Sunday, September 11, 2011

மிக்ஸி

[ஜூலை 2009-ல் எழுதியது, சில மாற்றங்களுடன்.]

ஆங்கிலத்தில் ‘மிக்ஸ்’ என்றால் கலப்பது என்று பொருள். ஆனால் இந்த மிக்ஸி என்னும் கருவி அதற்குமேல் பல காரியங்களைச் செய்கிறது. மின்சாரம் முழுமையான பயன்பாட்டுக்கு வந்தபின் உருவாக்கப்பட்ட பல வீட்டு உபயோகக் கருவிகளில் இந்த மிக்ஸியை முக்கியமானது என்று சொல்லலாம்.


இதுபோன்ற கலக்கும் கருவி ஆரம்பத்தில், முட்டையை உடைத்து அதன் கருவை நன்கு அடித்துக் கலக்க என்று உருவாக்கப்பட்டது. அங்கிருந்து வளர்ச்சி பெற்று, பழங்களை அரைத்து ஜூஸ் உருவாக்கக்கூடியதாக மாற்றம் பெற்றது. பின் தயிர் கடைய, மாவு அரைக்க, உலர் தானியங்கள், பருப்புகள் ஆகியவற்றை அரைக்க என்று பரிமாண வளர்ச்சி அடைந்துள்ளது.

அடிப்படையில் இந்தக் கருவியில் இருப்பது இரண்டு முக்கியமான பாகங்கள்: ஒரு மின்சார மோட்டார், பிளேடு (Blade) எனப்படும் பல்சக்கரம்.

மின்சார மோட்டார் என்ற கருவிக்குள் மின்சாரம் செல்லும்போது அதில் உள்ள ரோட்டார் எனப்படும் உருளை வேகமாகச் சுழல ஆரம்பிக்கும். செலுத்தப்படும் மின்சாரத்தைக் கட்டுப்படுத்துவதன்மூலம் இந்த ரோட்டாரின் வேகத்தைக் கூட்டலாம், குறைக்கலாம். சுழலும் இந்த உருளையுடன் பல் சக்கரத்தை இணைத்தால் மிக்ஸி, ஜ்யூசர், ஃபுட் பிராசஸர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் கருவி தயார்.

அடுத்தது இந்தப் பல் சக்கரம். உங்கள் வீட்டு மிக்ஸி ஜாடிகளை எல்லாம் எடுத்து அதில் உள்ள பல் சக்கரங்களைப் பாருங்கள். அவற்றில் ஒருவித சிம்மெட்ரி (சீரொருமை) இருக்கும். இரண்டு பற்கள் இருந்தால் அவை எதிரெதிராக 180 டிகிரி தள்ளி இருக்கும். மூன்று பற்கள் இருந்தால் 120 டிகிரி தள்ளி ஒவ்வொன்று என்று இருக்கும். பற்கள் எப்படி நீட்டிக்கொண்டிருக்கின்றன, அவற்றின் ஓரம் எப்படி கூர்மையாக அல்லது ரம்பத்தின் முனைபோல உள்ளது என்பதைப் பார்வையிடுங்கள்.

இந்தப் பல் சக்கரம்தான் பொருள்களை வெட்டுகிறது; அரைக்கிறது; கரைக்கிறது. இந்தச் சக்கரம் ஒரு ஜாடிக்குள் இருக்கும். அந்த ஜாடிக்குள் பொருள்களைப் போட்டு மூடியபிறகே, மோட்டாரை இயக்குவோம். மோட்டார் இயங்கும்போது பல்சக்கரம் அதிவேகத்தில் சுழலுகிறது.

பல்சக்கரத்தில் மாட்டிய பொருள்கள் - திடமாக இருந்தாலும் சரி, திரவமாக இருந்தாலும் சரி - தூக்கி அடிக்கப்படுகின்றன. இந்தக் கட்டத்தில் ஒரு முக்கியமான இயல்பியல் அடிப்படையை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். கனம் குறைந்த பொருள்கள் மையப்பகுதியிலேயே சுற்றிக்கொண்டிருக்கும். ஆனால், கனம் அதிகமான பொருள்கள் வெளிப்புறத்தை நோக்கிச் செல்லும். இது ‘மைய விலகு விசை’ காரணமாக நடக்கிறது.

