Wednesday, April 28, 2004

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 1

பிரக்ஞ்ய விஸ்வதர்ஷன் தொடர்பேச்சு வரிசையில் 26 ஏப்ரல் 2004 மாலை 6.30 மணிக்கு பேராசிரியர் வி.சூர்யநாராயணன் இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் என்ற தலைப்பில் பேசினார்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியான் (Asean) நாடுகளைப் பற்றிய படிப்புக்கான மையத்தின் இயக்குநராகப் பணியாற்றியவர் திரு. சூர்யநாராயணன்.

கூட்டத்திற்கு சுமார் 20 பேர் வந்திருந்தனர். பனிரெண்டு பேர் கல்லூரி மாணவர்கள் போலவும், நான்கைந்து பேர் வயதான பெரியோர்களாகவும் இருந்தனர். கல்லூரி மாணவர் போன்றோர் இந்தத் தொடர்பேச்சின் மற்ற பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருபவர் போலிருந்தது. (எடுத்துக்காட்டாக அடுத்த வாரத்திற்கானது Stress Management என்னும் தலைப்பில் ஒருவர் பேசப்போகிறார். இதற்கும் இந்த மாணவர் குழாம் அப்படியே வரலாம்.?) இந்தப் பேச்சு பற்றிய முன்னறிவிப்பு 'தி ஹிந்து' பத்திரிகையில் வெளியாகியிருந்தது. நானும் எனது வலைப்பதிவில் தகவல் இட்டிருந்தேன். ஆனால் இதுபோன்ற விஷயங்களைப் பற்றி யார் பேசினாலும், எத்தகைய கருத்தை முன்வைத்தாலும் சென்னைத் தமிழர்களுக்கு இந்த விஷயத்தில் அவ்வளவு நாட்டம் இல்லை என்று தெரிகிறது.

-*-

தொடக்கத்தில் இந்தியா-இலங்கை பற்றிய உறவை அறிந்து கொள்ள, இரண்டு முக்கியமான விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டுமென்று சொன்னார். (1) இந்தியாவைப் பற்றிய இலங்கைப் பெரும்பான்மைச் சிங்களவர்களின் கருத்து (2) இந்தியாவின் மைய அரசில் இலங்கை பற்றிய கொள்கைகளை வரையறுத்தவர்களின் தமிழ்நாடு/இலங்கைத் தமிழர்கள் பற்றிய அறியாமை

இந்தியா பற்றிய இலங்கையினரின் கருத்து

* 1948 பெப்ரவரியில் சுதந்திரம் (புதிய அரசியல் நிர்ணயச் சட்டம்). இந்திய சுதந்திரத்தின் போது நடந்தது போலல்லாமல் சிறிதும் சண்டையின்றி, இரத்தம் சிந்தாமல் சுதந்திரம் பெற்றது சிலோன். அது மட்டுமின்றி முதல் அரசிலிருந்தே தமிழர்களுக்கு அமைச்சரவையிலும் பங்கிருந்தது. ஐவர் ஜென்னிங்ஸ் இலங்கையை 'மாடல் காலனி (Model Colony)' என்று பெருமையாகக் குறிப்பிட்டிருந்தார்.

* தொடக்கத்திலிருந்தே இலங்கை மக்கள் (சிங்களவர்கள்?) இந்தியாவின் மீது காதலும், வெறுப்பும் உள்ளவர்களாக இருந்தனர். (love hate relationship). மதம், கலாச்சாரம், மொழி ஆகிய பலவற்றிலும் இலங்கை இந்தியாவிலிருந்து பலவற்றைப் பெற்றது. ஆனால் இலங்கை மக்கள் இந்தியாவினால் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளையும் என்று நம்பினர்.

