Saturday, May 29, 2004

வெளியுறவு விஷயங்கள் - இலங்கை தொடர்பானது

J.N.தீக்ஷித் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரஜேஷ் மிஸ்ரா பதவியை ராஜினாமா செய்ததும் இப்பொழுதைய அரசு இவரை நியமித்துள்ளது. வைகோ தீக்ஷித் பதவியில் அமர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக எங்கோ செய்தி வெளியாகியுள்ளது போலும். இன்று தி ஹிந்துவில், வைகோ அப்படியொன்றும் தான் எதிர்ப்பை வெளியிடவில்லை என்று சொல்லியிருக்கிறார்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை இன்னும் இரண்டு வருடங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஏற்கனவே எழுதியிருந்தேன். இன்று வைகோ, இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளார்.

[பிற்சேர்க்கை:] தி ஹிந்து செய்திப்படி வைகோ விடுதலைப்புலிகள் மீதான தடை இருக்கக்கூடாது என்பது தனது தனிப்பட்ட எண்ணம் என்றும், மத்திய அரசு தடையை நீக்க வேண்டும் என்று தான் கேட்டுக்கொள்ளவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். நாளடைவில் மத்திய அரசின் எண்ணம் மாற்றம் அடையலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு, இந்திய அரசு Multi Disciplinary Monitoring Agency (MDMA)யை நியமித்திருந்தது. ஜெயின் கமிஷனின் பரிந்துரையின் பேரில் MDMA ஆகஸ்டு 1998இல் நியமிக்கப்பட்டது. அவ்வப்போது அதன் காலம் முடிவடையும் நேரத்தில் ஆறு மாதங்கள் நீட்டிக்கப்படும். அதுபோல் வரும் மே 31 அன்று காலாவதியாகவிருந்த MDMAவை நீட்டிக்கக் கோரியிருந்தார் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் அர்ஜுன் சிங். MDMA நீட்டிக்கப்படுவதால் திமுகவுக்கு எந்த பயமுமில்லை என்கிறார் தயாநிதி மாறன். MDMAவை நீட்டிக்கக் கோரியதில் எந்த உள்ளெண்ணமும் கிடையாது, வருடா வருடம் நான், பிரனாப் முகர்ஜி, மன்மோகன் சிங் ஆகியோர் அத்வானியிடம் இந்தக் கோரிக்கையை வைத்துக்கொண்டுதான் இருந்தோம் என்கிறார் அர்ஜுன் சிங்.

வைகோவுடனான இந்தியன் எக்ஸ்பிரஸ் நேர்முகம்.

இந்தியாவின் இலங்கை தூதர் நிருபம் சென் விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவால் தடை செய்யப்பட்டிருப்பதால் தாம் (தூதரகம்) நேரிடையாக புலிகளுடன் தொடர்பு கொள்ள மாட்டோம் என்றும், அதனால் வடக்கிலும், கிழக்கிலும் புணர்நிர்மான வேலைகள் இலங்கை அரசு மூலமாக மட்டுமே செயல்படுத்தப்படும் என்றும் சொல்லியுள்ளார். ஆனால் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் இடங்களில் தங்கள் மூலமாக மட்டுமே புணர்நிர்மான வேலைகள் செய்ய அனுமதிக்க முடியும் என்று சொல்லியுள்ளனர்.

நட்வர் சிங் பற்றிய எனது முந்தைய பதிவு

2 comments:

  1. Dear Badi,
    please checkout following link.
    http://www.vikatan.com/vc/2004/may/vc0198.shtml
    This is in tune with one of your posts.
    anbudan
    Balaji-paari

    ReplyDelete
  2. வடக்கு கிழக்கு பகுதிகளுக்கு அபிவிருத்திக்கென வெளிநாடுகளால் அனுப்பப்படும் நிதி அரசாங்கத்தினூடு அனுப்பப்படும் பட்சத்தில் நிதியில் பாதி பாதுகாப்புக் காரணங்கள் காட்டி திருப்பி அனுப்பப்படுகின்றது.அதே போல் அனுப்பபடும் நிதியும் பெயருக்கே அபிவிருத்தி செய்யப்படுகின்றது.இதனை இந்தியா உணர்ந்து கொண்டு அபிவிருத்தி நடக்கிறது என்று பெயருக்குச் செய்வதிலும் பார்க்க அரசாங்கத்தினூடு அனுப்பாமல் விடுவது நன்று

    ReplyDelete