Sunday, September 18, 2011

ஐஐடி/ஐஐஎம் கல்வியின் விலை

நான் ஐஐடி சென்னையில் (IIT Madras) பி.டெக் படித்தபோது (1987-1991) ஆண்டு டியூஷன் கட்டணம் ரூ. 200/- (இருநூறு மட்டுமே). அந்தக் கட்டத்திலேயே அது மிகவும் குறைவான கட்டணம். அரசாங்க மானியம் தரப்பட்டதால்தான் இப்படிக் குறைவான கட்டணத்தை வசூலித்தனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து, இப்போது ஆண்டுக்கு ரூ. 50,000/- (ஐம்பதாயிரம் மட்டுமே) என்று உள்ளது என்று சென்ற வாரம் மிண்ட் செய்தித்தாளில் பார்த்தேன். இந்தக் கட்டணத்தை நான்கு மடங்காக உயர்த்தப்போவதாக அந்தச் செய்தி சொன்னது. அதாவது ஆண்டுக்கு ரூ. இரண்டு லட்சம்.

இது பற்றிப் பேசியிருந்த அமைச்சர் கபில் சிபல், ஒரு மாணவருக்கு நான்கு ஆண்டுகளுக்குக் கல்வி கற்றுத்தர ஆகும் செலவு கிட்டத்தட்ட ரூ. எட்டு லட்சம் என்றும் அதனால் இப்போதைக்கு ஒவ்வொரு மாணவருக்கும் தரப்படும் மானியம் ரூ. ஆறு லட்சம் என்றும் சொல்லியிருந்தார்.

உயர் கல்விக்கு மானியம் தருவது அவசியமா, கூடாதா என்று கட்டாயம் ஒரு விவாதம் தேவை.

சமீபத்தில் ஐஐஎம் பெங்களூரு (IIM Bangalore) சென்றிருந்தேன். அங்குள்ள மாணவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது இரண்டு ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் மட்டும் சுமார் 15 லட்ச ரூபாய் என்றனர். பெரும்பாலான மாணவர்கள் கல்விக் கடன் பெற்றே படிக்கின்றனர். எனவே படிப்பு முடிந்தவுடன் மிக அதிகச் சம்பளத்தை யார் தருவார்கள் என்று பார்த்து வேலையை எடுத்துக்கொள்கின்றனர்.

அந்த மாணவர்கள் என்னை அழைத்திருந்தது தொழில்முனைவோர் தொடர்பான ஒரு கருத்தரங்குக்கு. தொழில்முனைவோர், வென்ச்சர் கேபிடல்காரர்கள் என்று பலர் அங்கு வந்திருந்தனர். சுவையான விவாதங்கள் நடைபெற்றன. என்னவோ நாளைக்கே நாற்பது பேர் தனியாக startup நிறுவனங்களை ஆரம்பித்துவிடுவார்களோ என்று நினைத்தேன். ஆனால் தனியாக மாணவர்களிடம் பேசியபோது யாருக்குமே உடனடியாகத் தொழில் தொடங்க விருப்பம் எதுவும் இல்லை என்பது புரிந்தது. தொழில் தொடங்கினால் கைக்கு உடனே பைசா வராது. மாறாக இன்வெஸ்ட்மெண்ட் பேங்க் அல்லது கன்சல்ட்டிங் வேலைக்குப் போனால் ஆண்டுச் சம்பளம் 20 லட்ச ரூபாய் அல்லது அதற்குமேல் கிடைக்கும். இரண்டு வருடத்தில் கடனை அடைத்துவிட்டு, பின்னர் சொத்து சேர்த்துத் தொழில் தொடங்கலாம் என்பது இவர்கள் கருத்து.

ஆனால் வேலைகளை எடுத்துக்கொண்டார்கள் என்றால் கூடவே செலவு பிடிக்கும் பழக்கங்களையும் கற்றுக்கொள்வார்கள். ஆடம்பரக் கார் வாங்குவார்கள். செலவற்ற, சிக்கனமான வாழ்க்கைக்கு மீண்டும் வர மனது மறுக்கும். இவர்கள் யாருமே தொழில்முனைவோர் ஆகப்போவது இல்லை என்று தோன்றியது.

