Thursday, May 19, 2005

விடுதலைப் புலிகளின் விமானத்திறன் பற்றி

இன்றைய 'தி ஹிந்து'வில் விடுதலைப் புலிகள் விமானங்களைப் பெற்றிருப்பது பற்றியும் அதனால் இலங்கை அரசுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்னைகள் என்னென்ன என்பது பற்றியும் R.ஹரிஹரன் என்பவர் எழுதியுள்ளார்.

Dangers of the LTTE's air capability

-*-

இந்த வாரம் தெஹெல்காவில் V.K.சஷிகுமார் விடுதலைப் புலிகளின் வங்கி முறை பற்றியும் அதன்மூலம் ட்சுனாமி நிவாரணப் பணிகளைச் செய்ய விரும்புவது பற்றியும் எழுதியிருக்கிறார். இணையத்தில் மேலோட்டமாகப் பார்த்ததில் சுட்டி கிடைக்கவில்லை. எனவே இங்கு சில குறிப்புகள் (என்னுடைய தமிழாக்கத்தில்).

* ஈழம் வங்கியில் இப்பொழுது இருப்பது அயலகத் தமிழர்களிடம் பெற்ற US$100 மில்லியன் மற்றும் ஈழத்தில் இருக்கும் தமிழர்களின் வைப்புத் தொகையான இலங்கை ரூபாய் 1,000 மில்லியன்.

* ட்சுனாமி நிவாரணத்துக்காக வரும் சர்வதேச நிதியை வைத்து வழங்க ஈழம் வங்கியைத்தான் விடுதலைப் புலிகள் பயன்படுத்த இருக்கிறார்கள்.

* இந்த ட்சுனாமி நிவாரண வங்கிக் கணக்கை சர்வதேசப் பார்வையாளர் குழு கண்காணிப்புக்கு ஆளாக்கவும் விடுதலைப் புலிகள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

* ஈழம் வங்கி 1994-ல் தொடங்கப்பட்டது. இப்பொழுது வன்னியில் பத்து கிளைகள் உள்ளன. வைப்புத் தொகைகளுக்கு இலங்கை வங்கிகளைவிட குறைந்தது 1% வட்டியாவது அதிகமாகத் தரப்படுகிறது. வங்கியில் இப்பொழுதைக்கு கிட்டத்தட்ட 50,000 பேர்கள் கணக்கு வைத்துள்ளனர்.

* வீடுகளுக்கு சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கும் கருவிகளை வாங்கக் கடன் தரப்படுகிறது. மின்சாரம்தான் இப்பொழுதைக்கு ஈழத்தில் அதிகத்தேவை. அதைத்தவிர வியாபாரிகள் நுகர்பொருள்களை வாங்கி விற்கக் கடன் கொடுக்கப்படுகிறது.

* தமிழர் புணர்வாழ்வு அமைப்பு (TRO) மீது இலங்கை அரசுக்கு நம்பிக்கை இல்லாததால் ஈழம் வங்கி வழியாக ட்சுனாமி நிவாரண நிதியைப் பட்டுவாடா செய்ய விடுதலைப் புலிகள் சம்மதித்துள்ளனர்.

* பல நாடுகளிலிருந்து தமிழர் அமைப்புகள் வன்னி வந்து விடுதலைப் புலிகளுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர். சமீபத்தில் மலேசியாவிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், தொழில்துறைத் தலைவர்கள் அடங்கிய குழு வன்னி வந்திருந்தது. தொடர்ந்து அவர்கள் மலேசிய அரசாங்கத்திடம் விடுதலைப் புலிகளுடன் இணைந்து வேலை செய்வது பற்றிய ஓர் அறிக்கையைச் சமர்ப்பிப்பார்கள்.

* தென்கிழக்காசியா, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளிலிருந்து படித்த, பல துறைகளிலும் அனுபவம் வாய்ந்த தமிழர்கள் ஈழம் வந்து அங்கு பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள். கனடாவின் தமிழ் விஷன் இன்க். (TVI) செயற்கைக்கோள் தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலை செய்பவர் ஈழத்தில் 'புலிகளின் குரல்' ஊடகத்தாருக்குப் பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கிறார். விரைவில் 'புலிகளின் குரல்' தொலைக்காட்சி இந்தியா மற்றும் பிற நாடுகளில் தனது ஒளிபரப்பை மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

6 comments:

  1. நன்றி பத்ரி.இந்த வங்கிக்குப் பெயர் தமிழீழ வைப்பகம்.நீங்கள் சொல்லும் புலிகளின் குரல் வானொலிச் சேவையாகும். தமீழத் தேசிய தொலைக்காட்சி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டாயிற்று நீங்கள் சொல்லும் இந்தியா மற்றும் இலங்கை முழுவதற்குமான ஒளிபரப்பு.விரைவில் விரிவாக்கப்படலாம்.

