Sunday, April 04, 2004

பாகிஸ்தான் பயணம்

நேற்று அதிகாலை சென்னையிலிருந்து கிளம்பி, புது தில்லி வந்து, மாலை 17.30க்கு லாஹூர் கிளம்பினோம்.

பாகிஸ்தான் இண்டெர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானத்தில் எங்களோடு கூட பயணம் செய்தவர்கள் அனில் கும்ப்ளே (அவசர அவசரமாக பெங்களூர் வந்து தனக்குப் பிறந்த குழந்தையைப் பார்த்து விட்டு இரண்டாவது டெஸ்டுக்காக மீண்டும் லாஹூர் வருகிறார்), நான்கு இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு உறுப்பினர்கள் (கிர்மானி, மோரே ஆகியோர்), இர்ஃபான் பதானின் பெற்றோர்கள், மற்றும் கிரிக்கெட் பார்க்க வருபவர்கள்.

அனில் கும்ப்ளே லாஹூர் இறங்கியதும்தான் தனது விசா 'single entry' என்று கவனித்தார், அதை போனமுறை அணியோடு உள்ளே வந்தபோதே உபயோகித்திருந்தார். அவசர அவசரமாக குடியேற்றத்துறை அதிகாரிகள் ஏதோ முயற்சிகள் செய்துகொண்டிருந்தனர். ஒருவழியாக அவரை மீண்டும் பாகிஸ்தானுக்குள் அனுமதித்திருப்பார்கள் என்று நம்புவோம்!

பாகிஸ்தானில் என் நண்பர்கள் விமான நிலையம் வந்திருந்தனர். புதிதாகக் கட்டப்பட்டுள்ள, அழுக்ககள் அற்ற விமான நிலையம், சிறியதாக இருந்தது. எங்கள் தங்கும் விடுதி கதாஃபி ஸ்டேடியம் மிக அருகில் இருக்கிறது. (ஐந்து நிமிடங்கள் நடை)

ஹோட்டல் மேனேஜர் 'welcome to home' என்று வரவேற்றார். சிலர் பல இடங்களில் எழுதியிருந்தது போல வரவேற்பு எங்கும் பிரமாதமாக இருந்தது.

நேற்றி இரவு ஒரு புத்தகக் கடை சென்றிருந்தோம். இரண்டு புத்தகங்கள் வாங்கினேன்.

'The clash of fundamentalisms - Crusades, Jihads and Modernity' - Tariq Ali, Verso, 2002
'How to think like Benjamin Graham and invest like Warren Buffett' - Lawrence A. Cunningham, McGraw Hill, 2001 (Hardbound)

இரண்டும் சேர்த்து பாக். ரூ. 290 க்கு(!!) என்றார் கடைக்காரர். புதிய புத்தகம், ஒரிஜினல் பேப்பர் - நிச்சயமாக pirated இல்லை. இந்தியரா என்று வினவினார். ஆம் என்றவுடன், வைத்துக்கொள்ளுங்கள் ரூ. 250க்கு என்றார்! தேநீர் அருந்துவீர்களா என்னுடன் என்றார். அப்பொழுதுதான் இரவு உணவு முடித்து சென்றிருந்தோம். மறுத்தவுடன், 'போத்தல்' (மது) அருந்துவீர்களா என்றார். திகைத்து நின்றோம். பிறகு நன்றி கூறி, மறுத்து விட்டு, மீண்டும் வரும் நாட்களில் சந்திப்போம் என்று கூறி விட்டு வெளியே வந்தோம்.

தெருவில் போக்குவரத்து மிக மோசமாக இருக்கிறது. பைக்கில் செல்லும் இளைஞர்கள் கன்னா-பின்னாவென்று ஓட்டுகிறார்கள். தெருக்களில் கார்கள் எங்கும் இடைவெளியே இல்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன.

இன்னமும் அரை மணி நேரத்தில் ஹாரப்பா செல்கிறோம். நம் முன்னோர்கள் என்ன கட்டிடங்களை கட்டியிருந்தனர் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?

No comments:

Post a Comment