Tuesday, January 10, 2012

பன்முக அறிவு

குழந்தைகளை ‘படி படி’ என்று நசுக்கும் காலம் இது. அவர்கள் முதுகில் ஐந்து கிலோ, பத்து கிலோ என்று பொதி சுமக்க வைக்கிறோம். வீட்டுப் பாடம் எக்கச்சக்கம். பள்ளியில் ஆசிரியர்கள் கடனே என்று எதையோ சொல்லிவைக்க, புரிகிறதோ, புரியவில்லையோ, குழந்தைகள் அரைத் தூக்கத்துடனும் ஆர்வமின்றியும் அதனைப் பின்பற்றவேண்டிய கட்டாயம்.

பிறகு தேர்வு, அதில் மதிப்பெண்கள், அடுத்து மேற்கொண்டு எஞ்சினியரிங் என்று குழந்தைகளை ஆரம்பத்திலேயே பொசுக்கிவிடுகிறோம்.

ஆனால், குழந்தைகளின் ஆர்வம் என்னவென்று நாம் கேட்பதே இல்லை. அவர்களின் திறன் எதில் உள்ளது என்பதையும் நாம் கவனிப்பதில்லை. ஹாவர்ட் கார்ட்னெர் முன்வைத்த Multiple Intelligence என்ற கருத்தாக்கத்தின்படி, எட்டுவிதமான அறிவுகள் உள்ளன. அதில் சிலதான் அல்லது ஒன்றுதான் ஒரு மனிதருக்கு அதிகமாக இருக்கும். அவை எவை என்று கண்டுபிடித்தால், அதில், அந்தத் துறையில் அந்த மனிதரால் உச்சங்களை அடையமுடியும்.

இன்று எல்லாத் துறைகளிலுமே வாய்ப்புகள் இருக்கும்போது ஒரு குழந்தையை எதை நோக்கிச் செலுத்துவது? முரட்டுத்தனமாக, படி, படி என்று சொல்லிக்கொண்டே இருப்பதா, அல்லது எதில் ஆர்வமும் திறனும் உள்ளதோ அதை நோக்கி ஒரு குழந்தையைச் செலுத்துவதா?

எந்த அடிப்படையில் நம் குழந்தையிடம் இந்தத் திறன் உள்ளது என்று கண்டறியமுடியும்?

*

கிழக்கு வெளியீடாக வரும் ‘பன்முக அறிவு: உங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள்’, இந்த விஷயத்தைப் பற்றிய ஒரு அறிமுகத்தை உங்களுக்குத் தருகிறது. புத்தக ஆசிரியரான ஜி. ராஜேந்திரன், சில பத்தாண்டுகளாக பள்ளிக்கூட ஆசிரியராக இருப்பவர். பள்ளி ஆசிரியர்களுக்கு ஆலோசகராக இருப்பவர். குழந்தைகளோடு நெருங்கிப் பழகுபவர். நம் கல்விமுறைமீது கடுமையான விமரிசனங்களை வைப்பவர். அவர் நேரடியாக நடைமுறைப்படித்தியுள்ள அனுபவங்களிலிருந்து இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

சிறிய புத்தகம்தான். ஆனால் உங்கள் குழந்தையின் வாழ்க்கையையே நல்ல வழிக்குக் கொண்டுசெல்லக்கூடிய புத்தகமாக இது அமையலாம்.

1 comment:

  1. இத்தனை எழுதிட்டு இந்த புத்தகத்தை வாங்க ஒரு சுட்டி-ய கிழே வச்சிருந்தீங்ன்னா இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

    ReplyDelete