Wednesday, September 14, 2011

சாதிச் சழக்குகள் தொடர்பாக

பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் குருபூசையை முன்னிட்டு பள்ளர்கள் பெருமளவு எண்ணிக்கையில் திரண்டபோது நடந்த களேபரத்தின் முடிவாக காவல்துறை துப்பாக்கிச்சூடு நிகழ்த்தியதில் பலர் கொல்லப்பட்டனர். அதுபற்றி நான் இதுவரை இரு பதிவுகள் எழுதியுள்ளேன். அந்தப் பதிவுகளில் வந்துள்ள பின்னூட்டங்கள் என் புரிதலை மேம்படுத்தியுள்ளது.

யுவகிருஷ்ணாவின் இந்தப் பதிவிலும் ராஜசுந்தரராஜனின் இந்தப் பின்னூட்டத்திலும் ஒரு குரல் தென்படுகிறது. எப்போதெல்லாம் பார்ப்பனர் அல்லாதோர் தமக்குள்ளாகச் சாதிக் கலவரத்தில் ஈடுபடுகிறார்களோ அப்போதெல்லாம் பார்ப்பனர்கள், “பாத்தேளா, பாத்தேளா, நாங்கள்ளாம் ஷொன்னோமோன்னோ, இவாள்ளாந்தான் இப்டி அடிச்சுப்பா, வெட்டிப்பா, கொன்னுப்பா, நாங்கள்ளாம் யாரையும் ஒண்ணுமே ஷெய்றதில்லே. நாங்கள்ளாம் ஜாதி வித்யாசமே பாக்கறதில்லே” என்று சொல்லி நழுவப் பார்ப்பார்கள் என்பதுதான் இந்தக் கருத்து. நான் அப்படிப்பட்டவனா, இல்லையா என்பதை நீங்களே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளுங்கள். என் பதிவுகள் தொடரும். என் பார்வையில் குறைபாடுகள் இருக்கலாம். பலரும் சொல்வதுபோல ஏசி அறையில் சென்னையில் உட்கார்ந்துகொண்டுதான் நான் என் பதிவுகளை எழுதுகிறேன். களப்பணி ஆற்றுவன் அல்லன் நான். ஆனால் மேற்கொண்டு தரவுகள் கிடைக்கும்போது என் பார்வையை அவற்றுக்கு ஏற்றார்போல் மாற்றியபடியேதான் உள்ளேன். என் பதிவுகள் என் புரிதலை விசாலப்படுத்திக்கொள்ளவே. அது பிறருக்கு ஞானத்தை அளிக்கவென்றல்ல.

தமிழகத்தின் வளர்ச்சியைப் பெருமளவு பாதிக்கக்கூடியவையாக நான் கருதுவது இந்த சாதிச் சழக்குகளை. அது தலித் சாதியினருக்கும் பிறருக்கும் இடையிலாக இருக்கலாம். இருவேறு தலித் சாதியினருக்கு இடையே இருக்கலாம். இருவேறு தலித் அல்லாத சாதியினருக்கு இடையே இருக்கலாம். பார்ப்பனர்களுக்கு இதில் பங்கு இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். மொத்தத்தில் இந்தச் சாதிப் பிரச்னைகளால் மனிதவள மேம்பாடு குறைகிறது. கூட்ட குணம் காரணமாக பொதுச்சொத்துகளுக்குச் சேதம் விளைவிப்பது மட்டுமல்லாமல் அரசு இயந்திரம்மீது கடுமையான அழுத்தம் செலுத்தப்படுகிறது. உயிர்ச்சேதம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட சாதியினரைத் தவிர்த்து பிற அனைத்துச் சாதியினரும் பீதியில் ஆழ்த்தப்படுகிறார்கள். மதவாதச் சக்திகள் உள்ளே நுழைய இடம் கிடைக்கிறது. தீவிரவாதம் வளர இடம் உருவாகிறது. பொருளாதார முன்னேற்றம் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, ரவுடிகள் ராஜ்ஜியம் கோலோச்சுகிறது.

எனவே இந்த சச்சரவுகள் தவிர்க்கப்படவேண்டும். அதெல்லாம் அரசின் வேலை என்பதாக இல்லாமல், இந்தச் சச்சரவுகள் ஏன் ஏற்படுகின்றன என்று காரணத்தைத் தேடிப் புரிந்துகொண்டு அவற்றைத் தவிர்க்கும் உபாயங்களைக் குறைந்தபட்சம் இணையத்திலாவது விவாதிப்பது அவசியம் என்று நான் கருதுகிறேன். அனானிமஸாக பின்னூட்டம் இட்டுள்ள பலரும் ஏன் அப்படிப் பெயரை மறைத்துச் செய்யவேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. ஆனாலும் அப்படியாவது சில தகவல்கள் கிடைப்பது பயனுள்ளதாகத் தெரிகிறது.

நண்பர் ஒருவர், இதில் மதத்தின் பங்கு குறித்து நான் ஒன்றுமே எழுதவில்லையே என்று கேட்டார். எனக்குத் தெரிந்தால்தானே எழுதுவதற்கு? ஜான் பாண்டியன் என்ற பெயரிலேயே க்ளூ இருக்கிறது என்றார். இதில் கிறிஸ்தவ மிஷனரிகள் பங்கு ஏதேனும் இருந்தால் அதுபற்றி சம்பவம் நடக்கும் இடத்தில் உள்ளவர்கள்தான் எழுதவேண்டும், விவாதிக்கவேண்டும். இதுவரையில் நமக்குத் தெரிந்து இரண்டு கோணங்கள்தான் உள்ளன.

1. ஏற்கெனவே தேவர்-பள்ளர் சாதியினரிடையே இருக்கும் பிளவு. அது முத்துராமலிங்கத் தேவர் குருபூசை -எதிர்- இம்மானுவேல் சேகரன் குருபூசை என்று ஆகி, அதற்கேற்றவாறு தனிப் பரிமாணம் கொள்கிறது. இதன் அடியில் இம்மானுவேல் கொலை வழக்கு நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கிறது.

2. அதிமுக, திமுக கட்சிகள் குறிப்பிட்ட சாதியினரின் வாக்குவங்கியை முழுமையாகக் கைப்பற்றும் நோக்கில், பிளவுகளைத் தூண்டி, அதிகப்படுத்தி, அதன்மூலம் பிரச்னையைக் குவிமையம் கொள்ளச்செய்ய வைப்பது. இது இப்போதைக்கு ஒரு கருதுகோள் மட்டுமே. சாட்சியங்கள் இல்லை.

இதுதவிர வேறென்ன கோணங்கள் உள்ளன என்பதையும் ஆராய்தல் அவசியம். அதே நேரம் இந்தப் பிளவுகளை எப்படிப் பூசுவது, எப்படி சமூக நல்லிணக்கத்தை இந்தச் சமூகங்களுக்கு இடையே கொண்டுவருவது என்பது பற்றியும் நாம் பேசவேண்டும். அது அரசியல் தளத்தில் நடைபெறப்போகிறதா, ஆன்மிகத் தளத்தில் நடைபெறப்போகிறதா? தில்லியில் அரசுக்கும் அண்ணா ஹசாரேவுக்கும் இடையில் சமாதானம் பேச ஆசைப்பட்ட சாமியார்கள்போல யாரேனும் ஆன்மிகத் தலைவர் திடீரென முளைத்து இதனைச் செய்யப்போகிறாரா? இல்லாவிட்டால் வேறு ஏதேனும் பெரிய சமூகத் தலைவர் இங்கே உள்ளாரா? அய்யாவழி அமைப்போ வேறு ஏதேனும் சைவ மடமோ இதனைச் செய்யப்போகிறதா? அல்லது கிறிஸ்தவ/இஸ்லாமிய அமைப்பு ஏதும் இதனைச் செய்யப்போகிறதா?

