Sunday, April 11, 2004

பாகிஸ்தான் கதைகள் - 1

பாகிஸ்தானில் லாரிகள், ஆட்டோக்கள் ... ஏன், மோடார் பைக்குகள், சைக்கிள்கள் என்று எந்த வண்டியானாலும் ஒருவித அதீத அலங்காரம் இருக்கும். முதலில் பார்த்த போது ஓரிரு லாரிகளுக்கே இம்மாதிரியான அலங்காரம் இருக்கும் என்று நினைத்தேன். பின்னர் தெருவில் ஓடும் அனைத்து லாரிகளும் இப்படித்தான் என்று தெரிந்தது.

பாகிஸ்தான் அலங்கார லாரி


ஹாரப்பா போகும் வழியில் குளிர்பானம் அருந்த ஒரு கடையில் நின்றோம். அங்கு சில அலங்கார லாரிகள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்படியான ஒரு வண்டியின் ஓட்டுநர் எங்களைப் பார்த்ததும் இந்தியர்கள் என்று தெரிந்து கொண்டார். எங்களிடம் வந்து பேசத் தொடங்கினார்.

(உருதுவில்) "போதும் இந்தச் சண்டைகள்... துப்பாக்கியும், தோட்டாவும் வேண்டாமே... வேண்டியதெல்லாம் அன்பும், காதலுமே" (प्यार और मोहबत)

(உடைந்த அரைகுறை ஹிந்தியில்) "ஆமாம். நீங்கள் சொல்வது சரியே..."

"ஆனால் ஏன் உங்கள் நாட்டில் முஸ்லிம்களைக் கொல்கிறீர்கள்? அவர்களைக் கொல்லாதீர்கள்..., பாவம்...."

அவரது விசனத்தில் பாகிஸ்தானில் இந்தியாவைப் பற்றிய எப்படியான கண்ணோட்டம் பரவியிருக்கிறது என்று புரிந்தது. குஜராத் கொடுமைகள் மூலம் 'இந்தியா ஒளிர்கிறது'. ஆனாலும் அந்த லாரி டிரைவரிடம் அரைகுறை மொழியில் நிலைமையை விளக்க ஆரம்பித்தோம். அதற்குள் எங்கள் வண்டியின் டிரைவரும் அவசரமாக வந்து (நாட்டின்) விருந்தினர்களைத் தொல்லைபடுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளவும், நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

No comments:

Post a Comment