Friday, May 14, 2004

கர்நாடகத் தேர்தல் - யாருக்கு எத்தனை

மத்தியில் பாராளுமன்றத் தேர்தல் பிரமாதமாகப் போய்க்கொண்டிருப்பதால் யாரும் கர்நாடகம், ஒரிஸ்ஸா, சிக்கிம் சட்டமன்றத் தேர்தல்களை சரியாகக் கவனிக்கவில்லை. ஆந்திரா சட்டமன்ற முடிவுகள் இரண்டு நாட்கள் முன்னதாக வெளிவந்து விட்டதால் அனைவரும் கவனித்தனர்.

நாயுடுவின் மடிக்கணினி பிம்பத்தைப் போலவே கர்நாடகத்திலும் காங்கிரசின் SM கிருஷ்ணா இருந்து வந்தார். கர்நாடகத்தில் ஐடி வளர்ச்சி இந்தியாவிலேயே மிக அதிகம். அதற்கு அங்குள்ள அரசாங்கம் எதுவும் அவ்வளவு காரணமில்லை, பெங்களூரின் மக்கள்தான் காரணம். கர்நாடகத்திலும் வறட்சி (ஆம்) ஒரு பெரிய பிரச்சினை. பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் ஆளும் கட்சி காங்கிரசுக்கு பெரிய அடி. பாராளுமன்றத் தேர்தல் அடி மிகவும் பலம். சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மைப் பலமின்றி தொங்கு சட்டமன்றம் நிகழ்ந்துள்ளது.

மொத்த இடங்கள் = 224
பாரதிய ஜனதா கட்சி = 79
காங்கிரஸ் = 64
ஜனதா தள் (S) = 57 (தேவ கவுடா)
ஜனதா தள் (U) = 5

மற்றவை உதிரிகள்.

காங்கிரசும், தேவ கவுடாவும் இணைந்தால்தான் அரசமைக்க முடியும். இருவரும் பாஜகவை எதிர்ப்பவர்கள். அதனால் பாஜகவுக்கு தனிப்பெரும் கட்சியாக இருந்தும் அரசமைக்க சாத்தியங்களே இல்லை.

தேவ கவுடா இரண்டு பாராளுமன்றத் தொகுதிகளில் நின்று ஒன்றில் தோற்று, ஒன்றில் வென்றுள்ளார். அதனால் மத்தியில் காங்கிரசிடம் பேரம் பேசி தனக்கென ஒரு மந்திரி பதவியும் (விவசாயத்துறை?) மாநிலத்தில் சரிபாதி மந்திரிகள் + துணை முதல்வர் பதவியும் கொடுத்தால் போதும் என்று ஒரு சுமுகமான முடிவுக்கு வருவார் என்று எதிர்பார்க்கலாம்.

ஒரிஸ்ஸாவில் ஆளும் பிஜு ஜனதா தள் + பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

சிக்கிமில் மொத்தம் 32 தொகுதிகள். அதில் 31இல் வெற்றி பெற்று ஆளும் கட்சி சிக்கிம் டெமாக்ரடிக் ஃப்ரண்ட் ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது! மெஜாரிட்டி என்று பேசுபவர்கள் இதைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும்! எதிர்க்கட்சி காங்கிரசுக்கு ஒரே ஒரு இடம்தான்! SDFஇல் முதல்வர் பவன் சாம்லிங் போட்டியின்றியே தேர்ந்தெடுக்கப்படுள்ளார். இவரைத்தவிர இந்தக்கட்சியின் இன்னமும் மூன்று பேர்கள் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்கள்.

No comments:

Post a Comment