* சுதந்திரத்திற்கு 7-8 வருடங்கள் முன்னரே சிலோனில் இந்தியக் குடியினர் (தோட்டத் தொழிலாளர்கள்) பற்றிய ஒரு பிரச்சினை சம்பந்தமாக இந்திய தேசிய காங்கிரஸ் பட்டாபி சீதாராமையாவை சிலோன் அனுப்பத் தீர்மானித்தது. ஆனால் சிங்களர்கள் சீதாராமையாவை தமிழர் என நினைத்து அவர் வருவதை எதிர்த்தனர். [சீதாராமையா ஒரு தெலுங்கர்.] பின், ஜவஹர்லால் நேரு அவருக்கு பதிலாக இலங்கை சென்றார். அவர் திரும்பி வந்து அப்பொழுதைய காங்கிரஸ் தலைவர் ராஜேந்திர பிரசாதுக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்:
"என்றாவது ஒருநாள் பிரிடிஷ்காரர்கள் இந்தியாவையும், சிலோனையும் விட்டுவிட்டுத்தான் போக வேண்டும். விடுதலை அடைந்த பின்னர், இந்தியா சிலோனை இலட்சியம் செய்யாமல் தனியாக வாழ முடியும். ஆனால் சிலோனால் இந்தியாவை அண்டாமல் இருக்க முடியாது. ஆனால் சிங்கள இனவாதிகள் (Sinhala Chauvinists) அப்படியொரு நிலையைக் கடுமையாக எதிர்ப்பார்கள்" (தோராயமான மேற்கோள், தவறு இருக்கலாம்....)

இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகள்

* பலவேறு குழுக்கள் தனித்தனியாக இலங்கை பற்றிய கொள்கைகளை உருவாக்கி வைத்திருந்தன. இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம், RAW, IB, தமிழ்நாடு அரசாங்கத்தின் உளவுத்துறை, இராணுவம், கடற்படை என்று பலர், ஆனால் இவர்களிடையே ஒருமித்த கருத்து ஏதுமே இல்லை.

* மேல்மட்டத்தில் இருந்த பல அதிகாரிகளிடம் தமிழர்கள் பற்றிய புரிதல் இல்லாமல் இருந்தது. ஒரு உதாரணம் கொடுத்தார். ரொமேஷ் பண்டாரி வெளியுறவுச் செயலராகவும், ஜே.என்.திக்ஷித் இலங்கைக்கான இந்தியத் தூதுவராகவும் இருந்த நேரம் அது. அப்பொழுது ரொமேஷ் பண்டாரி ஒரு திட்ட அறிக்கையை உருவாக்கி அதனை திக்ஷித்துக்கு அனுப்பி அதனை இலங்கைத் தமிழ் தலைவர்களிடையே சுற்றறிக்கையாக விடச்சொல்லியிருந்தாராம். பின் ரொமேஷ் பண்டாரி கொழும்பு வந்திறங்கிய பின்னர் திக்ஷித்திடம் 'செல்வநாயகத்திடம் அந்த அறிக்கையைக் கொடுத்து விட்டீர்களா?' என்று வினா எழுப்ப, பதிலாக திக்ஷித் "நீலம் திருச்செல்வத்தை தானே சொல்கிறீர்கள்? செல்வா இறந்து பத்து வருடங்களுக்கு மேலாகிறது" என்று பதிலளித்தாராம். அதற்கு பண்டாரி "செல்வாவோ, திருச்செல்வமோ, இந்தத் தமிழ்ப்பெயர்களே புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறது" என்றாராம். ஆக ஆள் யாரென்று கூட அறியாதவர்கள் பலர் இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகளை உருவாக்குவதில் முன்னால் இருந்தனர்.

* 1987இல் IPKF இலங்கையில் இருக்கையில் விடுதலைப் புலிகளை ஆயுதங்களை ஒப்படைக்கச் செய்ய வேண்டிய வேலை IPKFஇடம் வந்தது. அப்பொழுது ராஜீவ் காந்தி தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் கே.சி.பந்த், ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். ராஜீவின் கேள்விக்கு பதிலளிக்கும்போது சுந்தர்ஜி, வெறும் 72 மணிநேரங்களில் யாழ்ப்பாணம் விழுந்து விடும் என்று பகட்டாகப் பதில் சொன்னாராம். (72 மணிநேரம் 72 நாட்களாகி, பின்னர் மாதங்களாகிப் போயின).

இரண்டு | மூன்று | நான்கு | ஐந்து

No comments:

Post a Comment