Wednesday, April 28, 2004

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 5

என் சில உரத்த கேள்விகள்:

1. ராஜீவ் காந்தி கொலை தவிர்த்து, ஏன் இந்திய அரசு விடுதலைப்புலிகளுக்கு எதிராக இருக்க வேண்டும் என்று சூ.நா சொல்லவில்லை. வேறெங்காவது எழுதியிருக்கிறாரா என்று தேட வேண்டும்.

2. ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டிருந்தாலும் அதற்காக நம்மை வெகு நெருங்கிய நாட்டில், நம் கலாச்சார, மொழி, மதத்தோடு வெகு நெருங்கிய ஒரு இனத்தின் எதிர்காலத்தைப் பற்றிய விஷயத்தில் ராஜீவ் காந்தி கொலையை சற்று மறந்து விட்டு தொலை நோக்கோடு ஏன் இந்திய அரசு ஈடுபட மறுக்கிறது?

3. இந்திய அரசாங்கத்தை எதிர்க்கும் நாகாலாந்து இயக்கம் (National Socialist Council of Nagaland), காஷ்மீர் போராளிகள், அவர்களுக்கு ஆதரவான ஹூரியத் அமைப்பு ஆகியவற்றுடன் அமைதியை விரும்பி பேச்சுவார்த்தை செய்யும் இந்திய அரசு ஏன் விடுதலைப்புலிகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசுவதில்லை? இலங்கை அரசு கூட விடுதலைப்புலிகளை ஏற்றுக்கொண்டு விட்டது. அதாவது விடுதலைப்புலிகளோடு நேரடிப் பேச்சுவார்த்தை இன்றி எந்தப் பலனும் இருக்காது என்று அவர்களே தெரிந்து கொண்ட பின்னரும் ஏன் இந்திய அரசு இதனை ஏற்க மறுக்கிறது?

4. இந்தியாவின் இலங்கை பற்றிய கொள்கைகளை இன்று உருவாக்குவது யார்?

5. தமிழீழம் என்ற அமைப்பு உருவானாலும், இந்த நாடும் இந்தியாவினை பெருமளவு வர்த்தகத் துறையில் நம்பித்தானே இருக்க வேண்டும்? இது 'நான் பெரிய ஆள்' என்னும் நினைப்பில் சொல்வதல்ல. ஒரு நாட்டிற்குத் தேவையான உணவு முதற்கொண்டு, எரி-எண்ணெய், அடிப்படைக் கட்டுமான வசதி ஆகிய அனைத்திற்கும் இதுபோன்ற வளங்கள் இல்லாத சிறிய நாடு அதைக் கொடுக்கக் கூடிய பெரிய அண்டை நாட்டுடன் சுமுகமான உறவுடன்தானே இருக்க வேண்டும்? ஏன் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள நாடு இந்தியாவிற்கு எதிரியாக இருக்கும் என்று சில/பல இந்திய அறிஞர்கள் நினைக்கிறார்கள்?

6. தனி ஈழம் ஏற்பட்டால் அதனால் அடுத்து தனித் தமிழ்நாடு என்ற கோரிக்கை சில தமிழ்த் தீவிரவாத அமைப்புகளால் முன்வைக்கப்படும் என்ற பயமா? இப்பொழுதைய நிலைமை அப்படி இருப்பதாகத் தெரியவில்லையே? இந்தியா போன்ற ஒரு பெரிய சந்தையின் அங்கமாக இருப்பதுதான் தமிழகத்தின் பலம், தமிழ் மக்களின் வாழ்வுயர வழி என்றுதானே இன்று திமுக கூட தனித்தமிழ்நாடு போன்ற சிந்தனைகளை ஏறக்கட்டி வைத்துவிட்டது?

7. தமிழீழம் உருவானால் இலங்கையில் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர்கள் நிலை என்னவாகும்? தோட்டத் தொழிலாளர்கள் நிலை என்ன? வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிங்கள, முஸ்லிம்கள் நிலை என்ன?

8. அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொண்டு முன்னேற தடைகற்கள் என்னென்ன? இந்தியா எந்த வகையில் இந்தத் தடைகளை நீக்க உதவ முடியும்? பெடரல் அமைப்பிலான இடைக்காலத் தீர்வு ஒன்றில் எம்மாதிரியான அரசு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களில் அமையும்? அவ்விடங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான கருத்துடையவர்களின் நிலை என்னவாகும்?

9. தமிழீழம் அல்லாது ஒருமித்த (புதிய) அரசியல் நிர்ணயச் சட்டத்தின் கீழ் பெடரல் முறைப்படியான ஒரு ஆட்சி முறை இலங்கையில் சாத்தியமா? அதற்கும் சிங்களத் தீவிரவாதக் கருத்துடையவர்களிடமிருந்து எந்தவகை எதிர்ப்பு இருக்கும்? பெரும்பான்மைச் சிங்களவர்களின் கருத்து என்ன?

10. இலங்கையில் அமைதி திரும்ப, முக்கியமாக இலங்கைத் தமிழரது துயர் குறைய/நீங்க இந்திய அரசின், இந்திய மக்களின் உதவி நிச்சயம் தேவை என்று விடுதலைப் புலிகள் நினைக்கிறார்களா? அல்லது தேவையில்லை என்று நினைக்கிறார்களா? அப்படித் தேவை என்று நினைத்தால் அதற்கு வசதியாக இந்திய அரசியல்வாதிகள், கட்சித் தலைவர்கள், அறிஞர்கள், ஊடகங்கள் ஆகியோரின் இலங்கைப் பிரச்சினை பற்றிய நிலைப்பாட்டினை மாற்ற விடுதலைப்புலிகள் என்ன முயற்சி எடுத்து வருகின்றனர்? விடுதலைப்புலிகளால் இந்தியாவில் சட்டம் ஒழுங்கிற்கு இடையூறு இருக்கும் என்று நிலவிவரும் கருத்தை மாற்ற விடுதலைப்புலிகள் என்ன முயற்சி எடுக்கின்றனர்?

11. இன்றைய நிலையில் தமிழகத்திலேயே தமிழர்களுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றி ஒன்றும் தெரிவதில்லை. ஈடுபாடில்லாமைதான் (apathy) நிலவிவருகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பு தடைபட்டிருக்கும் வரையில் விடுதலைப்புலிகள் அமைப்பை முன்னிறுத்திப் பேசுவதும் பிரபாகரனின் படங்களுக்கு மாலை போட்டு, தெருவில் போஸ்டர் விற்பதும் ஜெயலலிதா போன்ற விடுதலைப்புலிகள் எதிர்ப்பாளர்களின் கோபத்துக்கு ஆளாகி நீதிமன்றங்களுக்குச் செல்ல நேரிடும். இந்நிலையில் விடுதலைப்புலிகள் எதிர்ப்புக் கருத்துகள் மட்டுமே தமிழகத்தில் பரவ வாய்ப்பு உள்ளது. ஒரு ஆரோக்கியமான விவாதம் நடைபெற வழியில்லாத நிலைமை உள்ளது. அமெரிக்காவில் கூட பாலஸ்தீனிய அமைப்புகள் பற்றி கருத்தரங்குகள் நடத்தி அதில் இஸ்லாமியத் தீவிரவாதிகள் என்று கருதப்படும் சிலரின் நிலைப்பாடுகளைப் பற்றிப் புகழ்ந்து பேச முடியும். ஆனால் இந்தியாவில் அண்டை நாட்டின் இனப்பிரச்சினையில் முக்கியமான அங்கமாக இருக்கும் ஒரு குழுவின் தலைவரைப் பற்றியோ, அவரது கருத்துகளைப் பற்றியோ, அகடமிக் கருத்தரங்கத்தில் கூடப் பேச முடியாத நிலைமை உள்ளது.

இதை மாற்ற தமிழக, இந்திய அறிஞர்கள், சிவில் சொஸைட்டி அமைப்புகள் முயற்சி செய்ய வேண்டியது அவசரமாகிறது.

இன்னமும் பல கேள்விகள் எழுகின்றன. இவற்றைப் பற்றி நேரம் கிடைக்கும்போது தொடர்கிறேன்.

ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு

No comments:

Post a Comment