Wednesday, April 28, 2004

இந்தியாவும், இலங்கையின் இனப்பிரச்சினையும் - 2

சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் வெவ்வேறு காலங்களில் இந்தியாவின் பங்கு பற்றி சுருக்கமாக விளக்கினார்.

* தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நிலை: பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவிலிருந்து உலகெங்கும் வேலைக்காரர்களை அழைத்துச் செல்லும்போது அவர்கள் எந்த நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்களோ, அந்த நாட்டில் இருப்பவர்களுக்கான அத்தனை உரிமைகளும் அழைத்துக்கொண்டு வரப்பட்டவர்களுக்கும் கொடுக்கப்படும் என்ற உத்தரவாதத்துடனேதான் அழைத்துச் சென்றனர்.

* சுதந்திரம் அடைந்தவுடன் இலங்கை பாராளுமன்றம் எடுத்த முதல் சில முடிவுகளிலே ஒன்று இலங்கைக் குடியுரிமைச் சட்டம். இதன்படி 19, 20ஆம் நூற்றாண்டுகளில் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட இந்திய வம்சாவளி (தமிழர்கள்) மக்களுக்கு இலங்கைக் குடியுரிமை பெறுவது மிகக்கடினமாக்கப்பட்டது. [தோட்டத் தொழிலாளர் அல்லாத தமிழ் பேசும் இலங்கையினர் அந்தத் தீவின் ஆதிகாலத்தவர் (native to the island)]

* இலங்கைக் குடியுரிமை பெற ஒருவரது பிறப்புச் சான்றிதழ், அவரது தந்தையின் சான்றிதழ், பாட்டனின் சான்றிதழ் தேவைப்பட்டது. அப்பொழுது பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தின்போது அப்பொழுதைய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர், பிரதமர் சேனாநாயகாவைப் பார்த்து உங்களால் இந்த சான்றிதழ்களை கொண்டு வர முடியுமா என்று கேட்டதற்கு அவருமே தன்னாலே முடியாது என்றுவிட்டார். தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட சட்டம் - எனவே எதிர்ப்புகள் இருந்தும் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு பெரும்பான்மை தோட்டத் தொழிலாளர்கள் எந்நாட்டின் குடிமக்களும் இல்லை என்ற நிலை உருவானது. இலங்கைத் தமிழர்களும் இதற்குத் துணைபோயினர். அப்பொழுது பிரதமர் செனாநாயகாவிற்கு சட்டம் இயற்ற துணைபுரிந்தவர் சர். கந்தையா எனப்படும் தமிழர்.

* இந்தியப் பிரதமர் நேரு தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் வளர்ச்சிக்குப் பாடுபட்டவர்கள், அதனால் அவர்களுக்கு இலங்கைக் குடியுரிமைதான் கிடைக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தார். இலங்கைத் தலைவர்கள் அது இந்தியாவின் பிரச்சினை என்ற நிலையில் இருந்தனர். லால் பஹாதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமரானபோது, இந்தியா அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவு வைத்திருக்கவில்லை என்பதை உணர்ந்து அதை மாற்றும் விதமாக, இலங்கைப் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டு பல தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்கினார்.

* கடந்த வருடம் (2003) ரணில் விக்கிரமசிங்கே அனைத்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இலங்கைக் குடியுரிமை வழங்கும் வரையில் இந்தப் பிரச்சினை தனியாகத் தொடர்ந்து வந்தே இருந்தது.

* இதற்கிடையில் தொடக்கத்தில் சுமுகமான உறவோடு ஆரம்பித்த இலங்கை அரசியலில் நாளடைவில் சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் போட்டி, பொறாமை என்று பிரச்சினை தலைதூக்க ஆரம்பித்தது. பல இனவெறிக் கொலைகளும் நிகழ்ந்தேறின. ஆனால் இந்தியா 1947-1981 வரை இதனை இலங்கையின் உள்நாட்டு விவகாரம் என்று தலையிடாமலேயே இருந்து வந்தது.

* 1981இல் நடந்த வன்முறையைக் கண்டித்து தமிழ்நாட்டில் மாபெரும் போராட்டம் நடைபெற ஆரம்பித்தது. திமுக பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரச்சினையை பாராளுமன்றத்தில் வெகுவாக எடுத்துப் பேச ஆரம்பித்தனர். அதனால் இந்திய அரசு தலையிடாமல் இருந்ததிலிருந்து தலையிட்டு சிங்கள, தமிழ் தலைவர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடத்தத் துணைபுரியும் இடையீட்டாளராக (mediator) இருக்க முனைந்தது. (மையமாக இருக்கும் அதிகாரத்தை அ-மையப்படுத்துவது, பொருளாதார, சட்டமியற்றும் அதிகாரங்களை தமிழர் பிரதேசங்களுக்கு வழங்குவது போன்ற கொள்கைகளை வலியுறுத்துவது.)

* 1983இல் மாபெரும் இனப்படுகொலை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது.