உங்கள் கருத்துகளை எழுதுங்கள். நன்றி.

33 comments:

  1. சழக்கு என்கிற வார்த்தை எனக்குப் புதுசு. அதற்கு அர்த்தம் என்ன?

    BTW, என்னுடைய பதிவு உங்களை குறிவைத்து எழுதப்பட்டதல்ல. சாதி விஷயத்தில் நீங்கள் செக்யூலர் என்பதாகவே என் புரிதல். ஆனால் உங்களுக்கு வழக்கமாக பின்னூட்டம் போடும் பலரையும் குறிவைத்து எழுதப்பட்டதே. உதாரணத்துக்கு உங்களது ‘பரமக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக’ பதிவில் வந்திருக்கும் சில பின்னூட்டங்களைப் பாருங்கள். இவர்களெல்லாம் சாதிவெறியை எதிர்க்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

    ”பார்ப்பனச் சாதியை யாரும் எதுவும் சொல்லிவிடக் கூடாது. ஆனால் நானும் சாதி எதிர்ப்பாளன்” என்கிற ஒரு நிலைப்பாடு பற்றியும் நீங்கள் ஒரு ஆராய்ச்சி செய்து பதிவெழுதினால் என்ன?

    ReplyDelete
  2. Badri,
    The best thing to do is to keep mouth shut in this. coz., whatever you say will be turned against you and in the end you will end up feeling why ever you had mentioned anything at all.
    Surya

    ReplyDelete
  3. வாய்ப்பே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

    "நான் முக்குலத்தைச் சேர்ந்தவன். எங்கள் சாதியினர் இப்படிச் செய்வது தவறு. இதை நான் கண்டிக்கிறேன் " என்று, ஒரே ஒரு குரல் கேட்கும் வரையிலும், அந்தச் சமூகத்திலே, படித்தவன், பாமரன், கூலித் தொழிலாளி, தொழிலதிபன், அரசியல்வாதி, காவல்துறையினர், வக்கீல்கள், சாஃப்ட்வேர் எஞ்சினியர், துபாயிலே மொறவாசல் செய்து சம்பாதிக்கிறவன் என்று இருக்கும் அத்தனை பேர் மனத்திலும், ஆழ ஊறவைக்கப்பட்ட ஒரு புண்ணாக்குக்கும் பிரயோசனமில்லாத இந்த சாதி வெறி என்கிற சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸை ஒழிக்கவே முடியாது.

    சட்டதிட்டங்கள், மிரட்டல் மூலம், இந்த சாதி வெறியை வன்முறையாக மாறாமல் கட்டுக்குள் வைக்கலாம்.

    ReplyDelete
  4. அருமையான பதிவு. "நீங்கள் "நான்" என்பதற்கு பதில் "நாங்கள்" என்றே கூறலாம். "ஊர் ரெண்டுபட்டால் கொண்டாட்டம் என்று நினைப்பவர்கள்" அல்ல. எனது கருத்தையும் நான் இங்கே http://bit.ly/oZkTz8 பதிவு செய்துள்ளேன். பார்த்து கருத்துக்களை தெரிவியுங்கள்.

    ReplyDelete
  5. ரோஸாவசந்த்துக்குப் பதில் எழுதிவிட்டு நான் வேறு தளங்களுக்குப் போய்விட்டேன். என் பதில் உங்கள் கவனத்துக்கு வந்திருக்கலாம். அது இப் பதிவுக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  6. இறந்த தலைவர்களை பற்றிய பிம்பங்கள் உடைய வேண்டும் காந்தியாக இருந்தாலும் சரி பெரியாராக,அம்பேத்கராக ,இம்மானுவேல் சேகரனாக, முத்துரமாலிங்க தேவராக இருந்தாலும் சரி .வாழும் தலைவர்கள்,அவதாரங்களான அன்ன ஹாசரே ,மோடி,சோனியா போன்றவர்கள் பற்றி இருபக்க விவாதங்கள் வருவது போல் அவர்களை பற்றியும் ஆதாரங்களுடன் அவர்கள் தவறுகள்,நற்செயல்கள் வர வேண்டும்.
    ஒருவன் பெரியாரியவாதி என்றால் சாதி இல்லை சாதி விட்டு சாதி சாதி பார்க்காமல் திருமணம் செய்,மதம் வேண்டாம்,மூட நம்பிக்கை வேண்டாம் என்பான்.
    காந்தியவாதி என்றால் அஹிம்சை,எளிய வாழ்க்கை,வாழ்கையை அடுத்தவருக்காக அர்ப்பணிப்பது என்பான்.
    ஹிந்டுத்வவாதி என்றால் இஸ்லாமியர்கள்,கிருத்துவர்கள் தவிர அனைவரும் ஒன்று,நல்லவர்கள்,ஒற்றுமையாய் வாழ்ந்தவர்கள்,அவர்களால் பிரிந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டவனாக இருப்பான்.அனைத்து இந்துக்களையும் ஒன்றிணைக்க முயற்சிகள் எடுப்பான்
    கிருத்துவ மிச்சினரியாக இருந்தால் யேசுவிடம் வந்தால் அனைவரும் ஒன்று தான்,அரிசி,கல்வி,மருத்துவம் போன்றவற்றை இலவசமாக தந்து ஆள் பிடிப்பான்.அதற்காக உயிர் மூச்சாய் உழைப்பான்.வராதவர்களை வரவழைக்க அனைத்து முயற்சிகளும் எடுப்பான்
    அதே போல் தேவரை தெய்வமாக,அவதாரமாக எண்ணுபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.சொத்துக்களை எல்லாம் தாழ்த்தப்பட்ட இல்லாத ஏழை மக்களுக்கு கொடுங்கள் என்றாரா,ஊர் தனி சேரி தனி என்று இருக்க கூடாது அதனால் ஊரில் உள்ள காலி இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடி வர செய்தாரா,சாதி விட்டு சாதி திருமணத்தை ஆதரித்தாரா.அவருடைய கொள்கைகள் என்ன.அவரை பின்பற்றுபவர்கள் என்ன செய்கிறார்கள்.என்ன செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
    ஊடகங்கள், நடுநிலையாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பங்குக்காக போராட வேண்டும்.அது மாவட்ட செயலாளராக இருந்தாலும் சரி.
    மந்திரியாக இருந்தாலும் சரி,ராஜ்ய சபை உறுப்பினராக இருந்தாலும் சரி,பல்கலை கழக துணை வேந்தர்களாக இருந்தாலும் சரி.இட ஒதுக்கீடு இல்லாத அனைத்து இடங்களிலும் அவர்கள் பங்கு வெகு வெகு குறைவாக இருப்பதை சுட்டி காட்ட வேண்டும்.மத்தியில் 12 மந்திரிகள் நாடார்களுக்கு பட்டை நாமமா என்று போஸ்டர்கள் எழுந்தவுடன் தானை தலைவர் அலறி அடித்து கொண்டு காங்கிரஸின் பங்கில் கொடுப்பார்கள் என்று நினைத்தேன் என்று சப்பை கட்டு கட்டி,ராதிகா செல்விக்கு பதவி தரவில்லையா
    பிராமணர்கள் இத்தனை இடங்களில் இருக்கிறார்கள் மற்றவர்கள் வெகு குறைவாக உள்ளனர் என்று ஆதாரங்கள் காட்டி போராட்டம் நடத்திய கழகங்கள்,கட்சிகள் இப்போது ஏன் அதே வேலையை செய்வதில்லை.தாழ்த்தப்படவர்களுக்கு உள்ளேயே கூட அருந்ததியர்களுக்கு ஒன்றும் கிடைப்பதில்லை என்று சுட்டி காட்டினால் தானே தெரியும்.
    ஒரே சாதியை சேர்ந்தவர்கள் ஒரு விளையாட்டு குழுவிலோ,ராணுவத்திலோ,போலிசிலோ,அரசு அலுவகங்களிலோ,மந்திரிகளிலோ, இஸ்ரோவிலோ ,ஐ ஐ டி இலோ அதிகம் இருக்கும் போது மற்றவரை குறைவாக,மட்டமாக நடத்துவது மனித குழு மனப்பான்மையினபடி இயல்பான ஒன்று.அதை தடுப்பது நல்ல அரசாங்கங்களின் ,பத்திரிக்கைகளின் ,உளவு துறையின்,நீதி துறையின் கடமை.அவர்கள் தவறுவதால் தான் இந்த நிகழ்வுகள் ஏற்படுகின்றன

