Wednesday, April 28, 2004

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 4

இப்பேச்சு மேலோட்டமான பேச்சே தவிர ஆழமான இலங்கைப் பிரச்சினை பற்றிய கலந்துரையாடல் அல்ல. பேச்சினைக் கேட்க வந்தவர்களுக்கு இலங்கைப் பிரச்சினை பற்றிய புரிதல்கள் ஏதும் இருப்பது போலத் தோன்றவில்லை, அல்லது அப்படிப்பட்ட புரிதல்கள் வெகு மேலோட்டமானதே. தொடர்ந்த கேள்வி-பதில்களில் இது வெளிப்படையானது. சற்றே கடினமான கேள்விகளை நான் ஒருவன்தான் கேட்டேன் என்று நினைக்கிறேன்.

சில கேள்விகளும்-பதில்களும்:

நான்: இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அடக்கக்கூடிய நிலையில் இல்லை. இந்தியா இலங்கைப் பிரச்சினையில் ஈடுபடவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், இலங்கை துண்டாடப் படக்கூடாது என்றும் சொல்கிறீர்கள். விடுதலைப் புலிகள் தனியீழக் கோரிக்கையிலிருந்தோ விலகவில்லை. அப்படியானால் இந்தியா இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளை எதிர்த்துப் போரிட வேண்டும் என்கிறீர்களா?

சூ.நா: இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை எதிர்க்கும் நிலையில் இல்லை என்பது உண்மையே. ஐந்துக்கு ஒருவர் இராணுவத்திலிருந்து விலகியோடிக் கொண்டிருக்கிறார் (desertion). விடுதலைப்புலிகளுக்கு ஒப்பான வெறியோடு போரிடக்கூடிய எண்ணம் இலங்கை இராணுவ வீரர்களுக்கு இல்லை. அத்துடன் உளவுத்திறனும் குறைந்த நிலையிலேயே உள்ளது. இலங்கை இராணுவத்துக்கு வரவேண்டிய சில மார்டர்கள் ஆப்பிரிக்க நாடு ஒன்றின் வழியாக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் விடுதலைப்புலிகள் அந்தக் கப்பலை வழிமறித்து இலங்கை அரசு ஏஜெண்டுகள் போல வேடமணிந்து அந்த இராணுவத் தளவாடங்களைக் கைப்பற்றிவிட்டு லண்டனிலிருந்து கொழும்பு அமெரிக்கத் தூதரகத்திற்கு 'உங்கள் நண்பர்களிடம் சொல்லுங்கள்.... அவர்களுக்கான இராணுவத் தளவாடங்களை நாங்கள் பெற்றுக்கொண்டு விட்டோமென' என்று செய்தியனுப்பினர்.

இந்தியா என்ன செய்ய வேண்டும்?
- இந்தியக் கடற்படை மூலமாக விடுதலைப்புலிகள் கொண்டு வரும் இராணுவத் தளவாடங்களை அறவே தடுத்து நிறுத்த வேண்டும்.
- இலங்கை இராணுவத்திற்கு போதிய பயிற்சிகளும், ஆயுதங்களும் தர வேண்டும்
- தேவைப்பட்டால் நேரிடையாக இந்திய விமானப்படை விமானங்கள் மூலம் கடல்புலிகள் மீது குண்டெறிந்து அழிக்க வேண்டும்.
- முக்கிய இலங்கைக் கட்சிகளை ஒன்றாகக் கொண்டு வந்து இணைந்து செயல்பட வைக்க வேண்டும். அதன்மூலம் தமிழர் பகுதிகளுக்குத் தன்னுரிமை (autonomy) வழங்க வகை செய்ய வேண்டும் - ஆனால் இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்காதவாறு.

நான்: ஏன் நாம் 'தேசியவாதம், ஒற்றுமை, ஒருமைப்பாடு' போன்ற பழங்கொள்கைகளுக்குள் உலவிக்கொண்டு இலங்கையின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்கக் கூடாது என்று பேச வேண்டும்? செக்கோஸ்லோவாகியா -> செக், ஸ்லோவாகியா என்று பிரியவில்லையா? தனியீழம் கூடாது என்று எதற்காக உறுதியாகச் சொல்கிறீர்கள்?

சூ.நா: நவீன சிந்தனைப்படி ஒருவருக்குப் பல தனித்துவங்கள் இருக்கலாம். நான் ஒரு நாட்டின் குடிமகனாக இருந்துகொண்டே, கலாச்சாரப்படி மற்ற குடிமக்களிடமிருந்து வேறுபட முடியும். எனவே தனி நாடு ஒன்றுதான் வழி என்று நினைக்கக் கூடாது. விடுதலைப்புலிகளின் கருத்து 'அந்நியப்படுத்தப்பட்ட சிறுபான்மையினரால் பெரும்பான்மையினரோடு சேர்ந்து வாழ முடியாது' என்பதே. இது சரியல்ல.

