுட்டுகிறார்.)

சோனியா காந்தி தவறு செய்திருந்தால் அதை மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் ஏமாற்றி மூடப் பார்ப்பார்களா? அல்லது மன்மோகன் சிங் அவமானத்தால் பதவி விலகுவாரா?

இந்தப் பிரச்னையால் காங்கிரஸ் அரசு கவிழுமா? எந்த நேரத்தில் இடதுசாரிகள் காங்கிரஸுக்கு அளிக்கும் ஆதரவைத் திரும்பப் பெறுவார்கள்? சோனியா ஊழலில் ஈடுபட்டிருக்கிறார் என்று தெரிந்தால் மக்கள் அதை எப்படி எடுத்துக்கொள்வார்கள்.

அரசு கவிழ்ந்தால் அடுத்து தேர்தல் வருமா? பாஜக நிச்சயமாக அதைத்தான் எதிர்பார்க்கிறது. எனவே இந்தப் பிரச்னையை எவ்வளவு தூரம் இழுத்தடிக்க முடியுமோ அவ்வளவு தூரம் இழுத்தடிப்பார்கள்.

No comments:

Post a Comment