பருப்பை அரைத்துப் பொடியாக்கும் எண்ணத்துடன் வறுத்த துவரம் பருப்பை மிக்ஸியில் போடுங்கள். கனமான முழுப் பருப்பும் படு வேகத்தில் பல்சக்கரத்தில் அடிபட்டு சுவற்றில் மோதி மீண்டும் உள்ளே திருப்பி அடிக்கப்பட்டு, மீண்டும் பல் சக்கரத்தில் மோதும். இப்படி நடக்கும்போது அது தெறித்து உடையும். அப்படி உடைவதில் பெரிய துகள்கள் மீண்டும் மீண்டும் வேகமாகச் சுவற்றில் மோதி உள்ளே வந்து உடைபடும். சிறிய துகள்கள் மையப்பகுதியிலேயே இருக்கும்.

மிக்ஸியால் என்ன சாதிக்கமுடியும் என்பது அதன் பல்சக்கரங்களின் வடிவமைப்பு சார்ந்தது. தக்காளி ஜூஸ் போட மிக எளிதான இரண்டு பல்களைக் கொண்ட சக்கரம் போதும். ஆனால் தோசைக்கு மாவரைக்க இந்தப் பல் சக்கரம் போதாது. சொல்லப்போனால், மிக்ஸியில் தோசை அரைப்பதைவிட கிரைண்டர் எனப்படும் கல் உரலில் அரைப்பதுதான் சரி.

அம்மா (அல்லது அப்பா!) சமையலறையில் வேலை செய்யும்போது எட்டிப் பாருங்கள். மிளகு, துவரம் பருப்பு, மிளகாய் ஆகியவற்றை வறுத்து, அதனை ஒருவிதமான ஜாடியில் போட்டு மிக்ஸியில் அரைத்தெடுத்து அந்தப் பொடியை ரசத்தில் சேர்ப்பார். மறுபக்கம் இஞ்சி, பூண்டு, வதக்கிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நீர் சேர்த்து இன்னொரு ஜாடியில் அரைத்து சப்பாத்திக்குத் தொட்டுக்கொள்ள ஒரு சைட் டிஷ் செய்வார். உலர்ந்த பொருள்களை பொடியாக அரைக்க ஒருவிதமான பல் சக்கரம் தேவை. ஈரமான பொருள்களை விழுதாக, துவையல்போல அரைக்க சற்றே வேறு விதமான பல் சக்கரம் தேவை.

பொதுவாக அமெரிக்காவில் விற்கப்படும் மிக்ஸி அல்லது ஃபுட் பிராசஸரைக் கொண்டு இந்தியச் சமையலுக்குத் தேவையான அரைத்தல்களைச் செய்வது எளிதல்ல. இந்தியாவில் இந்தியச் சமையலுக்கென பிரத்யேகமாக மிக்ஸிகள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் வலு அதிகமான மோட்டார் இருக்கும். பலவித வேகங்களில் சுழலும் மோட்டார் இது. பல்சக்கரங்களும் அதற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும்.

மிக்ஸி புழக்கத்துக்கு வருவதற்குமுன்னர், இந்திய அம்மாக்களும் பாட்டிகளும் அம்மியைப் பயன்படுத்தினர். இன்று அம்மி, கல்லுரல், உரல்-உலக்கை ஆகிய சாதனங்கள் காணாமல் போய்விட்டன. அவற்றுக்கு பதிலாக மிக்ஸி, கிரைண்டர் போன்ற மின் இயந்திரங்கள் வந்துவிட்டன. இதனால் சமையல் அறையில் வேலை நிச்சயம் எளிதாக ஆகியுள்ளது.

1 comment:

  1. பயங்கரவாதம் என்றால் என்ன ? – தெரிந்து கொள்ளுங்கள்.

    சங்கரராமன் கொலையில் ஜெயந்தரனுக்கு சம்பந்தம் இல்லை என்றால் – அரசு செய்தது பயங்கரவாதம்.

    ஜெயந்தரனுக்கு சம்பந்தம் உண்டு என்றால், கொலை செய்து விட்டு ஜெயந்தரன் தப்பிக்க பார்க்கிறான் – இது சங்கர மடத்தின் பயங்கரவாதம்.

    ReplyDelete