தொழில்நுட்பக் கல்வி தர செலவு அதிகமாகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. நான்கு ஆண்டுகளுக்கு எட்டு லட்ச ரூபாய் என்றால் அதைக்கூட ஏற்கலாம் என்று தோன்றுகிறது. ஆனால் இரண்டு ஆண்டுகள் மேலாண்மைக் கல்விக்குப் பதினைந்து லட்ச ரூபாய் என்பது மிக அதிகம் என்று தோன்றுகிறது.

பணம் பிடுங்குவதே குறியாக இருக்கும் தனியார் கல்லூரிகளில் கேபிடேஷன் கட்டணம் என்ற பெயரில் அநியாயம் நடப்பது ஒருபக்கம் என்றால் இங்கே அரசு நடத்தும் கல்லூரிகளிலேயே கன்னாபின்னாவென்று கட்டணம் வசூலிப்பது நியாயமா? கொடுப்பதற்கு ஆள் இருக்கிறார்கள்; உனக்கென்ன பிரச்னை என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அதிகக் கட்டணம் காரணமாக மனிதவளம் முற்றிலும் தவறான திசையிலேயே செலுத்தப்படுகிறதே? இதனால் நாளடைவில் நஷ்டம் நமக்குத்தான்.

***

தரமான கல்வியை சரியான கட்டணத்தில் மாணவர்களுக்குத் தரவேண்டும். அரசு மானியங்கள் இருக்கக்கூடாது. அந்தக் கல்வியைப் பெற மாணவர்கள் கண்டபடிக் கடன் வாங்கி, தம் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ளவும் கூடாது. அதிகச் சம்பளம்தான் முக்கியம் என்று யோசிக்காமல் தொழில்முனைதலில் ஈடுபடவேண்டும் அல்லது குறைந்த சம்பளமும் அதிகத் தாக்கமும் உள்ள வேலைகளையும் எடுத்துக்கொள்ள முற்படவேண்டும். இதனை எப்படிச் சாதிப்பது? உங்களிடம் எதேனும் கருத்துகள் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

22 comments:

  1. திரு.பத்ரி,

    அவசியமான பதிவு. அரசு மானியங்கள் தரக்கூடாது என்பதை ஒத்துக் கொள்ள முடியவில்லை. எட்டு லட்சம் கல்விக் கட்டணம் என்றால் விடுதிக் கட்டணம், சாப்பாட்டுச் செலவெல்லாம் என்ன செய்வதாம்? சொந்தமாக காசு இருந்து செலவு செய்பவர்களுக்குப் பரவாயில்லை. கடன் வாங்கிச் செலவு செய்பவர்கள் கண்டிப்பாக காசு சம்பாதிப்பதைத்தான் குறிக்கோளாகக் கொள்வார்கள். தவிர்க்க இயலாது. இரண்டு லட்சம் மூன்று லட்சம் என்றால் பரவாயில்லை. எட்டு பத்து பதினைந்து லட்சம் கடன் என்றால்?

    சரி மானியம் தந்தாலும் அவர்கள் சொந்தமாக எதையும் முயல மாட்டேன் என்கிறார்களே! ஏன்?
    அவர்கள் மனோநிலையில் ஒரு மாற்றம் உருவாக வேண்டும். அவர்களால் குறைந்த பணத்தைக் கொண்டு வாழ முடியும் என்ற சூழ்நிலை வரவேண்டும். இப்போதுள்ள விலைவாசி உயர்வால் இது சாத்தியமா என்று தெரியவில்லை. சமுதாயம் அவர்களை ஆதரிக்க வேண்டும். சவால்களை ஏற்கும் மனோநிலை உருவாக வேண்டும். வாழ்க்கையே தரமற்றதாக எந்திரத் தனமாக போய்க் கொண்டிருக்கும் இக்காலத்தில் இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க அவர்களுக்கு நேரமிருக்கிறதா என்ன?

