Tuesday, May 11, 2004

காங்கிரஸ் கட்சி மேலிடம் + ஆந்திராவின் கடன் சுமை

ராஜசேகர ரெட்டியின் NDTV செவ்வி கண்ணில் கண்ணீரை வரவழைத்தது. எதையெடுத்தாலும் 'கட்சி மேலிடம் கவனித்துக் கொள்ளும்' என்று சொல்லி மானத்தை வாங்கினார்.

எல்லாவற்றையும் கட்சி மேலிடம் (அப்படின்னா யாருங்க?) முடிவு செய்யுமானால் 'நீ எதுக்குய்யா?' என்று கேட்கத் தோன்றுகிறது. காங்கிரஸ் பாரம்பர்யத்தில் மாநில முதல்வர்களெல்லாம் முதுகெலும்பில்லாத முட்டாள்களாக இருக்க வேண்டும் போல. ஷீலா தீக்ஷித் போன்ற திறமையான, சாதித்த முதல்வர் அமுத்தப்படுகிறார். S.M.கிருஷ்ணாவிடம் ஒரு நிருபர் நீங்கள் பிரதமராக ஆசைப்படுகிறீர்களா என்றால் அவர் உடனே 'வயிறு கழிந்து', "அய்யய்யோ, எனக்கெல்லாம் அந்தத் தகுதியே கிடையாது" என்று கதறுகிறார். சந்திரபாபு நாயுடு போன்ற பெரும் பிம்பத்தை தேர்தலில் நொறுக்கிய ராஜசேகர ரெட்டி தான் முதலமைச்சராவோமா என்பதை 'மேலிடம்'தான் முடிவு செய்யும் என்கிறார். தெலுங்கானா உருவாக்க முயற்சிப்பீர்களா என்று கேட்டால் அதற்கும் மேலிடம் முடிவு செய்யும் என்கிறார்.

மேலிடத்தைப் பார்த்து எள்ளி நகையாடும் ஒருவர் காங்கிரஸில் இருக்கிறாரா என்று கேட்கிறீர்களா? ஆம். கேரளாவின் கருணாகரன்.

ஆந்திராவில் நாயுடு என்னதான் செய்து வந்தார் என்பதைப் பற்றிய செய்திகள் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து வருகின்றன. பார்க்க: இந்தியன் லிபரல் குழுவின் செய்தி

மொத்தக் கடனாக அன்னார் விட்டுப்போயிருப்பது ரூ. 50,638 கோடிகள் (மார்ச் 2003 அன்று). மார்ச் 2001இல் இது ரூ. 35,651 கோடிகளாக இருந்தது. மத்திய அரசுடன் இருந்த நெருக்கத்தைப் பயன்படுத்தி நாயுடு தான் விரும்பியதையெல்லாம் செய்து வந்திருக்கிறார். இத்தனைக்கும் நாயுடு தோற்றதுக்கு இதுமாதிரியான நிதிநிர்வாகக் குறைபாடு காரணமல்ல. ஏனெனில் எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்தவேயில்லை.

இந்தப் பற்றாக்குறையைத் தீர்க்கவும், ஆந்திராவின் திருவோடு ஏந்தும் நிலையை மாற்றவும் 'மேலிடம்'தான் வரவேண்டியிருக்குமா?

No comments:

Post a Comment