Saturday, May 29, 2004

தமிழ் செம்மொழியானால்?

நான் நேற்று கேட்டிருந்த கேள்விக்கு மெய்யப்பன் பதில் கொடுத்துள்ளார்.

எனக்கு இன்னமும் சில சந்தேகங்கள் வருகின்றன. மெய்யப்பன் பதிவில் பார்த்த மணவை முஸ்தஃபா பேட்டியிலிருந்து:

1. "முதலில் உலகம் முழுவதும் பல்கலைக்கழகங்களில் தமிழுக்கு தனியாக ஒரு துறை ஏற்படுத்தப்படும். இதனால், தமிழ் பண்பாடு, இலக்கியம் தொடர்பான ஆய்வுகள் அதிகம் நடக்கும்." - இந்திய அரசாங்கம் ஒரு மொழியை செம்மொழி என்று அறிவித்து விட்டால், உலகப் பல்கலைக் கழகங்களில் தானாகவே இவையெல்லாம் நடக்கத் தொடங்கி விடுமா? ஆச்சரியமாக இருக்கிறது எனக்கு. சில நாட்கள் முன்னர் யேல் பல்கலைக் கழகம் தமிழ்ப்படிப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளது. அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் தமிழ் பற்றிய ஆராய்ச்சி நடக்கிறது. சமஸ்கிருதம் அளவிற்கு இல்லையென்றாலும், அதற்கடுத்த நிலையில் தமிழ் உள்ளது. நாளை இந்திய அரசு தெலுங்கை செம்மொழி என்று அறிவித்தால் அதனால் திடீரென்று யாரும் தெலுங்கை தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடப் போவதில்லை என்றே தோன்றுகிறது.

செம்மொழியாக அறிவித்தால் மட்டும் போதாது. (அல்லது, அறிவிக்கத் தேவையே இல்லை?) மனிதவள மேம்பாட்டுத் துறை (HRD) தமிழுக்கென பணத்தைச் செலவிட்டு, முக்கியமான உலகப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் ஒரு தமிழ்த்துறைப் பேராசிரியர் பதவிக்கு endowment அளிக்களாம். தமிழக அரசும், தன் பங்குக்கு சில பல்கலைக்கழகங்களில் இந்த வேலையைச் செய்யலாம். ஒரு பல்கலைக் கழகத்திற்கு ஒரு பேராசிரியர் பதவிக்கு வருடத்திற்கு கிட்டத்தட்ட US$100,000 செலவாகும் என நினைக்கிறேன். உலகின் முக்கியமான பல்கலைக்கழகங்கள் அனைத்திற்கும் தன் செலவில் மத்திய அரசும், தமிழக அரசும் தமிழில் அச்சாகும் ஒவ்வொரு புதிய புத்தகத்தின் பிரதியையும் வழங்கலாம்.

வெளி நாட்டில் ஏதேனும் மாணவர் தமிழில் முனைவர் பட்டத்திற்கு ஆராய்ச்சி செய்தால், அம்மாணவருக்கான அனைத்து உதவிகளையும் வழங்கலாம். அவர் தமிழகம் வந்துபோகத் தேவையான பண உதவிகளை வழங்கலாம்.

பணவசதி படைத்த தமிழ் ஆர்வலர்களும் இதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

2. "இப்போது கல்வெட்டு, ஓலைச்சுவடி போன்றவை தொடர்பான ஆய்வுகள் சமஸ்கிருதத்தை அளவுகோலாகக் கொண்டு செய்யப்படுகின்றன. அளவுகோலைப் பொறுத்துதான் முடிவுகள் அமையமுடியும். தமிழ்நாட்டில் கிடைக்கும் பிராமி கல்வெட்டுக்களை வைத்து சமஸ்கிருதத்திலிருந்துதான் தமிழ் வந்தது என்று அறிவிக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் செம்மொழி ஆக்கப்படும் போது தமிழ் அளவுகோலாக மாறும். இதனால், நிறைய உண்மைகள் வெளிவர வாய்ப்புகள் உருவாகும்." இது நம்பத்தகுந்ததாகவே இல்லை. இப்பொழுதிருக்கும் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் படிப்புகளையும், ஆராய்ச்சிகளையும் குறைபடவே செய்கின்றனர் என்னும் தொனி தெரிகிறது. 'தமிழ் செம்மொழி' எனும் ஓர் அறிவிப்பிலே இதெல்லாம் மாறிவிடும் என்றா நினைக்கிறார் முஸ்தஃபா?

===

மெய்யப்பனின் பதிவில் இதைவிட அதிகமான பல செய்திகள் உள்ளன. முக்கியமாக தமிழ் ஆராய்ச்சிக்கென அதிகத் தொகை செலவிடப்படும் என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. மற்றபடி அரபி, பாரசீகம் ஆகிய மொழிகளுக்கு முன்னாலேயே தமிழ் தோன்றி, இன்றும் வழக்கத்தில் உள்ளது எனும் உண்மை தமிழ் செம்மொழியானாலும், இல்லாவிட்டாலும் எல்லோரும் அறிவர்.

நாம் வெறும் பட்டங்கள், பதவிகள் எனும் வெற்று விஷயங்களிலேயே கவனத்தைச் செலுத்துகிறோமோ என்று நினைக்கிறேன். செம்மொழி என்று அறிவித்துவிட்டாலே போதுமா? நம் மொழி உலக அளவில் பேசப்பட என்ன செய்யவேண்டும் என்று விளக்கமாக யாராவது செயல்திட்டம் போடுகின்றனரா? தமிழக அரசும், மத்திய அரசில் இருக்கும் தமிழக உறுப்பினர்களும் இதுபற்றி விளக்கம் கொடுப்பார்களா, இல்லை சாதித்து விட்டோம் அன்று அடுத்த பிரச்சினையை நோக்கிப் போய்விடுவார்களா?

1 comment:

  1. //அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பலவற்றிலும் தமிழ் பற்றிய ஆராய்ச்சி நடக்கிறது. சமஸ்கிருதம் அளவிற்கு இல்லையென்றாலும், அதற்கடுத்த நிலையில் தமிழ் உள்ளது//
    சமஸ்கிருதம் முன்னிலை வகிக்க அதிகாரப்பூர்வ அங்கீகாரமும், இந்திய அரசின் ஊக்கமும் ஒரு முக்கியக் காரணம், (இந்தியா மட்டும் 40 கோடி ரூபாய் வருடத்துக்கு செலவழிப்பதாய்க் கேள்விப்பட்ட ஞாபகம்).

    ReplyDelete