    ReplyDelete
  7. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  8. சழக்கு - குற்றம் (எனக்கும் இன்று வரை தெரியவில்லை. கூகுள் உதவி இதோ - http://www.tamilvu.org/slet/l41C1/l41C1per.jsp?sno=120)
    -முருகன் கண்ணன்

    ReplyDelete
  9. you don't need to keep your mouth shut. say what you want to say

    Ravi

    ReplyDelete
  10. 1997 இல் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்கள் தொடர்ந்து நடந்தன. காரணம் இமானுவேல் பெயரை போக்குவரத்துக் கழகத்துக்கு வைத்தது. இதைத் தொடர்ந்து எல்லா போ.கழகங்கள், மாவட்டங்களிலிருந்தும் தலைவர் பெயர்களை அப்போதைய கருணாநிநி அரசு அகற்றியது. அப்போது ஜெயா தான் ஆட்சிக்கு வந்தால் மாவட்டப் பெயர்களை (மட்டும்) மீண்டும் வைப்பேன் என்று அறிவித்தார். 2001 இல் ஆட்சிக்கு வந்தபோது அதைப்பற்றி மூச்சுவிடவில்லை. இத்தகைய வெட்டி வீம்பு அரசியல் ஒழிய வேண்டும்.

    அடுத்து, 1997 கலவரங்களைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்கள் பற்றி ஆராய ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. தொழில் வளர்ச்சி அதன் முக்கியப் பரிந்துரையாக இருந்தது. பத்ரி, நீங்கள் அந்த அறிக்கையைத் தேடி எடுத்து அதன் பரிந்துரைகளைப் பற்றி உங்கள் கருத்துகளை எழுதி ஒரு விவாதத்தை ஆரம்பியுங்களேன். அந்த அறிக்கையை இதுபற்றிய எந்த விவாதத்துக்கும் ஆரம்பப்புள்ளியாகக் கொள்ளலாம்.

    அடுத்து, மதுரையைத் தலைநகராகக் கொண்டு தனியாகத் தென் தமிழக மாநிலம் அமைக்கப் படுவது இதற்கு நீண்டகாலத் தீர்வாக அமையுமா என்றும் நாம் யோசிக்க வேண்டும். சென்னை வாழ்கிறது, தென் தமிழகம் தேய்கிறது என்றே இப்பகுதி மக்கள் எண்ணுகிறோம்.

    ReplyDelete
  11. கூட்டம் கூட்டமானவர்களால் பிரச்சினைகள் வரும்போது, ஒரு பெரும் கூட்டத்துக்கு அறியப்பட்டவன் என்ற வகையில் கண்டிப்பாக நீங்கள் எழுதத்தான் வேண்டும். இது ஒரு eye opener (குறைந்த எண்ணிக்கைக்காக இருந்தாலும் தவறில்லையே) ஆகும் வாய்ப்பு உள்ளது.அநேகமாக பெருநகரங்களில் இது போன்ற சச்சரவுகள் நடப்பதில்லை ஒருவேளை அங்கெல்லாம் மனிதர்கள் தங்களின் வாழ்வாதாரங்களுக்கான வேலைகளில் கவனம் செலுத்துவதால் இருக்கலாமோ என்னவோ! Certainly An Idle mind is Devil's Kingdon!!
    // இந்தச் சாதிப் பிரச்னைகளால் மனிதவள மேம்பாடு குறைகிறது// -- மிகச்சரியான விடயம்.

    //தவிர்க்கும் உபாயங்களைக் குறைந்தபட்சம் இணையத்திலாவது விவாதிப்பது அவசியம்//-
    அல்ல அத்தியாவசியம்.. ஆனால் இங்கு விவாதிப்பது யாரைச் சென்றடைய வேண்டுமோ, அவர்களைச் சென்றடைய வைத்தல் குறித்தும் விவாதிக்க வேண்டும்.. எப்படியோ, முதல் விதையை நீங்கள் ஊன்றி இருக்கிறீர்கள் என்று கொள்ளுவோம். மேலும் இது போல தொடர்வது நாட்டின் வளர்ச்சியை மட்டுமன்றி அமைதியையும் கெடுத்து விடும் என்று மக்கள் உணர வேண்டும்..
    -ரோமிங் ராமன்

    ReplyDelete
  12. Badri,
    >>>>>>நான் அப்படிப்பட்டவனா, இல்லையா என்பதை நீங்களே சீர்தூக்கிப் பார்த்துக்கொள்ளுங்கள்.<<<<<
    First I am not a Brahmin.Being said that ,I have never seen you supporting a particular caste or religion.
    You always have an unbiased view of things.Whenever some news breaks out I come here first to see whats your view.And 99% of the times I have to accept your view as my view.I always see a real concern in your writings about the nations growth and an individuals growth.
    You are a role model to people through your writings and speech.
    So ignore such kinds of comments and march on.Don't let these kinds of comments influence your future writings(That's what I am worried now).And whatever you wrote about Paramakudi riot is 100% true.

    ReplyDelete
  13. சாதியணர்வு வெளிப்படுப்படுவதற்கான தளங்கள் மற்றும் தேவைகள் மழுங்கடிக்கப்பட்டால்தான் இது ஒரு முடிவிற்கு வரும். உதாரணமாக, சென்னையில் ஒருவரின் சாதியுணர்வு வெளிப்படுவதற்கான தளங்கள் மிகச்சில. ஆனால் சின்ன ஊர்களில், அரசின் திட்டங்களின் பயனீட்டாளர்களின் அடையாளப்படுத்தலே ஒரு பெரும் சாதிய வெளிப்பாட்டுத்தளமாகி விடுகிறது. இதற்குத்தீர்வு, வாய்ப்புகளை, கல்வி, மருத்துவம், வேலை போன்றவற்றில் பெருமளவில் அதிகப்படுத்துதல். இதற்கு ஒரு உதாரணம் இருக்கிறது. கிட்டத்தட்ட தாழ்த்தப்பட்டவர் நிலையிலருந்த நாடார் சமூகம், கிறிஸ்துவ மிஷனரிகளின் கல்வி, மற்றும் மருத்துவ செயல்பாடுகளின் முழுப்பலனையும் பெருமளவில் உபயோகித்து இன்று மிகப் பின்தங்கிய சமூகம் (MBC) என்ற நிலைக்கு வந்து விட்டனர். அதற்கு அவர்கள் கொடுத்த விலை, பெருமளவு நாடார்கள் CSI நாடார்களானது. அரசாங்கம், இப்படியான வாய்ப்புகளை, சாதியத்தேவையின்றி, பெருமளவில் கிடைக்கச்செய்யும்போது, இந்த உணர்வு மழுங்கடிக்கப்படும். Essentially, this entails the government to provide educational and employment opportunities aplenty irrespective of caste and this means enormous amounts of investment by the govt in these sectors. Much like how the employment opportunities in Tirupur virtually broke the caste hierarchy in the Kongu belt.

