Sunday, April 11, 2004

ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு

ரஜினி இன்று பத்திரிகை நிருபர்களை சந்தித்துப் பேசியது விஜய் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

ரஜினி ஏற்கனவே எழுதிவைத்த அறிக்கையைப் படித்தார். படிக்கும்போது நிறையப் பிசிறல் இருந்தது. படித்து முடித்ததும், பத்திரிகையாளர்களிடம் வேறு ஏதும் பேசாமல், வேறெந்தக் கேள்விகளுக்கும் விடை கொடுக்காமல் கிளம்பி விட்டார். அவன் சொன்னதின் சாரம்:

* பாமகவின் ராமதாஸ் பாபா படத்தில் நான் பீடி குடித்தது போல வந்த காட்சிகளை எதிர்த்தார். அவர் என்னைவிட வயதில் பெரியவர். என்னை நேரடியாக வந்து சந்தித்திருக்க வேண்டியதில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு இம்மாதிரியான காட்சிகளை நீக்கிவிடுமாறு சொல்லியிருந்தால், நான் முடிந்தால் நீக்கியிருப்பேன், அல்லது அடுத்த படத்தில் வராதமாதிரி செய்திருப்பேன். ஆனால் அதைச் செய்யாமல் அவரது அடியாட்கள் மூலமாக சினிமா திரைகளைக் கிழித்தார், திரைப்பெட்டிகளை, திரைப்பட அரங்குகளின் அதிபர்களைக் கடத்தினார். பல்லாயிரக்கணக்கான பணம் நஷ்டமாகுமாறு செய்தார்.

* என் ரசிகர்கள் வெகுண்டு எழுந்தனர். ஆனால் நான் அவர்களை அமைதியோடு இருக்குமாரு சொன்னேன். நான் அவர் வழிக்கு வந்ததில்லை. பின்னர் சமீபத்தில் நடந்த ஒரு அரசியல் கூட்டத்தில் என்னை 'சேற்றில் உழலும் பன்றி' என்று தரக்குறைவாகப் பேசினார்.

* என்னை தனிமனிதனாக அவர் விமரிசனம் செய்ததற்காக நான் அவரை எதிர்க்கவில்லை. அரசியலில் எனக்குப் பிடிக்காதது இரண்டு: (1) ஊழல், (2) வன்முறை. ராமதாஸ் வன்முறையைப் பிரதிபலிப்பவர். அதனால்தான் என் ரசிகர்களின் கருத்துக்கிணங்கி இந்தத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளில் அந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கு எதிராக வேலை செய்ய ஒப்புதல் கொடுத்தேன். இதனால் என் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கொலை மிரட்டல் வந்தது. என் ரசிகர் மன்றத்தவர்களை காவல் துறையினரால் எப்பொழுதும் காப்பாற்ற முடியாது என்பதால் அஇஅதிமுக/பாஜக வேட்பாளர்களை ஆதரிக்குமாறு சொன்னேன். அப்படிச் செய்தால் இந்தக் கட்சியினர் என் ரசிகர் மன்ற ஆட்களைக் காப்பாற்றுவார்கள் என்று நினைத்தேன்.

* ஜனநாயக முறைப்படி மதுரையில் ராமதாஸுக்கு கறுப்புக்கொடி காட்ட முனைந்த என் ரசிகர்களை கொலைவெறியோடு தாக்கினர் பாமகவினர். ராமதாஸ் மீது கொலை வழக்கு போட்டிருக்கும் தமிழகக் காவல்துறைக்கும், முதலமைச்சருக்கும் என் நன்றிகள். மதுரை மட்டுமல்ல, நாளை சென்னை, மும்பை, தில்லி, கோலா லம்பூர், ஏன் ஜப்பான் இங்கெல்லாம் என் ரசிகர்கள் உங்களுக்குக் கறுப்புக்கொடு காட்டினால் என்ன செய்வீர்கள்? அங்கும் ஆட்களை ஏற்பாடு செய்து அவர்களை அடித்து நொறுக்குவீர்களா?

* ராமதாஸை இதற்கு மேல் விமரிசிக்க நான் விரும்பவில்லை. அவர் என் நண்பர்களிடம் தஞ்சம் அடைந்து விட்டார்.

