Saturday, May 07, 2005

சென்னை வேலை வாய்ப்புகள்

இன்றைய தி ஹிந்து செய்தியில் இந்தியாவிலேயே சென்னையில்தான் பிற நகரங்களை விட அதிகமாக 'புது' வேலைகள் உருவாக்கப்படுகின்றன என்று மா ஃபுவா நிறுவனப் புள்ளிவிவரங்கள் கூறுவதாக வந்துள்ளது. அதேபோல பிற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் மிக அதிகமாக வேலைகள் உருவாக்கப்படுகின்றன என்றும் இந்தச் செய்தி கூறுகிறது. (விழுக்காடுகளாக... மொத்த எண்ணிக்கையில் அல்ல.)

அதிலும் முக்கியமாக
In Chennai, small private limited companies with less than 100 employees are forecasted to demonstrate the highest growth rate of 9.1 per cent on the Ma Foi Employment Index.
என்று சொல்கிறார்கள். இந்த மாத அமுதசுரபியில் என் கட்டுரையிலும் சிறு நிறுவனங்கள் மூலம்தான் வேலை வாய்ப்புகளைப் பெருமளவில் அதிகரிக்க முடியும் என்று எழுதியிருந்தேன். ஒரு பெரிய நிறுவனம் 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் ஆரம்பித்தால் (நோக்கியா), அதனால் சுமார் 5,000 நேரடி வேலைகளும், 10,000 சார்ந்த வேலைகளும் உருவாகலாம். ஆனால் இந்த அளவுக்கான முதலீடு 10,000 சிறு நிறுவனங்களிடமிருந்து (சராசரி ரூ. 50 லட்சம் முதலீடு) வந்தால் இதனால் கிட்டத்தட்ட 2,00,000 புது வேலைகள் உருவாகும். வேலைகளும் சென்னை போன்று ஓரிடத்தில் குவியாமல், மாநிலம் முழுவதும் பரவலாகக் கிடைக்கும்.

இதனால் நோக்கியா சென்னை வருவது கூடாது என்று நான் சொல்லவில்லை. அதற்கு நாம் படும் சந்தோஷத்தைவிட, மேற்படி தி ஹிந்து செய்தியிலிருந்து அதிக சந்தோஷம் அடையவேண்டும்.

மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே வேலை என்று யாராவது புதுப் போராட்டத்தை ஆரம்பிக்காத வரையில்...

10 comments:

  1. அதெல்லாம் சரி. ஆனால், ஒரு சிறு தொழில் முனைவோனுக்கான முதலீட்டினை கொடுக்குமளவிற்கு இன்னமும் இந்திய வங்கிகள் முன்னேறவில்லை. ரிஸ்க் கேப்பிடல் என்கிற வார்த்தையே இங்கு கிடையாது. நீங்கள் இந்தியாவில் கடன் வாங்க வேண்டுமெனில் நிறைய சட்ட திட்டங்கள் இருக்கின்றன. சொத்து இருக்கிறதா, நிலமிருக்கிறதா, யாராவது சாட்சி கையெழுத்து போடூவார்களா என நீளும். அவ்வாறிருக்கையில் எவ்வாறு சிறுதொழில் முனைவோர்கள் அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியும். இதையும் தாண்டி, நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி. ஆனால், நாம் இன்னமும் நிறைய செய்ய முடியும். வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள் 5-10 லட்சத்திற்கு குறைவான கடன் தொகையை அதிக கேள்விகள் கேட்காமல், தகுதியினை வைத்து மட்டும் தருமானால் நிறைய சிறு தொழில்கள் பெருக கூடும்.

