Tuesday, May 18, 2004

கிரிக்கெட் அக்கப்போர் - முரளிதரன்

முத்தையா முரளிதரன் - இப்பொழுதைக்கு டெஸ்டு போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்திருப்பவர் - 'தூஸ்ரா' எனப்படும் வெளியே செல்லும் பந்தைப் போடக் கூடாது என்று ஐசிசி அறிவித்திருந்தது. முரளி, என்னிடம் யாரும் சொல்லவில்லை, அதனால் நான் ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் அந்தப் பந்தைப் போடுவேன் என்று எதிர்ப்பேச்சு பேசினார். ஐசிசி மீண்டும், நாங்கள் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஏற்கனவே சொல்லிவிட்டோம், மீறி முரளி 'தூஸ்ரா'வை வீசினால் ஒரு வருடத்திற்கு அவரைத் தடை செய்வோம் என்றனர்.

இத்தனையும் நடக்கும்போது ஜிம்பாப்வே அணியில் உருப்படியான ஒரு ஆட்டக்காரருமே கிடையாது. [முன் விவரங்களை அறிந்து கொள்ள எனது இந்தக் கட்டுரையைப் படிக்கவும்.] முதல் இன்னிங்க்ஸில் ஜிம்பாப்வேக்காக ஒழுங்காக ஆடிய ஒரே ஆட்டக்காரர் டியான் இப்ராஹிம். முரளி அவருக்கு ஒரு லெக் பிரேக் பந்து வீசியுள்ளார். இப்ராஹிமும் வாயை சும்மா வைத்துக் கொண்டிராமல், முரளி வீசிய பந்துகளிலேயே அந்த லெக் பிரேக் ஒன்றுதான் 'எறியாது' வீசிய பந்து என்று ஒரு செவ்வியில் சொல்லி விட்டார். கடுப்பான இலங்கை அணியின் மேனேஜர் ஐசிசி மேட்ச் ரெஃபெரியிடம் புகார் கொடுக்க, அவர் டியான் இப்ராஹிமை ஒரு ஆட்டத்துக்குத் தடை செய்து விட்டார்.

இந்தக் குழப்பங்கள் போதாதென்று இரு நாட்டின் பிரதமர்கள் முரளியின் பந்துவீச்சு சமாச்சாரத்தில் களத்தில் குதித்துள்ளனர். இலங்கைப் பிரதமர் மஹிந்தா ராஜபக்ஸே, முரளியின் மீது அவதூறு சொன்னதற்காக ஐசிசி மீது வழக்குத் தொடுப்பேன் என்று கூக்குரல் விடுக்கிறார். முரளி இலங்கையின் சொத்தாம். ஆஸ்திரேயாவின் பிரதமர் ஜான் ஹாவர்ட் முரளி பந்தை 'chuck' செய்கிறார் (எறிகிறார்) என்று எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றி விட்டுள்ளார். முரளிதரன் உடனே நான் இனி ஆஸ்திரேலியா போக மாட்டேன் என்று அறிவித்துள்ளார். [இதனால் நஷ்டம் ஆஸ்திரேலியாவின் மட்டையாளர்களுக்குத்தான். தூஸ்ராவோ, தீஸ்ராவோ, முரளியை ஆஸ்திரேலிய மட்டையாளர்கள் இதுவரை கைமா பண்ணியுள்ளனர்!] இலங்கை அணி நிர்வாகமும், முரளி விரும்பவில்லையென்றால் அவர் ஆஸ்திரேலியா செல்ல வேண்டியதில்லை என்று அறிவித்து விட்டனர்.

பாடிலைன் (bodyline) தொடருக்குப் பின்னர் அரசுகளுக்கிடையில் பிரச்சினை வருமளவிற்கு சென்றுள்ளது முரளிதரன் விஷயத்தில்தான்!

4 comments:

  1. முரளிதரன் பந்துவீசுகிறாரா? மாங்கா அடிக்கிறாரா? உங்கள் கருத்தென்ன?

    பாரா

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. மாங்கா அடிக்கிறார் என்று சொல்ல மாட்டேன்! ஆனால் வீசுவது சரியான முறையில் அல்ல என்பது என் கருத்து. இதை ஏற்பதென்பது அனைத்து நாடுகளும் ஒன்றாக ஐசிசியில் ஒத்துக்கொண்டால்தான்... இதற்கு முன், பலமுறை விதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அப்படி மாறிய விதிகள் அனைவருக்கும் சரிசமமாக உதவி புரிய வேண்டும்.

    ReplyDelete
  4. பத்ரி, உங்கள் பதிவின் எழுத்துரு திடீர் திடீரென்று (on refresh etc) பெரிதாகவும் சிறிதாகவும் மாறுகிறதே ? கவனித்தீர்களா ?

    ReplyDelete