    ReplyDelete
  2. கட்டுரை இந்துவின் வழக்கமான பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. அமைத்திக்காலங்களில் புலிகள் தங்களை பலப்படுத்திக் கொள்வதை ஆர்வத்துடனும் உள்நோக்கங்களுடனும் விவரித்துள்ள கட்டுரை ஆசிரியர், வழக்கம் போல இலங்கை அரசு பலகோடி டாலர்களுக்கு ஆயுதகொள்வனவு செய்திருப்பதையும், கப்பற்படையை பலப்படுத்தியிருப்பதையும், ஆட்சேர்ப்புகளை நடத்தியிருப்பதையும் மறைத்துவிடுகிறார். தாரகி ஒரு கட்டுரையில் எழுதியிருந்தது போல இலங்கைத்தீவில் இரண்டு அதிகார மையங்கள், ஊடக மையங்கள், இராணுவ மையங்கள் உண்டாகி வெகு நாட்களாகின்றன. அதை இந்திய அரசு அறியாதது போல இருப்பதும், ஊடகங்கள் அதை இல்லாதுபோல எழுதுவதும், உண்மையில் மோசமான வெளியுறவுக்கொள்கைகளை வகுக்கவும், மடத்தனமான செயல்பாடுகளில் ஈடுபடவுமே வழி வகுக்கும்.

    சுட்டிக்கும், பதிவுக்கும் நன்றிகள்!

    ReplyDelete
  3. புலிகளிடம் விமானங்கள் இருப்பது இந்திய தேசிய பாதுகாப்பிற்கு குந்தமாக அமையுமாம். என்னவோ பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் விமானங்கள் இல்லாதது போல இருக்கிறது கதை! அடுத்து புலிகளின் விமானங்கள் 98 களிலேயே பறக்க தொடங்கி விட்டன.
    (அரச செய்தி - புலிகள் கிளிநொச்சி நகரை பாதுகாக்க தானியங்கி இலத்திரனியல் கண்காணிப்பு கருவிகளை பொருத்தியிருப்பதாக தெரிகிறது)

    ReplyDelete
  4. பதிவுக்கு மிக்க நன்றி. செய்தியைச் சிறப்பாக கொடுத்துள்ளீர்கள்.

    ஓர் இந்திய புலனாய்வுப் பத்திரிக்கையில் விடுதலைப்புலிகளின் அரசின் செயலை ஆழமாக விவரித்துள்ளது. வியப்படைய வைக்கிறது.

    மேலும் விடுதலைப்புலிகளின் “தமீழீழத் தேசியத் தொலைக்காட்சி” (NTT) என்ற ஒரு தொலைக்காட்சியை (கார்த்திகை பூ-சின்னம்) ஒளிப்பரப்பிக்கொண்டுருக்கிறார்கள். இப்பொழுது ஐரோப்பாவில் மட்டும் தெரிகிறது. விரைவில் ஆசியா பகுதிக்கும் ஒளிப்பரப்பைக் கொண்டு வர ஏற்பாடு நடைபெறுகிறது.

    மேலும் ஈழநாதன் அவர்கள் கூறுவதுப்போல் "புலிகளின் குரல்" இணைய வானொலி சேவையாகும்.

    அரசின் ஊடகமும் புலிகளின் ஊடகமும் என்ற பதிப்பை மலேசியாவின் மாத இதழின் அகப்பக்கத்தில் www.semparuthi.com/x பார்க்கவும்.

    பு.மு.சுரேஷ்
    மலேசியா.

    ReplyDelete
  5. 'புலிகளின் குரல்' (voice of tigers) இப்பொழுதைக்கு வானொலியாக இருந்தாலும் அவர்கள்தான் தொலைக்காட்சி சானல் நடத்தப்போவதாக தெஹெல்கா செய்தி சுட்டிக்காட்டியது. இவர்களுக்குத்தான் கனடாவின் TVI ஊழியர் ஒருவர் வகுப்புகள் நடத்துவதாக அந்தச் செய்தி கூறியது.

    ReplyDelete