    சரி நான்கு ஐந்து வருடங்கள் பணம் சம்பாதித்துவிட்டு தொழில் தொடங்கலாமே என்று கேட்கலாம். ருசி கண்ட பூனை சும்மா விடுமா?சவால்களை சரியான வயதில் ஏற்கத் தொடங்க வேண்டும். காலம் கடந்தால் வராது என்றே தோன்றுகிறது.

    அன்புள்ள
    பா.மாரியப்பன்

    ReplyDelete
  2. Also whats the guarantee they will stay back in India either to work or start-up a new company.

    IIT Students, many of them will take up higher education also.

    ReplyDelete
  3. The right question is can we consider higher education as a merit good or as a public good.
    What are the objectives of higher education policy- access with excellence as goal, access with ability to pay as condition, access with equity and inclusion.
    Should subsidy be recovered by the government or should subsidy be treated as investment in human capital.

    ReplyDelete
  4. முற்றிலும் உண்மை. பணம் அதிகமாக கொடுத்து படிப்போர் பின் அந்த பணத்தை ஈட்டவே செய்வர். தொழில் முனைவது என்பது ஒரு காலத்தில் "பணம் படைத்தோர்" க்கு மட்டுமே வசப்பட்ட விஷயம் என்பதை மாற்றியதில் கல்விக்கு குறிப்பாக அரசு கல்லூரிகளுக்கு பெரும்பங்கு உண்டு.

    கல்வியின் தரம் உயர்த்த ஆகும் செலவினங்கள் என்று ஒரு பக்கம் இருந்தாலும் அதையே ஒரு காரணம் சொல்லி கல்வி கட்டணத்தை உயர்த்தல் தவறு.

    அரசு தரும் நிதி உதவிகள் தவிர வேறு எவ்வகையில் பணம் திரட்ட முடியும் என்பதை கல்லூரிகளும் சிந்திக்க வேண்டும்.

    தனியார் நிறுவனங்களுக்கு நிகரான விழாக்களையோ அல்லது கருத்தரங்குகளையோ அரசு நிறுவனத்தினால் நடத்த இயலாததன் காரணமும் இதுவே.

    கல்லூரிகளின் பெரும் சொத்து அங்கே படிக்கும் "மாணவ/மாணவிகள்" அவர்களை கொண்டு ஆராய்ச்சி, தொழில்துறை சார்ந்த ஆய்வு மற்றும் ஆலோசனை போன்றவற்றை வழங்க முயற்சி செய்யலாம். கல்விச்சாலைகளின் முக்கிய பணி கல்வி கற்பித்தல் என்பதாக இருந்தாலும் கூட பிற தனியார் மற்றும் வெளி ஆட்கள் துணை கொண்டு கூட இதனை செய்யலாம். இதனை ஐஐடி போன்ற கல்விக்கூடங்கள் வெற்றிகரமாகவே செய்து வருகின்றன.

    நான் சந்தித்த, பார்த்த அனுபவங்கள் அடிப்படையில் கல்வி நிறுவனங்களில் இருக்கும் உபகரணங்கள், வெறும் ஆய்வுகூட பணிக்கே என்பதை மாற்றி அமைத்திட வேண்டும்.

    ReplyDelete
  5. Salary to human resources (professors/lecturers) forms the biggest cost of running a reputed institution like IIT/IIM. Reducing their salary might not be a good idea since they might end up going to other private run institutions (if not to the institutions in other countries). So to an extent, the higher fee structure for post graduation/graduation in these institutions is only justified.

    There is definitely a problem of not many students venturing into entrepreneurship because of their loans. But I am not sure if that's the primary deterrent for someone who want to start something on their own. (It could be one of the reasons). But if one is very determined about it even during the course, (s)he will start after two years of work experience.

    To an extent, some of the IIMs and IITs (since I am from IIT Kharagpur, atleast I know that it exisits in IIT Kharagpur) have started an initiative to counter this. One is allowed to opt-out of placements and pursue entrepreneurship for three years. If she doesnt succeed, she can come back and sit for the placements after those three years. This has seen good response in IITKGP where the number of people who opt-out of placements has steadily increased.