    நிறைய சிறு தொழில்கள் முளைத்திருக்கும் புதிய தேவைகளைக் கொண்டு இயங்குகின்றன. உதாரணம் ஒரே அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்காக ஒடும் பேருந்துகள், அடுக்க்கங்களின் இரு சக்கர, நான்கு சக்கர வண்டிகளை சுத்தம் செய்தல், மென்பொருள் நிறுவங்களுக்கு பாக்கேஜ்டு உணவு வழங்குதல் என நீளுகிறது. ஆனால், இந்த தொழில்கள் இன்னமும் முழுதாக பரவாமல் இருப்பதால், கடன் கிடைப்பது கடினம்.

    VC கள் ஏன் இந்த மாதிரி சிறு தொழில்களில் முதலீடு செய்யுமளவிற்கான ஒரு கன்சார்டியம் உருவாக கூடாது. லாபம் மிக அதிகமாக இல்லையென்றாலும், தொழில் பரவலாக வழிவகுக்கும். இதன்மூலம் மக்களிடையே பணப்புழக்கம் அதிகரிக்கும். இதன்மூலம் பெரும் தொழில்கள் (FMCG, Automobiles..)பெருகுவதற்கான சாத்தியங்கள் அதிகம்.

    இல்லை இதைப் போல நிறுவனங்கள் சென்னையில் இருக்கிறதா ? இருந்தால் முகவரி கொடுங்கள். பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  2. நாராயண்: வங்கிகள் ரிஸ்க் கேபிடல் கொடுக்க விரும்பாது. அதில் தவறில்லை. ரிஸ்க் மூலதனம் கொடுக்கவென்று வேறு நிறுவனங்கள் தேவை. வங்கிகள் பொதுமக்களின் டெபாசிட்களை வைத்து கடன் கொடுக்கின்றன. எனவேதான் சொத்து, நிலம் ஏதாவது மார்ட்கேஜ் வைக்கத் தேவை.

    வென்ச்சர் கேபிடல் நம் நாட்டில் உருப்படியாக இல்லை. அதுவும் மிகச்சிறு நிறுவனங்களுக்குக் கொடுப்பதற்கு யாருமே இல்லை. இதுவும் அரசுத் தரப்பிலிருந்து வரப்போவதில்லை. தனியார்தான் வரவேண்டும்.

    இன்னமும் சில வருடங்களில் இது பெருக சாத்தியம் உண்டு. ஆனால் இப்பொழுதைக்கு உற்றார், உறவினர், நண்பர்களிடமிருந்து மூலதனம் பெறுவது அதிகரித்துள்ளது. முன்னரெல்லாம் இதைச் செய்வது ஒருசில பணக்காரர்களுக்கு மட்டுமே சாத்தியமானதாக இருந்தது. இப்பொழுது மத்தியதரக் குடும்பங்களிலும் இந்த சாத்தியங்கள் இருக்கின்றனவே?

    இதை வைத்துத்தான் இப்பொழுதைய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    அரசு தடைகளை விலக்கிக்கொண்டால் மட்டும் போதுமே?

    ReplyDelete
  3. நாராயண் : சிறு தொழில்களுக்கான முதலீடு கிடைப்பது சிரமாக இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறேன். அதற்கான விசி கன்சார்ட்டியம் என்று யோசிப்பது, வேலைக்காகுமா என்று தெரியவில்லை. நம் இன்ஸ்டிட்யூஷன்களின்களில் ரிஸ்க் காபிடல் என்ற ஒரு விஷயமே கிடையாது. நான் தொழில் துவங்கிய சமயத்தில், பாரத ஸ்டேட் வங்கியின் தொழில் முதலீட்டு நிதி கிளையை அணுகினேன். அந்த வங்கியின் மேலாளருக்கு, எங்கள் திட்டம் பிடித்திருந்தது. பேசிப் பேசிக் கன்வின்ஸ் செய்தோம். எல்லா நடைமுறைகளும் முடிந்த பின்னர் ( ஆறு மாதங்கள்) , அந்த கிளையின் சீனியர் மேலாளர், எங்கள் திட்டத்தை நிராகரித்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணமாவது, " we donot have the expertise to assess the viability of your project." எங்களுடைய திட்டம், புதுமையானது, லாபம் தரக்கூடியது (track record இன் அடிப்படையில் ) என்று அந்த அதிகாரிகள் ( தனிப்பட்ட முறையில் ) நம்பினார்கள். ஆனால், ரிஸ்க் எடுக்க அதிகாரமில்லை. அந்தச் சமயத்தில் பயங்கரமாகப் கோபம் வந்தது. எங்களை ஏமாற்றி விட்டார்கள் என்று குறை சொல்லி, பேங்கிங் ஆம்பட்ஸ்மனுக்குக் கூட எழுதிப் போடலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர்கள் சொல்வதிலும் நியாயம் இருக்கிறது என்று புரிந்தது.

