Thursday, January 26, 2012

புதுக்கோட்டை பயணம் - 2

முதல் நாள் பயணம்: திருமெய்யம் (திருமயம்), ஆவுடையார்கோவில், இரும்பாநாடு

(இந்தப் பயணத்தில் நான் படம் ஏதும் எடுக்கப்போவதில்லை. எனவே வெறும் எழுத்து மட்டும்தான்.)

ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் காலை புதுக்கோட்டை வந்து சேர்ந்தோம். குளித்து, காலை உணவு முடித்தபின், 8.30-க்குக் கிளம்பி திருமெய்யம் செல்வதாக ஏற்பாடு. ஆனால் அது நடக்காது என்பது தெரியும். சுமார் 40 பேர் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் தயாராகுவது எளிதல்ல. தங்குமிடத்திலிருந்து அனைவரும் கிளம்பி பப்ளிக் ஆபீஸ் எனப்படும் அரசு அலுவலகங்கள் உள்ள பகுதிக்கு வரும்போது மணி 9.30. அங்கே நகரின் சில முக்கியஸ்தர்கள் வந்திருந்தனர். இந்தப் பயணத்தின்போது எங்கள் வசதிக்கென ஒரு பேருந்தை அளித்திருக்கும் சுதர்சன் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் வந்திருந்தார்.

முன்னாள் மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் (Grand Commander, Indian Empire!) சிலைக்குமுன் நின்று அறிமுக உரையாடல்களை நடத்திக்கொண்டிருக்கும்போது புதுக்கோட்டையில் இருக்கும் பத்திரிகைத் துறை, தொலைக்காட்சி சானல் நண்பர்கள் என பலரும் வந்திருந்தனர். அனைவரும் படம் எடுக்க, வீடியோ எடுக்க கொஞ்சம் நேரம் செலவானது.

நாங்கள் இந்தப் பயணத்துக்காக என்று உருவாக்கியிருந்த கையேட்டை (ஆங்கிலத்தில் உள்ளது) அனைவருக்கும் அளித்தோம். தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே அனைவரும் சொன்னார்கள். உண்மைதான். ஆனால் இது வெறும் கையேடுதான். விரைவில் ஒரு புத்தகமே தயாராகும்.

இறுதியாக திருமெய்யம் கிளம்பியபோது மணி 10.30.

திருமெய்யம் விண்ணவர் கோவில்

திருமெய்யம் ஒரு குன்று. அந்தக் குன்றின்மேல் பிற்காலத்தில் கட்டப்பட்ட ஒரு கோட்டை உள்ளது. அந்தக் கோட்டையை கெட்டபொம்முவின் தம்பி ஊமைத்துரை ஓரிரவில் கட்டிமுடித்ததாக நம்பவே முடியாத ஒரு புனைகதை இந்தப் பகுதிகளில் உண்டாம். அதன் காரணமாக, ஊமையன் கோட்டை என்று இந்தக் கோட்டை அழைக்கப்படுவதுண்டு. ராமநாதபுரம் சேதுபதி மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் ஊமைத்துரை சிறை வைக்கப்பட்டிருக்கலாம். அதன் காரணமாக இருவான அந்தப் பெயர், பின்னர் புதுக் கதையாகத் திரிந்திருக்கவேண்டும்.

அந்தக் குன்றின் கீழ்ப்புறம்தான் இரண்டு குடைவரைக் கோவில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. யார் கட்டுவித்தது என்று தெரியவில்லை. பாண்டிய மன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்த பகுதி இது. அவர்கள் கீழ் ஆட்சி செய்த முத்தரையர்கள் காலத்தில் எட்டாம் நூற்றாண்டில் இந்தக் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

இரு குடைவரைக் கோவில்களையும் பிற்காலத்தில் விஜயநகர, நாயக்க மன்னர்கள், ஆளுநர்கள் விரிவாக்கிக் கட்டியுள்ளனர்.

திருமெய்யம் விண்ணவர் (விஷ்ணு) கோவிலில் காணப்படும் அனந்தசயன மூர்த்தி மிகப் பிரமாதமானது. ‘அனலால் அலறும் அரக்கர்கள்’ என்று குடவாயில் பாலசுப்ரமணியன் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அவரே எங்களுடன் வருவதாக இருந்தது. ஆனால் அவருக்கு வேறு வேலை என்பதால் வரமுடியவில்லை. அனந்தசயனப் பெருமாள் தமிழகத்தில் பல பகுதிகளில் இருப்பதோடு இந்தியாவின் பல பகுதிகளிலும் காணப்படுகிறார்.