    Regards
    Santhosh

    ReplyDelete
  6. I think in 15lakhs is ok becase here in singapore for doing MBA for 2 years fees will be around 80K SGD, it is cheap in india

    ReplyDelete
  7. Now IITs have devised a plan to collect fees AFTER the student has landed in a job. I think it is sensible.

    Saravanan

    ReplyDelete
  8. A similar scenario exists for medical graduates in the US where they graduate with a big mortgage but without a house! This is in turn forces them to quickly turn to private practice and demand a high pay to try to get rid of their loans, thus indirectly driving up the health care costs for the community as a whole. More importantly, research training and participation in innovative research takes a back seat, as typically research careers are harder, pay a lot less and hence the graduates deter from getting here, as their loans will only increase.

    To combat this the National Institute for health, a federal agency has come with a "Loan repayment program" (see: http://www.lrp.nih.gov/eligibility/eligibility_of_loans.aspx) wherein the state will pay your loan back if you commit to a research career. This sort of repayment programs should be initiated by the IIT/IIM/State agencies, so that entrepreneurs are rewarded for their quest for innovation.

    ReplyDelete
  9. Do you think people who study in IIT are poor!!! more then 90% are the well-off middle class who have spent some lakh rupees for IIT entrance training... so this fee hike will not be a big burden

    Talking about IIM... no amount of money will be equal to the quality of education and the bright future career of the STUDENT. And many there too are wealthy as in this competitive world all go for HIGH LEVEL COACHING

    ReplyDelete
  10. loans should be given at low interest for atleast 30+yrs. And the repayment should start after atleast 4-5yrs. this should given them some breather to try things.
    here in US, it's atleast low interest, so they repay every other loan and keep this as the last one to fully repay and just pay the EMI.

    ReplyDelete
  11. /தரமான கல்வியை சரியான கட்டணத்தில் மாணவர்களுக்குத் தரவேண்டும்./
    சரியான கட்டணம் என்பதை நிர்ணயிப்பதில்தான் குழப்பம் நிலவுகிறது. உண்மையாக ஏற்படும் செலவிற்கு மேல் 5-10 சதவீதம் கூடுதலாக வருடாவருடம் ஏற்படும் பண வீக்கங்களுக்கு ஏற்ப நிர்ணயிக்கப் பட வேண்டும். சில ஆண்டுகளுக்கு மாற்றாமல் தயங்கினால் பண வீக்கத்தினால் 10 மடங்குக்கு மேல் ஏற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்போது பிரச்சினை ஏற்படுகிறது. அதனை சமாளிக்க இயலாது.

    / அரசு மானியங்கள் இருக்கக்கூடாது. அந்தக் கல்வியைப் பெற மாணவர்கள் கண்டபடிக் கடன் வாங்கி, தம் வாழ்க்கை முறையையே மாற்றிக்கொள்ளவும் கூடாது./
    மிகவும் சரி. படிக்கும் போதே பகுதி நேர வேலை பார்ப்பதும் அதன் மூலம் மட்டும் தான் உயர்கல்வி கட்டணம் கட்டப் பட வேண்டும் என்று நிர்ணயித்தால் பல பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வாய் அமையும்.
    /அதிகச் சம்பளம்தான் முக்கியம் என்று யோசிக்காமல் தொழில்முனைதலில் ஈடுபடவேண்டும்/
    இது நடைமுறையில் சாத்தியப் பட வேண்டுமென்றால் கல்வி முறையில் மாற்றங்கள் தேவை. ஆய்வு படிப்புக்கான முனைதலுக்கான ஆரம்ப பாடங்களும், கற்பிக்கும் முறையில் மாற்றங்களும் தேவை.
    தொழில் செய்வதற்கான தயார்படுத்தலுக்கான படிப்பு முறையும் தொழில் முனைவதற்கான தயார்படுத்தலுக்கான படிப்பு முறையிலும் மாற்றங்கள் தேவை.
    விரிவாக இதனை விரைவில் விளக்கி பதிவு போடுகிறேன்.
    இங்கு பின்னூட்டம் பெரிதாகி விட்டது. இடமில்லை.