    விசி, கன்சார்ட்டியம் என்று நிறுவனமயம் வந்தால் புதுசாக ஒன்றும் செய்து விட முடியாது. ஒரு தற்காலிகமான வழி, வெற்றி பெற்ற தொழில் முனைவோர்கள், மற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும். பண உதவியை மட்டும் சொல்ல வில்லை. எனக்குத் தெரிந்து பலர் இப்படிச் செய்கிறார்கள். வங்கிகள் எல்லாம் கைவிட்ட பின்பு, எனக்குக் கிடைத்த உதவியும் இப்படிப் பட்டதுதான். இதை நானும் செய்வேன்.

    ReplyDelete
  4. பிரகாஷ், நீங்கள் சொல்வதை ஒத்துக் கொள்கிறேன். இங்கே புதிதாக ஒரு வணிகத்தினை அவ்வளவு சுலபமாக தொடங்கிவிட முடியாது. வணிக ரீதியாக பலன்கள் மிகுதி என்று தெரிந்தாலும் கூட யாரும் முதலீடு செய்ய வரமாட்டார்கள். நான் ஏறி இறங்கிய வங்கிகளைப் பார்த்து, எனக்கு வஙகிகள் என்றாலே வெறுத்துப் போய்விட்டது. இங்கே ஒட்டுமொத்தமாக வங்கிகள் ஒன்றுக்கும் பிரயோசனப் படாது. இவர்கள் பீஹாரில் மாடு வாங்க 5,000 ரூபாய் தருவதற்கு தான் லாயக்கு. கோவம் மட்டுமில்லை, மாறிவரும் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப சமயோசிதமாய் கடன்கள் கொடுக்க இவர்களுக்கு தெரியவில்லை. எல்லா பரிவர்த்தனைகளும், காசோலை,டிடி என்பதால் இன்னமும் நிறைய வங்கிகள் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இணைய வர்த்தக பரிவர்த்தனைகளை சட்டபூர்வமாக்கினால் நிறைய இடங்களில் வங்கிகள் இழுத்து மூடிவிட்டு ஏடிஎம் வைக்கலாம். இவர்களால் ஒரு உருப்படியான பிரயோசனமும் இல்லை.

    பிரகாஷ், 6 மாதம் தொங்கிக் கொண்டிருப்பதெல்லாம் வேலைக்காவாது. உலகம் இப்போது நிமிட, நொடிக்கணக்கில் மாறிக் கொண்டிருக்கிறது. இணைய யுகத்தில் 6 மாதம் என்பது கிட்டத்திட்ட மூன்று தலைமுறைக்கு சமம். ஒரு லாபகரமான தொழிலில் முதலீடு செய்வதற்கு கூட இங்கே வங்கிகள் யோசிக்கின்றன. ஐஎன்ஜி வைஸ்யாவினை 3 மாதங்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். ம்ஹும். ஒரு கல் நகர்ந்தபாடில்லை. இத்தனைக்கும் அதே வங்கியில் 18 மாதங்களாக ஒரு சிக்கலும் இல்லாமல் என் அலுவலக கணக்கிருக்கிறது. என்ன பிரயோசனம். ஒடி(Overdraft) கூட கேட்டு பெற வேண்டியதாய் இருக்கிறது.

