Tuesday, January 06, 2009

நான் எடிட் செய்த புத்தகம் - 1: கோக-கோலா

கோக்: ஜிவ்வென்று ஒரு ஜில் வரலாறு

கோக-கோலாவின் வரலாறு சென்ற புத்தகக் கண்காட்சியின்போதே வரவேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் கொண்டுவர நேரம் இல்லை என்பதால் கைவிடப்பட்டது.

பின்னர் அதைக் கையில் எடுக்க நேரம் வரவில்லை. மீண்டும் தூசு தட்டி எடுத்து, படித்து, எடிட் செய்து கொண்டுவந்தேன். ஜான் பெப்ம்பர்டன் என்ற அமெரிக்கர் 1886 சமயத்தில் ஏதோ வயிற்று வலி மருந்தைத் தயாரித்து விற்கப்போக, அமெரிக்கர்கள் அதை மடக் மடக் என்று குடம் குடமாக, கேன் கேனாக, பாட்டில் பாட்டிலாகக் குடித்துவைக்க, கோக-கோலா என்ற பேரரசு உருவானது.

ஆனால் தோற்றுவித்த ஜான் பெம்பர்டன் போதை மருந்துப் பழக்கம் கொண்டவர். அவரது மகன் ஒரு உதவாக்கரை. அவர்கள் கையிலிருந்து அசா கேண்ட்லர் என்ற தொழிலதிபர் எப்படி நிறுவனத்தை வாங்கி, 1895-ல் ஒன்றாகச் சேர்க்கிறார் என்பது கோக-கோலாவின் அடுத்த கட்டம்.

அதற்கடுத்து, 1919-ல் ஜார்ஜியாவின் சில பணக்காரர்கள் அசா கேண்ட்லரிடமிருந்து கோக-கோலாவை வாங்குகிறார்கள். 1923-ல் ராபர்ட் வுட்ரஃப் நிறுவனத்தின் தலைவராகிறார். கோக-கோலா அமெரிக்கப் படைவீரர்களுடன் இரண்டாம் உலகப்போரை வலம் வருகிறது. கோக், பாட்டிலுக்குள் புகுகிறது. அடுத்து 1980-களில் ராபர்டோ கொய்ஸ்வெட்டா கோக் நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வருகிறார்.

கோக-கோலா - பெப்ஸி சண்டைகள், இருவரும் எடுக்கும் வியூகங்கள், விளம்பரப் போர்கள், ‘புது கோக்’, மக்கள் அதை எதிர்த்து சிலிர்த்து எழுவது, கோக-கோலா கையில் இருந்த காசை வீணாக்கி கொலம்பியா பிக்சர்ஸை வாங்குவது, பின் அதை விற்றுவிட்டு மீளுவது என்று கோக-கோலா நிறுவனத்தின் முழு வாழ்க்கையையும் விவரித்துச் செல்கிறது என்.சொக்கன் எழுதியுள்ள இந்தப் புத்தகம்.

லீனியர் கதைகூறல்தான். பெரும் தரிசனங்கள் ஏதும் கிடைக்காது. ஆனால் உலகத் தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் தொடராக கிழக்கு பதிப்பகம் கொண்டுவந்துள்ள இந்தப் புத்தகத்தில் தொழில்முனைவோர் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன.

1 comment:

  1. coca cola தலைவலி மருந்தாக் தானே இருந்தது...

    ReplyDelete