அதே சமயம் தமிழீழம் என்பதும் ஒரு சரியான தீர்வல்ல. கொழும்புவில் யாழ்ப்பாணத்தைக் காட்டிலும் அதிக தமிழர்கள் வசிக்கின்றனர். தமிழீழத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு என்ன நன்மை? யாழ்ப்பாணத் தமிழர்கள் வெள்ளாள சாதியினைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தலித் பின்னணியிலிருந்து வந்த தோட்டத் தொழிலாளர்கள் மீது எந்தவொரு அனுசரணையும் கிடையாது. இலங்கையில் கல்வித்துறையில் ஒவ்வொரு வகுப்பு மாணவனும் அவரவரது சமயப் பாடத்தினைப் படிக்க வேண்டும். ஹிந்து தமிழர்கள் பாடத்திற்குப் பெயர் 'சைவ நெறி'. இது பெரும்பான்மை வெள்ளாள மக்களின் மதம் பற்றியது. கிழக்குப் பகுதி, தோட்டத் தொழிலாளர்களது சமயப் பழக்க வழக்கம் வேறு. தோட்டத் தொழிலாளர்கள் தலித் கடவுள்களை வணங்குபவர்கள். இந்தக் குழந்தைகள் பள்ளியில் படிக்கும்போது தங்களின் பழக்கவழக்கத்தை இழிவானது என்று நினைக்குமாறு உள்ளது வெள்ளாள 'சைவ நெறி' பாடங்கள்.

விடுதலைப்புலிகள் தமிழ் முஸ்லிம்கள் மீது அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு 72 மணிநேரத்திற்குள் விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றனர்.

எனவே தமிழீழம் என்று தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்ககூடிய ஒரு நாடாக இருக்குமென்று தோன்றவில்லை. அங்கு சிறுபான்மையினரின் கலாச்சார தனித்துவம் மறுக்கப்படும்.

விடுதலைப்புலிகள் தங்களுக்கெதிரான மாற்றுக் கருத்துள்ளவர்களை ஒழித்து விடுவார்கள்.

வேறொருவர் கேள்வி: இந்தியா பங்களாதேசத்தில் தலையிட்டு பாகிஸ்தானிலிருந்து பங்களாதேசம் பிரிவதற்குக் காரணமாக இருந்ததைப் போல இலங்கையில் தலையிட்டு நாட்டை இரண்டாக்கக் கூடாதா?

சூ.நா: பங்களாதேசத்தில் இந்தியாவின் நிலை வேறு. அங்கு நாம் பாகிஸ்தான் இரண்டாவதை விரும்பினோம். ஆனால் அப்படி இலங்கை இரண்டாவதை நாம் எதிர்க்க வேண்டும்.

கேள்வி: வடக்கில் பாகிஸ்தான் இந்தியாவிற்கு தீராத தலைவலியைக் கொடுத்துக்கொண்டிருப்பதைப் போல தமிழீழம் தெற்கில் இந்தியாவிற்குத் தொல்லையைக் கொடுக்குமா?

சூ.நா: நிச்சயமாக. ஏற்கனவே கடல்புலிகள் இலங்கை மீனவர்களைத் தூண்டி இந்திய மீனவர்களைக் கடத்துவது, அவர்களை விடுவிக்க பணம் வாங்குவது என்றவாறு இருக்கிறார்கள். இந்திய மீனவர்களுக்கு கடல்புலிகளால் தொல்லைதான்.

கேள்வி: பிரபாகரனுக்கு அடுத்த தலைமுறையாக மற்ற தலைவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருக்கின்றனரா?

பதில்: பிரபாகரன் வேறெந்தத் தலைவரையும் தலைதூக்க விடுவதில்லை. ஆசியத் தலைவர்களின் வயதைப் பார்க்கையில் பிரபாகரன் இளமையானவர். விடுதலைப்புலிகள் இயக்கம் மிகவும் கட்டுப்பாடான இயக்கம். Strategic முடிவுகள் அனைத்தையும் எடுப்பது பிரபாகரன் மட்டுமே. ஆனால் முடிவெடுத்தவுடன் அதை எப்படி நடத்துவது என்பது பொட்டு அம்மன் போன்றோரின் கையில் விடப்படும்.

-*-

அதிக நேரம் இல்லாத காரணத்தால் பேச்சும், கேள்வி பதிலும் அத்துடன் முடிவடைந்தது. மேற்சொன்ன கே-ப வுடன் பல அர்த்தமற்ற கேள்விகளும் கேட்கப்பட்டன.

ஒன்று | இரண்டு | மூன்று | ஐந்து

No comments:

Post a Comment