Sunday, September 18, 2011

நுகர்வோர் பாதுகாப்பு

Consumers Association of India என்ற அமைப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு நடக்கும் லாபநோக்கில்லா அமைப்பு. நுகர்வோர் விழிப்புணர்வை அதிகப்படுத்துதல், நுகர்வோருக்கு ஏதேனும் பிரச்னை இருந்தால் அதனை எப்படி அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லுதல் என்று ஆலோசனை தருதல், அரசு அமைப்புகளுடன் பேசி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை இறுக்குதல் போன்றவை. இந்த அமைப்பின் அறங்காவலர்களுள் முக்கியமானவர், இந்த அமைப்பைத் தோற்றுவித்த நிறுவனர்களுள் ஒருவர் இப்போது 80 வயது ஆகும் தேசிகன். நான் இவரை நன்கு அறிவேன். (இவரைப் பற்றி அதிகம் வெளியே தெரியாதது... மங்கையர் மலர் என்ற பத்திரிகையை ஆரம்பித்தது இவரும் இவரது மனைவியும்தான். பின்னர்தான் இந்தப் பத்திரிகை கல்கி குழுமத்துக்கு விற்கப்பட்டது. இன்று கல்கி குழுமத்திலிருந்து வெளியாகும் அதிமுக்கியமான, அதிகம் விற்பனையாகும் பத்திரிகை மங்கையர் மலர்தான்.)

நேற்று கோட்டூர்புரம் பிர்லா கோளரங்க வளாகத்தில் இருக்கும் அறிவியல் நகரத்தின் அரங்கில் இந்திய நுகர்வோர் சங்கத்தின் சார்பில் 10 கையேடுகள் அடங்கிய தொகுப்பு ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகத் தொகுப்பு பற்றிப் பின்னர் விரிவாக எழுதுகிறேன்.

இந்தப் பதிவில், நேற்று நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட மத்திய அரசின் நுகர்வோர் இலாகா செயலர் ராஜிவ் அகர்வால், இ.ஆ.ப, தேசிகன் ஆகியோர் பேசியது பற்றி மட்டும்.

நுகர்வோராகிய நாம், நமது உரிமைகள் பற்றி அதிகம் தெரிந்துகொள்வதே இல்லை. 1980-களில் அதிகபட்ச விலை (MRP) என்பதை பேக்கேஜ்களில் அச்சிடுவது தொடர்பான போராட்டம் பற்றி தேசிகன் பேசினார். சில நாடுகளில் விற்பனை வரி தனி என்று போடப்பட்டிருக்கும். ஆனால் இந்தியாவில் அப்படி இருந்தால் விற்பனை வரி வசூலிக்கப்படும்; அரசிடம் போய்ச் சேரவே சேராது. அதனால் விற்பனை வரியை தயாரிப்பாளரிடமிருந்து வசூலித்துவிடலாம் என்பதால் ‘வரிகளும் சேர்த்து’ என்ற முறைதான் இந்தியாவில் வழக்கில் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு வரி. கோல்கேட் என்ன செய்தது என்றால், உள்ளதிலேயே எந்த மாநிலத்தில் அதிகமான வரியோ அதனை பற்பசைப் பாக்கெட்டில் போட்டு வசூலித்துவிட்டு அந்தந்த மாநிலம் கேட்கும் வரிபோக மீதியைத் தன் பைக்குள் போட்டுக்கொண்டது. எனவே அதிகபட்ச வரி என்பதைச் சேர்க்காமல் சராசரி வரி என்பதைக் கணக்கிடவேண்டும் என்று கோரப்பட்டது. ஹிந்துஸ்தான் (யூனி)லீவர் போன்ற ஒருசில நிறுவனங்கள் வெளிப்படையாக இதற்கான கணக்குகளைக் காண்பித்தன என்றார் தேசிகன்.

நுகர்வோர் சங்கம் இப்போது செல்பேசி அப்ளிகேஷன் ஒன்றைச் செய்துள்ளதாகவும் அதனை விரைவில் வெளியிடப்போவதாகவும் அவர் சொன்னார். நீங்கள் ஏதேனும் கடையில் கலப்படம் நடப்பதைப் பார்க்கிறீர்கள் அல்லது நுகர்வோராக உங்களை அவர்கள் ஏமாற்றுவதாகத் தெரிகிறது என்றால், அந்த மொபைல் செயலி மூலமாக உடனேயே புகார் கொடுக்கலாம். அந்த புகார் நுகர்வோர் சங்கத்துக்கு வந்து உடனடியாக சம்பந்தப்பட்ட அரசுத் துறைக்குச் செல்லும். ஏழு நாள்களுக்குள் உங்கள் புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டு முதல் பதில் கிடைக்க வழி செய்யப்படும் என்றார். (நுகர்வோர் சங்கத்தில் நீங்கள் உறுப்பினராக வேண்டும் என்று நினைக்கிறேன். உறுதி செய்துவிட்டுச் சொல்கிறேன்.)

