Wednesday, January 07, 2009

சில படங்கள், சில கச்சேரிகள்

கடந்த ரெண்டு மாதமாக வேலை காய்ச்சி எடுப்பதால், சென்ற வாரம், சென்னை இசைக் கச்சேரி சீசனையும் சினிமா சீசனையும் விடுவதில்லை என்று முடிவு எடுத்துக்கொண்டு டைம்டேபிள் போட்டு சில நிகழ்ச்சிகளுக்குச் சென்றேன்.

1. மார்கழி ராகம்
2. அபியும் நானும்
3. கஜினி (இந்தி)
4. மடகாஸ்கர் - 2
5. மாண்டலின் ஸ்ரீனிவாஸ் கச்சேரி
6. சித்ரவீணா ரவிகிரன் கச்சேரி

முதல் நான்கும் சத்யம் தியேட்டர் காம்ப்ளக்ஸில். அடுத்த இரண்டும் நாரத கான சபாவில்.

லக்கிலுக் போல படம் போட்டு பாகங்களைக் குறித்து தீர்க்கமான விமரிசனங்களை நான் எழுதப்போவதில்லை. எனவே சுருக்கமான ஒரு அல்லது இரண்டு வரி விமரிசனங்கள் மட்டுமே.

மார்கழி ராகம்: புது கான்சப்ட். நிச்சயம் வரவேற்கவேண்டிய ஒன்று. முழுமையான உருப்படியான விமரிசனத்தை சிமுலேஷன் பதிவில் சென்று பார்க்கவும். பாம்பே ஜெயஸ்ரீ கச்சேரி என்றால் நாரத கான சபாவில் டிக்கெட் விலையை இரட்டிப்பு செய்துவிடுகிறார்கள். அற்புதமான ஒலி அமைப்பு பொருந்திய சத்யம் தியேட்டர் அரங்கில் சுகமான ஓர் அனுபவம். சிமுலேஷன் சொல்வது போல, தனி ஆவர்த்தனத்தின்போது எழுந்துபோகும் ஆட்களை துப்பாக்கியால் சுடத்தோன்றும் எனக்கு. தியேட்டரிலும் தனி ஆவர்த்தனம் நடக்கும்போது யாராவது எழுந்திருக்கப்போகிறார்களா என்று பார்த்தேன். நல்லவேளை. அப்படி ஏதும் நடக்கவில்லை. ஜெயஸ்ரீ தனி ஆவர்த்தனத்துக்கு நேரம் ஒதுக்கி, ஆவர்த்தனமும் முடிந்து, மீண்டும் ஜெயஸ்ரீயே தொடர்வார் என்று எதிர்பார்க்கும்போது டி.எம்.கிருஷ்ணா தொடர்வது ஆச்சரியம். சினிமாத் திரையில் மட்டும்தான் இது சாத்தியம்.

இதற்கு பதில் டிவியில் காண்பித்துவிட்டுப் போகட்டுமே என்று சொல்பவர்கள் அபாக்கியவான்கள். கான்சர்ட்டில் உட்கார்ந்த அனுபவமும் கிடைக்கும்; நமக்கு வேண்டிய நேரத்தில் போய்க் காணும் சாத்தியமும் உண்டு என்பதை உணராதவர்கள்.

அபியும் நானும்: படத்தில் அபி இல்லை. அபியின் அப்பாதான் இருக்கிறார். “அபியின் அப்பாவும் பெண்ணும்” என்று மாற்றி வைக்கலாம். பாடல்கள் தேவையில்லை. மோசமாகவும் உள்ளன. ராதா மோகனுக்கு படத்தை ஆரம்பிக்கவும் முடிக்கவும் தெரியவில்லை. மற்றபடி ஓகே. ஆனால் அந்த பிளானிங் கமிஷன் உறுப்பினரை மதர் தெரசாவாகச் சித்திரித்து கழுத்தை அறுக்கிறார். அவருக்கு பிரதமர் ஃபோன் போடுவதெல்லாம் ரொம்ப டூ மச். தமிழ்க் குப்பைகளுக்கு நடுவில் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். லக்கிலுக்கின் விமரிசனம்.