    ReplyDelete
  14. /தென்மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வருவதைப் போன்ற சம்பவங்கள் நடைபெறும் போதெல்லாம் சாதியை மறுப்பவனின் குரல் சற்று குறைத்தும், சாதியை ஏற்றுக் கொண்டவன் குரல் சற்று ஓங்கியும் ஒலிப்பதை உற்றுக் கவனித்தால் உணரமுடியும்/

    லக்கி தன்னை மட்டும் ஏதோ சாதியை மறுப்பதை போல பவனை செய்தால் குரல் சற்று குறைந்துதான் ஒலிக்கும்; அதற்கு யாரும் பரிகாரம் தேட முடியாது; அதன் பிரச்சனை வேறு.

    மற்றபடி சாதியை மறுப்பவர்கள் எதிர்ப்பவர்கள் எல்லோரும் மிக தீவிரமான குரலில் தென் மாவட்ட கலவரங்கள்/தாக்குதல்களின் போது தங்கள் குரலை பதிவு செய்துவருகிறார்கள். 90களின் மத்தியில் இருந்து இதை பற்றிய விவாதமும், எதிர்ப்பு கருத்தும் உருவாகியுள்ளது. இப்போதும் சாதியை உண்மையாக எதிர்க்கும் அனைவரும் எதிர்த்துதான் கருத்து சொல்லியுள்ளன்அர். சரியாக சொல்ல வேண்டுமானால் இப்பொது உரத்து ஒலிப்பது என்பது சாதிய எதிர்ப்பில் எந்த சால்ஜாப்பும், சமரசமும் கிடியாது என்று காட்டுவதன் லிட்மஸ் டெஸ்ட். லக்கி அதில் சரியான முறையில் பாஸாகவில்லை அவ்வளவுதான்.

    ReplyDelete
  15. பிற்படுத்தப்பட்டவர்கள்/தலித் மோதலின் போது பார்பனர்கள் தங்கள் அரசியலுக்கு ஆதரவாக தர்க்கத்தை சமைத்தால், அது ஒன்றும் இயற்கைக்கு முரணானது அல்ல. சுயநலம், சுய அரசியல் சார்ந்து அனைவரும் செய்யும் ஒரு அரசியல். இதை கூட செய்யாத அளவிற்கு இருக்க வேண்டும் என்றால் மிக பரந்த மனம் வரவேண்டும். அது பொதுவாக இல்லாததுதானே நம் சூழலின் பிரச்சனை.

    பார்பனர்களின் அரசியலை மறுப்பதும், எதிர்ப்பதும் வேறு. ஆனால் அதற்கு முழு காரணமும் பிற்படுத்தப் பட்டவர்களின் ஜாதிவெறியும், அதற்கு சப்பைக்கட்டு எதையாவது கட்டுபவர்களும்தான் என்பதில் முதலில் தெளிய வேண்டும். ஆகையால் எந்த சமரசமும் இன்றி பிற்படுத்தப்பட்டவர்களின் ஜாதி வெறியை கண்டித்துவிட்டு, அதில் சால்ஜாப்புகள் இன்றி, சமரசம் இன்றி நிலைபாடு எடுத்துவிட்டு, பிறகு நிச்சயமாக பார்ப்பனர்கள் செய்யும் அரசியல் பற்றி பேசலாம். இல்லையெனில் அவர்களின் சாதி எதிர்ப்பில் ஓர்மையும், நேர்மையும் ரொம்ப சந்தேகத்திற்கிடமானது.

    ReplyDelete
  16. இந்த அசம்பாவிதம் அது நடந்த களத்தின் கைமீறலால் நடந்ததா அல்லது சென்னையிலிருந்து வடிவமைக்கப் பட்டதா என்பதுதான் கண்டறியப்பட வேண்டியது.

    லக்கியோ ராஜசுந்தரராஜனோ பத்ரியோ நற்சான்றிதழ் நாடவேண்டியது அல்ல முக்கியப் பிரச்சனை.

    ReplyDelete
  17. சாதி அமைப்புகளை வளர்த்து ஆதரித்துக்கொண்டு சாதியை ஒழிக்க முடியாது. அவற்றை ஆதரிப்பது யார்- புதிய தலைமுறை என்று கூவுகிறார்களே அவர்களுக்கும் அதில் பங்கில்லையா.லக்....க் போன்றவர்கள் இதையெல்லாம் கேட்க மாட்டார்கள்.

    ராதிகா செல்வி என்பவர் எம்.பி ஆனார்.ஏன், எதற்காக. ஒரு சாதியை திருப்திப்படுத்தி நான் உங்களுக்கு ஆதரவானவன் எனக் காட்டிக்கொள்ள.அவரது கணவர் கொல்லப்பட்டார்.அவர் பிண்ணணி என்ன.

    ஜான் பாண்டியனின் கடந்தகால வரலாறு என்ன,அவர் ஏன் ஒரு கொலை வழக்கில் சிறை சென்றார்.
    அப்படிப்பட்டவர் எப்படி ஒரு இயக்கத்தின் தலைவராக முடிகிறது.

    சாதிவெறி ஏற்படக் காரணம் அதற்கு அரசியல்வாதிகள் தரும் ஊக்கமும்,ஆதரவும்தான்.
    சில ஆண்டுகள் கழித்து இமானுவேல் சேகரனின்
    குரு பூஜையும் அரசு விழாவாக அறிவிக்கப்படும்
    என்ற நிலை வரலாம்,அதில் அரசியல் ஆதாயம்
    கிடைக்குமானால்.தேவர்களை திமுக பகைத்துக்
    கொள்ளவில்லை,அதிமுகவும் பகைத்துக் கொள்ளாது.
    பகைத்துக் கொண்டால் தென்மாவாட்டங்களில் தேர்தலில் தோற்றுவிடுவார்கள்.தேவர்+நாடார் ஒட்டு
    இருந்தால் தலித் ஒட்டு இல்லாவிட்டால் கூடப் பரவாயில்லை, ஒரளவு வெற்றியாவது உறுதி.

    ஆனால் தலித் ஒட்டிற்காக தேவர்,நாடார் ஒட்டு வங்கியை விட்டுவிட முடியாது.இந்த ஒட்டு வங்கி அரசியல்தான் கட்சிகளின் முக்கிய குறிக்கோள்,
    சமூக ஒற்றுமை அல்ல. சாதி சங்கங்கள் சமூக
    அமைதிக்கு எதிரானவை அல்ல,ஆனால் அவை
    தங்கள் சாதியின் நலனை முதன்மையான நோக்கமாகக் கொண்டவை.நவகாளியில் காந்தி நேரே சென்று அமைதிக்கு முயன்றார்.இங்குள்ள தலைவர்களில் ஒருவராலும் அப்படி செய்யமுடியாது.