ராஜிவ் அகர்வால் பேசும்போது தங்கத்துக்கு ஹால்மார்க் முத்திரை கொண்டுவரப்பட்ட கதையை நினைவுகூர்ந்தார். இந்தியாவில் விற்கப்படும் தங்கம் எதுவுமே சரியான காரட் சுத்திகரிப்பு கொண்டதல்ல. இதனால் நுகர்வோர் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டே வந்துள்ளனர். இப்போதுள்ள சட்டத்தினால் அனைத்து நகைக்கடைக்காரர்களையும் ஹால்மார்க் தங்கத்தை மட்டுமே விற்கவேண்டும் என்று வற்புறுத்த முடியாது. எனவே புதிய சட்டம் கொண்டுவரும் முயற்சியில் அரசு உள்ளது என்றும் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இந்தச் சட்டம் வந்துவிடும் என்றும் சொன்னார் அகர்வால்.

பொதுமக்களின் பேராசையாலேயே அவர்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகின்றனர் என்றார் அவர். பான்ஸி ஸ்கீம் (Ponzi Scheme) எனப்படும் ஏமாற்றுவித்தை பற்றி விரிவாகப் பேசினார். ஆயிரம் ரூபாய் கொடு, ஒரு மாதத்துக்குள் அதை இரண்டாயிரம் ரூபாயாக ஆக்கித்தருகிறேன் என்பார்கள்; இது எந்தக் கட்டத்திலும் சாத்தியமல்ல என்றாலும் மக்கள் இதுபோன்ற அறிவிப்புகளை நம்பி ஏமாந்துபோகின்றனர் என்றார். மும்பையைச் சேர்ந்த ஸ்பீக்ஏசியா என்ற நிறுவனத்தைப் பற்றிப் பெயர் குறிப்பிடாமல் பேசினார். இப்போது சம்பந்தப்பட்ட இந்த நிறுவனத்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காசு கொடுத்து உறுப்பினராகு; சில கருத்துக் கணிப்புகளில் ஈடுபடு; உனக்கு மாதாமாதம் காசோலையாக வந்து குவியும் என்று ஊரை ஏமாற்றி உலையில் போட்டது இந்த நிறுவனம். சுமார் 2,000 கோடி ரூபாய் வரையில் சுருட்டியுள்ளனராம். சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு நடந்துவரும் நிறுவனம் இது. (தமிழ்ப் பத்திரிகைகள் யாரும் இதைப்பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை.)

நிதி முதலீடு என்று வரும்போது பொதுமக்கள் பெருமளவு ஏமாற்றப்படும் நிலை இருந்தால் நுகர்வோர் துறையால் பெரிதாக ஒன்றையும் செய்யமுடியாது என்றார் அகர்வால். அவர்களும் காவல்துறையிடம்தான் சென்று புகார் கொடுக்கமுடியுமாம். புகார்களைத் தாங்களே ஏற்று நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்க, சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என்றார்.

***

ஒரு நுகர்வோராக நாம் பல வழிகளிலும் ஏமாற்றப்படலாம். அப்படிப்பட்ட நிலையில் நம் உரிமைகள் என்னென்ன, எம்மாதிரியான வழிகளில் நம்மை ஏமாற்றியுள்ள நிறுவனங்கள்மீது வழக்கு தொடுக்கமுடியும், யாரிடம் புகார் செய்யலாம், ஏமாறாமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கைகளை எடுத்துக்கொள்வது போன்றவற்றை நாம் அனைவருமே அறிந்துகொள்வது முக்கியம்.

வரும் நாள்களில் இந்தப் பத்து கையேடுகளிலும் எம்மாதிரித் தகவல்கள் உள்ளன, அவை எப்படி நமக்குப் பயன் தரும் என்பதை விளக்குகிறேன்.

5 comments:

  1. //சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு நடந்துவரும் நிறுவனம் இது. (தமிழ்ப் பத்திரிகைகள் யாரும் இதைப்பற்றிப் பேசியதாகத் தெரியவில்லை.)//

    நாணயம் விகடனில் இது பற்றி எச்சரிக்கையுடன் ஒரு கட்டுரை வந்துள்ளது

    - பா.சரவணன்

    ReplyDelete
  2. Please let me know how can I get those 10 books.

    ReplyDelete
  3. ponzi scheme is onething that should be in the samacheer sylabus.

    ReplyDelete
  4. பத்ரி, மக்களுக்கு அவசியம் தெரிய வேண்டிய, தெரிய படுத்த வேண்டிய பல சட்ட திட்டங்களை அரசு எப்போதுமே ரகசியமாக வைத்து உள்ளது அல்லது அது போல் தோன்றுகிறது. உதாரணம், போக்குவரத்து விதிகள் மற்றும் ரயில்வே விதிகள். இதே விஷயத்தை இங்கிலாந்து அரசு public domain -il வெளியிட்டுள்ளது (http://www.direct.gov.uk/en/TravelAndTransport/Highwaycode/index.htm ) . சட்ட திட்டத்தை தெரிந்த ஒருவர் உதவி எனக்கு கிடைத்தால், அதை நான் இலவசமாக வெளியிட தயாராக உள்ளேன் (புத்தகமாக அல்ல!), அதே போல என்னுடைய www . customercare . கோ. இன்னில் நுகர்வோர் உரிமைகளை வெளியிட தயாராக உள்ளேன்.

    ReplyDelete
  5. oh bye the way Batri, I am not advertising my domain www.customercare.co.in. I registered it with the intention of making it useful for the consumer rights but I do not know any laws or rules on consumer rights. So I did not start it for not wanting to give wrong information...and luckily I read your article on that. So thats the bottom line. I am happy to take care hosting and other stuff, but if "they" can take care of advising on complaints...that would be great for the starters.

    ReplyDelete