Wednesday, December 07, 2005

கிரேஸி மொபிசோட்

பிசினஸ் ஸ்டாண்டர்ட்: Hutch ties up with Tamil playwright Crazy Mohan

செல்பேசிகள் இப்பொழுது வெறும் தொலைபேசிகளாக மட்டும் இயங்குவதில்லை. உலகெங்கிலும் ஓர் ஊடகமாக மொபைல் ஃபோன்கள் கருதப்படும் நிலை இன்று.

பிரிட்டன், அமெரிக்கா போன்ற நாடுகளில் triple play, quadruple play என்றெல்லாம் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

டிரிபிள் பிளே என்றால் செல்பேசியின் மூலமாக வழங்கப்படும்
1. தொலைபேசிச் சேவை (voice)
2. இணைய இணைப்பு (data)
3. தொலைக்காட்சிச் சேவை (broadcast video அல்லது on-demand video)
என்ற மூன்றும் ஒருங்கே கிடைப்பது - வயர்லெஸ் வழியாக.

இதனால் கம்பி வழியாக தொலைபேசி, இணைய, தொலைக்காட்சி சேவைகளைக் கொடுத்து வந்தவர்கள் கொஞ்சம் பயந்து போனார்கள். அதனால் அவர்கள் உருவாக்க்கிய 'கெத்'தான் வார்த்தைதான் குவாட்ருபிள் பிளே.

கம்பி வழியாகக் கொடுக்கப்படும்
1. தொலைபேசிச் சேவை (voice)
2. அதிவேக இணைய இணைப்பு (data)
3. தொலைக்காட்சிச் சேவை (cable TV/DTH...)
4. அத்துடன் வயர்லெஸ் தொலைபேசிச் சேவையும் கூட...

நாம் இப்பொழுதைக்கு செல்பேசிகளை மட்டும் கவனிப்போம்.

இந்தியாவைப் பொருத்தவரை செல்பேசிகள் இன்னமும் பிறரிடம் பேசுவதற்கான சாதனமாக மட்டுமே பெரும்பாலர்களால் கருதப்படுகிறது. குறுஞ்செய்தி அனுப்புவதை இப்பொழுதுதான் பலர் பயன்படுத்துகின்றனர். தமிழ், பிற இந்திய மொழிகளில் எளிதாக குறுஞ்செய்திகளை அனுப்பி, படிக்க முடியும்போதுதான் இதன் உபயோகம் அதிகரிக்கும். அதேபோல அதிவேக இணைய வசதிகள் இப்பொழுது இந்தியாவில் செல்பேசிகள் வழியாகக் கிடைப்பதில்லை. 3G சேவை இன்னமும் இந்தியாவில் கிடைப்பதில்லை.

இதன் காரணமாகவே நேரடி ஒளிபரப்பு சேவைகளை செல்பேசிகளில் பெறுவது முடியாத காரியம். நல்ல ஒளிபரப்புத் தரத்தில் விடியோ பார்க்கவேண்டுமானால் 300-400 kbps வேகமாவது இருக்கவேண்டும். சில மொபைல் நெட்வொர்க்கள் - ஹட்ச், ஏர்டெல் ஆகியோர் EDGE தொழில்நுட்பம் மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்புகளை தங்களது நெட்வொர்க்களில் பார்க்கமுடியும் என்று சொல்கிறார்கள். என்னால் நம்பமுடியவில்லை. நான் இதுவரையில் பார்த்ததுமில்லை. ஆனால் என்ன பேண்ட்வித் இருந்தாலும் on-demand விடியோ துண்டுகளை செல்பேசிக்குள் இறக்கி, பின்னர் பார்க்கமுடியும்.

விடியோ துண்டுகள் பற்றி யோசித்த செல்பேசி நிறுவனங்களுக்கு முதல்முதலில் தோன்றியது - கிரிக்கெட். ஒவ்வொரு விக்கெட்டையும் துண்டாக வெட்டி மொபைல் போனுக்கு MMS செய்யலாமே என்று நினைத்தார்கள். செய்தார்கள். அதன்பின் புதிதாக வெளிவரும் சினிமாப்படங்களின் டிரெய்லர்கள். பாடல்களிலிருந்து சில துண்டுகள். இப்பொழுது விடியோ ரிங்டோன்கள்.

இதன் அடுத்தகட்டம்தான்...

மொபிசோட்கள்

எப்படி சினிமாவிலிருந்து தொலைக்காட்சி மெகா சீரியல்கள் உருவாயினவோ, அதன் மொபைல் வெர்ஷன்தான் மொபிசோட்கள் - மொபைல் எபிசோட்கள். சிறு சிறு துண்டுகளாக, அதே சமயம் முழுவதுமாக உள்ளடங்கிய துண்டுகளாக - ஒரு நாடகத்தையோ, கதையையோ வெட்டி, எடிட் செய்து உருவாக்கிக் கொள்ளவேண்டும். பின் அதனை செல்பேசிகளுக்கு டவுன்லோட் செய்து வேண்டியபோது பார்க்கலாம். ஒவ்வொரு மொபிசோடும் 2-3 நிமிடங்கள் செல்லும்.

கிரேஸி மோகனின் நாடகங்கள் இப்படியாக ஹட்ச் செல்பேசி வழியாக மொபிசோட்களாக வரப்போகின்றன.

