Thursday, May 13, 2004

தேர்தல் 2004 - சோனியாதான் அடுத்த பிரதமராவார்

பாரதீய ஜனதா கட்சி ஆட்சியை இழந்து விடும் என்பது இப்பொழுது முடிவாகி விட்டது. இன்னமும் நிலைமை தெளிவாகவில்லை எனினும் தே.ஜ.கூட்டணிக்கு 190 இடங்களுக்கு மேல் கிடைக்காது என்பது மட்டும் தெளிவாகியுள்ளது.

இப்பொழுது காங்கிரஸ் நிச்சயமாக ஆட்சியை அமைக்க முடியும் என்று தோன்றுகிறது. அதற்கு சோனியா காந்தியும் அவரது ஆலோசகர்களும் கொஞ்சம் அரசியல் விளையாட்டுகள் விளையாட வேண்டும். பலரை சரிக்கட்ட வேண்டும். என்னென்ன செய்யவேண்டும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்:

* காங்கிரஸுக்குக் கிடைக்கும் இடங்கள்: 140-150

* காங்கிரஸ் கூட்டணியில் முக்கியமான கட்சிகள்: சரத் பவாரின் நேஷனலிஸ்ட் காங்கிரஸ் (10-12), கருணாநிதியின் திமுக (+மதிமுக = 20), லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரியா ஜனதா தள் (10-15), ராமதாஸின் பாமக (6), மற்ற சிறு கட்சிகள் (20-25).

* காங்கிரஸ் கூட்டணியில் இல்லாத முக்கியமான கட்சி முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி (30).

* இடதுசாரிகள் (50)

மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை. இடதுசாரிகள் எக்காரணம் கொண்டும் பாரதீய ஜனதாவுடன் இணைய மாட்டார்கள். ஆகவே இடதுசாரிகளிடம் 50 இடங்கள் இருந்தாலும் அவர்களிடம் சமரசம் பேச வேண்டிய அவசியமேயில்லை. இடதுசாரிகளை 'வெளியிலிருந்து' ஆதரவு தரச் சொல்லலாம்.

முலாயம் சிங் யாதவுடன், சோனியா நேரடி ஒப்பந்தம் செய்து கொண்டால் அதுவே போதுமானது. முலாயம் சிங் துணைப்பிரதம் மந்திரி பதவி கேட்டால் அதைக் கொடுத்து விடலாம். அதைத் தொடர்ந்து திமுக/மதிமுகவையும் அரசமைப்பதில் சேர்ந்து கொள்ள வைக்க வேண்டும்.

சரத் பவார், சோனியாவின் வெளிநாட்டுப் பிறப்பை முன்வைத்து கட்சியிலிருந்து வெளியேறியவர் என்றாலும் 10-15 ஆட்களை வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அடுத்து மஹாராஷ்டிராவில் தேர்தல் வரப்போகிறது. அங்கு சிவ சேனை/பாஜகவை எதிர்த்துப் போராட காங்கிரஸின் உதவி தேவை. லாலு பிரசாத் யாதவிற்கு சோனியா பிரதமராவதில் எந்தவொரு தயக்க்கமும் இல்லை. ஆனால் முலாயம் சிங் உள்ளே வருவதில் நிறைய எதிர்ப்பு இருக்கிறது. அப்படியே லாலு அதை எதிர்த்தால் சோனியா லாலுவைக் கழட்டி விட்டுவிடலாம். காங்கிரஸுக்கு திமுக+மதிமுக வின் 20 இடங்களும் அவசியம் தேவை. பாமக ஒரு/இரு மந்திரி பதவி கொடுத்தால் சந்தோஷமாக வாங்கிக் கொண்டு முழு ஆதரவைத் தந்து விடுவார்கள். ஆனால் கருணாநிதி குட்டையைக் குழப்பும் விதமாக அரசில் இணையமாட்டேன் என்கிறார். அவரை அரசில் இணையவைக்க வேண்டியது காங்கிரஸின் இரண்டாவது முக்கியமான வேலை.

1. முலாயம் சிங்குடன் 'டீல்'.
2. கருணாநிதியுடன் 'டீல்'
3. இடதுசாரிகளின் வெளியிலிருந்து ஆதரவு

இம்மூன்றையும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டியது சோனியாவின் அதிமுக்கியமான வேலை.

இன்றைக்குள் வாஜ்பாயி ராஜினாமா செய்து விடுவார். இனி இவர் பிரதமராகப்போவதில்லை. இருந்தவரையில் முக்கியமான பல காரியங்களைச் செய்தவர் என்று பாராட்டுவோம். பாஜக எப்பொழுதெல்லாம் தோல்வியில் இருக்கிறதோ, அப்பொழுது கட்சிக்குத் தெம்பூட்டுபவர் அத்வானி. அடுத்த ஐந்து வருடத்தில் அத்வானி, வெங்கையா நாயுடு, பிரமோத் மஹாஜன், சுஷ்மா சுவராஜ், அருன் ஜெயிட்லி ஆகியோருடன் சேர்ந்து கட்சியை எவ்வாறு பலப்படுத்துகிறார் என்று பார்ப்போம்.

தமிழகத்தில் அஇஅதிமுக வாங்கிய அடி அம்மையாருக்கு மறக்காது என்று நம்புவோம். அடுத்த அடி சட்டமன்றத் தேர்தலிலும் நிச்சயமாக விழும்.

4 comments:

  1. பிரதமர் ஆவதற்கு மன்மோகன் சிங் - கிற்கும் 50% வாய்ப்பிருப்பதாய் நான் எண்ணுகிறேன்.

    ReplyDelete
  2. and what happens to Jakkubhai's great comments on PMK and credibility ?

    ReplyDelete
  3. http://www.maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=830

    ReplyDelete
  4. It's hard to imagine Sonia as a PM(I'm not talking about foreigner issue). She doesn't have what it takes to lead a country.

    ReplyDelete