    இன்றைக்கு எனக்கு என் தொழிலினை நீட்சி செய்ய 10 லட்ச ரூபாய்கள் தேவையெனில் நான் எங்கு போவேன்? பிரச்சனை ஒட்டுமொத்த சிஸ்டத்தில் இருக்கிறது.

    என்னை விடுங்கள். பொட்டிக் கடை வைத்தால் கூட சென்னையில் பிழைத்துக் கொள்ளலாம். ஆனால், எத்தனை பொட்டிக் கடைகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும்.

    அரசாங்கம் இன்னமும் பல நலத்திட்டங்களை அறிவித்துக் கொண்டு கோடிக்கணக்கான ரூபாய்களை கடலில் கரைத்துக் கொண்டிருக்கிறது. பேசாமல், அவரவர் சொந்தக்காலில் நிற்க அரசாங்கம் உதவி செய்தால், நிறைய நலத்திட்டங்கள் தேவையிருக்காது. எனக்கு தெரிந்து வெட்டியாக இருக்கும் மக்கள் தான் எல்லா பிரச்சனைகளையும் கிளப்பிக் கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான வேலை, முன்னேற வேண்டும் என்கிற துடிப்புடன் இருக்கிற இளைஞர்கள் ஏராளம். இவர்களை கட்சிக் கொடி பிடிக்காமல், ரசிகமன்ற ஸ்டார் கட்டாமல், அரிவாள் தூக்காமல் இருக்க வைக்க வேண்டிய கட்டாயம் அரசிற்கு இருக்கிறது. அதற்கு எனக்கு தெரிந்த ஒரே வழி கடனுதவியை தாராளமாக்கி, சிறு தொழில்கள் தொடங்க உதவுவது தான். எப்படியானாலும் என் வரிப்பணம்,அரசியல் வாதிகளைப் பின்தொடரும் பேட்ரோல் ஜீப்பின் பெட்ரோலுக்கு தான் போகிறது. கொஞ்சம் மக்களையும் சென்றடையட்டும்.

    ReplyDelete
  5. நாராயண், தங்களுடைய பின்னூட்டத்தில் சுயபாதிப்பும் அதனால் உண்டான விரக்தியும்தான் வெளிபட்டுள்ளது. உண்மை அல்ல. உங்களுக்கே நன்கு தெரியும். இவ்வளவு விதிமுறைகள், கட்டுபாடுகள் இருந்தும் இன்று எத்தனை வங்கிகள் கொடுத்த கடனை திருப்பிப் பெற இயலாமல் திணறுகின்றன என்பது. ஏராளமான துடிப்பான இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்க வங்கிகள் தங்களுடைய கட்டுப்பாடுகளை நீக்கிக் கொண்டு கடன் கொடுத்து உதவ வேண்டும் என்கின்றீர்கள். நீங்கள் குறிப்பிடும் ஏராளமான இளைஞர்களில் எத்தனைப் பேர் உண்மையாய் உழைத்து நேர்மையாய் கடனை திருப்பி அடைப்பார்கள்? இன்று கிராமப் புறங்களில் விவசாயக் கடனைப் போட்டிப் போட்டு கொண்டு மக்கள் வாங்குவது விவசாயம் செய்வதற்கு அல்ல. அவை என்றேனும் ஒரு நாள் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்பதனால்.

    வங்கிக்கு வந்து கடன் கேட்பவர்கள் எல்லோரும் நாராயணனாய் இருப்பார்கள் என்பதை எப்படி நம்புவது? எனக்கென்னவோ விதிமுறைகள் அவசியம் என்றுதான் தோன்றுகின்றது. இது மக்களின் சேமிப்பு. காளான்கள் போன்று முளைத்து, அதே வேகத்திலேயே மறைந்து போன தனியார் நிதி நிறுவனங்கள் போல் இல்லாமல் மக்களின் நம்பிக்கையைப் பெற்று இன்றும் வங்கிகள் லாபகரமாய் இயங்குகின்றன என்றால் அதற்கு காரணம் இத்தகைய விதிமுறைகள்தான்.