இந்து சிலையமைப்பைப் பொருத்து, சயனமூர்த்தி, யோக, போக, வீர சயனமூர்த்தி என்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறார். யோகமூர்த்தியை வழிபடுவது முக்தியைக் கொடுக்கும்; போகமூர்த்தியை வழிபடுவது செல்வத்தைக் கொடுக்கும். வீரமூர்த்தியை வழிபடுவது வீரத்தைக் கொடுக்கும் என்பது ஐதீகம்.

திருமயம் சயனமூர்த்தி போக சயனமூர்த்தி. மாபெரும் புடைப்புச் சிற்பம். 70 எம்.எம் சினிமாத் திரை போல ஒரு கோடியிலிருந்து மறுகோடி வரை ஒரு வளைந்த வட்டத்தில் புடைப்புச் சிற்பம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை கவின் கலைக் கல்லூரி விரிவுரையாளர் சிவராமகிருஷ்ணன் சுட்டிக் காட்டினார். மாமல்லபுரம் முதற்கொண்டு பல இடங்களில் காணப்படும் சயனமூர்த்தி இப்படிக் கிடையாது. ஏனெனில் அவை சிறு கட்டத்துக்குள் வருபவை. ஆனால் இங்குள்ள விரிந்து பரந்த சிற்பத்தை இப்படித்தான் செதுக்கவேண்டும்!

நித்திரையில் விண்ணவர் படுத்திருக்கிறார். வலது கரம் நாகத் தலையை ஒட்டி நீண்டுள்ளது. இடது கரம் கடக முத்திரையைக் காட்டியுள்ளது. வலது கால் நீண்டிருக்க, இடது கால் சற்றே மேலெழும்பி உள்ளது. கண்கள் பாதி மூடியுள்ளன. திருமகள், நிலமகள் இருவரும் இருக்கவேண்டும். திருமகள் தோள்புறத்திலும் நிலமகள் கால்புறத்திலும் (போக சயனமூர்த்தி என்றால் இதுதான் ஆகம முறை). ஆனால் திருமகளைக் காண முடிவதில்லை. காலடியில் நிலமகள் அமர்ந்திருக்கிறாள்.

மார்க்கண்டேயர், பிருகு என்ற இரு மகரிஷிகளும் காலடியில் உட்கார்ந்திருக்கவேண்டும். ஒரு ரிஷி கண்ணுக்குத் தென்படுகிறார். மற்றொருவர் காணவில்லை. உத்சவ மூர்த்தி அவரை மறைத்திருக்கவேண்டும்.

கருடன் தலைமாட்டில் நின்றுகொண்டிருக்கிறார். அவருக்கு நேர்மேலே சூரியன். மறுகோடியில் சந்திரன்.

நாபிக்கமலத்திலிருந்து பிரமன். அவருக்கு இரு புறமும், தும்புரு, நாரதர், சனத்குமாரர்கள் நால்வர், ஆயுதபுருஷர்கள் ஐவர், சப்தரிஷிகள் எழுவர், அஷ்ட திக்பாலர்கள் எண்மர் என நிறைந்திருக்கவேண்டும். அவர்கள் அனைவரையும் மேலே காண்பீர்கள். ஐந்து ஆயுதபுருஷர்கள் பறக்கும் கோலத்தில் இருப்பார்கள். விஷ்ணுவின் ஆயுதங்கள் சங்கு, சக்கரம், வாள், வில், கதை. (மாமல்லபுரத்தில் இரு ஆயுத புருஷர்களை மட்டுமே காணலாம்.) இந்த ஐந்து ஆயுத புருஷர்களும் யாரை நோக்கிச் செல்கிறார்கள்?

விண்ணவரின் கால்புறத்தில் இரு அரக்கர்கள். மது, கைடபன். இவர்கள் விஷ்ணுவின் காது அழுக்கிலிருந்து உருவானவர்கள் என்கிறது தேவி மகாத்மியம். பூமியை எடுத்துகொண்டு போக வந்தவர்கள். விஷ்ணுவைத் தாக்க வருகிறார்கள். அவர்களை நோக்கித்தான் ஆயுத புருஷர்கள் நகர்வதாக சிற்பி வடித்துள்ளார்.

இதற்கிடையில் ஒரு டிராமா. யாரடா இவர்கள், எம் தலைவனைத் தாக்குவதற்கு வந்துள்ளார்கள் என்று கொதித்தெழும் ஆதிசேஷன் தன் வாயிலிருந்து அனல் விஷத்தைக் கக்குகிறான். அது பறந்து சென்று மது, கைடபர்களைத் தாக்க அதில் ஒருவன் தகிப்பைத் தாங்கமுடியாமல் தலையைச் சாய்த்து, முதுகின்மீது கைகொண்டு மறைத்துத் தப்ப முயல்கிறான்.

