Tuesday, April 06, 2004

லாஹூர் டெஸ்ட் முதல் நாள்

அவசர அவசரமான பதிவு இது.

* ஆடுகளத்தில் எவ்வளவு புல் இருக்கும் என்பதுதான் பெரிய கேள்வி. பாகிஸ்தான் அணியில் யாரெல்லாம் வெளியே போகப் போகிறார்கள் என்பது அடுத்த கேள்வி.

* மோயின் கான், சக்லைன் முஷ்டாக் இருவரும் நீக்கப்படுகிறார்கள். ஷப்பீர் அஹமதுக்கு காலில் ஏதோ சரியில்லை. அப்துர் ரஸாக் தானாகவே கழண்டு கொள்கிறார். கம்ரான் அக்மல், அசீம் கமால், உமர் குல், டேனிஷ் கனேரியா உள்ளே வருகின்றனர். இந்தியாவிற்கு அஜீத் அகர்கார், ஜாகீர் கானுக்கு பதில்.

* திராவிட் டாஸில் வென்று தைரியமாக பேட்டிங் என்கிறார்.

* ஆடுகளத்தில் புல் சிறிது இருந்தாலும், பிரவுன் வண்ணத்திலேயே இருக்கிறது. அவ்வளவு பச்சை இல்லை. ஒருநால் மட்டுமே பந்து எழும்பி வரும் என்று தோன்றுகிறது.

* மொஹம்மத் சாமி தன் முதல் ஓவரில் ஆகாஷ் சோப்ராவை வீழ்த்தினாலும் அடுத்து சோயப் அக்தரும், சாமியும் சுமாராகவே பந்து வீசுகின்றனர். சேவாக் தன் ஆட்டத்தை சிறிது குறைத்துக் கொண்டாலும் ஆஃப் திசையில் அகலம் கொடுத்தால் அக்தரை தர்ட்மேனுக்கு மேல் சிக்ஸ் அடிக்கிறார். ஓட்டங்கள் குவிகின்றன.

* உமர் குல் பந்து வீச வருகிறார். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸை வீழ்த்தியவர்கள் பெஷாவர் ரிக்ஷாவை என்ன செய்யப்போகிறார்கள் என்ற கேள்விக்கு வித்தியாசமான விட கிடைக்கிறது.

* மிகத் துல்லியமான பந்து வீச்சால் குல் ஓட்டங்களே கொடுப்பதில்லை. முதலில் சேவாக் விக்கெட் கீப்பருக்கு கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார். அடுத்து டெண்டுல்கர் உள்ளே வரும் பந்து ஒன்றில் எல்.பி.டபிள்யூ ஆகிறார். சிறிது ஏமாற்றம்தான். திராவிடும், லக்ஷ்மணும் விளையாடுவது மிகவும் திருப்தி அளிப்பதாகவே இருக்கிறது. ஆனால் குல் பந்துவீச்சில் லக்ஷ்மண் விளிம்பில் தட்டி மீண்டும் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுக்கிறார். உணவு இடைவேளை 107/4.

* உணவு இடைவேளைக்குப் பின் திராவிடும், யுவ்ராஜ் சிங்கும் ஓட்டங்களை எடுக்கின்றனர். ஆனால் ஏமாற்றம் தரும் விதமாக திராவிட் தவறு செய்து முதல் ஸ்லிப்பிற்கு கேட்ச் கொடுக்கிறார். குல் நான்கு விக்கெட்டுகளை வரிசையாக வீழ்த்தி இந்தியாவின் முதுகெலும்பை உடைக்கிறார். இத்துடன் நிற்பதில்லை. அடுத்து பார்திவ் படேல் ஷாட் எதுவும் விளையாடாமல் எல்.பி.டபிள்யூ ஆகிறார். குல் முதல் முறையாக ஐந்து விக்கெட் எடுக்கிறார். தரையைக் குனிந்து முத்தமிடுகிறார். அடுத்து 'ஆல்-ரவுண்டர்' எனப்படும் அகர்கார் வருகிறார். சிறிது தடவி விளையாடி ஷோயப் அக்தரின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட். அக்தருக்கு இந்தத் தொடரின் முதல் விக்கெட்.

* அதைத் தொடர்ந்து யுவ்ராஜும், இர்ஃபான் பதானும் மிக அற்புதமாக விளையாடுகின்றனர். இதற்கிடையில் குல் ஏதோ காயம் காரணமாக உள்ளே சென்று விடுகிறார். 12 ஓவரில் 31 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால் அக்தரும், சாமியும், கானேரியாவும் ஒன்றுக்கும் உதவாமல் பந்து வீசுகின்றனர். பதான் 49இல் கானேரியாவின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழக்கிறார். ஒரு நிமிடம் அங்கேயே நிற்கிறார், வெளியே போகவே விருப்பமில்லாமல். யுவ்ராஜ் அருமையான சதம் அடிக்கிறார், கடைசியாக கானேரியாவை அரங்கை விட்டு வெளியே அடிக்கப் போய் டீப் மிட்விக்கெட் திசையில் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழக்கிறார்.

* அரங்கில் 2000 பேர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

* இந்தியா பந்து வீச்சில் பதான் வெகுவாக ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வீசிக்கொண்டிருக்கிறார். அகர்கார் பந்து வீச்சில் சிறப்பாக எதுவும் இல்லை. பாலாஜியின் ஒரு நல்ல பந்தில் தக்ஃபீக் உமர் நடு ஸ்டம்பை இழக்கிறார். மற்றபடி யாரும் விக்கெட் எடுப்பது போலவே வீசுவதில்லை. கும்ப்ளே நன்கு வீசுகிறார். இன்று இந்தியா கும்ப்ளேயையே வெகுவாக நம்பியிருக்கும்.

* பாகிஸ்தான் நிச்சயமாக முன்னணியில் உள்ளது.

No comments:

Post a Comment