Thursday, April 22, 2004

இந்தியாவின் அயலுறவுக்கொள்கை - 1

இப்பொழுது நடப்பது இந்தியப் பாராளுமன்றத் தேர்தல். சட்டமன்றங்களால் தொடமுடியாத, பாராளுமன்றத்தால் மட்டுமே தொடக்கூடிய ஒரு துறை - அயலுறவுத்துறை.

அயலுறவை எடுத்துக்கொண்டால் நமக்கு எதெல்லாம் முக்கியம்?

1. பாகிஸ்தானுடனான உறவு, ஜம்மு-காஷ்மீர் பிரச்சினை
2. நம்மைச் சுற்றியிருக்கும் மற்ற அண்டை நாடுகள் - நேபாள், இலங்கை, பங்களாதேஷ், மாலத்தீவுகள் - அதாவது சார்க் நாடுகளுடனான உறவு
3. சீனாவுடனான உறவு, சிக்கிம், திபேத், அருணாசலப் பிரதேசம் பற்றிய பிரச்சினைகள்
4. மற்ற கிழக்காசிய நாடுகளுடனான உறவுகள் - சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து - முக்கியமாக இந்தியாவிலிருந்து இந்நாடுகளுக்கு வேலை செய்ய வருபவர்களின் உரிமைகள்
5. மற்ற ஆசிய நாடுகளுடனான உறவுகள் - முக்கியமாக ஆஃப்கானிஸ்தான், வளைகுடா எண்ணெய் வள நாடுகள், இராக், இரான், மத்திய ஆசிய நாடுகள் (சோவியத் குடியரசிலிருந்து பிரிந்த நாடுகளான கஸக்ஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்றவை)
6. ரஷ்யாவுடனான உறவு, ரஷ்யாவின் செச்னியா பற்றிய நிலைப்பாடு
7. மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனான (ஐரோப்பிய பொதுச்சந்தை) உறவு
8. மற்ற ஐரோப்பிய நாடுகளுடனான உறவு
9. அமெரிக்காவுடனான உறவு, அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத்தனம் பற்றிய நமது கருத்துகள்
10. ஜப்பானுடனான உறவு
11. இந்திய வம்சாவளியினர் அதிகமாக இருக்கும் நாடுகளுடனான உறவு (கனடா, தென்னாப்பிரிக்கா, ஃபிஜி, ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து இன்ன பிற)
12. மற்ற அனைத்து நாடுகளும்

ஆனால் முக்கியக் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் தங்களது தேர்தல் அறிக்கையில் என்ன பேசுகின்றன?

பாஜகவின் தேர்தல் அறிக்கை | காங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை பற்றிய தேர்தல் அறிக்கை

காங்கிரஸ் வெளியுறவுக் கொள்கை பற்றிச் சொல்வதை "DEFENCE, NATIONAL SECURITY AND FOREIGN POLICY" என்னும் தலைப்பில் பேசுகிறது. அதாவது வெளியுறவுக் கொள்கையை, நாட்டின் பாதுகாப்புடன் மட்டுமே இணைத்துப் பார்க்கும் பழைய போக்கே அதில் தென்படுகிறது. இன்றைய தேதியில் வெளியுறவுக் கொள்கை என்பது இரு நாடுகளுக்கிடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல. இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் பரஸ்பர நட்பு பற்றியதே முதன்மை வகிக்க வேண்டும் இந்தக் காலத்தில்.

காங்கிரஸ் மொத்தமாக பெயர் சொல்லி நான்கு நாடுகளையும் (பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான்), பொதுவாக ஐந்து பிரதேசங்களையும் (சார்க், கிழக்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஐரோப்பிய ஒன்றியம், அணிசேரா நாடுகள்) சொல்லி கதையை முடித்து விடுகிறது. அணிசேரா நாடுகள் என்னும் அமைப்பு எப்பொழுதோ காலாவதியாகி விட்டது என்பதை அறியவில்லை இவர்கள். இலங்கை என்னும் நாடு பற்றி முழுவதுமாக மறந்து விட்டார்கள் காங்கிரஸார். தமிழர்கள்-சிங்களவர்கள் பிரச்சினையில் தங்கள் நிலை என்ன, அமைதிப் பேச்சு வார்த்தையில் எந்த விதத்தில் ஈடுபடப் போகிறோம் என்று ஒரு பேச்சைக் காணோம். சீனா பற்றி சொல்லிக் கொள்ள கான்கிரஸுக்கு ஒரு விஷயமும் இல்லை போல.