* 1983இல் ஜெயவர்தனே இராணுவ உதவி வேண்டி பல நாடுகளுக்கும் ஆட்களை அனுப்பினார். UK, பாகிஸ்தான், அமெரிக்கா என்று பல நாடுகளுக்கு சென்றாலும் இந்தியாவிடம் உதவியெதுவும் கேட்கவில்லை. அப்பொழுது வெளியுறவுத் துறை அமைச்சராயிருந்த நரசிம்ம ராவை இந்திரா காந்தி கொழும்புவுக்கு அனுப்பி ஜெயவர்தனேயிடம் தனது அதிருப்தியை வெளியிட்டார். அப்பொழுதுதான் இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு இடையீட்டுடன், ஆயுத உதவியும் செய்ய முடிவு செய்தது.

* 1983இல் புது தில்லி சென்ற அமிர்தலிங்கம் இந்திரா காந்தியுடன் (ஜி.பார்த்தசாரதி ஆலோசகர்) பேசியபோது ஜெயவர்தனே தமிழர் போராளிகளைத் தாக்கினால் போராளிகளால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா என்று கேட்ட கேள்விக்கு, அமிர்தலிங்கம் மொத்தமாகவே 300 போராளிகள்தான் இருக்கின்றனர், அவர்களால் தாக்குப் பிடிக்க முடியாது என்றாராம். அதனைத் தொடர்ந்து இந்திய மைய அரசு முடிவில் இலங்கயிலிருந்து பல போராளிக் குழுக்களை இந்தியா கொண்டு வந்து அவர்களுக்கு போர்ப்பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கப்பட்டன.

* 1987இல் தமிழ்ப்போராளிகளுக்கும் இலங்கைப் படைகளுக்குமான் யுத்தம் பெரிதான வேளை. இலங்கை மீண்டும் இராணுவ உதவி வேண்டி அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான் என்று பல நாடுகளுக்கும் செல்ல ஆரம்பித்தது. வடவிலங்கை உணவுப்பற்றாக்குறையால் தவித்த போது ராஜீவ் காந்தி இராணுவ விமானங்கள் மூலம் யாழ்ப்பாணத்தில் உணவுப்பொருட்களைப் போட வைத்தார். ஜெயவர்தனேயிடம் இந்தியாவின் இராணுவ பலத்தைக் காண்பிக்கும் வகையிலும் இது அமைந்தது. இதைத் தொடர்ந்து இந்திய-இலங்கை ஒப்பந்தமும், அமைதிப்படை (IPKF) இலங்கை செல்வதும் நடந்தது. இலங்கை அரசுக்கும் தமிழ்ப்போராளிகளுக்கும் இடையில் நடக்க வேண்டிய ஒப்பந்தத்திற்கு பதில் இந்தியாவை உள்ளுக்கிழுத்து இந்திய-இலங்கை ஒப்பந்தமாக்கியது ஜெயவர்தனேயின் திறமை. அதன்மூலம் இலங்கைப் போராளிகளை வழிக்குக் கொண்டு வரவேண்டிய வேலை இந்தியர்களிடம் அவர் ஒப்படைத்து விட்டார். அவ்வாறு செய்து விட்டு மீண்ட இலங்கைப் படையினரைக் கொண்டு தெற்கில் ஆயுதமேந்திப் போராடும் ஜனதா விமுக்தி பெரமுனவை அழிக்க ஆரம்பித்தார்.

* பிரபாகரனின் சுடுமலைப் பேச்சு. பிரபாகரன் இலங்கை ஒப்பந்தத்தை நிறைவேற்றாது, சிங்கள அரசை நம்பமுடியாது என்று சொன்னது.

* IPKF புதைகுழியில் மாட்டியது. விடுதலைப்புலிகளிடம் இந்தியப் படைகளிடம் இருந்ததை விட திறமையான தகவல் தொடர்பு சாதனங்கள், ஆயுதங்கள், உளவுத்திறன்.

* பிரேமதாசா புலிகளுடன் (மறைமுக) ஒப்பந்தம் செய்து கொண்டு புலிகள் மூலமாக IPKFஐ விரட்ட நினைத்தது. பிரேமதாசாவின் வேண்டுகோளின்படி வி.பி.சிங் IPKFஐ திரும்ப அழைத்துக் கொண்டது.

* ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் கொலை செய்யப் பட்டது. அதற்கு முன்னரே சென்னையில் எதிரிப் போராளிகளை க் கொன்றது.

* ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு இந்திய அரசுகள் இலங்கைப் பிரச்சினையைக் கைகழுவி விடும் கொள்கையை (hands-off policy) மேற்கொண்டனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்தனர். இந்திய நீதிமன்றம் பிரபாகரனை 'proclaimed offender' என்று சொல்வது. இந்திய அரசு பிரபாகரனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இலங்கையைக் கேட்டுக் கொள்வது.

* இலங்கையில் தொடரும் போர், பின் போர் நிறுத்தம், அமைதிப் பேச்சுவார்த்தை.

ஒன்று | மூன்று | நான்கு | ஐந்து

No comments:

Post a Comment