Monday, April 19, 2004

பாகிஸ்தான் கதைகள் 2 - கழுதை வண்டி

பாகிஸ்தானில் என்னை மிகவும் கவர்ந்தது கழுதை இழுக்கும் வண்டிகள். நான் அங்கு சுற்றியவரை (இஸ்லாமாபாத், லாஹூர், ராவல்பிண்டி, ஹாரப்பா) கண்ணில் பட்டதெல்லாம் மாடுகளோ, குதிரைகளோ இழுக்கும் வண்டிகளல்ல, ஆனால் கழுதைகள் இழுக்கும் வண்டிகளே. அங்குள்ள கிராம வாசிகள், உழவர்கள் (அதாவது மோட்டார் வண்டி வைத்துக் கொள்ள முடியாதவர்கள் என்று வைத்துக் கொள்வோமே?) அனைவரும் வைத்திருந்தது இந்தக் கழுதை வண்டிகளே.

கழுதை வண்டிஇந்தக் கழுதைகள் நம்மூர் சலவைத் தொழிலாளர்கள் அல்லது பல வருடத்திற்கு முந்தைய உப்பு வாணிகர் வைத்திருக்கும் கழுதைகளைப் போலில்லை. பைபிளில் சொல்லப்படும் கோவேறு கழுதைகள் (கழுதை-குதிரை என்றும் சொல்லப்பட்டிருக்கும்) போல என்று நினைக்கிறேன். நான் படமெடுத்த போது இருட்டத் துவங்கியிருந்தது. அதனால் எனக்கு சுமாரான படம்தான் கிடைத்துள்ளது. வண்டியின் சக்கரங்கள் ரப்பர் டயரால் ஆனவை. அதிக சுமையைத் தாங்கி இழுக்கிறது. நல்ல திறனான வண்டிகள் என்றே தோன்றுகிறது.

இந்தியாவில் இதுபோன்ற கழுதை வண்டிகள் உண்டா என்று தெரியவில்லை. நிச்சயம் தமிழகத்தில் கிடையாது.

நான் ஐஐடி சென்னையில் மெக்கானிகல் எஞ்சினியரிங் கடைசி வருடம் படித்துக் கொண்டிருந்தபோது பிராஜெக்ட் என்ன செய்யலாம் என்று சில பேராசிரியர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது ராம் மோஹன் ராவ் என்றொரு பேராசிரியர் இருந்தார். ஜனதா தளம் மத்தியில் ஆட்சியிலும், தேவிலால் துணைப் பிரதமராகவும் இருந்த நேரம் அது. தேவிலாலுடைய விவசாய அமைச்சரகம் கிராமப்புறத்தில் விவசாய மேம்பாட்டுக்கு உதவும் வகையில் செய்யப்படும் மாணவத் திட்டங்களுக்கு நிதியுதவி அளிப்பதாகச் சொல்லியிருந்தது. என் பேராசிரியர் மாட்டு வண்டிகளை எப்படி மாற்றியமைக்கலாம், நல்ல தரமான அடி பம்புகளை எப்படி உருவாக்கலாம் போன்ற திட்டங்களைப் பற்றிப் பேசினார். (ஆனால் அமெரிக்கா போகவேண்டுமானால்) இதுபோன்ற திட்டங்கள் கவர்ச்சியாக இல்லை என்று அவற்றை நிராகரித்து விட்டு 'A Graphical Approach to Optimization of Non-linear Functions' என்று ஏதோ கதையடித்து ஒருவருக்கும் உபயோகமில்லாத வேலையைச் செய்து ஒப்பேற்றினேன்.

இன்றைய தேவை இப்பொழுது உள்ள தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் கிராமப்புறங்களில் நல்ல வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே. குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 'PURA - Providing Urban facilities in Rural Areas' திட்டத்தை நிறைவேற்ற பொறியியல் துறை மாணவர்கள் அதிகமாக முன்வர வேண்டும்.

பாகிஸ்தான் கதைகள் 1 - அலங்கார லாரி

No comments:

Post a Comment