மாமல்லபுரத்தில் மது கைடபர்களின் கோலத்தைக் காணலாம். ஆனால் அனலைக் காண முடியாது. இங்கே திருமெய்யத்தில் அனல் ஜுவாலைகளையும் சிற்பத்தில் வடித்துள்ளனர். ஆனால் ஜுவாலையில் தீக்கங்குகளின் திசை பின்னோக்கி இருக்கவேண்டும். இங்கோ சிற்பத்தில் முன்னோக்கிச் செல்கிறது. இதற்கு குடவாயில் பாலசுப்ரமணியனின் விளக்கம் வித்தியாசமானது! அனலைக் கக்கியபிறகு கடும் உஷ்ணக் காற்றையும் அனுப்புகிறானாம் ஆதிசேஷன். அந்தக் காற்று முன்னோக்கிச் செல்வதால் தீக்கங்குகளும் முன்னோக்கிப் போகின்றனவாம்.

இந்தப் பெரிய நாடகம் நம் கண்முன் பனோரமிக் காட்சியாக விரிவடைகிறது.

(c) அசோக் கிருஷ்ணசாமி, தனித்தனியாக எடுத்து
போட்டோஷாப்பில் ஒட்டவைக்கப்பட்டது. நேராகப்
பார்க்கும்போது இடையில் இரு தூண்கள் இருக்கும்.
நமக்கு நெருக்கடி தருபவர்கள் ஏதோ கதையைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கும் பட்டரும், உத்சவர் பெயர் என்ன என்று ஆர்வமாகக் கேட்கும் பிற பக்தர்களும். ஆனால் கோவில் ஒன்றும் நம் சொத்து அல்லவே? எனவே நாம் ஓர் ஓரமாக நின்று இந்தக் கோடிக்கும் அந்தக் கோடிக்குமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பட்டர், கீழே குழுமி நிற்பவர்கள் சித்திரகுப்தனும் தர்மராஜாவும் என்கிறார். முப்பது முப்பத்தொன்னு தேவர்கள், நாப்பது நாப்பத்தொன்னு ரிஷிகள் என்று ஏதேதோ சொல்கிறார். எந்த ஆகமம், எந்த சோர்ஸ் என்றெல்லாம் அவரிடம் கேட்க முடியாது. அவர் கோவில், அவர் கதை. துளசி, தீர்த்தம், சடாரி ஆக ஆக, பஸ் கிளம்பிவிடும் என்று பரபரவென்று ஓடுகிறார்கள் மக்கள்.

நாம் மட்டும் இன்னமும் இருக்கிறோம். அடுத்து சிவனைப் பார்க்கவேண்டும். இரு கோவிலும் சேர்ந்து இருந்த வரலாறையும் பிரிந்த கதையையும் தெரிந்துகொள்ளவேண்டும். இடையில் எழுப்பப்பட்ட சுவர், அழிந்த இசைக் கல்வெட்டு இரண்டையும் பார்க்கவேண்டுமே.

(தொடரும்)

7 comments:

  1. இந்த ஃபார்மட் நல்லா இருக்கு. கோர நாத்திகர் (பாரா உபயம்) கிட்ட இருந்து வர்ற கமெண்டரி சுவாரசியம் :)

    ReplyDelete
  2. அருமை.
    தொடர்ந்து எழுதுங்கள்.
    நன்றி.

    ReplyDelete
  3. // கோட்டையை கெட்டபொம்முவின் தம்பி ஊமைத்துரை ஓரிரவில் கட்டிமுடித்ததாக நம்பவே முடியாத ஒரு புனைகதை இந்தப் பகுதிகளில் உண்டாம்.//

    பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைத்தாந் ஊமைத்துரை ஒரே இரவில் கரும்பு சக்கை மற்றும் சுண்ணாம்பு வைத்து கட்டியதாக கூறுவா ர்கள்

    ( முல்லை பெரியாறு அனையில் கூட கரும்பு சக்கை, சுண்ணாம்பு என்று கேள்விப்பட்ட ஞாபகம் )

    ReplyDelete
    Replies
    1. ஊமைத்துரை

      http://makkalaatsi.blogspot.in/2012/01/blog-post_31.html

      Delete
  4. Awaiting the rest of your travelogue!!! :)

    ReplyDelete
  5. eagerly awaiting for more. pleasant rewind for me.

    ReplyDelete
  6. great work by ashok

    http://poetryinstone.in/lang/en/2011/02/10/movement-and-drama-is-it-possible-in-stone-relief-pradeep-chakravarthy-says-yes.html

    ReplyDelete