    சில சமயங்களில் குன்றக்குடி அடிகளார் அப்படி செய்துள்ளார். இன்று இந்து சாமியார் யாராவது சமரசம் செய்யபோனால் அதை இடதுசாரிகள்,தலித் கட்சிகள் எதிர்ப்பார்கள்.உடனே அதை இந்த்துவ சதி
    என்று ஊடகங்களில் பிரச்சாரம் நடக்கும்.அதை மீனா கந்தசாமிகள்,ரவிக்குமார்கள் திறம்பட செய்வார்கள்.
    பத்ரி போன்றவர்களும் அதில் நியாயம் இல்லாமல்
    இல்லை என்று எழுதுவார்கள்.

    ஒட்டுமொத்த சூழலே இன்று நம்பிக்கை தருவதாக இல்லை.இதில் குறுகியகாலத்தில் சட்டம் ஒழுங்கை
    நிலைநாட்ட, சாதி வன்முறையை ஒடுக்க முடியும்.
    நீண்ட காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதில்
    யாருக்கு அக்கறை உள்ளது.

    ReplyDelete
  18. அன்பின் ரோஸாவஸந்த்!

    //எந்த சமரசமும் இன்றி பிற்படுத்தப்பட்டவர்களின் ஜாதி வெறியை கண்டித்துவிட்டு, அதில் சால்ஜாப்புகள் இன்றி, சமரசம் இன்றி நிலைபாடு எடுத்துவிட்டு, பிறகு நிச்சயமாக பார்ப்பனர்கள் செய்யும் அரசியல் பற்றி பேசலாம். //

    அதாவது பிரம்மனின் இடுப்புக்குக் கீழே பிறந்தவர்களின் சாதிவெறியை முதலில் ஒழித்துவிட்டு, பிற்பாடு நேரமிருந்தால் தலையில் இருந்து பிறந்தவர்களின் சாதியரசியலை பார்த்துக் கொள்ளலாம் என்று ரோஸாவஸந்த் சொல்வதாக புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது :-)

    குலம், கோத்ரம், சடங்கு, சம்பிரதாயம், லொட்டு, லொசுக்கு இதையெல்லாம் ஒழிக்காமல் சாதிவெறியை குறைச்சிட, ஒழிச்சிட முடியுமான்னு நம்பறீங்களா சார்? இதையெல்லாம் சமூகத்தின் கட்டமைப்பாக ஏற்படுத்தி, அதை தாங்கிக் கொண்டிருப்பது யார்?

    நீங்க என்ன சொல்றீங்கன்னா, முதல்லே கிளைகளை வெட்டிட்டு, அப்புறமா நேரம் கிடைச்சா ஆணிவேருக்கு அமிலம் ஊத்தலாம்னு சொல்றீங்க.

    கிளைகளை வெட்ட வெட்ட, அது முளைச்சிக்கிட்டே இருக்கும் சார். வேரை அழிக்காம வேற எது எதையோ வெட்டச் சொல்றதுதான் சால்ஜாப்பு :-)

    //லக்கி தன்னை மட்டும் ஏதோ சாதியை மறுப்பதை போல பவனை செய்தால்//

    கவலையே படாதீங்க. இந்த மேட்டருலே நான் உங்களுக்கு போட்டியா வந்துறவே மாட்டேன் :-)

    ReplyDelete
  19. அன்பான நண்பர் திரு பத்ரி,

    திரு லக்கி போன்ற அரைகுறை அறிவிலிகள் சொல்லுவதை எல்லாம் சீரியசாக எடுத்துக்கொண்டு அதற்க்கு பதில் போடுவது வண்டலூர் ஜூவில் உள்ள கருங்குரங்கு என்னை பார்த்து பல்லை கடித்தது என்று புலம்புவதற்கு சமமாகும்!

    நீங்கள் புலம்பியதைப்பார்த்தபின் உங்களின் பொது மதிப்பீட்டின் மேல் எனக்கு சந்தேகங்கள் வருகின்றது! ஒன்றுக்கும் உதவாத, அறிவுத்திறன் சிறிதும் இல்லாத, சினிமா வசன எழுத்துநடையை கருவியாக கொண்டு, அர்த்தமிலாத துண்டு நோட்டிசு பிரச்சார எழுத்துக்களின் சாரத்தை கருவாகக்கொண்டு,அறிவையும் அறத்தையும் மூர்கமாக நிராகரித்து அதுவே அறிவு என நாடக சினிமா வம்பாளனின் அறிவு அடிப்படையை தாண்டாது "எழுதும்" ஒருவரை
    நீங்கள் பொருட்டாக நினைப்பது.............. அபத்தம் மட்டும்மல்ல அசிங்கமும் கூட!!!

    விட்டகுறை தொட்ட குறை இருந்தால் தயவுசெய்து பர்சனல் லெவல் பரிமாற்றங்கள் வைத்துக்கொள்ளவும். என்னைபோன்ற பலர் படிக்கும் உங்கள் பிளாகில் அசடுகளின் பெயர்களை போட்டு அவர்களை ஞாபகப்படுத்தி என் இனிய நாளை கெடுக்காதீர்கள்!

    (போதா குறைக்கு நீங்கதான் இந்த அறிவாளி எழுதிய புத்தகத்தை வெளியிட்டீர்கள் என்று புரிகிறது. இது தெரிந்த பின் இந்த கேள்வியை நான் உங்களிடம் கேட்க்காமல் விடமாட்டேன்! அந்த கேள்வி - நான் ஒரு புத்தகம் எழுதினால் வெளியிடுவீர்களா?? சக்கைகள் எழுதியதையே நீங்கள் வெளியிடும்பொழுது மொக்கை நான் எழுதுவதை வெளியிடுவதில் தவறொன்றும் இருக்க முடியாது அல்லவா? யோசித்து சொல்லுங்கள் சார். அவசரம் இல்லை!

    புத்தகத்தின் பெயர் "அக்கப்போர் அறிவாளி ஆவது எப்படி?")

    நன்றி

    ReplyDelete
  20. Dear Badri,

    //எப்போதெல்லாம் பார்ப்பனர் அல்லாதோர் தமக்குள்ளாகச் சாதிக் கலவரத்தில் ஈடுபடுகிறார்களோ அப்போதெல்லாம் பார்ப்பனர்கள், “பாத்தேளா, பாத்தேளா, நாங்கள்ளாம் ஷொன்னோமோன்னோ, இவாள்ளாந்தான் இப்டி அடிச்சுப்பா, வெட்டிப்பா, கொன்னுப்பா, நாங்கள்ளாம் யாரையும் ஒண்ணுமே ஷெய்றதில்லே. நாங்கள்ளாம் ஜாதி வித்யாசமே பாக்கறதில்லே” என்று சொல்லி நழுவப் பார்ப்பார்கள் என்பதுதான் இந்தக் கருத்து.//


    இதில் என்ன தவறு ?

    பார்ப்பன சமூகத்தை திராவிட கழகங்கள்/மற்றவர்கள் தாக்கிய / தாக்குகின்ற பொது, வேறு எந்த ஜாதியினர் அதனைத்
    தட்டிக் கேட்டனர்?
    அப்படிக் கேட்டிருந்தால், இன்று பார்ப்பனர்களும் மற்றவர்களுக்காக குரல் கொடுத்து இருப்பார்கள்.