    ReplyDelete
  12. ஆரம்பக் கல்வியே பலருக்கு தரமாய் கிடைக்க வில்லை :-) தரமற்ற ஆரம்பக் கல்வியால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகம் என்பதை எல்லோரும் ஏற்றுகொள்ள வேண்டும் !!

    ReplyDelete
  13. கல்வி அளிக்க பணம் என்பதே தவறான ஒன்று.அரசாங்கம் பல லட்சம் கோடி ரூபாய்களை ராணுவத்திற்காக செலவழிக்கிறது.ஒவ்வொரு வீரரையும் உருவாக்க பல லட்சம் ரூபாய் செலவு ஆகும்.அது அவர்களிடம் இருந்து வசூலிக்கப்படுமா.air இந்தியா நிறுவனம்,இந்தியா விமான படை பைலட்களுக்கு கோடிக்கணக்கில் செலவாகும் பயிற்சியை இலவசமாக வழங்கும்.அவர்கள் சில குறிப்பிட்ட வருடங்கள் வேலை பார்க்க வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன்.அதையே கல்வியிலும் செய்யலாம். +2 முடித்து ராணுவத்தில் அதிகாரியாக சேரும் மாணவருக்கு அரசாங்கம் செலவழிக்கும் தொகை இருபத்தி ஐந்து லட்சங்களை தாண்டும்.அதை அவர் திருப்பி கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஞாயமா.கல்லூரியில் சேரும் போதே இந்திய ஆட்சி பணி துறை,ராணுவம்,பொது துறை போன்றவை campus selection /தேர்வுகள் நடத்தி அவர்களுக்கு வேண்டிய மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.இதையே டாட்டா,ரிலையன்ஸ்,இன்போசிஸ் போன்றவர்களும் செய்து அவர்களின் கல்வி செலவுகளை ஏற்று கொள்ளலாம்.மாநில அரசுகளும் அவர்களின் பல்வேறு துறைகளுக்கு மாணவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.இதில் சேர விருப்பம் இல்லாதவர்கள் பணம் கட்டி படிக்கலாம்.மேற்கூறிய நிறுவனங்களில் சேர மாணவர்கள் விருப்பம் காட்டவில்லை என்றால்,காட்டும் மாணவர்களுக்கு இடங்களை அதிக படுத்தி வழங்கலாம்.
    IIM மேற்படிப்பு படிப்பிலும் இந்த முறையை பயன்படுத்தலாம்.அதோடு அவரவர்,மாவட்டம்,மாநிலம்,நாட்டில் தொழில் துவங்குவோர்க்கு ,துவங்க முயல்வோருக்கு வட்டியில்லா கடனாக அவர் திரும்ப செலுத்தும் வரை தரலாம்.அவர் செலுத்தும் வருமான வரியை இந்த கணக்கில் கழித்து கொள்ளலாம்.
    சிக்கிமை மற்ற மாநிலங்களோடு இணைக்கும் சாலை.போட பல்லாயிரம் கோடி ரூபாய் செலவு ஆகியது,ஆகும்.அங்கு மக்கள் தொகையே சில லட்சங்கள் தான்.அதனால் எதெற்கு என்று விட்டு விடலாமா.அதே போல் தான் கல்வியும்.இந்தியாவில் பல்லாயிரம் பேர் மருத்துவர்,பொறியாளர்,வழக்கரின்ஞர் ,தொல்துறை ஆராய்ச்சியாளர்களை உருவாக்க வேண்டியது அரசின் கடமை.அதுவும் infrastructure development தான்.

    ReplyDelete
  14. //அதுவும் infrastructure development தான். //

    வழிமொழிகிறேன்

    ReplyDelete
  15. indian education system needs...more improvement!!