    அப்படி என்றால் சொத்துகள், நிலங்கள், பரிந்துரைக்க ஆட்கள் இல்லாதவர்கள் கடன் வாங்கவே முடியாதா? அவர்கள் எல்லாம் தொழில் துவங்கவே முடியாதா? என்ற கேள்வி எழுமாயின் என்னுடைய பதில், கண்டிப்பாய் வாங்கலாம். நீங்கள் சொத்துக்கள் இல்லாதவராய் இருக்கலாம். இது உங்களுடைய தவறு இல்லை. ஆனால், சொத்துக்கள் உடைய ஒருவர் எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உங்களுக்கு பரிந்துரை செய்யும் அளவிற்கு ஒருவரையாவது நீங்கள் பெற்றிருக்கவேண்டும். அப்படி இல்லையென்றால் அது உங்கள் தவறு. என்னுடைய நண்பன் ஒருவன், வசித்தது வாடகை வீட்டில்தான். அவன் தொழில் துவங்க சென்றபோது அவனை நம்பி 25 லட்சம் ரூபாய்க்கு surety அளித்தார் ஒருவர். அவனுக்காக செய்ய நிறைய பேர் தயாராய் இருந்தார்கள். அவனுடைய 32 வயது வரை அவன் சம்பாதித்தது இந்த நற்பெயரைத்தான். அதன் பிறகு அவன் எதிர்பார்த்ததை விட செல்வம் குவிந்தது.

    போட்டிகள், தடைகள் நிறைந்த இந்த காலக் கட்டத்தில் உங்கள் தொழிலின் முதல் சுற்றுப் போட்டி வங்கிக் கடன் பெறுவதில் ஆரம்பிக்கின்றது. ஒரு வங்கியில் போராடி கடன் வாங்கி வெற்றி பெற முடியாதவர்கள், தாங்கள் ஆரம்பிக்கும் தொழிலில் போராடி ஜெயிப்பார்களா என்பது சந்தேகமே. மனதைத் தளர விடாதீர்கள்.

    அப்புறம், என்னுடைய வரிப்பணம் வீணாப் போகின்றது என்ற புலம்பல் தங்களை ஒரு சராசரியாய் காண்பித்து விடும். உண்மையைச் சொல்லுங்கள். இதுவரை அரசாங்கத்திற்கு எவ்வளவு வரிப்பணம் செலுத்தியுள்ளீர்கள்? அரசாங்கத்திடம் இருந்து எவ்வளவு அனுபவித்து உள்ளீர்கள்?

    - அப்பாவி

    ReplyDelete
  6. நாராயண்: ஓவர்டிராஃப்ட் கிடைக்க இரண்டு வருடங்களாவது audited balance sheet காண்பிக்கவேண்டியிருக்கும்.

    தொடக்க காலத்தில் சிறு நிறுவனங்களுக்குத் தேவை ரிஸ்க் கேபிடல்தான். அது எப்பொழுதும் வங்கிகளிடமிருந்து வராது. ரிஸ்க் எடுக்கும் முதலீட்டாளர்களிடமிருந்து மட்டும்தான் வரும்.

    நாம் இதைப்பறி நேரில் பேசுவோம்!

    ReplyDelete
  7. அப்பாவி,

    இதற்கு என்னால் விரிவாக பதில் சொல்ல முடியும். ஆனால், இப்போது நேரமில்லை. அதுமட்டுமில்லாமல் அடுத்த சில வாரங்களுக்கு நான் சென்னையில் இருக்க மாட்டேன் அதனால், இதனை தனியாக விரிவாக பின்னர் எழுதுகிறேன்.

    ReplyDelete
  8. I thought State council for Science and Technology help to fund projects and small scale industries.

    ReplyDelete
  9. how to apply, plz give details

    ReplyDelete