    இந்த பரமக்குடி நிகழ்ச்சியைப் பற்றி, பார்ப்பனர் கூறுவதைப்பற்றி கவலைப்பட்ட யுவ கிருஷ்ணா, ராஜ சுந்தரராஜன்,
    மற்றும் தாங்கள், மற்ற செட்டியார், நாயக்கர், நாடார், கவுண்டர், மற்றும் பிற சமூக்கத்தினர் என்ன கூறுகிறார்கள்
    என்று ஏன் எழுதவில்லை?

    இந்தியாவில் இன்று அநேகமாக அனைவருமே தத்தமது ஜாதியினை விட்டுக்கொடுக்க முன் வருவதில்லை, தவறு
    தம் ஜாதியிடம் இருந்தாலும். இதுதான் இன்றைய நிஜம்.

    கண்டிப்பாக இந்நிலை மாற வேண்டும். எப்படி?

    அன்புடன், நாகராஜன்

    ReplyDelete
  21. NO, Your comment is excellent! "சக்கைகள் எழுதியதையே நீங்கள் வெளியிடும்பொழுது மொக்கை நான் எழுதுவதை வெளியிடுவதில் தவறொன்றும் இருக்க முடியாது அல்லவா?"

    ReplyDelete
  22. 'குலம், கோத்ரம், சடங்கு, சம்பிரதாயம், லொட்டு, லொசுக்கு இதையெல்லாம் ஒழிக்காமல் சாதிவெறியை குறைச்சிட, ஒழிச்சிட முடியுமான்னு நம்பறீங்களா சார்? இதையெல்லாம் சமூகத்தின் கட்டமைப்பாக ஏற்படுத்தி, அதை தாங்கிக் கொண்டிருப்பது யார்?'

    லக்கிலுக் சடங்குகளை செய்யவில்லை என்பதற்காக எந்த பிராமணன்/பிராமண அமைப்பு அவரிடம் சண்டையிட்டது.பிராமணர்கள் இவற்றை தாங்குகிறார்களா.அதனால்தான் பிறரும் செய்கிறார்களா.தான் கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் வீட்டில் உள்ள பெண்கள் கோயில்களுக்கு சென்று வழிபடுகிறார்களே அதையும்
    பிரமாணர்கள்தான் வழக்கமாக ஏற்படுத்தினார்களோ.
    ஒரு பக்கம் பிராமணர்களை திட்டவேண்டியது,
    சுஜாதாவின் படத்த்தை தன் வலைப்பதிவில் போட்டுகொள்ள வேண்டியது, தொழில்,ஆதாயம்
    என்று வரும் போது பிராமணர்களுடன் நட்பு பாராட்டி பலனடைய வேண்டியது, பொதுவில் பிராமண எதிர்ப்பு குரல் எழுப்ப வேண்டியது.லக்கிலுக் தன் தலைவர் வழியில் செல்கிறார் என்பதற்கு இந்த உதாரணம் போதாதா.அவசரநிலை காலத்தில்
    கருணாநிதிக்கு மருத்துவம் பார்க்க டாக்டர் பி.ராமமூர்த்தி தயங்கியதில்லை.ஏனெனில் அவர் தொழில் தர்மத்தை மதித்தார்.அவசரநிலை காலத்தில்
    திமுக தலைவர் வீடு இருக்கும் திசைக்கே கும்பிடு
    போட்டு பதுங்கியவர்களில் பலர் தலைவர் ஆட்சியில்
    அதற்கு முன் பலனடைந்தவர்கள்தான். மூப்பனாரையும் கருணாநிதியையும் 1996 தேர்தலில் கூட்டணி அமைக்க உதவியவர் சோ.அவர் எனக்கு என் சாதிதான் முக்கியம் ஆகவே எப்போதும் ஜெக்கு ஜால்ராதான் போடுவேன் என்று சொல்லவில்லை.

    ReplyDelete
  23. //திரு லக்கி போன்ற அரைகுறை அறிவிலிகள் சொல்லுவதை எல்லாம் சீரியசாக எடுத்துக்கொண்டு அதற்க்கு பதில் போடுவது வண்டலூர் ஜூவில் உள்ள கருங்குரங்கு என்னை பார்த்து பல்லை கடித்தது என்று புலம்புவதற்கு சமமாகும்! // Perrrrfectly agreed!

    ReplyDelete
  24. can we all please pause and think the persistent picture of the November 2008 law college violence.DMK was in power. Did not do much to stop/avoid it. AIADMK gets elected and like an impatient animal,waiting to slurp blood, it has unleashed this violence.

    A healthy comprehensive discussion is indeed the order of the time, i guess. But at least this incident has to be looked from the angle of the role/activity of democratically elected government.government sponsored violence, that is pre meditated murder.

    I might be wrong, but sure don't want this government(or any government)to play havoc with people's life and still be not criticised or even sen as an conspirator. Because, when the state decides to unleash such an incident everyone/system is left helpless.There is huge difference in accounting a government for responsibility and being a conspirator?

    ReplyDelete
  25. பத்ரி சார்!

    இந்த மாதிரி அனானிகளை விட்டு பின்னூட்டத்துலே என்னை திட்டுறதைவிட, நீங்க டைரக்டாவே பதிவுலேயே திட்டிட்டிருக்கலாமே? :-)

    ReplyDelete
  26. லக்கி: மேலே உள்ள ஏதேனும் பின்னூட்டங்களை நீக்கவேண்டும் என்று குறிப்பிட்டால் நீக்கிவிடுகிறேன்.

    ReplyDelete
  27. வேணாம் சார். அப்படியே இருக்கட்டும். ஒண்ணும் பிரச்சினையில்லை. பார்ப்பன பயங்கரவாதத்துக்கு இவையும் சாட்சிகள்தான் :-)

    ReplyDelete
  28. நவீன பார்ப்பனர் யுவகிருட்டிணரே, தங்களது பழக்கம் பத்ரிக்கு வரவில்லை. அனானிமசாக உங்களை வந்து திட்ட வேண்டும் என்ற அவசியமும் பத்ரிக்கில்லை.

    என்ன இருந்தாலும் வேண்டிய பார்ப்பான், வேண்டாத பார்ப்பான் என்று பார்க்கும் அளவுக்கு உங்களுக்கு ஒரு தெளிவு வந்துவிட்டதில்லையா, அது போதும். வாழ்க திராவிடம்.