    ReplyDelete
  16. one idea would be to set up endowments and subsidize the tuition fees for financially backward students. Money required for such endowments has to be raised from alumni members from their contributions and or also from the corporations they are running.
    These institutes like IIT & IIM produces top notch students who are generally well off and are in the board of directors of very prestigious companies. Gradually endowment will have significant sum to offset the cost of running these institution. Harvard, Stanford and Johns Hopkins are some examples we need to look at.
    thiyagarajan

    ReplyDelete
  17. ஐ.ஐ.எம்-மையும் ஐ.ஐ.டி.யையும் இந்த விசயத்தில் ஒப்பிடக்கூடாது என்று கருதுகிறேன். ஐ.ஐ.எம். என்பது மேலாண்மைப் படிப்பு. ஏற்கனவே நல்ல படிப்பு மற்றும் சம்பளம் அல்லது சம்பாதிக்கும் திறன் உள்ளவர்களே இதில் சேர்கின்றனர். இவர்கள் யாரும் இங்கு ஏதேனும் கற்பதற்கு இருக்கிறது என்று சேர்பவர்களல்ல. இங்கு கற்றால் நல்ல சம்பளத்திற்கு வேலைக்கு எடுக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்குதான் அங்கு சேர்கிறார்கள். எனவே அவர்களிடம் கொள்ளை அடிக்காமல், செலவுக்கேற்ற தொகையை கல்விக்கட்டணமாக வாங்கினால் தவறில்லை!

    ஐ.ஐ.டி.யை நான் அப்படிப் பார்க்கவில்லை. அதிலுள்ள பி.டெக் படிப்புகளுக்கு மானியம் தற்போதுள்ள அளவில் கொடுக்கலாம். ரூ.50000 என்பதே அதிகம்தான். இது உயர்படிப்பு அல்ல, உயர் தரமுள்ள ஆரம்ப நிலை பட்டப்படிப்பு. ஐ.ஐ.டி.க்கள் ஒருவிதத்தில் நம் நாட்டின் பெருமிதங்களுள் ஒன்றும் கூட. அவற்றை ஆராய்ச்சிக் கூடங்கள் போன்றுதான் ந்டத்த வேண்டுமே ஒழிய வியாபார மையங்களாக்கிவிடக்கூடாது. எப்படியும் மாணவர்கள் வெளி நாடு தானே போகிறார்கள் என்ற பிரச்சனையை மட்டும் முன்வைத்து மானியத்தை விட்டுவிடக்கூடாது. எப்படி 13 வயது வரை அணைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்கிறோமோ அதைப் போலவே குறிப்பிட்ட சதவிகிதத்தினருக்கு நல்ல பட்டப் படிப்புக்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். நினைத்துப் பார்த்தீர்களானால் scholorship போன்ற திட்டங்கள் இப்படித்தான் உருவாக்கப் பட்டன. scholors should get scholorship. அதாவது மாணவர்களில் சிறந்தவர்களுக்கு தரமான உயர்படிப்பை அரசு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

    ReplyDelete
  18. In addition to endowments etc., IIM should insist on at least 3 years working experience as one of the qualifications. It will give an added maturity and financial stability to pay the fees(at least partially). again this is the practice at Harvard.

    Also just by a degree nobody can become a ventur capitalists... it needs higher level skills not exactly taught in any school.
    During student recruitment one should not go just by their GMAT (or equivalent)scores.... the guy should have a 'fire in the belly' to start a business. Through interviews one can spot such talents.
    thiyagarajan

    ReplyDelete
  19. பத்ரி அவர்களுக்கு வணக்கம். ஒருபக்கம் நீங்கள் "மெலிதான அரசு, கல்வியை தனியாரே ஏற்க வேண்டும்.." என்று கூறுகிறீர்கள். இந்தப் பதிவில் தனியார் மேலாண்மை நிறுவனங்கள் அடிக்கும் "கல்விக் கொள்ளை" யையும் அதனால் ஏற்படுகின்ற விளைவுகளையும் சொல்கிறீர்கள். இப்போதேனும் முக்கியமான பொதுத் துறைகளில் அரசின் "தவிர்க்க இயலாத" பங்கினை ஒத்துக் கொள்கிறீர்களா?

    ReplyDelete
  20. Two ways for a higher-ed institution to save on costs are:

    1) Open courses (e.g.: MIT Open courseware). These days, it seems to be possible to put together the entire UG Engineering / Science curriculum from available online video lectures

    2) Simulation software as opposed to the traditional lab equipment route (e.g: LabView instead of "bread board / IC-soldering) etc.

