Sunday, April 25, 2004

A country caught in cross-currents of neo-liberalism and Hindu nationalism

இந்து தேசியவாதத்திற்கும், நியோ-லிபரலிஸத்திற்கும் இடையில் மாட்டியுள்ள இந்தியா

அருந்ததி ராய் ஏப்ரல் 6, 2004 அன்று அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஐ.ஜி.கான் நினைவுப் பேச்சாகப் பேசியது இன்றைய தி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ளது.

நியோ-லிபரலிஸம்

அருந்ததி ராய் இந்தப் பேச்சில் தொட்டுச் செல்பவை:

- போடா சட்டம், மற்ற வெகுஜன எதிர்ப்பு சட்டங்கள், அதனை அப்பாவிகள் மீது கட்டவிழ்த்து விடும் அரசு இயந்திரங்கள்
- போடாவை ஒழிப்போம் என்று எதிர்க்கட்சிகள் சொன்னாலும் அவை செய்யப்போவதில்லை, ஏனெனில் அவர்கள் ஆட்சிக்கு வரும்போது இந்த சட்டம் அவர்களுக்கும் பயன்படும்
- போடா என்பதை யார்மீதும் பிரயோகிக்கலாம் - உங்கள் மீது, என் மீது. உதாரணமாக ஒருவரிடம் கடும் ஆயுதம் இருக்கிறது என்று சந்தேகித்தால் கூட - ஆம், சாட்சியோ, ஆயுதமோ கூட தேவையில்லை, வெறும் சந்தேகம் போதும் - போடாவில் கைது செய்யலாம். குற்றமற்றவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்தான் நிரூபிக்க வேண்டும். அதாவது நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவர் என்பது பழைய நீதி. நிரூபிக்கப்படும் வரை குற்றம் செய்தவர் என்பது புது போடா நீதி.
- காவல்துறையிடம் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் "குற்றவாளிக்கு" எதிராக பயன்படுத்தப்படும். [சாதாரண குற்றவியல் குற்றங்களில் இது செல்லுபடியாகாது.] அதனால் காவல்துறையினர் சாட்சியங்களைத் தேடிப்போக வேண்டியதில்லை. குற்றம் சாட்டப்பட்டவரை சற்று 'கவனித்தாலே' போதும்.
- எப்படியெல்லாம் கவனிக்கிறார்களாம் தெரியுமா? சிறுநீரைக் குடிக்க வைப்பது, பொட்டுத் துணி இல்லாமல் அம்மணமாக்குவது, மின்சார ஷாக் கொடுப்பது, சிகரெட்டால் சுடுவது, இரும்புக் கம்பிகளை ஆசனவாயில் சொருகுவது... இதைவிட சிறந்த முறைகளை 'காதலன்' படத்தில் ஷங்கர் காண்பித்துள்ளார். அதை ஒவ்வொரு மாநிலத்தின் காவல்துறைக்கும் போட்டுக் காண்பிக்கலாம்.
- காஷ்மீர், குஜராத், வட-கிழக்குப் பிராந்தியங்கள், ஆந்திரப் பிரதேசம் (மற்ற நக்ஸல் பிரதேசங்கள்) ஆகிய இடங்களில் நடக்கும் ஜெயில் கொலைகள், என்கவுண்டர் கொலைகள்

- கடந்த பத்து வருடங்களில் நிகழ்ந்த பொருளாதார மாற்றங்கள் (நியோ-லிபரல்)
- இந்தியா ஜொலிக்கிறதா? பத்து வருடங்களுக்கு முந்தைய நிலையை விட இன்று ஏழைகள் உட்கொள்ளும் உணவுப்பொருள் வருடத்திற்கு 100 கிலோ குறைவாக உள்ளது
- 40% கிராமப்புற மக்கள் கிட்டத்தட்ட ஆப்பிரிக்காவின் சஹாராவைச் சுற்றியுள்ள நாடுகளில் உட்கொள்ளும் உணவின் அளவேதான் உட்கொள்கின்றனர். [எதியோப்பியா தெரியுமல்லவா?]. அதாவது பஞ்சத்தில் அடிப்பட்ட மக்கள்.
- கிராம-நகர இடைவெளி கடந்த ஐந்தாண்டுகளில் மிக அதிகமாகியுள்ளது

- தனியார் நிறுவனங்களின் (படிக்க: பன்னாட்டு நிறுவனங்களின்) முதலாளிகள் ஒரு பிரதமரை விட அதிக ஆளுமையுடன் இருக்கிறார்கள்.

- பாஜகவின் இந்து தேசியவாதம், குஜராத் கொலையாட்டம். அங்கு நடந்த நிகழ்ச்சிக்கு இதுவரை யாருக்கும் தண்டனை கிடைக்காதது
- ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து வலதுசாரி அமைப்புகள் மிக ஆழமாக தங்கள் அமைப்புகளை நிலைநிறுத்தி அதன்மூலம் தங்கள் கொள்கைகளைப் பரப்புவது
- அரசுசாரா அமைப்புகள் (NGOs) அரசுகளைச் சாராமல் அரசு கொடுக்கும் கையூட்டை வாங்கிக் கொள்ள அரசியலிருந்து விலகியிருப்பது தவறு.
- இந்து தேசியவாதம், நியோ-லிபரலிஸம் ஆகியவற்றை எதிர்க்க வேண்டும். அதற்கு நாடு முழுதும் கிராமப்புறங்களில் உள்ள அடிவேர் அமைப்புகள் சேர்ந்து உழைக்க வேண்டும்.

- ஏழைகளுக்கு ஆதரவான அரசியல் கட்சி, ஏழையாகவே இருக்கும். இடதுசாரிகள் தங்களுக்குள்ளேயே குழம்பிப்போய் இருக்கிறார்கள். அவர்களால் இப்பொழுதைக்கு ஒரு பிரயோசனமும் இல்லை.
- இந்து தேசியவாதத்திற்கும், நியோ-லிபரலிஸத்திற்கும் எதிரான கருத்துள்ளவர்கள் இன்று அரசியலில் ஈடுபட முடியாது. இதற்கு அரசியலை விட்டு விலகி இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. போரை நிகழ்த்த பலமான பின்னணி வேண்டும். பலம் குறைந்த நிலையில் போராட முடியாது. ஓரிரண்டு சமூக சேவகர்களை பாராளுமன்றத்தில் வைப்பதில் எந்த உபயோகமும் இல்லை.
- மாற்றம் நிச்சயம் வரும். அது கையில் ஆயுதம் ஏந்தி, இரத்தத்தைச் சிந்த வைக்கும் போராகவும் இருக்கலாம், அல்லது அஹிம்சை வழியிலும் இருக்கலாம். எப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிப்பது நாம்தான்.


மேற்சொன்ன அரசு/அரசியந்திரம் அடக்குமுறைகள் மீது எனக்கு வேற்றுக் கருத்துகள் இல்லை. அருந்ததி ராய் இப்பொழுதுள்ள பிரச்சினைகளை மிக அழகாக விளக்குகிறார். இன்னமும் அதிகம் உழைத்து மாற்றுக் கருத்துகள், மாற்று அரசியலமைப்புகள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும்.

ஆனால் எனது பொருளாதாரச் சிந்தனைகள் நியோ-லிபரல் சிந்தனைகளே, அல்லது அதற்கு மிக அருகாமையில் வரும் சிந்தனைகளே. அதில் நான் அருந்ததி ராயுடன் வேறுபடுகிறேன்.

No comments:

Post a Comment