    ReplyDelete
  29. மிகவும் ஆழமாக சமூக அக்கறையுடன் நீங்கள் துவங்கியதை மற்றவர்கள் (வழக்கம்போல்) சிறுபிள்ளைத்தனமாகத் திசை திருப்பி விட்டார்கள். ஜாதி என்பதை நிதானமாக அலசினால் அதற்கு சமய, சமூக பொருளாதார முகங்கள் தனித்தனியாக இருப்பது புரியும்.
    பிரம்மாவின் (உண்மையில் விஷ்ணுவின்) உடல் பாகங்களிலிருந்து ஜாதிகள் தோன்றிய கதைகள் அதன் சமயப் பின்புலம். பிராம்மணர்கள் தங்கள் சடங்குகள், தர்மங்களையெல்லாம் தலை முழுகி வெகு காலமான பின் அதற்கு இனிமேல் எந்த அர்த்தமும் இல்லை.
    பிராம்மணர்களுக்கு நிலம் தந்து ஆதரிக்க அரசுகள் இன்றி, சமூக அந்தஸ்து பெரிதும் சரிந்தபின் சமூக முகமும் அழிந்து விட்டது.
    பொருளாதார ரீதியிலும் பிராம்மணர்கள் தானமாக வந்த நிலத்தில் தர்பார் செய்த காலம் மலையேறிவிட்டது. இன்றைக்கு பிராமண ஆதிக்கத்தை நீங்கள் பார்க்க வேண்டுமானால் கலிஃபோர்னியாவுக்குத்தான் போக வேண்டும். அதனால் தமிழகத்தில் இப்போதும் பற்றி எரிகிற ஜாதிப் பிரச்சினைகளுக்குக் காரணம் தேடுகையில் பிரம்மாவின் இடுப்புக்கு மேல், கீழ் என்று சொல்லிக் கொண்டு பிராம்மணர்களைக் குற்றம் சாட்டுவது செத்த பாம்பு கடிக்க வருகிறது என்று கூறிக் கொண்டு அதை அடித்து வீரத்தை நிலைநாட்டிக் கொள்கிற காரியமாகும். அதனால் உண்மையில் வேறொரு பக்கம் கடிக்க வருகிற உயிருள்ள பாம்பைத் தவறவிட ஏதுவாகும்.
    ஜாதியின் சமய சமூக காரணிகள் அழிந்த பின்னும் மேற்கத்திய அடிமை முறை போல் அது ஏன் அழியவில்லை? அதை வென்டிலேட்டரில் வைத்துக் காப்பாற்றிக் கொண்டிருப்பது அரசியல்தான். அதை ஆட்டிப் படைப்பது பொருளாதாரம் தான். தென் மாவட்டங்களில் இன்று இருக்கும் ஜாதிப் பிரச்சினையை நேரில் கண்டறிந்த அனுபவத்தில் எழுதுகிறேன். மறக்குலத்தோர் இன்றைக்கு கிராமங்களில் புது நிலச்சுவான்தார்களாக, LAND MAFIAஆக உருவெடுத்து வருகிறார்கள். இனி ஜாதிப் பிரச்சினையை இந்தக் கோணத்திலிருந்தும் அலச வேண்டும். பிராம்மணர்கள் கிராமங்களில் பொருளாதார பலம் இழந்தது மட்டுமல்ல, கிராமப் பொருளாதாரமே பல மாற்றங்களை அடைந்து வருகிறது. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாகி வருவதால் கிராமங்களிலும் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் கொட்டம் தலைவிரித்தாடுகிறது.அது ஜாதிப் பிரச்சினைக்குப் புதிய பரிமாணத்தைத் தந்திருக்கிறது.
    தென் மாவட்டங்களில் ஜாதியை ஒழிப்பது அவ்வளவு சுலபமன்று. அது ஒரு CATCH 22 SITUATION! சமூகப் பொருளாதார மாற்றங்கள் வந்தால் ஜாதி ஒழியும். ஆனால் ஜாதி ஒழியும் வரை சமூக, பொருளாதார மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பில்லை. அரசியல் ரீதியாக மாற்றம் நிகழவும் அண்மை வருங்காலத்தில் வாய்ப்பில்லை. மறவர்களுக்கு அரசியல் செல்வாக்கு அதிகம். (எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும் அவர்கள் செல்வாக்கு குறையாத அளவு ஒரே வீட்டில் பல கட்சி உறுப்பினர்கள் இருப்பார்கள்.)
    பொருளாதாரம் இவர்கள் கையில் இருப்பதால் சமூக ரீதியாகப் பெரியதொரு புரட்சி நடந்தால் மட்டுமே இந்த நிலை மாறும். நில உரிமையை வைத்திருப்பது தவிர நெடுங்காலமாகவே மறவர்கள் லேவாதேவிக்காரர்களாகவும் இருக்கின்றனர். (பள்ளர்கள்- தேவர்கள் மோதலுக்கு இதுவும் ஒரு மறைமுகக் காரணம்.)
    சைவ மடங்கள் இதைத் தீர்க்குமா என்று கேட்டிருக்கிறீர்கள். தங்கள் நிலத்தில் உழைக்கும் பள்ளர்களை அடக்கும் முயற்சியாக மறவர்களுக்குத் தற்போதைய அந்தஸ்தை (லேவாதேவி + நில உரிமை) அளித்ததில் முக்கியமான பங்கு வகித்ததே ஒரு சைவ மடம்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?
    அதன் விளைவாக பலம் பெற்ற மறவர்களைக் கண்டு சாதி ஏணியின் மேலிருக்கிறவர்களும் அஞ்சுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? (வன்முறை என்று வரும்போது பள்ளர்கள் அதிகம் பாதிக்க்ப் பட்டாலும் அன்றாட வாழ்வில் எல்லா ஜாதியினருமே மறவர்களுக்குப் பயப்படுகிறார்கள் என்பதே உண்மை! சாதியின் சமூக, சமயக் காரணங்களை வலுவிழந்து அதன் பொருளாதார அம்சங்கள் மட்டுமே இப்போது வலுவாக இருக்கின்றன என்று நான் சொன்னது இதை எண்ணித்தான். சமயத்தையும் அரசியலையும் ஆட்டி வைப்பது பொருளாதாரம் தானே?)
    பின் குறிப்பாக மற்றொரு உண்மையையும் கூறி விடுகிறேன். ஜாதிவெறியால் கொலை செய்யவும் அஞ்சாத மறவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பழகுவதற்கு எளிய இனிய பண்பாளர்கள்! (பாசக்காரப் பசங்க என்றும் சொல்லலாம்!) உளவியல் ரீதியாக ஆழமாக ஆராயப் பட வேண்டிய விஷயம் என்று தோன்றியதால் இதை எழுதுகிறேன்.

    ReplyDelete
  30. எனது வலைப்பதிவிலிருந்து ப்ளாகர் மூலம் தங்கள் வலைப்பக்கத்துக்குள் நுழைய முயற்சித்தால் அனுமதி இல்லை என்று தகவல் வருகிறது. அதனால் அனானிமஸாக நுழைந்து பதிய வேண்டியுள்ளது. நிறையப் பேர் அனானிமஸாக நுழைய இதுவும் காரணமா? இது ப்ளாகரின் தவறா, அல்லது தங்கள் வலைப் பக்கத்தின் தவறா?

    ReplyDelete
  31. //இந்த மாதிரி அனானிகளை விட்டு பின்னூட்டத்துலே என்னை திட்டுறதைவிட, நீங்க டைரக்டாவே பதிவுலேயே திட்டிட்டிருக்கலாமே? :-) //



    //லக்கி: மேலே உள்ள ஏதேனும் பின்னூட்டங்களை நீக்கவேண்டும் என்று குறிப்பிட்டால் நீக்கிவிடுகிறேன். //



    நண்பர் திரு பத்ரி,



    திரு லக்கி அவர்கள் தன் எழுத்தின் ஆளுமையை ஏதோ அசாத்திய ரேஞ்சிற்கு நினைத்துக்கொண்டு அதைவிட இப்படி பட்ட மேதையை நீங்க திட்ட வழி

    செய்கிறீர்களே என்று வேறு புலம்புகிறார்.