பாபுலர் கலைஞர்கள் உருவாக்கும் content, மிகச் சீக்கிரமாகவே இப்படி வெவ்வேறு மொபைல் நெட்வொர்க்கள் மூலமாக வெளிவரத் தொடங்கும்.

அதைத்தொடர்ந்து அதிகம் தெரியாதவர்களின் படைப்புகளும் வெளியாகும்.

குறும்படங்களை எளிதாக இப்படி டவுன்லோட் முறையில் அனுப்பலாம். சின்னச் சின்ன அனிமேஷன் படங்களை உருவாக்கி டவுன்லோட் செய்ய வைக்கலாம். இதில் படைப்பாளிக்கு ஒரு வசதியும் உள்ளது. ஒவ்வொரு டவுன்லோடும் துளியளவாவது பணத்தை படைப்பாளிக்கு வழங்கும். ஒரு குறும்படத்தை டவுன்லோடுக்கு ரூ. 10 என்ற வீதத்தில் கொடுத்தால், ரூ. 5 படைப்பாளிக்குக் கிடைக்கும்.

நேரிடையாக அல்லாது இடைத்தரகர் மூலம் சென்றால் குறைந்தது ரூ. 2-3 கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் பல நல்ல குறும்படங்கள் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. நல்ல சிறுகதைகளைப் படமாக எடுக்க இதைவிடச் சிறந்த வாய்ப்பு வேறெதுவும் இல்லை.

அத்துடன் இவ்வாறு உருவாக்கப்படும் மொபிசோட்களை அகலப்பாட்டை வழியாகவும் விற்பனை செய்யலாம்.

இது கவனத்துடன் பார்க்கப்படவேண்டிய ஒரு துறை.

சில மாதங்கள் சென்றபிறகு, கிரேஸி மோகனிடம் இதுபற்றிப் பேசி அவரது அனுபவத்தை இங்குப் பதிவிடுகிறேன்.

7 comments:

  1. பத்ரி,
    எத்தனை பேரிடம் EDGE supported தொலைபேசிகள் இருக்கின்றன? GPRS இப்போதுதான் ஓரளவிற்கு நடைமுறைக்கு வந்திருக்கும்போது, இந்தியாவில் EDGE எத்தனை செயல்படியாகும் என்று தெரியவில்லை.

    மேலும், 3310 வாங்கி திருப்தியடையும் customers அதிகம் என்றே நினைக்கிறேன். உதாரணத்திற்கு என் தந்தை. SE K750i வாங்கி கொடுத்ததற்கு 'எதுக்குடா, இவ்வளவு ரூபா கொடுத்து வாங்கின'னு கேட்டு படுத்தி எடுத்திட்டார். Call, Talk, Listenஏ முக்கியமான பிரச்சனை அவர்களுக்கு. sms ஓரளவிற்கு புகழ்பெற்றிருக்கிறது. ஆனால், இளைஞர்கள் அல்லாதோர்க்கு
    //இன்னமும் பிறரிடம் பேசுவதற்கான சாதனமாக மட்டுமே பெரும்பாலர்களால் கருதப்படுகிறது//
    இதுவே முதன்மையானது.

    Ringtones, Logo download பண்ணுவோர் இந்தப் பெரும்பான்மை கூட்டத்தில் இல்லை.

    ReplyDelete
  2. ராமநாதன்: இன்றைய நிலையைக் கருத்தில் வைப்பதைவிட நாளைய நிலையை கவனிப்பது முக்கியம். EDGE செல்பேசிகளின் விலை குறைந்துகொண்டே வரும்.

    சரியான content கிடைக்கும்போது பலரும் அதற்குரிய போனை வாங்கக் கவலைப்பட மாட்டார்கள்.

    ReplyDelete
  3. Hi Badri,

    Yeah, definitely this is something that offers lot of potential and I really enjoyed reading the way you clearly articuate issues in tamil.

    Best regards,
    Magesh

    ReplyDelete
  4. இராமநாதன்,
    செல்போன்களே எதற்கு என்ற காலமும் உண்டு, இப்போது செல்போன் இல்லையா ! என்ற நிலை :)
    இரண்டாவதாக இவையெல்லாம் இப்போதைக்கு அதிக வருவாயுள்ள இளைஞர்களுக்குத் தான்.

    ReplyDelete
  5. திரு.பத்ரி,

    வணக்கம்.

    பயனுள்ள தகவல்

    இஸ்மாயில் கனி
    தமாம் (சவுதி அரேபியா)
    http://kaniraja.blogspot.com

    ReplyDelete
  6. செல் போனில் அழைப்பவரை செல் போன் திரையில் பார்த்துக் கொண்டே பேசும் வசதிக் கொண்ட செல் போன் எல்லாம் சந்தையில் கிடைக்கிறது.

    இதற்கான வசதியை இந்தியாவிலுள்ள செல்போன் இணைப்பு வழங்கும் கம்பெனிகள் எப்போது வழங்குமென்று எதிர்ப்பார்க்கலாம்?

    =இஸ்மாயில் கனி

    ReplyDelete
  7. தகவலுக்கு நன்றி பத்ரி.
    இங்கும் சிலமாதங்களுக்குமுன் இதுபோன்ற சேவைகளை சில வழங்கிவருகின்றன. எவ்வளவுதூரம் பயனில் இருக்கிறதென்று சொல்லத்தெரியவில்லை. எனக்குத்தெரிந்து யாரும் பயன்படுத்திப் பார்த்ததில்லை .

    ReplyDelete