    It seems like it is time for a Tata-nano-like "low-cost" experiment in higher-ed as well!

    -karthik

    ReplyDelete
  21. கருத்துகள் பலவற்றுக்கும் நன்றி. முடிந்தால் நாளை இவற்றைத் தொகுத்து ஒரு பதிவாக எழுத முற்படுகிறேன்.

    ReplyDelete
  22. அறிவியலுமில்லை, அஸ்திவாரமுமில்லை!: அ. நாராயணன் கட்டுரை தினமணியில்
    ( image )

    // ÷ஐஐடி மட்டுமல்ல, இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள உயர்கல்வி நிறுவனங்களும், அரசுத்துறை ஆராய்ச்சி நிறுவனங்களும், மக்கள் வரிப்பணத்தில் சுகமாகக் காலம் கழிக்கும் வெள்ளை யானைகளாகவே அமைந்துவிட்டன என்று குற்றம் சாட்டினால், அதில் 80 விழுக்காடு உண்மை இருக்கிறது.

    ÷அதுமட்டுமல்ல, இந்தியாவில் உயர்கல்வி கற்க முன்வரும் லட்சக்கணக்கான இளைஞர்களை வழிநடத்தத் தவறுவதோடு, பெரும்பாலான படித்த இளைஞர்களின் வளம், நாட்டின் முன்னேற்றத்துக்கும், சமுதாயப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் பயன்தராமல், மனித ஆற்றல், விழலுக்கு இறைத்த நீராகிவிடுவதற்கு, உயர்கல்வித்துறை கல்வியாளர்களின் குறிக்கோளற்ற செயல்பாடுகளே காரணம்.

    ÷இந்நிலையில், அடிப்படைப் பிரச்னைகள் பற்றிப் புரிதல் ஏற்படுத்தாமல், நானோ தொழில்நுட்பம் பற்றியும், 2020-ல் வல்லரசுக் கனவு பற்றியும், உயர்ந்த இடத்தில் உள்ள சிலர் பேசுவது, இளைஞர்களைத் திசை திருப்புவதற்கே உதவுகிறது.

    ÷அதனால் தான் இந்தியாவில் பகுத்தறிந்து, ஆய்வின் அடிப்படையில் எந்த ஒரு விஷயத்தையும் அணுகுவதில்லை. அதனால் தான், மேம்பாலம், விமான நிலையம், மெட்ரோ ரயில், ராக்கெட் விடுவது, கம்ப்யூட்டர் வடிவமைப்பு, அணுஉலை, அலைபேசி, இவ்வளவு ஏன், குப்பை மேலாண்மைக்குக்கூட அயல்நாட்டுத் தொழில்நுட்பத்தையே அண்டியிருக்கிறோம். இன்றைக்கு இந்தியாவில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான தொழில்நுட்பங்கள், கடன் வாங்கப்படும் தொழில்நுட்பங்களே.

    ÷அடுத்த மிக மோசமான நிலை என்பது, சமூக அறிவியலும், சமூகவியலும் இல்லாத வறட்டுத்தனமான உயர்கல்வி. சமூக அறிவியலானது, நம்நாட்டில் பத்தாம் வகுப்புப் பள்ளிக்கல்வியோடு தொலைந்து போகிறது. மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், தொழில் மேலாண்மை, தணிக்கையியல், பொருளாதாரம் போன்றவற்றைப் படிக்கும் எந்த உயர்கல்வி மாணவர்களுக்கும், சமூக அறிவியலை துணைப்பாடமாக முகர்ந்து பார்க்கும் வாய்ப்புக்கூட இல்லை.

    கார் வாங்குவது, வீடு வாங்குவது போன்று, பட்டத்தை மிக அதிக விலை கொடுத்து உயர்கல்விக் கொள்ளையர்களிடமிருந்து வாங்குவதால், வாழ்க்கையைத் தொடங்கும் போதே கடனாளிகளாகும் இளைஞர்களுக்கும், அவர்களால் நாட்டுக்கும் என்ன பயன்?//
    ------------------------

    ReplyDelete