* நான் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவளிக்கப்போவதில்லை. இது பாராளுமன்றத் தேர்தல். நாடு முழுதும் சுற்றிப்பார்த்ததில் எனக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் உள்ள தே.ஜ.கூ வே ஆட்சிக்கு வரும் என்று தோன்றியது. மேலும் இப்பொழுதைக்கு தமிழகத்தின் மிகப்பெரிய பிரச்சினை தண்ணீர்ப் பிரச்சினை. நம் மாநிலத்தைச் சுற்றியுள்ள மற்ற மாநிலங்களில் வற்றாத ஜீவநதிகள் உண்டு. நம் மாநிலத்தில் மட்டும்தான் இப்படி ஒரு நதியும் கிடையாது. இந்தத் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க ஒரே வழி இந்திய நதிகளை ஒன்றிணைப்பது மட்டுமே. அப்படி இணைக்காவிட்டால் அதிகமாக பாதிக்கப்படப்போவது தமிழகம் மட்டுமே. அதனால் நதிநீர் இணைப்பிற்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக நான் ஒத்துக்கொண்டேன். பாஜக மட்டும்தான் தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நதிநீர் இணைப்பைப் பற்றிப் பேசியுள்ளது. துணைப்பிரதமர் அத்வானியும் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நதிநீர் இணைப்பை தன் கட்சி/அரசு செய்தே தீரும் என்று உறுதி கொடுத்துள்ளார். எனவே என் தனிப்பட்ட வாக்கு பாஜகவுக்கே.

* இதனால் என் ரசிகர்கள் அனைவரையும் பாஜகவுக்கு வாக்களிக்கச் சொல்லவில்லை. என் ரசிகர்கள் பல கட்சிகளையும் சேர்ந்தவர்கள். ஆனால் வாக்களிக்கப் போகும்போது அவர்களை நான் கேட்டுக்கொள்வது - "சிந்தியுங்கள்" என்பதே. உங்களுக்கு விருப்பமான கட்சிக்கு வாக்களிப்பீர்களா அல்லது நம் மாநிலத்தின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்க்க உறுதியளிக்கும் கட்சிக்கு வாக்களிப்பீர்களா...?

* இந்தத் தேர்தலில் பாமக தோற்றால், நாம் வென்றதாகக் கருதக்கூடாது. பாமக வென்றால் நாம் தோற்றதாகக் கருதக்கூடாது. நம்முடைய எதிர்ப்பை ஜனநாயக முறையில் வெளிக்காட்டுவதே இந்த முயற்சி. இனி நம் ரசிகர்கள் கறுப்புக்கொடி காட்டுவது போன்றவற்றைத் தவிர்த்து விட்டு ஜனநாயக முறையில் வாக்குச் சாவடியில் எதிர்ப்பைக் காட்டட்டும்.

[முழு அறிக்கையும் இங்கு கிடைக்கிறது - நன்றி லாவண்யா.]

ஆக ரஜினி இப்பொழுதைக்கு சொல்வது:
1. பாமகவை எதிர்க்கிறேன் - என்னை நேரடியாக விமரிசனம் செய்ததால் அல்ல, ஆனால் அரசியலில் வன்முறையைப் பிரதிபலிப்பதால்.
2. பாஜகவை ஆதரிக்கிறேன் - தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தமான நதிநீர் இணைப்புத் திட்டத்தை ஆதரிப்பதால்.
3. அஇஅதிமுகவை பாமக போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் ஆதரிக்கிறேன்.
4. இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் என் 'அமைப்பின்' ஆதரவில்லை. (!!)
5. திமுக, ப.சிதம்பரம் போன்றோர் இன்னமும் என் நண்பர்கள்.

எதிர்பார்த்த மாதிரியே சன் டிவி தன்னுடைய தலைப்புச் செய்திகளில் தேவையானவற்றை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மீதியை வெட்டி விட்டது. சன் டிவி செய்தி:

"எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை - ரஜினி."
"பாமக போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்ப்போம்"
"இனி என் ரசிகர்கள் ராமதாஸை எதிர்த்து கறுப்புக்கொடி காட்ட மாட்டார்கள்."

No comments:

Post a Comment