    இந்த எழுத்துலக புலியின் எழுத்தாற்றலை கொஞ்ச நாளாகவே டிராக்கு செய்து வருகிறேன். ஒருவர் எப்படி பட்டவர் என்பதை ஒரு சில அவரின் எழுத்துக்களையோ

    அல்லது ஓரிரு இடங்களில் பேசும் பேச்சையோ நடவடிக்கையோ வைத்து அளவிடமுடியாததுதான்! ஆனால் இந்த பிலாகு உலகம் ஒருவரின் மனதை தெரிந்து

    கொள்ளும் வழியை சுலபமாக காட்டுகிறது, அதாவது கூர்மையாக கவனிக்கும் மற்றும் தொடர்பு படுத்தி பார்க்ககூடிய திறன் இருந்தால்!! இதை எலோரும் செய்ய

    முடியும் என்பது உண்மை. பொறுமை தேவை.



    திரு லக்கி தமிழ்நாடு டாக்கு என்ற தளத்தில் எழுதிய மிக அசிங்கமான எழுத்துக்களையும் இன்னும் பிற இடங்களை எழுதியதையும் (வேறு பெயரில் சில இடங்களில் வந்தாலும் அவர் யார் என்று எனக்கு தெரிந்துவிடும்) ஒரு வாசிப்பு செய்ததன் பலன் - இவர் ஒரு சினிமா வம்பாளன், அரட்டை எழுத்தாளன் என்பதற்கு மேல் ஒன்றும் இல்லை என்பது புரிந்தது!



    சுருக்கமாக சொன்னால் ஞாசூனியங்களின் நாடாளும் ஆசையின் பிரதிநிதிகளின் ஒருவர்! ஆபாச தமிழ சினிமா மற்றும் கட்டு அவுட் அரசியல் கடந்த நாற்ப்பது

    வருடமாக விதைத்த விஷக்குஞ்சுகளில் ஒருவர்!



    அறிவு என்ற ஒன்றை சினிமா என்ற கூட்டிற்குள்ளும் மூன்றாந்தார வாய் சவடால் அரசியல் என்ற வட்டத்திற்குள்ளும் இருக்கும் ஒன்றே என நினைத்து இயங்குபவர்! இவரைப்போன்ற அர்த்தமற்ற ஆன்மாக்கள் கட்டிய குப்பைமேட்டு மலைக்கு தன்னாலான குப்பைகளை தானமாக கொடுத்தவர், கொடுப்பவர்!



    இப்பேற்பட்ட வசை செம்மல் சொல்லுகின்றார், இவரை அனானிகள் திட்டுகிரார்களாம்!!! அதற்க்கு நீங்களும் தலை ஆட்டுகிறீர்கள்!!!



    நீங்கள் உங்களின் பின்னூட்டங்களை நீக்குவது இருக்கட்டும் பத்ரி, இந்த அறிவாளி எழுதிய ஆபாச வசவுகளை நீக்கவேண்டும் என்று அவர் எண்ணுவதில்லையே!!

    ReplyDelete
  32. ஏனென்றால் அப்படி எழுதப்படும் எழுத்துக்கள்தான் அறிவு, பகுத்தறிவு என்று அவரின் குருமார்கள் வரையறுத்தி இருக்கிறார்கள்!!


    நாஜிகளின் எழுத்துக்கள் எனக்கு மிக்க பரிச்சியம்! அவர்களின் குப்பைகளுக்கும் திரு லக்கி போன்றவர்கள் சக்கைகளுக்கும் வித்தியாசம் இல்லை!
    அட்லீஸ்ட் நாஜிகளோ உளறினாலும் ஒரு பக்கம் வியக்கத்தக்க நவீன அழிப்பு இயந்திரங்களை மற்றும் நவீன விஞ்ஞானத்தை உருவாக்கும் (அவை கொலை
    செய்யவே என்றாலும்) திறன் உடையவர்களாக இருந்தார்கள்!! ஆனால் இந்த நவீன நாஜிகளோ, அதிக பட்சம் கட்டடத்திற்கு கூரை செட்டு போடும்
    நிலையில்தான் இருக்கிறார்கள்!!

    அதைவிட்டால் எவனோ ஏதாவது பிளனடோரியம் கட்டினால் அதற்க்கு அவர்களின் குருவின் பெயரை வைப்பார்கள், திறப்பு விழ நடத்துவார்கள்,
    தங்களுக்கே பட்டம் கொடுத்துக்கொள்வார்கள் சாயிந்தரம் ஆனால் ஒரு குவார்ட்டர் உள்ளே விட்டு குறட்டை விடுவார்கள்!! இதுதான் இவங்க சாதனை!!! இதுதான் இவங்க விஞ்ஞானம்!!!

    பிறந்ததிலிருந்து பகுத்தறிவு பால் குடித்து வளர்ந்த இந்த கரை வேட்டி கரையான்கள் விஞ்ஞானம் முதல் வெட்டி ஞானம் வரை வாய்க்கு வந்தபடி பேசி, சான்சு கிடைத்தால் எழுதி, அதற்க்கு பகுத்தறிவு என்ற பொய் சாயம் பூசி கடைசியில் கல்லா கட்டி காசு பார்க்கும் வித்தையை தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தங்களின் கொடையாக அளித்து விட்டார்கள்!!

    அன்றளித்த கொடை, பல காலம் கண்டபடி திருடி தின்று, கொழுத்து போய் இன்று வியாதியஸ்தனாக திகாரிலும் வெல்லூரிலும் விம்மிக்கொண்டிருக்கிறது!!

    பிடிபட்ட பகுத்தறிவு பாசறையின் பூசாரிகள் பணம் எண்ணி பாவிகளாகவில்லை, பணம் பண்ணவே பூசாரிகளானார்கள், பாவங்களை பாதுகாக்கவே பகுத்தறிவு
    படம் போட்டார்கள்! தலைகள் உருண்ட பிறகும் இந்த ஒட்டுண்ணிகளின் உதிரிகள் வெட்கமில்லாமல் உலா வந்துகொண்டிருக்கிறது! உலா வருவார்கள் !! இவர்கள் சீரழித்த எண்ண ஓட்டங்கள், கணிசமான தமிழர்களின் மனதில் ஆழமாக, மறைமுகமாக இன்னமும் இருக்கிறது!! அவை மாற அவகாசம் தேவை. எங்கே அது நடந்து விடுமோ என்று அஞ்சியே இந்த அமிலம் ஒழுகும் அண்டாகாகசும்கள் அறிவாளிகைப்போல குப்பைகளை கொட்டிக்கொண்டிருக்கிறார்கள்!!

    இந்த சூனியத்தை முதலிலே கண்டவர் காங்கிரஸ் தலைவர் பக்த வத்சலம்! ஆனானப்பட்ட காமரஜே காலியான பிறகு இவர் சொல்லுவது எங்கே எடுபடும்!!
    இறுதியில் கிருமிகள் உடலை விழுங்கும் என்று தெரிந்த பிறகு, திராவிட எழுச்சியின் ஞாயம் ஒரு குடும்பத்தின் பாகெட் நிரப்புதலால் காலியாகிவிட்டது என்று புரிந்த பிறகு சாட்டை எடுத்த மலையாள பிள்ளை,ஏறக்குறைய திராவிட பீலாவை பெயரளவில் மட்டுமே இருக்க செய்து மற்ற எல்லா இடங்களிலிருந்தும்
    ஓடச்செய்தார்!! பாவம் முக்கியமான கட்டத்தில் இறந்தார், விடங்கள் மறுபடியும் அரியணை ஏற கதவை திறந்தார்!! லக்கிகள் பல பிறந்தார்!!

    ReplyDelete
  33. இந்தப் பதிவின் பின்னூட்டங்களை இத்துடன் முடுகிறேன்.

    ReplyDelete