பாஜக தன் வெளியுறவுக் கொள்கைக்கு அழகான பெயர் மட்டும் கொடுத்துள்ளது: "India and the World". சற்றே விரிவாக இன்னமும் பத்து நாடுகளின் பெயர்கள் உள்ளன. ஆனால் பாகிஸ்தானுக்குப் பிறகு வெறும் சார்க்தான். இலங்கைப் பிரச்சினை பற்றி ஒரு பேச்சுமில்லை. பங்களாதேஷ், நேபாள், ஆஃப்கானிஸ்தான் என்று ஒன்றும் இல்லை. மற்றபடு மொழுக்கென்று எல்லோருடனும் நட்பை வளர்க்கப் போகிறோம் என்றுதான் சொல்கிறார்கள்.

இந்தியா தனது அண்டை நாடுகளுடன் என்றுமே சரியான உறவு வைத்துக்கொண்டிருந்ததில்லை.

1. பாகிஸ்தான்: நம் அனைவருக்கும் தெரிந்ததே பாகிஸ்தானுடனான உறவு. பாகிஸ்தான், காஷ்மீர், தீவிரவாதம் பற்றிய விஷயங்களில் கூட வாக்காளர்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு அவர்களுடன் எந்தவிதமான உரையாடலையும் வைத்துக்கொள்ளவில்லை இரண்டு கட்சிகளும். காங்கிரஸ் இன்னமும் 1972 சிம்லா ஒப்பந்தத்தைப் பற்றிப் பேசுகிறது. பாஜக இஸ்லாமாபாதில் பெப்ரவரி 2004இல் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் வெளிப்படையாக காஷ்மீரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைச் சொல்லவில்லை.

2. சீனா: இப்பொழுதுதான் உறவு ஓரளவுக்கு சரியாகி வருகிறது. ஆனாலும் எவ்வாறு மேற்கொண்டு இந்த உறவுகளை மேம்படுத்தப் போகிறோம் என்ற பேச்சில்லை. காங்கிரஸ் அறிக்கையில் அயலுறவுக் கொள்கை பற்றிப் பேசும்போது சீனா என்ற சொல்லே வருவதில்லை!

3. இலங்கை: அப்படியொரு நாடு இருப்பதாகவே இரு கட்சிகளுமே காட்டிக்கொள்ளவில்லை. எங்கிருந்தோ வந்து நார்வே தூதுக்குழு இலங்கையில் அமைதி காண முயலுகிறது. ரணில் விக்கிரமசிங்கே, சந்திரிகா குமரதுங்கே இருவருமே இந்திய அரசுடன் இலங்கை பற்றி பேசுகிறார்கள். விடுதலைப் புலிகளும் இந்தியா அமைதிப் பேச்சில் ஈடுபட வேண்டும் என்று கருத்து தெரிவிக்கிறார்கள். இந்தியாவின் இரு முக்கிய கட்சிகள் இலங்கை பற்றி ஒரு வரி கூட தங்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. பொதுவாக 'சார்க்' என்று வருகிறது - அவ்வளவே. தமிழகக் கட்சிகளான திமுக, அஇஅதிமுக இரண்டும் கூட இலங்கைப் பிரச்சினை, அமைதிப் பேச்சுவார்த்தை ஆகியவை பற்றி ஒரு வரி கூட குறிப்பிடாமல் விட்டது சோகம்தான். மதிமுகவின் தேர்தல் அறிக்கை எனக்குக் கிடைக்கவில்லை. (அஇஅதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையும், இலங்கை மீனவர்களும் கடத்திச் செல்வது பற்றியும், முரசொலி மாறன் "சொந்த லாபத்திற்காக" இலங்கையிலிருந்து தேயிலையைக் குறைந்த விலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்ய அனுமதித்ததையும் பற்றி வரும்போதுதான் இலங்கை என்ற சொல்லே அடிபடுகிறது.)

(தொடரும்)

No comments:

Post a Comment