கஜினி (இந்தி): ஏன் இந்த விஷப்பரீட்சை என்று நீங்கள் நினைக்கலாம். என்னவோ தோன்றியது. முதல் நாள் படம் பார்க்கப்போய் அடுத்த நாள்தான் வெளியே வந்தோம். முதல் நாள் இரவு 10.00 மணிக்கு ஆரம்பித்த படம், அடுத்த நாள் வீடு வந்து சேர்ந்தபோது அதிகாலை மணி 2.00. அந்த அளவுக்கு என்ன பென்ஹரா எடுத்துள்ளார்கள் என்றால், இல்லை, வெறும் குப்பைதான்.

சூர்யா, அமீர் கானைவிட நன்றாக நடித்தார். அமீர் கானுக்கு காதல் செய்யத் தெரியவில்லை. சண்டையும் போடத் தெரியவில்லை. தமிழில் பாட்டுகள் மனத்தில் நின்றன. இந்தியில் ட்யூன் எதுவும் உருப்படியில்லை. தரித்திரம். தமிழில் கிளைமேக்ஸ் படு கேவலம். இந்தியில் அதிலிருந்து 5% குறைந்த கேவலம். மற்றபடி படம் பாடாவதி. பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் இஷ்டம். அசின்... தமிழிலும் இந்தியிலும் ஒரே சேவிங் கிரேஸ் இவர்தான்.

மடகாஸ்கர் - 2: எந்த அனிமேஷன் / குழந்தைகள் படம் வந்தாலும் பெண்ணைக் கூப்பிட்டுக்கொண்டு சென்று பார்த்துவிடுவேன். அந்த வரிசையில். மற்றபடி படம் சரியாக 2 மணி நேரத்துக்குள் முடிந்தது சந்தோஷமாக இருந்தது. இந்திய சினிமா தயாரிப்பாளர்கள் எப்போதுதான் இதனைக் கற்றுக்கொள்வார்களோ. 3, 4 மணி நேரம் உட்காரத் தாளவில்லை. மற்றபடி மனத்தில் எதுவும் நிற்கவில்லை. சுமாரான படம்தான். சிறுவர்கள் சந்தோஷமாகப் பார்த்தனர். என்னதான் இருந்தாலும் பிக்ஸாருக்கு இணையாக எஸ்.கே.ஜி டிரீம்வொர்க்ஸ் வருவதற்கு ஒரு மில்லியன் வருடங்களாவது ஆகும் என்று தோன்றுகிறது.

மாண்டலின் ஸ்ரீனிவாஸ், சித்ரவீணா ரவிகிரண்: ஒவ்வோர் ஆண்டும் இவர்கள் இருவரது கச்சேரிக்காவது செல்வது வழக்கம். எல்லா முறையும் அப்படி நடப்பதில்லை. இந்த முறை இரண்டு கச்சேரிகளையும் நாரத கான சபாவில் பிடித்துவிட்டேன். கன்யாகுமரி வயலின் கச்சேரியை இந்தமுறை தவறவிட்டேன்.

கம்பி இசைக்கருவிமீது எனக்கு தனியான நாட்டம். அறிவியலில் கம்பி இசையைப் புரிந்துகொள்வது எளிது. மேள, பறை வாத்தியங்கள் (பெர்குஷன்), குழல் வாத்தியங்கள் ஆகியவை எப்படி வேலை செய்கின்றன என்பதை விளக்குவது கடினம். இதைப்பற்றி தனியாக எழுதுகிறேன்.

2 comments:

  1. சினிமா பார்த்துவிட்டு கச்சேரிக்கு போயிட்டு வந்தாப்ல இருக்கு.

    பணம் மிச்சம்.

    புத்தக கண்காட்சியில் "கிழக்கில்" நல்ல புத்தகம் வாங்கலாம்.

    நன்றி.

    ReplyDelete
  2. மார்கழி ராகம் பற்றிய எனது இடுகையைக் குறிப்பிட்டமைக்கு நன்றி.

    - சிமுலேஷன்

    ReplyDelete