Thursday, January 08, 2009

நான் எடிட் செய்த புத்தகம் - 5: ராமகியன்

ராமகியன்: தாய்லாந்து ராமாயணம்

ஆனந்த் ராகவ் அறியப்பட்ட சிறுகதை எழுத்தாளர். தாய்லாந்தில் பல ஆண்டுகள் வசித்த இவர் இன்று பெங்களூருவில், உலோக வணிகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் மேலதிகாரியாகப் பணியாற்றுகிறார். அவ்வப்போது ஆனந்த விகடனில் ஒரு கதை எழுதுவார். இவரது க்விங்க் என்ற சிறுகதைத் தொகுதி கிழக்கு பதிப்பகம் வாயிலாக வெளியாகியுள்ளது.

ராமாயணத்தின் மூலம் வால்மீகி சமஸ்கிருதத்தில் இயற்றியது. ஆனால் அதற்குக் கொஞ்சமும் குறைவுபடாமல், தமிழில் கம்பன் முதற்கொண்டு இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் ஏகப்பட்ட ராமாயண வடிவங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் அடிப்படையில் வால்மீகியைத் தழுவி இருக்கும். ஆங்காங்கே மெருகூட்டப்பட்டிருக்கும். அதே நேரம் ராமாயண பாத்திரங்கள் மாற்றம் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான நாட்டுபுறக் கதை வடிவில் புழங்குகிறார்கள். இன்றைய நவீன கதைசொல்லிகளும் ராமனையும் சீதையையும் அனுமனையும் வாலியையும் தங்கள் மனம் போன போக்கில் மறுகட்டமைப்பு செய்கிறார்கள்.

ஆனால் ராமாயணம் என்ற காவியம், இந்தியாவுக்கு வெளியில், குறிப்பாக தென் கிழக்கு ஆசியாவில் மிக நன்றாக வேறூன்றியுள்ளது. அதில் மிக முக்கியமான நாடு தாய்லாந்து.

தாய்லாந்தில் அரசருக்குப் பெயரே ராமாதான். ராமா-4, ராமா-5, ராமா-6 என்று போகும். அரசியின் பெயர் அதேபோல, சீதா. இங்கே வழங்கும் ராமாயணத்தின் பெயர்தான் ராமகியன். ராமகியன் பல இந்திய ராமாயணங்களின் கலவையாகவும், அதே நேரம் தாய்லாந்தின் பாரம்பரியத்துடன் இணைந்ததாகவும் உள்ளது.

ஆனந்த் ராகவ் இந்தப் புத்தகத்தில் தாய் ராமாயணத்தை ஆராய்ச்சி நோக்கில் விளக்குகிறார். பாத்திரப் படைப்புகளில் எங்கெல்லாம் வேறுபாடு என்று காட்டுகிறார். ராமன், சீதை, பொதுவாக ராமகியனில் பெண்கள் பாத்திரம் எப்படியுள்ளது, வாலி வதம், அனுமன், ராவணன், யுத்தகாண்டம் என்று முக்கியமான விஷயங்களை எடுத்துக்கொண்டு தனித்தனி அத்தியாயங்களில் சாறாக்கித் தருகிறார்.

இந்திய ராமாயணங்களில் இல்லாதமாதிரி, ராமகியனில் பெண்கள் போகப்பொருளாக மட்டுமே வருகின்றனர்; சீதை தவிர்த்து. இதில் அனுமன் ஒரு பெண் பாக்கியில்லாமல் உறவுகொண்டு குழந்தைகளையும் தோற்றுவிக்கிறான்.

பாதிப் புத்தகத்துக்கு மேல் ராமகியனைப் பற்றிப் பேசிவிட்டு, ஆனந்த் ராகவ், பிற தென் கிழக்கு ஆசிய நாடுகளின் ராமாயணங்களை மேலோட்டமாக எடுத்துவைக்கிறார். பர்மா, மலேசியா, லாவோஸ், கம்போடியா, இந்தோனேசியா, ஜப்பான் என அனைத்து நாடுகளிலும் புழங்கும் ராமாயணங்கள் அல்லது ராமாயணம் போன்ற கதைகளைச் சொல்லி, அவை எந்தெந்த இடங்களில் இந்திய ராமாயணங்களிலிருந்து மாற்றம் அடைந்துள்ளன என்பதையும் விளக்குகிறார்.

தாய்லாந்தில் ராமாயணம் கோன் எனப்படும் முகமூடி அணிந்து நடிக்கப்படும் நாடகம். ஆனந்த் கொடுத்திருந்த சில படங்கள் சரியான ரெசொல்யூஷனில் இல்லாததால் சேர்க்கமுடியவில்லை. ஆனாலும் இந்தப் படங்கள் இல்லையென்றால், நன்றாக இருக்காது புத்தகம் என்று தோன்றியது. தாய்லாந்து தூதரகத்தை அணுகி, அவர்கள் வழியாக தாய்லாந்து சுற்றுலா அமைச்சகத்திடமிருந்து சில படங்களைப் பெற்று அவற்றைச் சேர்த்துள்ளோம்.

இந்தப் புத்தகத்தின் முதல் பிரதியை எடுத்ததிலிருந்து, இரு முறை ஆனந்த் ராகவிடம் போய்விட்டு வந்து மாற்றங்கள் செய்ததுவரை, கடைசியில் பிரதியில் செய்யவேண்டிய சிறு சிறு பிழைதிருத்தங்கள் வரை ஒரு ஜாலியான அனுபவம்.

நாம் அனைவரும் ராமாயணக் கதை கேட்டே வளர்ந்திருக்கிறோம். ஆனால் இத்தனை வித்தியாசங்கள் கொண்ட எண்ணற்ற ராமாயணங்களா என்பது நமக்குப் பெருத்த ஆச்சரியத்தை வரவழைக்கிறது. அடுத்தது, ராமாயணத்தில் தெய்வீகத் தன்மை. இதை அடிப்படையாகக் கொண்டுதான் நம் நாட்டில் பெரும் சண்டைகளே வருகின்றன. ஆனந்த் ராகவுக்கு இந்த பயம் உள்ளது.

பல ஆயிரம் ராமாயணங்கள் (அல்லது அதுபோன்ற ஏதோ தலைப்பு) என்ற கண்காட்சி ஒன்றில் பஜ்ரங் தள் குரங்குப் படையினர் நுழைந்து அங்குள்ள காட்சிப் பொருள்களை அடித்து நொறுக்கினார்கள் என்ற செய்தி சில மாதங்களுக்குமுன் கூட வந்தது. எனவே ஆனந்த் ராகவ், இந்தப் புத்தகத்தில் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறார். இந்தப் புத்தகத்தை ஓர் இலக்கியத்தை அணுகுவதுபோல அணுகுங்கள்; தெய்வ நம்பிக்கைகளை மனத்தில் வைத்துக்கொண்டு படித்து டென்ஷன் ஆகாதீர்கள் என்கிறார்.

1 comment:

  1. Bajrang dal was protesting against the inclusion of AK Ramanujan's essay on different versions of Ramayana in Delhi University syllabus.

    ReplyDelete