கர்நாடகாவில் கடும் மழையினால் மேட்டூரில் தண்ணீர் நிரம்பி, மேற்கொண்டு வழிகிறது. இதனால் காவிரியில் வெள்ளம். காவிரியில் வெள்ளம் வந்தால்தான் கொள்ளிடத்துக்கு நீர் திறந்து விடுவார்கள். கொள்ளிடத்தின் நோக்கமே அதுதான். வெள்ள நீரைக் கொள்ளும் இடம். காவிரிக்கும் கொள்ளிடத்துக்கும் நடுவில் மாட்டியிருப்பது திருவரங்கம். அங்குதான் என் பெற்றோர் வசிக்கிறார்கள். கடந்த இரு தினங்களாக வெள்ள அபாயம். ஆனால் இதுவரையில் அவர்கள் வசிக்கும் இடங்களில் ஒன்றும் ஆகவில்லை என்கிறார்கள். அம்மா மண்டபம் மேல்படி வரை தண்ணீர் நிரம்பி வழிகிறது. அரங்கத்தின் தாழ்வான பகுதிகள், தோப்புகளை அழித்துப் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சில இடங்கள் ஏற்கெனவே தண்ணீரால் மூழ்கியுள்ளது.
திருச்சியை அடுத்த பல கிராமங்களில் தண்ணீர் இடுப்பளவு ஓடுகிறது. காவிரி, கொள்ளிடம் பாய்ந்து வரும் பல மாவட்டங்களிலும் இந்தப் பிரச்னை உள்ளது. பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளனர். ஆங்காங்கே மேடான பகுதிகளில் தங்கியுள்ளனர். சன் டிவி எப்பொழுதும் போல இதையும் அரசியலாக்கி, அரசு உதவி செய்வதில் மெத்தனம், தாமதம் என்றெல்லாம் சொல்லி வருகின்றனர். ஆனால் நான் கேள்விப்படுவது வரையில் அரசு இயந்திரம் அதால் முடிந்த அளவுக்கு வேகமாகத்தான் இயங்கியுள்ளது.
திருச்சி பகுதியில் இப்பொழுது மழை இல்லை. மழை பெய்தால் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும். ஆனால் கர்நாடகாவில் இன்னமும் இரண்டு நாள்களுக்கு மழை பெய்யும் என்பதால் என்பதால் வெள்ள அபாயம் இன்னமும் உள்ளது.
காவிரி பகுதியில் பயிரிட்டிருந்த பயிர்கள் அனைத்தும் நாசமாகி உள்ளது.
Wednesday, October 26, 2005
Subscribe to:
Post Comments (Atom)
திருச்சி வெள்ளம் பற்றிய தினமலர் செய்திகள்:
ReplyDeletehttp://www.dinamalar.com/2005oct26/fpnews1.asp
http://www.dinamalar.com/2005oct26/fpnews2.asp